திங்கள், 20 ஜூன், 2011

வெட்டி அரட்டை...


கூகிள் போடுகின்ற கூக்ளி!
நாமொன்று நினைத்து அடிக்க தானொன்று தோன்ற வைக்கிறது கூகிள். பையா என்று அடித்தால் பாயா என்கிறது என்றால் /என்றாள், அழைத்தாள்/ அழைத்ததால், ஏன்/என், வேலை/வேளை எல்லாம் தவறாமல் மாற்றி அடிக்கிறது. காட்டிக் கொடுத்து என்றால் கட்டிக் கொடுத்து என்று தமாஷ் செய்கிறது. கவனிக்காமல் விட்டு விட்டால் விபரீத அர்த்தங்கள் வந்து விடுகிறது!

எல்லாவற்றையும்விட கேலிக் கூத்து, ஆங்கிலத்தில் vaal என்று அடித்தால், 'வாழ்' என்று தமிழில் வருவதுதான். பலர் உச்சரிப்பில் ழகரம் ளகரம் ஆகிவிடுகிறது என்றாலும் எழுதுபவர்கள் ழகரம் வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் zha என்று அடித்தால் போதுமே. தமிளன் என்று தவறாக உச்சரிப்பவர்கள் கூட, எழுதும்பொழுது தமிழன் என்று சரியாகத் தானே எழுதுகிறார்கள்? அப்படி இருக்கையில், எழுதும் பொழுது, ஆங்கில எழுத்தாகிய L என்பதை ழ் என்று கூகிள் மொழிமாற்றம் செய்வது தேவை இல்லை என்று தோன்றுகிறது.


*******************************************************

கேட்கிறார்கள் ...
'கலைஞர் ஆட்சிக்கு வரும்போது எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று எந்த ஊடகங்களும், எந்த பத்திரிகைகளும் வகுப்புகள் எடுப்பதில்லை. ஆனால் ஜெ வரும்போது மட்டும் எல்லோரும் வகுப்பெடுக்கிறார்கள்... ஏனோ?' என்று கேள்வி கேட்கிறார் சோ.

முதல்வரைப் பார்க்கும் நேரம் காலை பதினோரு மணி என்று முடிவான பின் முதல் நாள் இரவே வந்து ரெஸ்ட் எடுத்து நிதானமாக முதல்வரைப் பார்க்கக் கிளம்பாமல் காலை ஏன் திருச்சியிலிருந்து கிளம்பி அளவுக்கதிகமான வேகத்தில் அமைச்சர் கார்ப் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் சாரு நிவேதிதா.

*******************************************************

கண்டதும் நொந்ததும் ...
சமீபத்தில் ஒரு மருத்துவ செக் அப்பிற்கு மருத்துவமனை சென்ற போது கண்ட காட்சி.
ஒரு முதியவர் மனைவியுடன் வந்து மேசைக்கருகே எதிர் திசையில் பார்த்து விழித்துக் கொண்டிருக்க, மேசையின் பின்னே வீற்றிருந்த பெண்மணி 'அப்பா..இங்க வாங்க...' என்று அன்புடன் அழைத்தாள். 'இதோ இருக்கு என்கொயரி' என்று அந்த முதியவர் மனைவியுடன் அருகே சென்றார். நேரம் காலை எட்டரை மணி.

"என்னப்பா...யாருக்கு டெஸ்ட் எடுக்கணும்"

"என் வொய்ஃபுக்குதாமா..."

"Fasting ல இருக்காங்களா..."

"ஆம்மாம்மா... ஆமாம்மா... பாவம்மா... காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை..."

இந்த அன்பையும் கரிசனத்தையும் அந்த மேசைப் பெண்மணி பாராட்டியதாகத் தெரியவில்லை. அவள் கடமையில் கண்ணாக இருந்தாள்! டெஸ்ட்டுக்கு உள்ளே அழைக்கப் பட்ட போது கூடவே உள்ளே செல்ல எழுந்த அந்தப் பெரியவரை அந்த அம்மாள் முறைத்த முறை...!! ஒன்றும் பேசாமல் அவர் இருக்கையிலேயே அமர்ந்து விட்டார்.

***********************************************************

வரிசை வரிசையாய்

கிண்டியிலும், மாம்பலத்திலும் ஏன் இன்னும் நிறைய ஸ்டேஷன்களில் 'நான் பீக் அவர்ஸி'ல் கூட மெய்ன் ரோட் வரை டிக்கெட் வாங்க நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது இதற்கு விடிவே இல்லையா என்று தோன்றுகிறது. தானியங்கி டிக்கெட் மெஷின்கள் பாதி வேலை செய்வதில்லை. எல்லா ஸ்டேஷன்களிலும் அது இல்லை. குறையாத கூட்டம் கவுண்டர்களிலும் ட்ரெயின்களிலும்...போதாக் குறைக்கு வழி நெடுக பிச்சைக் காரர்கள் தொந்தரவு வேறு...

