புதன், 18 ஜனவரி, 2012

புத்தகத் திருவிழா 2012


நீண்ட நிழல் 
 

இந்த முறை புத்தகத் திருவிழாவுக்கு இரண்டு முறை விஜயம்.

முதல் முறை உள்ளே இருந்த போது பெய்த பெருமழையில் மேலே உள்ள தகரக் கூரை அதிர்ந்து பிரளயச் சத்தம் உண்டாக்கி பீதியை வர வழைத்தது! வேலை நாள் என்பதாலும் மழையாலும் கூட்டம் குறைவுதான். மழை பெய்த போது வெளியில் நடைபாதையில் கடை விரித்திருந்த வியாபாரிகளுக்கும்,அந்தப் புத்தகங்களுக்கும் என்ன ஆயிற்றோ என்று கவலை ஏற்பட்டது.

திரளும் மேகம்...

சுஜாதா புத்தகம் இரண்டு மட்டும் வாங்கி முற்றும் போட்டாயிற்று.
 
இனி அவர் ஏதாவது எழுதினால்தான் வாங்க வேண்டும்!
    
காவல்கோட்டம் மிகப் பெரிய புத்தகமாக ஸ்டாலுக்கு ஸ்டால் காட்சி தந்தது.
   
டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸ் தமிழ் மொழி பெயர்ப்பு இருந்தது. "போரும் வாழ்வும்"
   
இப்படியும் அடுக்கலாம்....

   
மூலிகை மணி ஸ்டால்... நிஜமா பிளாஸ்டிக்கா....!    





 

   
ரா கி ரங்கராஜன் புத்தகங்கள் இரண்டு மூன்று கண்ணில் பட்டன. கிருஷ்ணகுமார் கதைகள் கண்ணில் படவில்லை அப்பாஜி...!
    
முதல்முறை கூட்டமில்லா நாளும் இரண்டாம் முறை கூட்டமும்....

   
கு. அழகிரிசாமி கதைகள், பு.பித்தன் கதைகள், தீபம் தொகுப்பு...
     
திருக்குடந்தை பதிப்பகத்தில்.திரு முக்தா சீனிவாசனிடம் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு புத்தகம். வெளியே நின்று நோட்டமிட்டபோது "சும்மா உள்ளே வந்து பாருங்க.... அப்போதான் புத்தகம் என்ன இருக்கு என்று தெரியும்... வாங்கித்தான் ஆகணும்னு கட்டாயமில்லே"
    
"உங்கள் வீட்டிலேயே ஒரு நூலகம் நடத்திக் கொண்டிருந்தீர்களே..." என்று தொடங்கியவுடனேயே இடைமறித்துத் திருத்தம் செய்தார்...
    
"நடத்திகிட்டிருந்தீர்களே இல்லை... இன்னும் நடந்திண்டு இருக்கு... பணமே கட்ட வேண்டாம்.... எடுத்துப் போய்ப் படித்து விட்டு பத்திரமாகத் திருப்பித் தரவேண்டும்... நாலாயிரம் புத்தகங்கள் இருக்கு.." என்றார்.
     
அப்போது உள்ளே நுழைந்தனர் ஒரு தாயும் சிறுவனும். சிறுவனிடம் முக்தா, "டேய் பயலே... படிப்பியா...... பாரு.. நீ எடுக்கற புக் காசு வாங்க மாட்டேன்... உனக்கு ஃப்ரீ..." என்றார்.
     
'ஓ பக்கங்கள்' விற்கும் ஸ்டாலில் ஞானி அமர்ந்திருந்தார். விடாது ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
   
எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்காக என்று இந்த இடம். போன முறை இப்படி பார்த்ததாக எனக்கு நினைவில்லை.
வெ. இறையன்பு வின் 'ரேண்டம் தாட்ஸ்' எங்கு தேடியும் கடைசி வரை கிடைக்கவேயில்லை.
      
இப்படி அடுக்கினால் புத்தகத் தலைப்பைப் படிக்க தமிழ்ப் பட ஹீரோ வில்லன்களை அடிக்குமுன் கழுத்தைத் திருகுவாறே அப்படித் திருக வேண்டியதாயிருக்கிறதாயினும்  பார்க்க அழகாகவே இருக்கிறது.  
  

    
திருப்பூர் கிருஷ்ணன்...
    
