சனி, 6 அக்டோபர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 30/9/12 To 5/10/12

எங்கள் B+ செய்திகள்.

விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....


==============

இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்களில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுவோருக்கு 'ஆன்ஜியோப்லாசி' மருத்துவ முறையை சென்னைப் பொது மருத்துவமனையில் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார் பேராசிரியர் முத்துக்குமார். செய்தி தினமலரில். இவ்வாறு அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் மூன்றே நாட்களில் வீடு திரும்பலாமாம்.

=============

ஏ டி எம் கார்ட் தேவை இல்லாமல் கைரேகையைப் பதிவு செய்து கைரேகையை வைத்தே பணம் எடுக்கும் ஏ டி எம் மெஷினைக் கண்டு பிடித்து ஒன்றை நிறுவியும் விட்டாதான் ஜப்பான். இது கொஞ்சம் பழைய செய்தி. (ஆனாலும் 'பின்' நம்பர் மறந்து போனால் கஷ்டம்தான் கணேஷ்!)

===============

ஏகம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் மருத்துவர் சாய்லட்சுமி மருத்துவம் பார்க்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளாராம். கொஞ்ச காலம் மருத்துவராக இருந்து பிறகு இந்த சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள அலைபேசி எண் 9445922333. சில உதவும் உள்ளங்கள் உதவியிலும், சம்பத்தப்பட்ட மருத்துவமனைகளிடமே உதவி கேட்டும் இந்தச் சேவையைச் செய்யும் இவரைத் தெரியபடுத்துகிறது தினமலர்.

================

 வடநாடுகளில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களைக் கண்ட நமக்கு 600 அடி ஆழ்துளைக் கிணறில் விழுந்த 3 வயதுக் குழந்தையை ஹோசூரில் உயிருடன் காப்பாற்றிச் சாதனை செய்திருக்கிறார்கள். சரியாக மூடாத ஆழ்துளைக் கிணறுகளின் அருகில் இருக்கும் சிறுகுழந்தைகளின் பெற்றோர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம்.

=================

2001 இல் குஜராத்தில் பேரழிவை உண்டாக்கிய நிலநடுக்கத்தில் மண்ணோடு மண்ணாகிப் போன தன் பிசினசை மீண்டும் இன்னும் புதிய முறையில் உயிர் பெறச் செய்திருக்கிறார் மண் குளிர்சாதனப் பெட்டிகள் செய்யும் மனுஷ்பாய். முன்னர் மண்பானைகள், சட்டிகள் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தாராம். 1200 சென்டிகிரேடு வெப்பநிலையில் இந்த மண் குளிர்சாதனப் பெட்டி உருவாக்கப் படுவதால் உடையாது என்று கூறுவதாகக் கூறும் தினமணி இந்த குளிர்சாதனப் பொருளின் விலை 2000 ரூபாய் என்ற தகவலையும் சொல்கிறது. மின்சாரம் தேவை இல்லை. நீர் நிரப்பி அவ்வப்போது மாற்ற வேண்டும். மின் குளிர்சாதனப் பெட்டியைப் பார்ப்பது போலவே இருக்கிறது இவர் தயார் செய்யும் மண் குளிர்சாதனப் பெட்டி. இவரைப் பற்றிப் படித்தது தினமணிக் கதிரில்.

=============================

அனாதைக் குழந்தைகளைத் தெருவில் திரிவது கண்டாலோ, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொடுமைகளைக் கண்டாலோ 1098 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்யலாம் என்கிறது விகடன் செல் தொலைபேசிப் பக்கம்!

=================

14 வயதில் திருமணம் முடித்த, குழந்தைகள் பெற்ற,  எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த தாம்பரத்தைச் சேர்ந்த சத்யா, மேற்கொண்டு படிக்க நினைத்து, அதுவும் உருப்படியாகத் தொழிற்கல்வி படிக்க நினைத்து, கணவரின் உதவியுடன் ஹோசூர் டி வி எஸ்ஸில் மெக்கானிகல் சேர்ந்து படித்து, இன்று வொர்க் ஷாப்பில் பல ஆண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் வேலை செய்து பாராட்டைப் பெறுகிறார் சத்யா. இந்த உற்சாகத்தில் எக்ஸ்போர்ட் மெக்கானிக் என்னும் அடுத்த பதவிக்குப் பரிந்துரைக்கப் பட்டு, அதற்காக பயிற்சி பெறப் போகும் இவரைப் பற்றி அறியத் தருகிறது தினமலர்.

=====================



கடலூரைச் சேர்ந்த, சிதம்பரத்தில் MSc software Engineering கடைசி வருடம் படிக்கும் நாகராஜன் என்பவர் ஒரு புதிய சமையல் எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கிறார் என்ற செய்தியை முகப் புத்தகத்தில் படித்து, அவர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் திரு வெங்கட் நாகராஜ் பக்கத்தில் நீங்களும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்காக இங்கே..  இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அதனைச் சூடு படுத்தினால் Gas உருவாகி அந்த டப்பாவில் இணைக்கப் பட்டிருக்கும் சிறிய குழாய் மூலமாக வெளியேறுகிறது. அதைத் தீக்குச்சியால் பற்ற வைக்கும்போது நீ நிறத்தில் எரிகிறது. இதைச் சிலிண்டர்களில் அடைத்து அடுப்பெரிக்கப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறார் நாகராஜன்.

