31.5.25

காலரா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை வெற்றி, மற்றும் நான் படிச்ச கதை

 

வயதானவர்களுக்கு மட்டும் சத்தமில்லாமல் சாதிக்கும் இளம் டாக்டர்

'அறுபது வயதை கடந்தாலே 2வது குழந்தை பருவமாகதான் பார்க்க வேண்டும். இன்று வயதானவர்கள் சொல்வதை கேட்கவும், பேசவும் ஆள் தேட வேண்டியிருக்கிறது. அவர்களுக்காகவே 2022 முதல் மனரீதியாக, மருத்துவ ரீதியாக பல சேவைகளை செய்து வருகிறோம். மதுரை வைகையாற்றில் இறங்க வந்த கள்ளழகர், இந்தாண்டு முதன்முறையாக முதியவர்களை தேடி வந்து தரிசனம் கொடுத்தார்' என உற்சாகமாக பேசுகிறார் 34 வயதான டாக்டர் விஷ்ரூத். மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள டி.வி.எஸ்., குழுமத்தின் லட்சுமி மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியாக இருக்கிறார்.  தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...  ''டி.வி.எஸ்., குழுமத்தின் ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை மூலம் 3 ஆண்டுகளுக்கு முன் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். ஆதரவற்றோர் இல்லங்களில் முதியவர்களை சந்தித்தபோது, பேச ஆளில்லாமல் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்ததை உணர்ந்தோம். எங்களது டிரஸ்ட் தலைவர் ஷோபனா ராமச்சந்திரன், அறக்கட்டளை தலைமை செயல்பாட்டாளர் ஜான்டேவிட் டிரஸ்ட் நிர்வாகிகள் ஊக்குவிப்பால் 2022ல் 'சிரிக்கும் சுருக்கங்கள்' திட்டத்தை ஆரம்பித்து 1750 முதியவர்களை சந்தித்து அவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுத்து, தேவையானதை செய்து கொடுத்தோம்.  'மனை தேடி மருத்துவமனை' என்ற பெயரில் வீடு தேடிச்சென்று மருத்துவம் பார்த்தோம். 'மனம்' திட்டத்தின்கீழ் அவர்களுடன் தினமும் உறவுகளாக போனில் பேசி உற்சாகமூட்டினோம். தீபாவளி சமயத்தில் முறுக்கு, இனிப்பு பலகாரங்களை அவர்களே தயாரித்து தர ஏற்பாடு செய்தோம். பொங்கல் பண்டிகையின்போது கோலப் போட்டி, கடிதம் எழுதுதல், ஓவியப் போட்டி நடத்தினோம். வயதானால் சிலருக்கு நினைவுத் திறன் குறையும். மூளையையும், உடல் உறுப்புகளையும் 'ஆக்டிவ்' ஆக வைத்திருக்க இப்போட்டி நடத்தினோம். அதை போட்டோ எடுத்து பொங்கல் விழா என்று மேடையில் பேனராக வைத்து பாட்டு, நடனத்தில் அவர்களை பங்கேற்க செய்தோம். உற்சாகமாகி விட்டனர்.  இந்நிகழ்ச்சிக்காக பஸ்சில் அழைத்து சென்றபோது 'ரொம்ப மாசம் கழிச்சு இப்பதாம்ப்பா வெளி உலகை பார்க்கிறோம்' என்று சொன்னதை கேட்டு கலங்கிவிட்டேன். 'ரயிலில் போக ஆசையா' என கேட்டேன். உற்சாகமாக தலையை ஆட்ட, 'டிராவல் தெரபி' என்ற பெயரில் மதுரை - போடி ரயிலில் 4 பெட்டி முன்பதிவு செய்து வைகை அணைக்கு அழைத்துசென்றோம். ரயிலிலும், அணையிலும் ஆட்டம், பாட்டம் என குழந்தைகளாகவே மாறிவிட்டனர்.  வயதானவர்களுக்கு ஆன்மிகம் உணர்வோடு கலந்தது என்பதால் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தோம். கள்ளழகரை தரிசிக்க ஏற்பாடு செய்தால் என்ன என்று தோன்றியது. இதற்காக முறைப்படி அனுமதி பெற்று, இந்தாண்டு முதன்முறையாக எங்கள் மருத்துவமனையில் கள்ளழகர் எழுந்தருளி முதியவர்களுக்கு தரிசனம் அளித்தார்.  சரஸ்வதி பூஜை கொலு அலங்கார போட்டி முதியவர்களுக்காக நடத்த உள்ளோம். புற்றுநோயால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களை பராமரித்து விருப்பத்தை நிறைவேற்றுகிறோம். சமீபத்தில் மீனாட்சி அம்மனை கடைசியாக தரிசிக்க வேண்டும் என ஒருவர் கேட்டார். அவரை வீல்சேரில் அழைத்து சென்று சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்தோம்.  இந்த டி.வி.எஸ்., லட்சுமி மருத்துவமனை டி.வி.எஸ்., ஊழியர்களுக்காக 1963ல் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்டது. 2014 முதல் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். முதன்முறையாக அரவிந்த் கண் மருத்துவமனை தனது கிளையை இங்கு ஆரம்பித்துள்ளது எங்களுக்கு பெருமை.  வீட்டில் வயதானவர்களை தனியாக விட்டுவிட்டு வெளியூர் செல்வது சிரமம். இதற்காகவே 'கேர் சென்டரும்' நடத்தி வருகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்கு இங்கு விட்டுச்சென்றால் உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். கேன்சர் சென்டர் அமைக்க அடையாறு கேன்சர் சென்டர், மும்பை டாடா கேன்சர் சென்டர் மையத்துடன் பேசி வருகிறோம்'' என்கிறார் வயதானவர்களின் சிரிப்பில் இறைவனை காணும் இந்த இளம் டாக்டர் விஷ்ரூத்.

