செவ்வாய், 13 அக்டோபர், 2015

தொலைபேசியால் ஏமாந்த ராசா


அப்பாதுரையின் வேண்டுகோளின்படி அந்தக் கதையையும் விளக்கும் வண்ணம் காணொளி  இணைக்கப்பட்டுள்ளது.

முன்குறிப்பு : எத்தனையோ ஃப்ராடுத் தனங்களைப் பார்த்திருப்போம்.  ஒவ்வொன்றும் ஒரு வகை.  ராஜா இதில் அனுபவிப்பது புதுவகை. 

முன்னர் ஒரு கடையில் லட்டு வாங்கிக் கொண்டு,  இன்னொரு கடையில் துணி வாங்கி,
இதற்கு அதைக் காட்டி ஏமாற்றும் கதை நினைவிருக்கிறதா?  உண்மையாகவே நடந்தது அது என்று சொல்வார்கள்.  அதுவும் நாகப்பட்டினத்தில்.  

இந்தச் சம்பவத்தை  டைரக்டர், நடிகர் பாண்டியராஜன் தன்னுடைய படத்தில் காட்சியாகவும் வைத்திருந்தார்.  அதே போல இப்போது லேட்டஸ்டாக ஒரு சம்பவம்!











============================================




                                                              Image result for tirupati temple images



தரிசனம் முடிந்து வெளியே வந்தார் ராஜா.  இனி மலை இறங்க வேண்டும்.  

அலை அலையாய் மக்கள் கூட்டம் எங்கும்.    பெருமாளைப் பார்த்த திருப்தியுடன், அதே நினைவில், மனக்கண்களில் அந்த உருவத்தையே நினைத்து நிறுத்தியபடி நடந்தார்.

எதிரில் வந்து நின்றவன் பரபரப்பாக இருந்தான்.  இளைஞனாக இருந்தான். தலை கலைந்திருந்தான்.  முகத்தில் கவலையும் சோகமும் சம அளவில் பரவி, ஏதோ சமீபத்து சோகத்தைச் சந்தித்திருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லின.

சஹஸ்ரநாமத்தை முணுமுணுத்தபடி விலகி நடக்க முற்பட்ட ராஜாவின் கைகளைப் பற்றி "ணா.. ஒரு நிமிஷம்ங்ணா..."  என்றான்.

ராஜா ஸ.நா நிறுத்தி அவனை ஒரு குழப்பப் பார்வைப் பார்த்தார்.
"ணா... என் பர்ஸையும், செல்ஃபோனையும் அடிச்சிட்டாங்ணா...  அதுலதான் பணம், கிரெடிட் கார்ட், ஏ டி எம் கார்ட் எல்லாமே வச்சிருந்தேன்.."

'கௌரவப் பிச்சையா?' 

"உங்கள் செல் ஒரு நிமிஷம் கொடுங்கணா..   வீட்டுக்கு ஒரு கால் பேசிக்கறேன். ப்ளீஸ் ணா..."

'இவ்வளவுதானா?'

பைகளுக்குள் கைவிட்டு தன்னுடைய  செல்லை எடுத்துக் கொடுத்தார்.  

"ணா..  ஸ்விட்ச் ஆஃப்  ஆகியிருக்கு...  சார்ஜ் இல்ல போலேருக்கு...  பரவாயில்ல.. நான் வேற ஆள் பார்க்கறேன்"   விலகி நடக்க முற்பட்டவனை நிறுத்தினார்.


                                                            Image result for a man in the crowd with cellphone clip art  images


"இல்லப்பா..  சன்னதிக்குள் போகும்போது நான்தான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சேன்.  கொஞ்சம் இரு..."  என்று செல்லை வாங்கியவர், அதை ஆன் செய்து ஸ்க்ரீன் வரும்வரைக் காத்திருந்து அவனிடம் கொடுத்தார்.  வாய் மந்திரத்தை முணுமுணுத்தபடி இருந்தது. 

அவன் அதை வாங்கி பரபரப்பாக நம்பர் டயல் செய்து காதில் வைத்தான்.  தொடர்பு கிடைக்கவில்லை போலும்.  மறுபடியும் மறுபடியும் முயற்சித்தான்.  

இவர் சஹஸ்ரநாமத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர், திரும்பி கோபுரத்தைப் பார்த்தார்.  அவர் கரங்கள் அனிச்சையாகக் குவிந்தன.