===================

திருப்போரூரைச் சேர்ந்த 52 வயது, 'டைல்ஸ்' பதிக்கும் தொழிலாளி, கணேசன் தன்னுடைய சைக்கிளில் டைனமோ மின்மாற்றியை பின் சக்கரத்தில் பொருத்தி, சைக்கிள் சீட் அருகில் இரண்டு திரி பின், 'டூ பின் ப்ளக்'குகளைப் பொருத்தி இணைப்பு கொடுத்து, அதில் செல் ஃபோன், எமர்ஜென்சி லைட் ஆகியவற்றை சார்ஜ் செய்கிறார் என்கிற செய்தியைச் சொல்கிறது இன்றைய தினமலர். இப்படிச் செய்ய 475 ரூபாய் செலவு ஆகிறதாம் . பெட்ரோல் உபயோக வாகனங்களிலும் இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறாராம் கணேசன். 

================

17 கருத்துகள்:

  1. கணேசன், நாகராஜன், சதயா, மனுஷ்பாய், சாய்லட்சுமி - நாளைக்கு மறந்து விடுவேன் என்பதால் இப்பொழுதே இவர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன் - விடியலின் நம்பிக்கையை வளர்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக நல்ல விஷயங்களைப் பகிர்ந்துருக்கீங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாசிட்டிவ் செய்திகள்.... பேப்பரை எடுக்கவே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது.... அட்லீஸ்ட் இங்கே நல்ல செய்திகளைப் படிக்க முடிவதில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  4. நல்ல செய்திகள்.

    தொடரட்டும் நல்லவை.

    பதிலளிநீக்கு
  5. தேர்ந்தெடுத்து மிகவும் நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கை தரும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. நல்ல செய்திகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே நல்ல விஷயங்கள், நம்பிக்கை தரும் விஷயங்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    வலைச்சரத்தில் பதிவர்கள் அறிமுகத்தில் 'எங்கள் ப்ளாக்' ஸ்ரீராம் படத்துக்கு ராமர் உம்மாச்சி படத்தை போட்டு உங்களை ஒரு தனி ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்களே.
    பேஷ்! பேஷ்! :)))))

    பதிலளிநீக்கு
  10. எல்லா நாளும் இந்த மாதிரி நல்ல செய்திகளே படித்தால் நன்றாக இருக்கும்.

    செய்திகள் எல்லாம் நல்ல செய்திகள்.

    நாளும் நம்பிக்கை தரும் செய்திகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வலைச்சரம் வழி காட்டியது.
    வந்தேன். வந்த இடத்தில்
    வெளிச்சம் இருக்கிறது.

    இருளைக்கண்டு
    மருளாமல் இராமன்
    அருள் பெறவே அமைதி பெறவே ,
    இரு சொற்கள் போதுமென்கிறது.

    B + ( Be Positive)


    நல் இதயம் கொண்ட தங்களுக்கு
    நன்றி .

    சுப்பு ரத்தினம்.


    .




    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம்னு சொல்றதா. ராமா ராமானு சொல்றதா:)
    பதிந்த அத்தனை நல்ல நிகழ்ச்சிகளுக்கும் நன்றிமா. வாராவாரம் நல்ல செய்திகள் தந்து நம்பிக்கையை வளர்க்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
  13. தமிழ் செய்திதாள் படித்து யுகம் ஆகிவிட்டது. அந்த குறையை போக்கிவிட்டது பதிவு.நல்ல செய்திகளாக எடுத்துக்கொடுத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை, அமைதிசாரல் வெங்கட்நாகராஜ், ராமலக்ஷ்மி திண்டுக்கல் தனபாலன், இராஜராஜேஸ்வரி, கோவை 2 தில்லி, மீனாக்ஷி , கோமதி அரசு, சுப்பு ரத்தினம் சார், வல்லி சிம்ஹன், ராம்வி,

    அனைவருக்கும் நன்றி. இன்னும் நிறைய பாசிட்டிவ் செய்திகள் தினமும் செய்தித் தாள்களில் கண்ணில் பட வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்....

    நன்றி அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு
  15. எப்படியோ எரிவாயு பிரச்னை தீரப் பிரார்த்திப்போம். இப்போ மின்சாரத்துக்காகப் பிரார்த்தனைகள் செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  16. /////மின் குளிர்சாதனப் பெட்டியைப் பார்ப்பது போலவே இருக்கிறது இவர் தயார் செய்யும் மண் குளிர்சாதனப் பெட்டி. இவரைப் பற்றிப் படித்தது தினமணிக் கதிரில்.///// இந்த லிங்க் எங்கே தேடியும் கிடைக்கவில்லை.எந்த வாரம் என்று சொன்னால் நல்லாயிருக்கும்.பயனுள்ள செய்தி

    பதிலளிநீக்கு

  17. Chilled Beers...

    //எந்த வாரம் என்று சொன்னால் நல்லாயிருக்கும்//

    தினமணி கதிர் 30.9.2012

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!