வெள்ளி, 10 ஜூன், 2011

குமரன் குன்றத்திலே !

                              
"குன்றத்திலே பதிவாசிரியருக்குத் திண்டாட்டம்!
அங்கே குவிந்தனர் அம்மா வாசகர் எல்லாம் செண்டாட்டம், செண்டாட்டம்! " என்று பாடியபடி, அவ்வையார் வருகிறார்.
                 
(கே யைத் தேடி) பதிவாசிரியரைப் பார்க்கிறார்.

"டேய் பதிவாசிரியா... "

பதி: "ஏய் கிழவீ ... மரியாத, மரியாத!"

அவ்: "அப்பனே, நான் என் அப்பன் முருகனையே அவன் இவன் என்றுதான் கூப்பிடுவேன். நீ ஏ பி நாகராஜன் படம் எதுவும் பார்த்ததில்லையா? உனக்கு எல்லாம் என்ன மரியாதை?"

பதி: "அப்பவே நெனச்சேன் - கொடுமுடிக் கோகிலம் போல இருக்கியே, நீ ஒருவேளை அவ்வையாரோ என்று. ஆனாலும் நீதான் அவ்வையா என்று நான் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்."

அவ்: "அப்புறம் ஏன் தயக்கம்? கேள்விகளைக் கேள்"

பதி: இரு பாட்டீ - நான் சின்ன வயசுல சாயிஸ் ல விட்ட செய்யுள் எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வரணும் இல்லே?"

அவ்: "அது சரி. கேள்வியில ஏதேனும் தப்பு இருந்தது என்றால், உன்னை இங்கேயே சரபேஸ்வரர் சந்நிதியில் முட்டிக் கால் போட்டு நில்லு என்று சொல்லிவிடுவேன்."

பதி: "ஒன்னாரைத்...."

அவ்: "தேறேல்."

பதி: "ஓரம்..."

அவ்: சொல்லேல்."

பதி: "அட - டஃப் கேள்விக்குக் கூட சரியா பதில் சொல்றீங்களே! நீங்க அவ்வைதான்! ஹூம், இதை, நான் ஆரம்பப் பள்ளியில் படித்த நாட்களிலேயே நீங்க சொல்லியிருந்தால், நான் அனாவசியமா பெஞ்சு மேலே ஒரு பீரியட் முழுவதும் நிற்காமல் இருந்திருப்பேன்."

அவ்: "போடா மரமண்டை - நீ அந்த ரெண்டு செய்யுளுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சதாலத்தான் உன்னை பெஞ்சு மேலே நிக்க வெச்சாங்க உன்னுடைய தமிழ் டீச்சர்."

பதி: "அட முக்காலமும் உணர்ந்த மூதாட்டி!"

அவ்: "அது போகட்டும்; நீ ஏன் வாசகர்களிடம் கோபித்துக் கொண்டு, இந்த குமரன் குன்றத்திற்கு வந்தாய்? திரிசூலத்திலிருந்து இங்கே டைரெக்ட் பஸ் இருக்குதா?"

பதி: "மற்ற மொக்கைப் பதிவுகளுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டும், கமெண்டும் போடும் வாசகர்கள் என்னுடைய கே யைத் தேடி பதிவுகளுக்கு மட்டும் அதிக அளவில் போடுவதில்லை. ஓட்டும் கமெண்டும் வாசகர்களிடமிருந்து பெற அருகதை இல்லையா எனக்கு?"

அவ்: (பாடுகிறார்)
"பதிவு நீ அப்பா!
மொக்கைப் பதிவு நீ அப்பா!
தமிழ் வலை உலக பதிவு நீ அப்பா!
ப்ளாக் தன்னில்,
எங்கள் ப்ளாக் தன்னில் -
வலை மேய்ந்து சுவைப்போர்க்கு
ப்ளேட் போடும் பதிவு நீ அப்பா ஆ ஆ !
பதி: "ஒளவையே நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நான் அந்தப் பதிவைத் தொடருவதாக இல்லை!"

அவ்: "சரி நீ இங்கே இருந்து ஒரு நாடகம் நடத்த விரும்பினால் அதைத் தடுக்க யாரால் இயலும்? அப்படி ஏதாவது நாடகம் நடத்துவதாக இருந்தால், கேட் கலெக்ஷன் காண்டிராக்டை எனக்குக் கொடு."

பதி: "அப்படியே ஆகட்டும் ஒளவையே! ஞாயிற்றுக் கிழமை, இங்கே குரோம்பேட்டைக் குறும்பன் வருவதாகக் கூறியுள்ளார். அவர் சொல்லும் சமாதானம் ஏதாவது என் மனசுக்குப் பிடிச்சிருந்தா, நான் வந்து, பதிவைத் தொடர்கின்றேன்."

அவ்: "சரி போ! ஆனால் அந்தக் 'கே' யாரு என்பதை மட்டும் நீ எனக்குக் காதோடு சொல்லிவிடு."

பதி: "நீங்கதான் முக்காலமும் உணர்ந்த மூதாட்டி ஆயிற்றே? கண்டுபிடிங்க பார்ப்போம்!"

அவ்: பதிவாசிரியரின் காதில் இரகசியமாக (.... ----- .....) என்று சொல்லி, "என்ன சரியா?"

பதிவாசிரியரின் முகம் வலைப்பூவாக மலருகிறதுபதி: ஒளவையே! நன்றி, நன்றி. யாரு 'கே' என்பது பற்றி எனக்கே குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்து வைத்த ஒளவையே! உன்னை உளமாரப் புகழ்கின்றேன்! எங்கள் ப்ளாகைப் புகழ்ந்து ஏதேனும் பாடு!"

அவ்: (பாடுகிறார்)
" பாதி பாதி என பாதித்த பதிவின்று, ஊ ஊ ...
ஷோபனா, ஷோபனா என சுற்ற விடுகின்றதே! ஏ ஏ ...
சாமியாரும் சோணகிரியும் ரங்கனும் சேர்ந்து
கே யைத் தேடிக் கொணருவரே! "
இந்தப் பாடலை, நீலாம்பரி ராகத்தில் அவ்வை பாடியதால், பதிவாசிரியர் கண்கள் சொக்கி, அப்படியே குமரன் குன்றம் மரத்தடியில், படுத்து உறங்கிவிட்டார்!
    

9 கருத்துகள்:

  1. அவர் படுத்து இருக்கற இடத்தில்ல டைம் பாம் இருக்குன்னு சொல்லுங்க. அலறி அடிச்சு வந்திருவார்

    பதிலளிநீக்கு
  2. குமரன் குன்றம் -- குரோம்பேட்டை டு ஹஸ்தினாபுரம் தடத்தில் வரும் ஒரு 'பேருந்து நிறுத்தம்தான' ?

    பதிலளிநீக்கு
  3. வந்தது அவ்வையா? அவ்வையின் ஆவியா?

    பதிலளிநீக்கு
  4. Voted. 3 to 4 in INDLI.

    நல்ல நகைச்சுவையாக இருக்குது இந்தப்பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. எதுக்கு வம்பு....நானும் கே யை தேட ஆரம்பிச்சுட்டேன்...

    பதிலளிநீக்கு
  6. அவ்வை பாடுற பாட்டு ஒண்ணும் சரியாப் படலிங்களே.. ஆட்டோ அனுப்ப வேண்டியது தான் போலிருக்கே?

    பதிலளிநீக்கு
  7. ஒளவைப்பாட்டி பெருமையே பெருமை.நல்ல சிரிப்புத்தான் !

    பதிலளிநீக்கு
  8. நினைத்து நினைத்து சிரிக்கின்றேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!