engalblog லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
engalblog லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.11.11

தங்கத் தவளை பெண்ணே!


சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11. 





புங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் புங்கவர்மன். இளைஞன். இன்னும் ஒரு திருமணம் கூட செய்துகொள்ளவில்லை. வீரத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடிக்கடி வேட்டையாட காட்டுக்குச் சென்றுவிடுவான். நாட்டிலே இருந்தால், யாராவது புலவர்கள் தேடி வந்து, அவனை 'இந்திரன், சந்திரன்' என்று அனாவசியமாகப் புகழ்ந்து (காரே பூரே என்று) கவிதை பாடி, கஜானாவை காலி செய்ய முற்படுவார்கள் என்று அவன் நினைத்ததும் ஒரு காரணம் - அவனுடைய 'வேட்டையாடு விளையாடு' மன நிலைக்கு. 

                 

               
ஒரு நாள் காலையில் எழுந்தவுடன், இரண்டு கைகளையும் நேராக மேலே தூக்கி, உப்பரிகைப் பக்கம் பார்த்து, கண்களை இறுக மூடியபடி, 'ஆவ்வ்...' என்று பெரிய சத்தம் எழுப்பியபடி, கொட்டாவி விட்டு, சோம்பல் முறித்தான், புங்கவர்மன். பிறகு, இரண்டு கைகளையும் சேர்த்து, ஒரு தட்டு தட்டி ஓசை எழுப்பி, "ஏய் யாரங்கே?" என்றான். படுக்கையறைக்கு வெளியே, மூடியிருந்த கதவுக்கு அருகே பல் குத்திக் கொண்டிருந்த பச்சை வண்ண ஆடை அணிந்த காவலன், கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து, "ஆணை இடுங்கள் மன்னா" என்றான்.  

'ஆமாம். இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆணை இடுவதாம், ஆணை! இதுவரை இட்ட ஆணைகளை பூனை அளவுக்குக் கூட செய்து முடித்ததில்லை' என்று மனதினுள் நினைத்தவாறு, "அரண்மனை ஜோசியரைக் கூப்பிடு!" என்றான் புங்கவர்மன். 

'ஆமாம். இது பெரிய ஆணை! கையை இரண்டு தடவை தட்டியிருந்தால், இரண்டு மாத சம்பள பாக்கி இருக்கின்ற அந்த பக்கி ஜோசியர் இடது அறையிலிருந்து ஓடி வந்திருப்பார். ஒரு தடவை கை தட்டியதால், ஒரு மாத சம்பள பாக்கி இருக்கின்ற நான் ஓடி வந்தேன்.' என்று நினைத்தவாறு, "சரி மன்னா " என்று கூறியவாறு ஓடினான், ப வ ஆ கா.  

இடது பக்க அறை வாயிலுக்குச் சென்று, கதவைத் தட்ட கை எடுத்தவனைத் திகைக்க வைத்தார், அரண்மனை ஜோஸ்யர், கதவைப் 'படார்' என்று திறந்து. காவலனைப் பார்த்து, வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி, 'அரசர் உன் சம்பள பாக்கியைக் கொடுத்துவிட்டாரா? ஒரு தடவை மட்டும் கை தட்டி, உன்னை அழைத்தாரே! என்னையும் கூப்பிட்டாரா?" என்று கேட்டார். 

காவலன் சோகமாக, "ஹூம் அதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுக்காவது கிடைத்தால் சந்தோஷம். மன்னர் மீன ராசி. அதனால்தானோ என்னவோ கழுவின மீனில் நழுவின மீனாக எப்பவும் நழுவிவிடுகிறார். நம்ம ரெண்டு பேரும் ஒரே ராசி. நீங்க சமயம் பார்த்து, நம்ம ராசிக்கு, 'பண வரவு' என்று என்றைக்காவது மன்னர் காதில் போட்டு வையுங்க சாமி. அவரு மனம் இரங்கி நம்ம சம்பள பாக்கியைக் கொடுக்கச் சொல்லி, கஜானா அதிகாரிக்கு உத்தரவு கொடுக்கின்றாரா என்று பார்ப்போம்" என்றான். 

இன்றைக்கு மன்னருக்கு நிறைய ஐஸ் வைக்க வேண்டும், எப்படியாவது சம்பள பாக்கியைக் கறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், உள்ளே நுழைந்த ஜோசியரிடம், "இன்றைக்கு என்னுடைய ராசிக்கு என்ன பலன்?" என்று கேட்டான் புங்கவர்மன். 