தொடர்புக்கு: 0452 - 254 5800

==================================================================================================


=============================================================================================

காலரா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றி


ஹைதராபாத்: 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'ஹில்கால்' எனப்படும் வாய்வழி காலரா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை வெற்றி பெற்றதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.  'விப்ரியோ காலரே பாக்டீரியா'வால் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு காலரா தொற்று ஏற்படுகிறது. மாசுபட்ட உணவு, குடிநீர், மோசமான சுகாதாரம், நெரிசலான வாழ்க்கை சூழல் போன்றவை காலரா தொற்று ஏற்பட காரணம். இந்தியாவில் ஆண்டுக்கு 20,000க்கும் மேற்பட்டோர் காலராவால் இறக்கின்றனர்.  இந்நிலையில், 'பாரத் பயோடெக்' மருந்து நிறுவனம் காலரா தொற்றுக்கு எதிராக, 'ஹில்கால்' எனப்படும் வாய்வழி தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. புதிய தடுப்பு மருந்து உருவாக்க நான்கு கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.  ஹில்கால் காலரா தடுப்பு மருந்தின் இரண்டு கட்ட சோதனைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட சோதனை தற்போது வெற்றிகரமாக முடிந்ததாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.  நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:  "ஹில்கால் வாய்வழி காலரா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. நாட்டின், 10 மருத்துவ மையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 1,800 பேரிடம் இந்த பரிசோதனை நடந்தது.  இந்த தடுப்பு மருந்து, ஓகாவா மற்றும் இனாபா ஆகிய இருவகை காலரா பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் திறம்பட செயல்பட்டன.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.  இதையடுத்து, இந்த தடுப்பு மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Thank you JKC Sir.

===================================================================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)


கதை கதையாம் காரணமாம்

கதையாசிரியர்: பாலகுமாரன்

நமக்கு பரிச்சயமான வெண் தாடி வேந்தர் பாலகுமாரன் இக்கதை வெளிவந்த ஆண்டு 1978இல் இப்படித் தான்  இருந்திருப்பார்.

பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூக நாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மீகவாதி.

“பாலகுமாரனின் நடை பேச்சுமொழிக்கு மிக அண்மையானது. ஆசிரியர் வாசகர்களிடம் நேரடியாக கதையைச் சொல்வதுபோன்ற பாவனை கொண்டது. கச்சிதமான சுருக்கமான கதைசொல்லும் முறையை வணிக எழுத்துக்கு அறிமுகம் செய்தவர். செயற்கையான நாடகத் தருணங்களை உருவாக்காமல் அன்றாடத் தருணங்களில் உள்ள உளவியல் ஆழத்தை சுட்டிக்காட்டி அழுத்தமான உணர்ச்சிகளை வாசகர்களிடம் உருவாக்கினார்.”