வயதான ஒருவரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். சொந்த ஏற்பாடா... பபாசி ஏற்பாடா தெரியவில்லை.
 
ஆனந்த விகடன் ஸ்டாலில் ஆர்வமாக 'பொன்னியின் செல்வனை'ப் புரட்டினேன். ஏனோ திருப்தியில்லை. கல்கியில் வந்த அளவிலேயே படங்கள் எதிர்பார்த்ததா, நிறையப் படங்கள் எதிர்பார்த்ததா, என்னுடைய எந்த  எதிர்பார்ப்பு தவறு?
    
கீதா பிரஸ் கடையில் பகவத் கீதை பொழிப்புரையுடன் பாக்கெட் சைஸ் பத்து ரூபாய்க்கும், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீசா போன்றவை மூன்று நாலு ரூபாய்க்கும் கிடைத்ததை பதினைந்து வாங்கிக் கொண்டேன். புத்தாண்டுக்கு சிலருக்கு இதைத் தரலாம் என்று தோன்றியதால்!
    
பீட்சா எண்பது ரூபாய்க்கும், பர்கர்கள் ஐம்பது ரூபாய்க்கும், ஃப்ரூட் சாலட் முப்பது ரூபாய்க்கும் கிடைத்தன. தேங்காய்ப் பூ நிறைய வைத்து விற்பனை செய்தார்கள். முப்பது ரூபாய், நாற்பது ரூபாய்...நான்காக நறுக்கித் தரப் பட்ட அவற்றை மக்கள் அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த என் டி ஜி எல் பதறியது!

   
வெளியே நடைபாதைக் கடைகளில் ஒன்று பத்து ரூபாய், இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று பழைய, நடுவாந்தர, ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். உள்ளே இருக்கும் பெரும்பாலான விலையுயர்ந்த புத்தகங்களுக்கு,  மலிவு விலைக் காபி இவர்களிடம் இருந்தது. உள்ளே கிடைக்காத புத்தகங்களும் கிடைத்தன. ஏதாவது புத்தகத்தைத் தேடினால் அருகில் வந்து எதை தேடுகிறோம் என்று கேட்டு அறிந்து, எடுத்துக் கொடுப்பது அல்லது கொஞ்ச தூரத்தில் எங்கோ சென்று அங்கிருந்து நாம் தேடும் புத்தகத்தை உடனே கொண்டு வந்து தருவதும் நடை பெற்றுக் கொண்டிருந்தது. 


                 

   



19 கருத்துகள்:

  1. அடடா.. முக்தா சீனிவாசன் அவர்கள் இப்படி ஒரு சேவை செய்கிறாரா? அவரின் அட்ரஸ் ப்ளீஸ்! எனக்கும் கூட கிருஷ்ணகுமார் எழுதிய சில கதைகளின் தேடல் உண்டு. ரா.கி.ர. கிடைக்கும் அளவுக்கு அவர் கிடைப்பதில்லை. முன்பு போல பழைய புத்தகக் கடைகளில் பைண்ட் செய்த குமுதம் புத்தகங்களும் கிடைப்பதில்லை. என்ன செய்வது..? ஹும்!

    பதிலளிநீக்கு
  2. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்......
    அவர் ரொம்ப நல்லவர்......
    யாருடைய வீட்டிற்கு சென்றாலும் ஏதாவது புத்தகம் வாங்கிட்டு (சுட்டுட்டு ) வந்திடுவார்.
    அவர் புதுக்கோட்டையை விட்டு மாற்றலாகி சென்று விட்டார்.இங்குள்ள நண்பர் அவரைப்பற்றி அதிகம் கேட்டுக்கொண்டே இருப்பார்.என்னவென்று விசாரித்தேன். இவரிடமிருந்து அருமையான புத்தகத்தை சுட்டுவிட்டு போய்விட்டாராம்.கேட்டால் ஒரு மேனாட்டு அறிஞரின் தத்துவத்தை கூறுவார்.....".புத்தகம் கடன் கொடுப்பவன் ஏமாளி.புத்தகத்தை திருப்பி கொடுப்பவன் படு ஏமாளி".என்று.அவரிடம் புத்தக
    திருவிழாவைப்பற்றிக்கேட்டேன்.அவர் சொன்னார்.புத்தகம் கடன் கொடுப்பதற்கு ஆள் இருக்கிற வரையில் ,பழையபுத்தகம் விற்கும் தெருவோர கடை இருக்கிற வரையில் திருவிழாவிற்கெல்லாம் போகவேண்டும் என்றார்....பிறகு யோசித்தார்போல ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி புத்தக திருவிழாவில் கிடைத்தால் வாங்கி வர சொன்னார்.நான் ஓடி விட்டேன் .?! ஏன் நான் இன்னும் ஒரு புத்தகத்தை தொலைக்க வேண்டுமா என்ன..