                                                                Image result for tirupati temple images


அருகில் ஒரு தெலுங்குக் குடும்பம் சண்டையிட்டபடி, அல்லது சாதாரணமாகப் பேசியபடி,  இவரை தங்களுக்குள் மூழ்கடித்துத் தாண்டிச் சென்றது.

தாண்டிச் சென்ற கூட்டத்திலிருந்து வெளி வந்தவர் அவனைத் தேடினார்.  அவனும் கூட்டத்தில் தெரியாதிருப்பான் போலும்.   சுற்றுமுற்றும் பார்த்தபடி, முன்னும் பின்னுமாக நடந்து அவனைத் தேடினார்.
அவனைக் காணோம்.

அவனைத் தொடர்ந்து தேடத் தொடங்கினார்.


வன் பரபரப்பாக மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான். 

ஒரு வழியாக அவர் ஃபோனிலிருந்து தகுந்த எண்ணைக் கண்டுபிடித்துப் பேசி விட்டான்.   ஐம்பதாயிரம் ரூபாய் உடனே அனுப்பச் சொல்லி இருக்கிறான்.  அதை கையில் பெற ஒரு வழி வேண்டும்.  அடிவாரத்துக்கு வந்து விட்டான்.   கடைத்தெருவில் நாலைந்து முறை அங்குமிங்கும் பார்த்தபடி அலைந்தவன்,  அந்த லாட்ஜிலிருந்த இளைஞனைப் பார்த்ததும் தீர்மானித்தான். 

 
'இவனைக் கேட்கலாம்'

கொஞ்ச நேரமாகவே அருகில் நின்றிருந்தவனைப் பார்த்தான் அந்த இளைய மேனேஜர்.  

"என்ன வேணும்?"

"ரூம் வேணும்... அதற்கு முன்னால ஒரு பிரச்னை.. என்னோட பர்ஸைப் பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க..  பணம், கிரெடிட் கார்ட்,  ஏ  டி எம் கார்ட் எல்லாம் போச்சு..    ஃபோன் பண்ணி பேங்க்ல சொல்லி ப்ளாக் பண்ணிட்டேன்.  எங்க வீட்டுக்கு ஃபோன் செய்து பணம் அனுப்பச் சொன்னேன்.  ஐம்பதாயிரம் அனுப்புவாங்க.  அதற்கு ஒரு பேங்க் அக்கவுண்ட் நம்பர் வேணும்.  உங்க நம்பர் கொடுக்க முடியுமா ப்ளீஸ்...  ப்ளீஸ் ஹெல்ப் மீ..   அவங்க அனுப்பின உடனே நீங்களே அந்தப் பணத்தை உங்க கையாலேயே எடுத்து என்னிடம் கொடுங்க"

இளைஞன் இவன் சொன்னதை மனதில் வாங்கி யோசிக்கக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டான்.  தனக்கு இதனால் ஏதும் நஷ்டம் வருமா என்று சாதக, பாதகங்களை அலசி இருப்பான் போலும்.  

பிறகு தன்னுடைய அக்கவுண்ட் நம்பரைக் கொடுத்தான்.  இவன் 'தன்' தொலைபேசியிலிருந்து பேசி அந்த எண்ணைக் கொடுத்தான்.  பத்து நிமிடங்களில் மேனேஜருடைய செல்லுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கிரெடிட் ஆகியிருப்பதாக மெசேஜ் வந்தது.

திருப்தியுடன் அவனை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த வங்கிக்குச் சென்று,  அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தான் மேனேஜர்.


நீண்ட நேரம் மேலே தேடியலைந்த ராஜா கீழே இறங்கினார்.

அடிவாரத்துக்கு வந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த மனைவியையும், மச்சானையும் பார்த்து லேசான அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தார்.  

"என்ன இங்கே..  என்ன விஷயம் கவி?"

"என்னங்க ஆச்சு?  நல்லாயிருக்கீங்களா?  உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே.."

இவருக்கு ஒன்றும் புரியவில்லை.  "எனக்கு என்ன? ஒன்றுமில்லையே..  செல்லைத்தான் ஒருத்தன் அடிச்சுட்டான்"

செல்லை அடிச்சுட்டானா?  அதுலேருந்துதாங்க கால் வந்தது.  உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆகியிருக்குன்னும், ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுத்து உடனே 50,000 ரூபாய்ப் பணம் கட்டச் சொல்லியும்...  முதல்ல பணத்தை அனுப்பிட்டு,  பதறிப்போய் டிராவலர்ஸ் வண்டி ஒண்ணு புக் பண்ணி ஓடி வர்றோம்..."


"ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூம் புக் பண்ண இதோ பின்னாலேயே வர்றேன்" என்று சொல்லிச் சென்றிருக்கும் 'அவனு'க்காகக் காத்திருக்கும் லாட்ஜ் மேனேஜர் தன்னை நோக்கி வரும் போலீஸ்காரரையும், கூடவே வரும் கூட்டத்தையும் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.  அந்த ஃபோன் மேனேஜரின் மேஜை மேலே கிடந்தது.   


இனிதான் அவனுக்குப் புரிய வேண்டும்!






நிஜமாக நடந்த நிகழ்வு, சற்றே கற்பனை கலந்து...





44 கருத்துகள்:

  1. அப்பாவும் சொன்னாங்க .
    எப்டியெல்லாம் திருடுறாங்க..கஷ்டத்துல இருக்காங்கன்னு யாருக்கும் உதவ முடியாது போலிருக்கே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரி கிரேஸ். "யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்..." பாடல் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  2. நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். முன்பின் தெரியாதவனை எதற்கும் நம்பாதே.

    பதிலளிநீக்கு
  3. தெரிந்தவனையும் எந்த அளவிற்கு நம்ப வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டுமே நம்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அளவீட்டையும் எப்படி வரையறை செய்ய?!! நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

      நீக்கு
  4. யாருக்கும் உதவி செய்யவே கூடாது போலிருக்கு! விதம் விதமாய் ஏமாற்றுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேனா கடன் கேட்பவர்களிடம் மூடியைக் கையில் நிறுத்திக் கொண்டு பேனாவை மட்டும் தருவார்களே... அது நினைவுக்கு வருகிறது. நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. இது போன்று நடக்கும் விஷயங்கள் நம்மை உஷாராக இருக்க வைத்தாலும், நம்மை நல்ல நேர்மையான, நிஜமாகவே கஷ்டப்படும் மனிதர்களுக்குக் கூட உதவ முடியாமல் போகும் நிலைமைக்குத் தள்ளிவிடுகின்றது. ஒண்ணுமே புரியலை போங்க...

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் அந்த ஆண்டவனின் திருவிளையாடல்!
    லட்டு கதையும் சுருக்கமா போட்டிருக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, லட்டு கதை தெரியாதா அப்பாஜி! முடிந்தால் பின்னர் காணொளி இணைக்கிறேன்

      நீக்கு
  7. crooks are very clever வே நடனசபாபதியின் பதிவுபோல் இருந்தது. ஏமாற்றுவதும் ஒரு கலைதான்

    பதிலளிநீக்கு
  8. //எல்லாம் அந்த ஆண்டவனின் திருவிளையாடல்!//

    எவ்வளவு பொருள் பொதிந்த வாக்கியம்! இப்பொழுது தான் கோயில் அர்ச்சகரின் மதிப்பைப் பெறுவதற்காக ரூ.200/- கொடுத்து ஒரு மாலையை வாங்கிப் போட்டுக்கொண்ட ஒருவரின் அனுபவத்தைப் படித்து விட்டு வந்தால்--

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பின்னான பின்னூட்டத்துக்கு நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்! நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் போல! முன்பின் தெரியாதவரிடம் பேச்சைத் தவிர்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  11. உண்டியலில் காணிக்கை போடாமல் விட்டதால் இந்த தண்டனையா :)

    பதிலளிநீக்கு
  12. உண்டியலில் காணிக்கை போடாமல் விட்டதால் இந்த தண்டனையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் உண்டியலில் பணம் போடலையான்னு நமக்குத் தெரியாதே.... நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  13. யாரைத்தான் நம்புவது கலிகாலம் 80 இதுதானே....

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரையின் விருப்பப்படி அந்தக் கதையையும் விளக்கும் காணொளி வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஶ்ரீராம். (ஹி...ஹி...ஹி..) அப்பாதுரை இதைப்படிச்சப் 'பார்த்தாரா'ன்னு நமக்குத் தெரியாதே.. இல்லையா?!!

      நீக்கு
  15. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?