முன்னுரை.

நான் பாலகுமாரனுடைய கதைகள் அதிகம் வாசித்ததில்லை. நான் இதற்கு முன் படித்த அவருடைய வேறு ஒரு கதைக்கும் இந்த கதைக்கும் இடையே ஒரு ஒற்றுமையை காண்கிறேன். அது குழந்தைகள் மூலம் கேள்விகளுக்கு விடை காண்பது. முன்பே வாசித்த கதையில் (தலைப்பு ஞாபகமில்லை) ஒரு பெரிய தொழில் அதிபர் அவருடைய தொழில் சம்பந்தமான பிரச்சினைக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குருநாதரை சந்திக்க திருவண்ணாமலை வந்து சந்திக்கிறார். அவருடைய தொழில் சமையல் பாத்திரங்கள் செய்து விற்பது. பாத்திரங்கள் என்றால் பெரிய்ய பாத்திரங்கள். வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி உண்டு. பாத்திரங்கள்  பாக்கிங்கில் ஒரு பிரச்சினை. அதுபற்றி தெளிவான முடிவெடுக்க விடை தேடும் முயற்சியில் குருநாதரை சந்திக்கிறார். குருநாதர் ஒன்றுமே சொல்லவில்லை. ஆசீர்வாதம் மட்டும்தான். ஏமாற்றத்துடன் திரும்பும் அவருக்கு சாலையோர கடையில் ஒரு சிறுமி “பாட்டி மடக்கி மடக்கி வை. சரியாக பொருந்தும்” என்று கூறும் வாக்குகள் காதில் விழுகிறது. அவருடைய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. “பாத்திரங்களின் காதுகளை மடங்கும் விதமாக அமைத்தால் போதும்” என்ற விடை. கிடைக்கிறது.

வெட்டி ஆராய்ச்சி என்ற தலைப்பில் அகல்யை கதையை புதுமைப்பித்தன், மற்றும் வையவன் எப்படி நோக்குகிறார்கள் என்று இருவாரங்களில் "நான் படிச்ச கதை” யில் கண்டோம். அகல்யை பற்றி மேலும் பலரும் ஆராய்ந்திருக்கிறார்கள். குறிப்பாக அப்பாதுரை சார் “ஸ்மரண யாத்திரை” என்ற பெரிய நெடுங்கதை எழுதியுள்ளார். அதே போல் பாலகுமாரனும் இக்கதையில். இக்கதையில் அகல்யை சாபம், சாப விமோசனம் இவற்றை விமரிசித்துவிட்டு, அதில் கூடுதலாக ஒரு புல்லின் கதையையும் இணைத்து ஏன் சிலர் தொட்டால் சுருங்கிகளாக உள்ளனர் என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.  புல் அன்று தவறு செய்ததை நினைவுறுத்தி.

//விவரம் அறியாப் பெண்ணுக்கு (அகலிகைக்கு)  உதவியிருக்க வேண்டும். விவேகம் அற்றாததால் விளைந்தது இக்கோலம். விரல் விட்டு நீயாய் நீங்குகிறாயா, நீக்கட்டுமா?’ – வில்லின் அடிப்புறத்தால் மெல்ல அழுத்தினான் (ராமன்) புல்லை. புல் சுருங்கிற்று.

அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும், ராமனோ என்று வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற் சிணுங்கிகள்.”//

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.  சிறந்த எழுத்தாளனுக்கு புல்லும் கதை சொல்லும். தத்துவம் சொல்லும்.

//காதல் பேசுவதில்லை ராமா, உணர்த்தும். அன்பு அரற்றாது ராமா, ஆழ்த்தும்//

(கேள்வி கேட்ட குழந்தைக்கு) //என் குழந்தைக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இனி மற்றதும் மெல்ல மெல்லப் புரியும்.//

எது என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.. கதை சிறுகதைகள்.காம் இலிருந்து பெறப்பட்டது.

”அப்பா, அந்த ‘பார்க்’ வழியா போகலாம்பா!” -கௌரி கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். ”ச்சீ, கழுதை! விடு அப்பாவை. நடு ரோட்ல என்ன இது வெட்கமில்லாம… எருமை மாதிரி வயசாறது. பொண் குழந்தையா லட்சணமா அடக்கம் வேண்டாம்..?” – என் மனைவி சீறலுடன் கை ஓங்கினாள். நான் அமர்த்தினேன். கௌரியின் கையைப் பிடித்துக்கொண்டு பார்க்கில் நுழைந்தேன்.

