புதன், 15 அக்டோபர், 2014

திகில்வரிகள் II



திகில்வரிகளின் முதல் பாகம் ( ! ) பெற்ற ஆதரவினால் (சொன்னா நம்பணும்!) இப்போது இரண்டாம் பாகம்! ஆனால் இனி தொடராது என்று உறுதியளிக்கிறேன் - இப்போதைக்கு!



எல்லையற்ற வானில்
ஏகாந்தமாய்ப் பறக்கும்
கனவுக்கு நடுவே
ஏதோ சத்தம் கேட்டுக்
கண்விழித்தேன்.
கடைசிப் பகுதி மண்ணை
என் முகத்தின் 
மேலே போட்டு 
குழியை மூடினார்கள்.


=======================



குளிர்கிறதே
என்று போர்த்திக் கொள்ளத்
துணியைத் தேடியபோதுதான்
தெரிந்தது
பாவிகள்
துணிகளை உருவிக்கொண்டுதான்
புதைத்திருக்கிறார்கள் என்று!

======================= 


'இரவில்
தனியாக இருக்கிறோமே
விளக்கை அணைக்க வேண்டுமா என்ன?'
என்று யோசித்தபோது
'வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது'
என்றது
அருகில் ஒரு குரல்

=========================


காற்றேயில்லாமல்
இப்படிப் புழுங்கும்
என்று தெரிந்திருந்தால்
புதைக்க வேண்டாம்
எரித்து விடுங்கள்
என்று சொல்லியிருக்கலாம்.


=======================



கனவிலிருந்து
விழித்துக் கொண்டபோது
கரண்ட் இல்லை என்றுதான் நினைத்தேன்
கல்லறை என்று
பின்னர்தான் தெரிந்தது!


===================



திகில் கதை
படித்துக் கொண்டிருந்தேன்.
திகிலே இல்லை.
முதல் வரியை மறுபடி படிக்கவும்
என்றது
கடைசி வரி.
மீண்டும் மேலே சென்றேன்.
எந்த வரிகளையுமே காணோம்!


===============


அப்போ பரவாயில்லை!



குனிந்து பார்த்தபோது
என் உடலைக் காணோம்...
பதறி எழுந்து சென்று
கண்ணாடியில் பார்த்தேன்.
அட,
முகத்தையும் காணோம்!

18 கருத்துகள்:

  1. வணக்கம்

    படிக்கும் போது மனதில் ஒரு விதஅச்ச உணர்வு நன்றாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  2. இறப்பின் நினைப்பே திகிலூட்டுகிறது போலும்....!

    பதிலளிநீக்கு
  3. அனைத்துக் கவிதைகளும் திகிலாக இருந்தன. அதிலும் கடைசிக் கவிதை மிரட்டல்.

    பதிலளிநீக்கு
  4. எதற்கு இந்த திகில் ஆசை?
    இனி தொடராது என்று உறுதியளித்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உயிர் இல்லை என்று நம்ப வைத்து
    உயிர்ப்பை வரிகளில் காட்டுவது உயிர்ப்பை காட்டும் முயற்சியில் உயிரை இல்லாது ஆக்குவது

    இரண்டுக்குள் ஒன்று
    இல்லை, இரண்டுமே சேர்ந்து!
    உயிர் இல்லாதது போலான புரிதல்
    இருப்பது போலாவது முக்கியமாகி
    பின்னர் திகிலாவது தான் வெற்றி!


    திகிலோ திடுக்கிடலோ எதுவாயிருந்தாலென்ன?
    கவிதைக் களை இருக்கிறதே!
    அதான் கொண்டாட்டம்.

    முதல் மூடலில்
    இரண்டு 'மூடி'களைத்
    தவிர்த்திருக்கலாம்!

    நான்கு அட்டகாசம் என்று
    நினைத்தால் இரண்டு அதைத்
    தூக்கிச் சாப்பிட்டு விட்டதே!

    பெயரைச் சொல்லி பாராட்டலாமென்று
    தேடியது தேடலில்
    தென்படாதது வருத்தமே.

    பதிலளிநீக்கு
  6. வரிகள் காணாமல் போவது பகீர்! கடைசித் திகிலுக்கான தலைப்பு புன்னகைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  7. அதிலும் அருகில் கேட்குது பாருங்க அந்தக் குரல்! அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
  8. 2,3,4 ஏற்கெனவே படிச்சாச்சு.:)) மத்ததும் நல்லாவே இருக்கு. தொடருங்க, ரொம்ப சுவாரசியமா இருக்கு.

    அது சரி கண் விழிக்கிறச்சே மண்ணைப் போடறாங்களே, கண்ணிலே மண் விழலை இல்லையா? பார்த்து! :)))))

    பதிலளிநீக்கு
  9. கீழே உள்ள கருத்தை ஏற்கெனவே அனுப்பினால், திகில் பதிவா, அதுவும் ரொம்பத் திகிலடைந்து போகவே இல்லைனு சண்டித் தனம். ஒரு மாதிரி சமாளித்து சமாதானம் பண்ணி இரண்டாம் முறையா அனுப்பி வைச்சிருக்கேன். கொஞ்சம் பயத்தோடயே போயிருக்கு போல! :)))))

    பதிலளிநீக்கு
  10. திகில் வரிகள் ஒன் லைன் ஸ்டோரி போல இருக்கு! பேசாம ஒரு திரைக்கதை போட்டுடலாமா??!!!!

    பதிலளிநீக்கு
  11. அதுவும் அந்த புத்தக வரிகள், முகத்தையும் காணோம்.....ம்ம்ம் நிறைய கதை சொல்லுதே...ஹ்ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  12. பதறி எழுந்து சென்று
    கண்ணாடியில் பார்த்தேன்.
    அட,
    முகத்தையும் காணோம்!/

    பதறி எழுந்து தேடிப்பார்த்தால்
    அட்...
    திகிலையும் காணோம்..!!

    பதிலளிநீக்கு

  13. * நன்றி ரூபன்.

    * நன்றி ஜி எம் பி ஸார்.

    * நன்றி மாடிப்படி மாது.

    * நன்றி கோமதி அரசு மேடம். அடுத்து இது போல எதுவும் தோன்றும் வரை சத்தியமாகத் தொடர மாட்டேன். சரியா மேடம்... :)))

    * நன்றி ஜீவி ஸார். முதல் இரண்டு பாராக்களை இரண்டு மூன்று முறை படித்தேன்!

    திகில் இருக்கிறது என்கிறீர்கள்! அப்போ சரி!

    //பெயரைச் சொல்லி பாராட்டலாமென்று
    தேடியது//
    தலைப்பு இல்லை என்று சொல்கிறீர்களா?

    ஒரு 'மூடியை'க் கழற்றி விட்டேன்! :)) (நான் முன்னாடியே சொல்லலை?)


    * நன்றி ராமலக்ஷ்மி.

    * நன்றி குமார்.

    * நன்றி கீதா மேடம்..

    * கண்ணுல மண்ணு விழுந்தாலும் பாதிக்கலையாம். 'அவரு' சொல்லச் சொன்னார்.

    பின்னூட்டத்திலும் திகிலா... ஆ!

    * நன்றி துளசிதரன்ஜி... கவிதையிலிருந்து கதை... அட!

    * நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்... நன்றாக முடித்திருக்கிறீர்கள். :)))

    பதிலளிநீக்கு
  14. அட்டகாசமான வரிகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!