    பதிலளிநீக்கு
  16. புலி வருது புலி வருது கதை தான் இதுவும். ஒரு தடவை ஏமாந்தால் நிஜமான கஷ்டத்தில் இருப்போருக்கும் உதவிட முடியாத படி மனம் மரத்தும் போகின்றது. யாருக்கும் இரக்கம் காட்டக்கூடாது எனும் மன நிலைக்கு வர இம்மாதிரி சம்பவங்கள் காரணமாகும் போது தெருவில் அடிபட்டு கிடைப்பவரை பார்த்து உதவிடும் மனமில்லையே எனவும் திட்டிக்கொள்கின்றோம்.. பொதுவாக என் அனுபவமும் யாருக்கும் அதிகமாக இரக்கம் காட்டவோ உதவி செய்யவோ கூடாது என்பது தான். அதிலும் போனை கொடுத்து பேச உதவுவது பசி என கேட்டால் காசு கொடுப்பது எல்லாம் ரெம்ப தப்பு. யாரேனும் பசி என கேட்டால் அருகிலிருக்கும் கடையில் ஏதேனும் உண்வுபண்டமாக வாங்கிக்கொடுத்து விடுவேன். போன்... நோ சான்ஸ்! நிஜசம்பவத்தினை கதையாக்கிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையைச் சிதைக்கும் இது போன்ற ஃப்ராடுகள் ஒழிக! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா.

      நீக்கு
  17. இது போன்ற சிலரால் உண்மையில் சிரமத்தில் இருப்போருக்கும் உதவ யோசனை வந்து விடுகிறது :(.

    பதிலளிநீக்கு
  18. வக்கிரம் பிடித்த மனித மனத்தின் செயலால் இறைவனும் வாங்கிக் கட்டிக்கிறார். இறைவன் அறிவைத் தான் கொடுப்பான். அதைச் சரியான பாதையில் நாம் தான் செலுத்த வேண்டும். சக மனிதர்களை ஏமாற்றப் பயன்படுத்தினால் இறைவன் என்ன செய்வான்? அவனுக்கு உரிய பின்வினையும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதில் சந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு
  19. ஏமாற்றுபவன் இறைவன் ஏமாறுபவன் பக்தன்
    ஏமாற்றுபவன் பக்தன் ஏமாறுபவன் இறைவன்
    இதில் எது ஆத்திகம்? எது நாத்திகம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாற்ற வைப்பதும், ஏமாற வைப்பதும் இறைவன்தானே மோகன்ஜி! கீதையின் தத்துவப்படி ஏமாற்றுபவனும் கண்ணனே... ஏமாறுபவனும் கண்ணனே!

      நீக்கு
  20. //ஏமாற்றுபவன் இறைவன் ஏமாறுபவன் பக்தன் //

    நாம் நன்றாக வாழ இத்தனை வளங்களையும் கொடுத்தவன் ஏமாற்றுவானா? ம்ஹூம்! அந்த வளங்களைத் தனிப்பட்ட சுகத்துக்காகக் கொள்ளையடிக்கும்/உரிமை கொண்டாடும் நாம் தான் ஏமாற்றுகிறோம். அதனால் தான் ஏமாந்தும் போகிறோம்! இல்லையா! :))

    பதிலளிநீக்கு
  21. கதையை விட உங்களின் //ஏமாற்ற வைப்பதும், ஏமாற வைப்பதும் இறைவன்தானே மோகன்ஜி! கீதையின் தத்துவப்படி ஏமாற்றுபவனும் கண்ணனே... ஏமாறுபவனும் கண்ணனே!// இந்தக் கமென்ட்டை ரசித்தேன், ஸ்ரீராம்!
    பெங்களூர் வந்த சிலநாட்களில் நடந்த ஒரு சம்பவம்: கூப்பன் வாங்கிக் கொண்டாலும் சில நாட்களில் எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் வாங்குவேன். ஒருநாள் ஒருவர் வந்து நீங்கள் அதிகப்படி பால் கேட்கிறீர்களாம். அதற்காக தனி கூப்பன் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் எங்கள் பாஸ் என்று ஒருவர் வந்து 150 ரூ வாங்கிக் கொண்டு போனார். நீங்கள் யாரென்று கேட்டதற்கு நானும் பால் போடுபவன் தான் என்று பதில் சொன்னார். அடுத்தநாள் அந்தக் கூப்பனைக் கொடுத்து அதிகப்படி பால் கேட்டதற்கு, நான் இப்படி யாரையும் அனுப்பவில்லை என்று அடித்து சத்தியம் செய்தார் பால்காரர். ஏமாறுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுகிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
    எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் ஏமாந்து இருக்கிறோம் என்பது ஆறுதலான விஷயம்!

    பதிலளிநீக்கு
  22. ஏமாற்றுபவர்கள் என்று இருக்க வேண்டும். எழுத்துப் பிழை பொறுத்தருள்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!