************************************************************

பாட்டுக்குப் பாட்டெடுத்து..

மறந்திருந்த ரூனா லைலாவின் சுபரினா (சுபர்னோ'வோ?) ஆல்பம் பற்றி நினைவூட்டியது விகடன் சுகா கட்டுரை. நெட்டில் தேட வேண்டும். நீண்ட நாள் கிடைக்காதிருந்த பி வி ராமன், பி வி லக்ஷ்மணனின் 'மன்னு புகழ் கோசலை தன்' பாடல் சமீபத்தில் கிடைத்தது என்றாலும் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாலமுரளியின் 'ஸ்ரீ நீலோத்பல நாயகி'யும் கிடைத்து விட்டால் சந்தோஷம். சிவானந்த விஜயலக்ஷ்மியின் 'அம்ப லலிதே...' வேண்டுமென்று கேட்ட ஒரு மாமிக்கு இன்னமும்தான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

***********************************************************

அட ராமச்சந்திரா !

ராமச்சந்த்ரா மருத்துவ மனையில் யாராவது அட்மிட் ஆனால் ஓடிச் சென்று பார்த்து விடுவேன்! பார்த்து விட்டு கேண்டீனில் ஏதாவது சாப்பிடலாமே...அங்கு கேண்டீன் அவ்வளவு ஈர்க்கிறது! தரமும் பிரமாதம். விலையும் பெரிதாக ஒன்றுமில்லை. அங்கு கிடைக்கும் பரோட்டா (புரோட்டா?) போல ஸாஃப்ட் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. காபி குறிப்பிட்ட வேளைகளில் மிக நன்றாகவும் பெரும்பாலும் நன்றாகவும் இருக்கின்றது.

**********************************************************

காற்று வந்ததும் ... கரண்ட் போனதா?
நேற்று சென்னையில் மழை பெய்தது என்பது விசேஷமில்லை. நான் ஊரிலேயே இருந்தும் கூட எங்கள் ஏரியாவிலும் பெய்தது மாமழை. சும்மா சொட்டி விட்டு நில்லாமல் மணிக் கணக்கில் கொட்டியது. கொட்டிய தண்ணீர் நீண்ட நேரம் மண்ணில் நின்றது. அட, அதை விட விசேஷம், 'இதுதான் சாக்கு' என்று போய் விடும் கரண்ட் போகவில்லை. அது ரொம்பவே சந்தோஷம். ஆனாலும் சென்னையில் இன்னும் வெய்யில் பாக்கி இருக்கிறது.

**********************************************************

1/4 டாக்ஸி = முழு ஆட்டோ?
முகூர்த்த நாள் என்றால் சென்னையில் கால் டாக்ஸி ஒன்று கூடக் கிடைப்பதில்லை. எப்போது கேட்டாலும் இரண்டு மணிநேரம் கழித்து நேரம் கொடுக்கிறார்கள். அப்புறமும் ஸாரி கேட்டு விடுகிறார்கள் சில சமயம். ஆட்டோவை யாரும் நம்புவதில்லை போலும். இப்போதெல்லாம் ஆட்டோ சார்ஜும் கால் டாக்ஸி சார்ஜும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கின்றது. அப்புறம் ஏன் அவ்வளவு காசு கொடுத்து கஷ்டத்துடன் ஆட்டோவில் போக வேண்டும் என்று மக்கள் கால் டாக்ஸி மற்றும் ட்ராவல்ஸ் வண்டி வைத்து விடுகிறார்கள் போலும்!

*************************************************

எழுத்தாளர்கள் பிழைத்துப் போகட்டும்!

இரண்டு சிறுகதைப் போட்டிகள் நாட்கெடு முடிந்து விட்டது. (கல்கி மற்றும் தினமணி) தினமலர் இன்னும் பதினைந்து நாள் இருக்கிறது. மற்ற இரண்டில் எப்படி கலந்து கொள்ளவில்லையோ (கலந்து 'கொல்லவில்லையோ'...!) அதே போல அடுத்ததிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எல்லோரும் பிழைத்துப் போகட்டும்! நம்மால் அனாவசியப் போட்டி வேண்டாம்...!

**********************************************************************

மறப்போம் மன்னிப்போம்.

கல்கி என்றதும் நினைவுக்கு வருகிறது... பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்று மாய்ந்து மாய்ந்து இரண்டு முறை எழுதியிருக்கிறோமே....அந்த ப்ராஜெக்ட் டிராப் ஆகி விட்டது என்பதைச் சொல்லா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காதே....!

**********************************************************************

அஞ்சலி
கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரனின் துணைவியார் விஜயாம்மா காலமான வருத்தத்திற்குரிய செய்தியை வெள்ளிக் கிழமை பேப்பரில் பார்த்தேன். சனிக் கிழமை வெளியான கல்கி கடைசிப் பக்கத்தில் அவரைப் பற்றி கே.பாரதி அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தார். கல்கி சதாசிவத்தின் மகளான விஜயாம்மாவின் எளிமை பற்றி அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. எம் எஸ்ஸின் வளர்ப்புப் பெண். T K C, ராஜாஜி போன்றோரின் அன்பைப் பெற்றவர் விஜயாம்மா.