கௌரி என் மூத்த பெண். பாவாடையும் தாண்டாத, தாவணியும் தாங்காத பதிமூணு வயசுப் பெண். அம்மாவின் சாயலும் படபடப்பும் அச்சாய் இறங்கியிருக்கிறது அவளிடத்தில். அவள் அம்மாவுக்கோ எனக்கோ இல்லாத புத்திக் கூர்மையும், குறுக்குக் கேள்வியும், கிரஹிக்கும் தன்மையும் வந்திருக்கிறது. உலகத்தில் நடக்கிற அத்தனைக்கும் அர்த்தம் கேட்கும் ஞானம் வந்திருக்கிறது. உள்ளதை உள்ளபடிக்கு குழந்தைக்குச் சொல்லித் தருவதில் எனக்குப் பிரியம். எனக்குத் தெரிந்தது அத்தனையும் அவளுக்குச் சொல்லித் தருவதில் விருப்பம்.

”அப்பா, இங்கே வாயேன். இந்தச் செடியைத் தொட்டுப் பாரேன்… ‘கப்பு, கப்பு’னு மூடிக்கிறதுப்பா. ஏம்பா இந்தச் செடி இவ்வளோ வெட்கப்படறது?”

வெட்கப்படும் செடி! செடி வெட்கப்படுமா? பளிச்சென்று ஒரு நூலிழை மண்டைக்குள் பற்றி அணைந்தது.

”செடி ஏதாவது தப்பு பண்ணியிருக்கும், கௌரி!”

தலையை நிமிர்த்தி விழிகள் குறு குறுக்க, குழந்தை என்னைப் பார்த்தாள்.

”அகலிகை அகலிகைன்னு ஒரு பெண்…”

”அந்தக் கதை எனக்குத் தெரியும். ட்ராமால வருது. ராமர் நடந்துண்டே வரப்ப, கல் மேல கால் படும். படார்னு கல் வெடிக்கும். ‘பளிச் பளிச்’சுனு லைட்டெல்லாம் அணைஞ்சு அணைஞ்சு எரியும். அகலிகை வந்து ராமனை நமஸ்காரம் பண்ணுவா. மேலேர்ந்து கனகாம்பரமா கொட்டும்.”

நான் என் குழந்தையின் தலையைக் கோதியபடி மெல்லப் பேச ஆரம்பித்தேன்

”தன்னைவிட வயதில் மூத்தவளும், அமைதியான முகத்தைக் கொண்டவளும், கருணை நிரம்பிய கண்கள் உடையவளுமான அகலிகை, தன்னை நமஸ்கரிப்பதைக் கண்டு ராமன் தயக்கத்துடன் விஸ்வாமித்திரன் அருகே நகர்ந்தான்.

‘ராமா! இவள் கௌதமரின் மனைவி. இந்திரனின் ஏமாற்றுதலுக்குப் பலியான பெண். அவன் கௌதமராய் வந்து மயக்கியது அறியாமல் தன்னைத் தவற விட்ட பேதை. கணவரின் சாபத்துக்கு இலக்கான இவள் பழி, உன் பாதம் பட்டதும் நீங்கியது. அதோ – இவள் விமோசன நேரம் இது என்று அறிந்து கௌதமரும் வந்திருக்கிறார்.

கௌதமரின் கண்களில் ததும்பும் சோகத்தைப்பார் ராமா. ‘ஆயிரம் சபித்தாலும் நீ என் மனைவியல்லவா’ என்று அணைத்துக் கொள்வதைப் பார். கல்ப கோடி காலம் பிரிந்து இணையும் தம்பதியைப் பார். தானறியாது செய்த தவறுதானே என்று கௌதமர் தேற்றுவதைப் பார். காதல் பேசுவதில்லை ராமா, உணர்த்தும். அன்பு அரற்றாது ராமா, ஆழ்த்தும்! அமைதி தரும். உலகமனைத்தும் மறந்து அவர்கள் மௌனமாய் நடந்து போவதைப் பார்.’

இணைந்து மெல்ல நகரும் உருவங்களை ராமன் அசையாது பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை அறியாத உணர்ச்சிக்கு இலக்கானான்.