உடனே ஆர்வத்துடன், "கதிரவன் எழுந்த காலையில், கலைவாணி அருள் மழையில், நிலை யாதென்று ... " என்று சற்றேறக் குறைய முகாரி ராகத்தில் பாடத் துவங்கிய ஜோஸ்யரைக் கையமர்த்தி, "இந்த பில்ட் அப் எல்லாம் வேண்டாம். சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் பலன் சொல்லிவிட்டுப் போங்க" என்றான் மன்னன.

"மன்னா மீன ராசிக்கு இன்று இனிய அனுபவங்கள்" என்றார் ஜோஸ்யர். தொடர்ந்து "மன்னா ... என்னுடைய ராசிக்கு ப..." 

அதை எல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கவில்லை புங்கவர்மன். தன்னுடைய வேட்டை உடைகளை ஒரு கையிலும், வில் அம்புகளை மறு கையிலும் எடுத்துக் கொண்டு குதிரை மீது தாவி ஏறிப் பறந்துவிட்டான். 

*** *** *** 
காட்டிலே, வேட்டைக்கு, உடன் வந்த காவலர்கள் பறித்து வந்த பழங்களை காலி செய்தபோது, 'இதுதான் இனிய அனுபவமா?' என்று நினைத்துக் கொண்டான். பிறகு, 'இது வேட்டைக்கு வரும்பொழுதெல்லாம் நிகழ்வது ஆயிற்றே! எனவே, இது இல்லை' என்று நினைத்துக் கொண்டான். 

அதன் பிறகு, தான் அம்பு எய்து கொன்ற நாலு கால் பிராணிகளைப் பார்த்த பொழுதெல்லாம் - 'இவைகளும் எப்பொழுதும் நடக்கின்ற அனுபவங்கள்தாமே?' என்று நினைத்துக் கொண்டான். 

மாலையில், காவலர்கள் அமைத்துக் கொடுத்த கூடாரத்தில், இனிய அனுபவம் குறித்து யோசித்தபடி இனிய தூக்கம் தூங்கினான். தவளை கத்தும் சத்தம் கேட்டு, திடீரென்று விழிப்பு வந்தது, புங்கவர்மனுக்கு. காவலர்கள் எல்லோரும் பக்கத்தில் இருந்த இரண்டு கூடாரங்களில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். 
   
புங்கவர்மனின் கூடார வாயிலில், ஒரு பொன்னிறத் தவளை! தகத்தகவென மின்னியது. 'அட இதைப் பிடித்தால் ஒரு அஞ்சு பவுனாவது தேறும் போலிருக்கே' என்று நினைத்தவாறு வில் அம்பு எடுத்தவனை ஏமாற்றி, பொன் தவளை குதித்துக் குதித்து காட்டுக்குள் சென்றது. வில் அம்பு சகிதமாக, பின் தொடர்ந்தான், புங்கவர்மன். 
  
காட்டினுள் நுழைந்ததும், அந்தத் தவளை ஒவ்வொரு தடவை குதித்த போதும், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியதாகி, இறுதியில் அதன் முதுகு தோல் உரிந்து ஒரு பொன்னிற உடையாகி, அந்த உடையை அணிந்த ஒரு அழகிய, பொன்னிற மங்கையாக உருவெடுத்தது. 
  
அந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச்  சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை 

(நாங்க வாங்கிய 'தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்' காகிதத்தில், இவ்வளவுதான் கதை இருந்தது. இதோடு கதை அப்ரப்டாக முடிஞ்சு போயிடுச்சு. பீச்சில் பறந்துகொண்டிருந்த துண்டு பேப்பர்களை எல்லாம் ஓடி, ஓடி காட்ச் பிடித்துத் தேடியும், தொடர்ச்சி எங்கள் கையில் கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன? 'எங்களுக்குத்தான் ஆயிரக் கணக்கான வாசகர்கள் இருக்கின்றார்களே. அவர்களைக் கேட்டால், இந்தக் கதையை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், எவ்வளவோ இனிய முடிவுகள் கிடைக்குமே!' என்று நினைத்தோம்.  பெரிய பதிவர்கள் எல்லோரும் சிறுகதைப் போட்டிகள் சிறப்பாக நடத்துகிறார்கள். எங்கள் ப்ளாக், ஏழைகளுக்கேற்ற எள்ளுருண்டையாக, ஒரு போட்டி நடத்தினால் என்ன' என்று நினைத்தோம். ஆகவே, இதோ இங்கே வெளியிட்டுவிட்டோம். சரி. போட்டி நிபந்தனைகள் எவை? ) 

 நிபந்தனைகள் ரொம்ப சிம்பிள்: 