******************************************************

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...  

சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் இன்று முதல் பத்து நாட்களுக்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மின் வெட்டு அமல், பொறுத்தருள்க... என்கிறது செய்தி. ஏற்கெனவே இருக்கும் வழக்கமான ஒரு மணி நேர மின் வெட்டும் உண்டாம். கேட்கும் போதே மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. அப்பாடா....இந்த முறை எனக்கு மின் கட்டணம் குறைவாகத்தான் இருக்கும்...!!   
*******************************************  
                                   

16 கருத்துகள்:

  1. கூகிள் transliteration பயங்கரக் கடுப்பாருக்கும். எப்படித்தான் சிலர் பயன்படுத்தறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கும். NHM பெஸ்ட்!!

    //ராமச்சந்த்ரா மருத்துவ மனை -கேண்டீன் அவ்வளவு ஈர்க்கிறது!//
    நீங்க சொல்றதப் பாத்தா, இதுக்காகவே உடம்பு சரியில்லாம ஆகணும்னு தோணும்போல!!
    ஆனா, எனக்கு ஆச்சுன்னா, நான் கேண்டீன் சாப்பாடு சாப்பிடமுடியாதே!! வேற யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது. அப்ப, ஒரு மாஸ்டர் செக் அப் போய் செஞ்சுட்டு சாப்பிட்டுட்டு வரணும்!!

    //பெரியவரை அந்த அம்மாள் முறைத்த முறை//
    ம்ஹும்.. எனக்கு பிளட் டெஸ்ட்னா, நான் கெஞ்சுவேன் என்னவரைக் கூட வரச்சொல்லி.

    //கரண்ட் பில்//
    தர்மனின் பார்வை போல!! :-))))

    பதிலளிநீக்கு
  2. சாரு நிவேதிதா கேட்டதையே நானும் கேட்டேன். :-))))

    கல்கி சிறுகதை போட்டியில் கலந்து கொண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. அட ராமச்சந்திரா... காப்பிக்கு எங்கயாவது சரவணபவன் பக்கம் போப்டாதோ??? ;-)))))

    பதிலளிநீக்கு
  4. //சென்னையில் இன்னும் வெய்யில் பாக்கி இருக்கிறது.//

    வெயில் மட்டுமல்ல மின் வெட்டும் இன்னும் சற்றுப் பெரிய அளவிலே - திங்கள் செய்திகள் படித்து விட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
  5. Voted 6 to 7 in INDLI

    ”வெட்டி அரட்டை...”
    என்ற தலைப்பில் எழுதியுள்ள துக்கடாச்செய்திகள் அனைத்தும்,
    சூடான சுவையான,
    வெங்காயத்தூள் பக்கோடா
    போல வெகு அருமையாக
    சுவையாக உள்ளன.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கூகிள் சிலசமயம் அசிங்கமா எல்லாம் சொல்லுது.கண்டதும் நொந்ததும் நம்ம நாடு மாறாது.கரண்ட்பில்....!

    பதிலளிநீக்கு
  7. பொன்னியின் செல்வன் ப்ராஜக்ட் பத்தியே சமீபத்துல தான் தெரிஞ்சுகிட்டேன்.. அதுக்குள்ளே ட்ராப்பா? நல்லதா போச்சு.

    பதிலளிநீக்கு
  8. கேண்டீன்ல சாப்பிட்டதால ராமசந்திராவுல அட்மிட் ஆனவுங்க யாராவது இருக்கப் போறாங்க.. பாத்துங்க.

    பதிலளிநீக்கு
  9. பல தகவல்கள், பகிர்வுகளுடனான தொகுப்பு.

    @ தமிழ் உதயம், வாழ்த்துக்கள்!

    சென்னையிலிருந்து வரும் பலரும் பெங்களூரில் ஆட்டோ சார்ஜ் ரொம்பக் குறைவு என சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வுகள்... நன்றிகள்

    பதிலளிநீக்கு
  11. வெளி வாழ் தமிழர்க்கு இந்த தகவல்கள் வாரப் பத்திரிகை தொடர்பில்லாத குறையை நிறைவு செய்கின்றன ... தொடரவும்

    பதிலளிநீக்கு
  12. நவரசமும்
    நிரம்பி
    ததும்பும்
    இரத்தின பதிவு
    அந்த வயதான தம்பதிகளின் நிலை என்னை நிலை குலையச் செய்தது

    பதிலளிநீக்கு
  13. google thaan enakku kathi ippa.

    ezhuthiya piraku check seyyalainnaal mandaiyil adiththuk kollanum:)

    பதிலளிநீக்கு
  14. Nowadays I ask them to come to my house to take the sample. I feel happy. They get money.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!