மறையும்வரை காத்திருந்து, பிளந்த பாறைகளைக் கடந்து பாதைக்கு வருகையில், கால் இடற, ஒரு க்ஷணம் தடுமாறி வில்லூன்றி, நிலையானதும் இடறியதைக் குனிந்து பார்த்தான்.

பிளவுபட்ட பாறையின் கீழ் ஒற்றைப்புல், வலக்கால் பெரு விரலை வளைத்து இறுக்கியிழுத்தது. விடுவிக்க முயல்கையில் மேலும் இறுக்கி, ‘ராமா!’ என்று கூவிற்று.

பேசும் தாவரம்! தாவரம் பேசுமா? இது கௌதமர் இருந்த இடம். வேதமே சொல்லும். சுள்ளென்ற குரலில் ஒற்றைப்புல் அழைத்தது… ‘அந்தக் கௌதமனைக் கூப்பிடு ராமா! விழியிளகி நீர் துளிர்க்கப் பார்த்தாயே, அந்த முனிவனை வரச் சொல். ‘வழக்கொன்று இருக்கிறது, வா!’ என்று கூப்பிடு. மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் என்னை மறந்து விட்டுப் போகிறான். வரச் சொல் இங்கே.’

‘கௌதமரை இப்போது அழைப்பது பண்பில்லை. அமைதி கொள். யார் நீ? உன் கோபமென்ன? ராமன் தீர்த்து வைப்பேன். விரலை விடு.’

‘கௌதமன் மனைவி தவறிழைத்தாள். தண்டனை பெற்றாள். கல்ப கோடி காலம் கல்லாய்க் கிடந்தாள். நான் என்ன செய்தேன்? அவள் காலின் கீழ் புல்லாய் இருந்த எனக்குப் பழி எதற்கு? செய்த பாவமென்ன? பெண்ணைப் பாறையாக்கி, பாறைக்குள் என்னை அழுத்திக் கௌதமன் போவதென்ன? வளர்ச்சியும் வாழ்வும் அற்று விதியே என்று கிடந்திருக்கிறேன். என்னோடு பிறந்தவை மரமாகி, மரத்தின் மரமாகிப் பெருத்துப் பூரித்துப் பேயாய் வளர்ந்திருக்கின்றன. ராமா, எனக்கேன் இந்த ஹிம்சை?’

சுள்ளென்ற குரலில் ஒற்றைப்புல் பேசிற்று.

‘அன்று நடந்ததென்ன… தெரியுமா உனக்கு?’ – வினவினான் ராமன்.

‘இந்திரன் வந்து இறங்கினான். இங்கே நின்று கோழி போல் கூவினான். இரவு முடிந்ததென்று நீராட கௌதமன் போனதும் உருமாறினான். அகலிகையைப் பெயர் சொல்லி அழைத்தான்…’

‘தெளிவாய்த் தெரிந்ததா, இந்திரன் தானா?’

‘நன்றாய்த் தெரிந்தது. இந்திரனே தான். அகலிகை வந்ததும் அணைத்து முகர்ந்தான். அகலிகைக்கு ஆச்சர்யம் – எதற்கு இந்நேரம் அணைப்பதும் முகர்வதும்…’

‘அகலிகை மறுத்தாளா? ஏன் எனக் கேட்டாளா?’

‘அவளிடத்தில் மறுப்பில்லை, ஆச்சர்யப்பட்டாள். ஆனால் முகமே சொல்லிற்று, குழப்பத்தில் தவித்தது.’

‘மேற்கொண்டு என்ன?’

‘உண்மைக் கௌதமன் சப்தம் கேட்டதும், இந்திரன் ஓடினான். வந்தபடி மறைந்தான். அகலிகை விழித்தாள். ‘கௌதமன் மறைந்து – கௌதமன் வருவதா? யார் இதில் கௌதமன்?’ – நிற்க வலுவின்றித் தரையில் சரிந்தாள்.’

‘மேற்கொண்டு என்ன?’ – உயர்ந்தது ராமன் குரல்.

‘தொட்டது புருஷனா? தெரியாத ஜன்மமா? உணர்ச்சியில் கல்லா?’ கௌதமன் இரைந்தான். கோபத்தில் முனிவன் சொன்னதெல்லாம் சாபம். அகலிகை நமஸ்கரித்தாள். அந்த க்ஷணமே பாறையானாள். என்னை அழுத்தினாள். கல்பகோடி காலம். என்னோடிருந்தவை மரமாகி மரத்தின் மரமாகி…’ – விசித்தது ஒற்றைப்புல்.