* இந்தக் கதையின் தொடர்ச்சியை எழுதுபவர்கள், கதையை முடிக்கும் பொழுது, எழுதி முடிக்கவேண்டிய கடைசி வார்த்தை 'அவரை'

* பதிவர்கள், தங்கள் பதிவில், இந்தப் பதிவிற்கான சுட்டியைக் கொடுத்துவிட்டு, மீதிக் கதையை அவர்களுடைய வலைப் பதிவில் எழுதி முடிக்கலாம் (கடைசி வார்த்தை 'அவரை' இது இல்லாத கதைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. அந்த 'அவரை ' கதையோடு சேர்ந்து இருக்கவேண்டும். 'அதன் பிறகு அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள். அவரை.' என்றெல்லாம் இருக்கக் கூடாது!)

* மீதிக் கதையில் காதல், வீரம், ஈரம், பாசம், நேசம், சோகம், மோகம், தாகம், நகைச்சுவை என்று எந்த ரசம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசம் மட்டும் கண்டிப்பாகக் கூடாது. 

* முடிவுப் பகுதியாக ஒரே பதிவுதான் எழுதலாம். தொடர்கதைகள் எல்லாம் எழுதக்கூடாது! 

* பதிவர்கள் அவர்கள் எழுதுகின்ற கதைக்கு என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், அந்தத் தலைப்புடன், (எங்கள் சவடால் 2K+11) என்பதையும் சேர்க்கவேண்டும். 

* உங்கள் பதிவில் வெளியாகும் கதைக்குக் கிடைக்கின்ற பாராட்டுகளும் (அனானி கமெண்டுகள் நீங்கலாக) பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுக்க உதவும். ஆனால், அது மட்டுமே கணக்கு என்பது இல்லை. 

* போட்டி முடிவு தேதி 31.12.2011. அந்தத் தேதிக்குள், மீதிக் கதை வெளியிட்டு, அந்தப் பதிவின் சுட்டியை, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பதிவு இல்லாத வாசகர்கள், மீதிக் கதையை எழுதி, அதை மேற்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றை 'நம்ம ஏரியா' வலைப் பதிவில் வெளியிடுவோம். அவைகளும் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும். 

* போட்டி முடிவுகள் 2012 ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி, எங்கள் ப்ளாக் பதிவில் வெளியிடப்படும். மொத்தம் ஐந்து முதல் பரிசுகள். (ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு முதல் பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுப்பார்). ஒவ்வொரு பரிசும் பத்தாயிரம் (பைசா) அல்லது அதன் மதிப்பு உள்ள புத்தகம். 

* வேறு ஏதாவது பாயிண்டுகள் இருந்தால், அவ்வப்போது சைடு பாரில் வெளியிடுகிறோம். அல்லது ஒரு பதிவாக வெளியிடுகிறோம்.

:: ஆசிரியர்கள் ::
:: எங்கள் ப்ளாக் ::
                 
            

10.6.11

குமரன் குன்றத்திலே !

                              
"குன்றத்திலே பதிவாசிரியருக்குத் திண்டாட்டம்!
அங்கே குவிந்தனர் அம்மா வாசகர் எல்லாம் செண்டாட்டம், செண்டாட்டம்! " என்று பாடியபடி, அவ்வையார் வருகிறார்.
                 
(கே யைத் தேடி) பதிவாசிரியரைப் பார்க்கிறார்.

"டேய் பதிவாசிரியா... "

பதி: "ஏய் கிழவீ ... மரியாத, மரியாத!"

அவ்: "அப்பனே, நான் என் அப்பன் முருகனையே அவன் இவன் என்றுதான் கூப்பிடுவேன். நீ ஏ பி நாகராஜன் படம் எதுவும் பார்த்ததில்லையா? உனக்கு எல்லாம் என்ன மரியாதை?"

பதி: "அப்பவே நெனச்சேன் - கொடுமுடிக் கோகிலம் போல இருக்கியே, நீ ஒருவேளை அவ்வையாரோ என்று. ஆனாலும் நீதான் அவ்வையா என்று நான் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்."

அவ்: "அப்புறம் ஏன் தயக்கம்? கேள்விகளைக் கேள்"

பதி: இரு பாட்டீ - நான் சின்ன வயசுல சாயிஸ் ல விட்ட செய்யுள் எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வரணும் இல்லே?"

அவ்: "அது சரி. கேள்வியில ஏதேனும் தப்பு இருந்தது என்றால், உன்னை இங்கேயே சரபேஸ்வரர் சந்நிதியில் முட்டிக் கால் போட்டு நில்லு என்று சொல்லிவிடுவேன்."