    பதிலளிநீக்கு
  3. பல வருடங்களுக்கு பிறகு புத்தக கண்காட்சிக்கு சென்ற வருடம் சென்றது மிகவும் சந்தோஷமாய் இருந்தது. இப்போது படங்களை பார்க்கும்போது இந்த முறை மிஸ் பண்ணியது வருத்தமாக இருக்கிறது. அதிலும் ஞானி அவர்கள் இந்த முறை வந்திருப்பதை பார்க்கும் போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. சென்ற முறை ஏன் இவர் வரவில்லை! வந்திருந்தால் நிச்சயம் பேசி இருப்பேன். நேற்று என் தோழி வேறு புத்தக கண்காட்சி சென்று வந்ததை பற்றி நெடு நேரம் பேசி என் வயத்தெரிச்சலை கொட்டிக் கொண்டாள். இப்போ பதிவிலேயாவது இதை பார்க்க முடிகிறதே, சந்தோஷம்தான்! புத்தகங்களை இப்படி வித விதமாக அடுக்கி இருப்பது பார்க்க மிகவும் அழகாய் இருக்கிறது. சென்ற முறை ஆனந்த விகடன் ஸ்டாலில் என்னை (அனுமதியுடன்தான்) புத்தகம் பார்ப்பது போல் ஒரு புகை படம் எடுத்தார்கள். அடடா! அது விகடனில் வந்ததா என்று பார்க்க சுத்தமாக மறந்தே போனேன். இப்பொழுது இந்த ஸ்டாலை பார்க்கும்போதுதான் நினைவுக்கு வருகிறது. :(

    பதிலளிநீக்கு
  4. மீனாக்ஷி...போன வருஷமும் ஞானி வந்திருந்தார்....நாங்க பேசினோம். போட்டோ கூட போட்டிருந்த ஞாபகம்!

    பதிலளிநீக்கு
  5. புகை படங்கள் கலகிட்டீங்க

    பதிலளிநீக்கு
  6. புகைப்படங்களால் பதிவை அழகு படுத்தி இருக்கீங்க (33 புகைப்படங்கள்) புத்தகங்கள் வாங்குறோமோ இல்லையோ - புத்தகக்கண்காட்சிக்கு போயிட்டு வர்றது மகிழ்ச்சியான விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  7. அப்படி என்றால் நான் சென்ற நாள் அவர் வரவில்லை. வேறு எந்த பிரபலங்களையும் நான் பார்க்கவில்லை. நிறைய நேரம் அங்கிருந்தேன். ஒன்று விடாமல் அனைத்து ஸ்டால்களுக்கும் சென்றேன். புத்தக கண்காட்சி மூடும் நேரத்திற்கு சற்று முன்தான் வெளியேறினேன். சரி, அடுத்த முறை படையெடுத்து பார்த்து விட வேண்டியதுதான். :)

    பதிலளிநீக்கு
  8. என் தோழியும் ஞானியை சந்திக்க வில்லை. மனிஷ்யபுத்திரன் அவர்களை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கியதாக கூறினாள்.

    பதிலளிநீக்கு
  9. ஞானியின் தொப்பை கவர்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. கணேஷ் சார்....முக்தா சார் வார்த்தையிலேயே இடம் சொல்லணும்னா..."சிவாஜி கணேசன் வீடு இருக்கோல்லியோ...அதுக்குப் பக்கத்துல பாரதீய ஜனதாக் கட்சி ஆபீஸ் இருக்கும்...அங்க அதுக்குப் பக்கத்துலதான் வீடு...முக்தா வீடுன்னு யாரைக் கேட்டாலும் சொல்வாங்க...."