‘புல்லே! விரல் வளைத்து என்னை விடமாட்டேன் என்கிற வலுவுண்டு உனக்கு. இந்திரன் வரவை முதலில் அறிந்தது நீ. கௌதமன் நகர்ந்ததும், அகலிகை குழப்பத்தில் தவித்ததும் தெரியும் உனக்கு; இல்லையா?’ – குமுறினான் ராமன்.

‘கூவியழைத்திருக்க வேண்டாமா கௌதமனை? விரல் மடக்கி வீழ்த்தியிருக்க வேண்டாமா இந்திரனை? முற்றும் உணர்ந்த முனிவன் – தன் கணவன் முழங்கால் தேய விழமாட்டான் என்று தெரிந்திருக்காதா அவளுக்கு? தெளிவாய்ப் புரிந்திருக்காதா யாரென்று? தீயாய்ப் பொசுக்கியிருக்க மாட்டாளா இந்திரனை? பிறர் வேதனையில் அத்தனைக் களிப்பு உனக்கு! பெண்ணுக்குத் தீங்கிழைப்பது தெரிந்தும் தடுக்காத குணம். இந்திரன் குணத்தில் உனக்கும் இணக்கம்; உள் மனசில் விருப்பம்.

இல்லையென்று சொல்லவேண்டாம் சிறு புல்லே, விரலை விடு! இந்த வீரம் அன்று இருந்திருக்க வேண்டும், விவரம் அறியாப் பெண்ணுக்கு உதவியிருக்க வேண்டும். விவேகம் அற்றதால் விளைந்தது இக்கோலம்.

விரல் விட்டு நீயாய் நீங்குகிறாயா, நீக்கட்டுமா?’ – வில்லின் அடிப்புறத்தால் மெல்ல அழுத்தினான் புல்லை.

புல் சுருங்கிற்று.

அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும், ராமனோ என்று வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற் சிணுங்கிகள்.”

குழந்தை கௌரி மௌனமாய்ப் புற்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த வயசுக்கு இந்தக் கதை அதிகம்தான். அவள் சின்ன மனசில் ஆயிரம் கேள்விகள். புரிந்தும் புரியாததுமாய் நூறு நினைப்புகள்.

விரல் நீட்டி மீண்டும் புற்களைத் தொடப் போனவள், சட்டென நிறுத்தினாள். தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். ”பாவம்பா, இந்தப் புல். ஏற்கெனவே ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கு. திருப்பித் திருப்பி ஞாபகப்படுத்தவேண்டாம்பா! வா, போகலாம்.” – என்னைக் கடந்து எழுந்து நடந்தாள்.

என் குழந்தைக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இனி மற்றதும் மெல்ல மெல்லப் புரியும்.

– 08-01-1978 விகடன்

பின்னணி பாடல்: தொட்டுவிட தொட்டுவிட தொடரும். 

19 கருத்துகள்:

  1. வயதானவர்களுக்கு அந்த ஒரு மருத்துவரா உதவுகிறார்? அவருடைய குழு, குழும்ம் இரண்டும் அல்லவா?

    டிவிஎஸ்ஸின் இந்த முயற்சி நன்று.

    பதிலளிநீக்கு
  2. புல் என்று ஆரம்பித்து தொட்டாற்சிணுங்கி கதையைச் சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.

    தொட்டாற்சிணுங்கி மலுத்துவ குணம் கொண்டது என அறிந்தேன். அது தவிர அதனை தலைக்கான எண்ணெய்க்கு மூலிகையாகச் சேர்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. டி வி எஸ் குழுமம், மருத்துவர் விஷ்ருத்., அவரது குழு எல்லோரையும் பாராட்டி வாழ்த்துவோம், வயதானவர்களுக்கான இந்த மருத்துவ சேவையைச் செய்து வருவதற்கு. இதமான செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சுஷ்மிதா, வாவ் சொல்ல வைக்கிறார். பாராட்டுகள்!

    ஸ்ரீ லக்ஷ்மிக்கும் வாழ்த்துகள்.