பதி: "ஒன்னாரைத்...."

அவ்: "தேறேல்."

பதி: "ஓரம்..."

அவ்: சொல்லேல்."

பதி: "அட - டஃப் கேள்விக்குக் கூட சரியா பதில் சொல்றீங்களே! நீங்க அவ்வைதான்! ஹூம், இதை, நான் ஆரம்பப் பள்ளியில் படித்த நாட்களிலேயே நீங்க சொல்லியிருந்தால், நான் அனாவசியமா பெஞ்சு மேலே ஒரு பீரியட் முழுவதும் நிற்காமல் இருந்திருப்பேன்."

அவ்: "போடா மரமண்டை - நீ அந்த ரெண்டு செய்யுளுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சதாலத்தான் உன்னை பெஞ்சு மேலே நிக்க வெச்சாங்க உன்னுடைய தமிழ் டீச்சர்."

பதி: "அட முக்காலமும் உணர்ந்த மூதாட்டி!"

அவ்: "அது போகட்டும்; நீ ஏன் வாசகர்களிடம் கோபித்துக் கொண்டு, இந்த குமரன் குன்றத்திற்கு வந்தாய்? திரிசூலத்திலிருந்து இங்கே டைரெக்ட் பஸ் இருக்குதா?"

பதி: "மற்ற மொக்கைப் பதிவுகளுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டும், கமெண்டும் போடும் வாசகர்கள் என்னுடைய கே யைத் தேடி பதிவுகளுக்கு மட்டும் அதிக அளவில் போடுவதில்லை. ஓட்டும் கமெண்டும் வாசகர்களிடமிருந்து பெற அருகதை இல்லையா எனக்கு?"

அவ்: (பாடுகிறார்)
"பதிவு நீ அப்பா!
மொக்கைப் பதிவு நீ அப்பா!
தமிழ் வலை உலக பதிவு நீ அப்பா!
ப்ளாக் தன்னில்,
எங்கள் ப்ளாக் தன்னில் -
வலை மேய்ந்து சுவைப்போர்க்கு
ப்ளேட் போடும் பதிவு நீ அப்பா ஆ ஆ !
பதி: "ஒளவையே நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நான் அந்தப் பதிவைத் தொடருவதாக இல்லை!"

அவ்: "சரி நீ இங்கே இருந்து ஒரு நாடகம் நடத்த விரும்பினால் அதைத் தடுக்க யாரால் இயலும்? அப்படி ஏதாவது நாடகம் நடத்துவதாக இருந்தால், கேட் கலெக்ஷன் காண்டிராக்டை எனக்குக் கொடு."

பதி: "அப்படியே ஆகட்டும் ஒளவையே! ஞாயிற்றுக் கிழமை, இங்கே குரோம்பேட்டைக் குறும்பன் வருவதாகக் கூறியுள்ளார். அவர் சொல்லும் சமாதானம் ஏதாவது என் மனசுக்குப் பிடிச்சிருந்தா, நான் வந்து, பதிவைத் தொடர்கின்றேன்."

அவ்: "சரி போ! ஆனால் அந்தக் 'கே' யாரு என்பதை மட்டும் நீ எனக்குக் காதோடு சொல்லிவிடு."

பதி: "நீங்கதான் முக்காலமும் உணர்ந்த மூதாட்டி ஆயிற்றே? கண்டுபிடிங்க பார்ப்போம்!"

அவ்: பதிவாசிரியரின் காதில் இரகசியமாக (.... ----- .....) என்று சொல்லி, "என்ன சரியா?"

பதிவாசிரியரின் முகம் வலைப்பூவாக மலருகிறதுபதி: ஒளவையே! நன்றி, நன்றி. யாரு 'கே' என்பது பற்றி எனக்கே குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்து வைத்த ஒளவையே! உன்னை உளமாரப் புகழ்கின்றேன்! எங்கள் ப்ளாகைப் புகழ்ந்து ஏதேனும் பாடு!"

அவ்: (பாடுகிறார்)
" பாதி பாதி என பாதித்த பதிவின்று, ஊ ஊ ...
ஷோபனா, ஷோபனா என சுற்ற விடுகின்றதே! ஏ ஏ ...
சாமியாரும் சோணகிரியும் ரங்கனும் சேர்ந்து
கே யைத் தேடிக் கொணருவரே! "
இந்தப் பாடலை, நீலாம்பரி ராகத்தில் அவ்வை பாடியதால், பதிவாசிரியர் கண்கள் சொக்கி, அப்படியே குமரன் குன்றம் மரத்தடியில், படுத்து உறங்கிவிட்டார்!