    ஆனால் படித்தபின் புத்தகத்தைத் திருப்பித் தரும்போது அந்தப் புத்தகம் சம்பந்தமா சில கேள்விகள் கேட்பார்...நீங்கள் உண்மையிலேயே படித்தீர்களா அல்லது சும்மாவா என்று அறிந்து கொள்ள...!

    பதிலளிநீக்கு
  11. குறிப்பாகப் புகைப் படங்களைச் சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி மோகன் குமார், அதை எண்ணியும் சொன்னதற்கு கூடுதல் நன்றி ரமேஷ்....

    பதிலளிநீக்கு
  12. அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி புதுகை செல்வா...
    மீனாக்ஷி.... ஞானி மட்டுமல்ல, எஸ் ரா, சாரு, என்று எல்லா பிரபலங்களுமே வந்துதான் சென்றார்கள்..செல்வார்கள். எல்லா வருடமுமே... அவர்கள் புத்தகங்கள் வெளியிட்டுள்ள ஸ்டாலில் இருப்பார்கள்..கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்...

    நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  13. நானும் ஒருமுறையாவது புத்தக கண்காட்சிக்கு போக நினைக்கிரேன் வாய்ப்பே கிடைக்கலே. இங்கு புகைப்படங்கள் எல்லாம் பார்க்கும்போதும் கண்காட்சிக்கே சென்றுவந்த ஃபீலிங்க்.

    பதிலளிநீக்கு
  14. பெங்களூருக்கு வந்துவிட்ட பிறகு 7/8 வருடங்களாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவே முடியவில்லை. இந்த வருடம் நிறைய பதிவுகள் கண்காட்சியைப்பற்றி,அவற்றை படித்துதான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    உங்களோட பதிவு அழகான படங்களுடன் புத்தகக் கண்காட்சியை நேரில் பார்த்த தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இந்தப் பதிவு ஏன் எனக்கு அப்டேட்டே ஆகலை????? சதி????

    பதிலளிநீக்கு
  16. சென்னை வந்ததும் முக்தா வீட்டுக்குப் படை எடுக்க முடியுமா, பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  17. புத்தக கண்காட்சி பற்றிய தங்களின் தொகுப்பு நன்று. முக்தா சீனிவாசன் பற்றிய தகவல் புதிது- பயனுள்ளது. மிக்க நன்றி. நான் புத்தக கண்காட்சிக்கு சென்றபோது கவிக்கோ அப்துல்ரகுமான் வந்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  18. மிக நல்ல பகிர்வு.

    பெரும்பாலான பெரிய புத்தகக் கடைகளில் புது வரவுகளையும் டாப் செல்லர்களையும் இப்படிதான் கவனத்தை ஈர்க்கும்படி அடுக்கியிருப்பார்கள் பெங்களூரில். அழகான படங்கள் [நானும் சொல்லிவிட்டேன்:)!]

    பதிலளிநீக்கு
  19. நானும் என் மனைவியும் இந்த வருஷம் 2 தடவை புஸ்தக கண்காட்சிக்குப் போனோம். சுமார் 35 புஸ்தகங்களும் வாங்கினோம். என் உறவினர்களுக்கு எழுதும்போது இவ்வளவு ஸ்வாரசியம்மக எழுதமுடியவில்லை! உங்கள் பதிவும் போட்டோக்களும் நன்று. இந்த லிங்கை அவர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்! இரண்டு விஷயங்களை விட்டு விட்டீர்கள்! எண்ட்ரன்ஸில் பெரிய மேடை அமைத்து தினம் சொற்பொழிவுகள், பட்டி மன்றம் என்று ஜமாய்த்தார்கள். ஜி. சுப்ரமண்ய ஐயரின் ரெஸ்டாரண்ட் - குழிப் பணியாரம், திருவையாறு ஸ்பெஷல் இட்லி - கப் கேக் மாதிரி ஷேப்! மற்றும் கார தோசை, கார இட்லி எல்லாம் சூப்பர்!(நாங்கள் பார்த்த ப்ரபலங்கள் - திரு நல்லக்கண்ணு, தா. பாண்டியன், நெடுமாறன், தமிழருவி மணியன், பாரதி பாஸ்கர், ஜட்ஜ் சந்த்ரு, உள்ளே பழ. கருப்பையா, ஞாநி மற்றும் கேபிள் சங்கர்!) - ஜெகன்னாதன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!