    காலரா தடுப்பு மருந்து, பயனுள்ள நல்ல செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பாலகுமாரன், கதையில் கௌரி புல் பற்றிக் கேட்க (மூடும் வகை புல் இருக்கா என்று கேள்வி) அவரோ தொட்டாற்சிணுங்கியைச் சொல்லிச் செல்கிறார். ஒரு வேளை தட்டச்சுப் பிழையாக இருக்குமோ?

    பாலகுமாரனின் வித்தியாசமான கோணம்....ராமர் புல்/தொட்டாற்சிணுங்கியிடம் கேட்கும் கேள்விகள்!!

    கிட்டத்தட்ட இப்போதைய நிலையும் அதானே....சம்பவங்களை போட்டோ புடிச்சு பக்கம் பக்கமா எழுதறாங்க மீடியா அந்த நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

      கீதா

      நீக்கு
    2. அவர் எழுதும்போது வாட்ஸாப் வீடியோ எல்லாம் இருந்திருக்காது.  எனவே அவர் அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்க மாட்டார்.

      நீக்கு
    3. ஆமாம் அது கிடையாதுதான்...ஆனால் முன்னாடியே சொன்னது இப்ப நடக்குது பாருன்னு சொல்றாப்ல எடுத்துக்கலாம் இல்லையா?

      இப்படியான கேள்விகள் எழுவது சகஜம்தானே,,,,பார்த்த நீ அப்ப என்ன பண்ணிட்டிருந்தன்னு..

      கீதா

      நீக்கு
  6. இன்றைய பாசிடிவ் செய்திகள் எல்லாமே பிரமாதம்!

    பாலகுமாரனின் கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணக் கதைகள் பலவும் அவரவர் கற்பனைக்கேற்றபடி விவரிக்க வாய்ப்பளிக்கக் கூடியவை. அந்த கற்பனைகளில் வந்தவைதான் லட்சுமண ரேகா, அகலிகை கல்லாக ஆனாள், சபரி எச்சல் கனிகளை ராமனுக்கு அளித்தாள் போன்ற கதைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது...   அகலிகை, சபரி, லட்சுமண ரேகா எல்லாம் ஒரிஜினலில் இல்லையா?

      நீக்கு
    2. அவர் சொல்ல வந்தது, எழுத்தாளர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பல்வேறு விதமாக இந்தச் சந்தர்ப்பங்களை எழுதலாம் என்று, என எனக்குத் தோன்றியது.

      அகலிகையே, இந்திரனே தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்ற கர்வத்தில் தடம் மாறினாள் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. // அவர் சொல்ல வந்தது, எழுத்தாளர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பல்வேறு விதமாக இந்தச் சந்தர்ப்பங்களை எழுதலாம் என்று, என எனக்குத் தோன்றியது. //

      எனக்கும் அந்த அர்த்தம் தோன்றியதுதான்.  ஆனாலும் வரிகள் அப்படி இல்லையே என்று யோசித்தேன்.

      //அகலிகையே, இந்திரனே தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்ற கர்வத்தில் தடம் மாறினாள் என்று படித்திருக்கிறேன்.//

      நானும்!  அது யாருடைய கற்பனையோ!

      நீக்கு
    4. ஜெ கே அண்ணா, இந்தப் பாட்டு இப்பதான் கேட்பது போல இருக்கு.

      தொட்டால் சுருங்கும் செடி....பாடலில் கை பட்டுவிட மலரும்னு!!!!! சும்மா உங்களைக் கலாய்த்தேன். ஓரளவு பொருத்தமான பாடல்தான்?

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. இளம் டாக்டர் விஷ்ரூத் மற்றும் டி.வி.ஸ் மருத்துவ குழுவிற்கு வாழ்த்துகள். நல்ல சேவை.

    ஆகாய தாமரை இலைகளாம் பேப்பர் தயாரிக்கும் சுஸ்மிதா விற்கு வாழ்த்துகள். இனி ஏரிகள் சுத்தமாக்கலாம்

    காலரா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றிக்கு வாழ்த்துகள்.


    பதிலளிநீக்கு
  9. அகல்யைக்கு பாப விமோசனம் கிடைத்தும் புண்ணியமில்லை, அவளின் வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சியை இன்னும் விடுவதாக இல்லை. ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு கோணத்தில் அதை கதை சொன்னாலும் பாலகுமரன் கதை புல்/தொட்டாற்சிணுங்கி பேசுவதும் அதை ராமன் கேள்வி கேட்பது நன்றாக இருக்கிறது.
    இந்த கதை படித்தது இல்லை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //என்னது... அகலிகை, சபரி, லட்சுமண ரேகா எல்லாம் ஒரிஜினலில் இல்லையா?// அப்படித்தான் துஷ்யந்த் ஸ்ரீதர் சொல்கிறார்.
    லட்ச்மணன் கோடு எதுவும் போட்டு, அதைத் தாண்டாதே என்றெல்லாம் சொன்னதாக மூலத்தில் இல்லையாம்.(இதை பல வருடங்களுக்கு முன்பே அரசு கேள்வி பதிலில் எஸ்.ஏ.பி. கூறியிருந்தார்.

    அதைப் போல சபரி ராமனுக்கு தான் கடித்து சுவைத்த எச்சில் பழங்களை கொடுக்கவில்லை, சுவையான பழங்களை தேர்ந்தெடுத்து அவற்றை காய வைத்து, பாடம் செய்து, dry ruitsஆக கொடுத்தாளாம்.

    அதைப் போல அகலிகை கல்லாக வேண்டும் என்று சபிக்கப்பட்டதாக வால்மீகி எழுதவில்லையாம். பிறர் கண்களுக்கு புலப்படாமல் போவாய் என்றுதான் கௌதமர் சபித்தாராம், அவள் கல்லாகக்கடவது என்று கௌதமர் சபித்தார் என்று முதலில் எழுதியவர் காளிதாசனாம். இதைச் சொன்னது சுதா சேஷய்யன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இதனைப் படித்தவுடன், மூல வால்மீகி இராமாயணத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று தேடிப் படித்தேன். நீங்கள் சொல்லியிருப்பது சரி.

      1. இராவணன் தன் இடது கையால் சீதையின் தலைமயிரைப் பிடித்தும் வலது கையால் அவள் துடையைப் பிடித்தும் தூக்கி சீதையை தன் இரதத்தில் வைத்தான். அதற்கு முன்பு, லக்ஷ்மணன் சீதையின் கடும் சொல்லைத் தாங்காமல் அவளை அந்த பர்ணசாலையில் தனியாக விட்டுச் சென்றான்.
      2. சபரி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள். கனிகளைக் காயவைத்து பக்குவப்படுத்தி வைத்திருந்தாள். அவற்றை இராமனுக்கு சமர்ப்பித்தாள். எச்சில் செய்தெல்லாம் சமர்ப்பிக்கவில்லை.
      3. அகலிக பிறர் கண்ணுக்குப் புலப்படமாட்டாள். காட்டின் இலை செடிகளோடு இருப்பாள். இராமன் வரும்போது அவனைப் பணிந்தால் சாபம் நீங்கும் என்பதால், இராமன் அந்த யாருமில்லாத ஆச்ரமத்துக்கு வந்தபோது அவன் கண்களில் அகலிகை தெரிந்தாள். அகலிகை இராமனைப் பணிந்து அவனுக்கு அர்க்யம் பாத்யம் போன்ற உபசாரங்கள் செய்தபிறகு சாபம் நீங்கப் பெற்றாள்.

      இங்கு ஸ்ரீராமுக்கும் உண்டான பதிலைச் சொல்லிவிடுகிறேன். அகலிகைக்கு வந்திருப்பது இந்திரன் என்பது தெரிந்தது. இந்திராணியை விட்டுவிட்டு தன் மீது ஆசை கொண்டு வந்திருக்கிறானே என்ற கர்வம் மேலிட்டு, விரைவில் ஆசையைத் தீர்த்துக்கொண்டு சென்றுவிடு என்கிறாள். இதுவும் மூல இராமாயணத்தில் உண்டு.

      ஸ்ரீராமுக்கு எங்கள் பிளாக்கிற்கு சரிப்பட்டு வரும் என்று தோன்றினால் மூல இராமாயணத்தை, சுலபமாகப் படிக்கும்படி இங்கு எழுத நினைக்கிறேன்.

      நீக்கு
  11. வயோதிபர்களுக்கு உதவும் டாக்டர், புதிய கண்டுபிடிப்புகள் செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

    அகலிகை கதை புதிய கோணத்தில் கண்டோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!