19.6.25

பிடிக்கும்.. ஆனா வெளியே சொல்ல முடியாது!

 இந்த வாரம் மறுபடி அந்த கல்யாண நாள் விவரங்களுக்குச் செல்கிறோம்!

உறவினர் வட்டத்தில் ஒரு பெரியவர் இருந்தார்.  அவருக்கு வயது 85 க்கு மேல்.  கையில் ஊன்றுகோல் வைத்துக் கொண்டுதான் நடப்பர்.  அருகில் உறவு வட்டம் இருக்கும் போது நடை தள்ளாடுவது போல தடுமாறுவார்.  

டைனிங் ஹாலில் தெரிந்தவர் யாரும் இல்லையென்றால் சர்வ சாதாரணமாக எழுந்து கைகழுவ நடந்து விடுவார்.  யாராவது இருந்தால் அவர் நாற்காலியிலிருந்து எழ முயற்சி செய்வதே   ஒரு பயங்கர பிராயத்தனமாக இருக்கும்!  ஆ ஆ என்று குரல் கொடுத்தபடி தடுமாறி எழுந்து ஊன்றுகோலைப் பிடிக்க முயற்சி செய்து மெல்ல அதில் வெற்றி அடைவது போல கையில் பற்றி  சிரமப்பட்டு நடப்பார்!

எல்லோருக்கும் இந்த நாடகங்கள் தெரியும் என்பதை அவர் அறிவாரா, தெரியாது.  ஆனாலும் ஒரு சமயம் போல இருக்காது என்று உறவுகள் அவர் கையைப் பிடித்து ஆதரவு கொடுக்கும்.  அறுபது எழுபது வயதுக்கு மேல் இரண்டாவது குழந்தைப் பருவம்தானே!  நிரூபிக்கிறேன் என்று விழுந்து வைத்தால் இவர்கள்தானே அதற்கும் பாடுபட வேண்டும்!  அல்லது புலி வருது கதையாய் ஒரு சமயம் நிஜமாகவே விழுந்து விட்டால்தான் என்ன செய்வது!

இந்த முறை அவர் பேரன் அமெரிக்காவிலிருந்து அவருக்கு ஒரு Tab வாங்கி கொடுத்து விட்டான்.  ஒரே பெருமை அவருக்கு.  அதை வைத்துக் கொண்டு ஆங்காங்கே போட்டோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.  அப்படி எடுத்த போட்டோக்களை யாருக்காவது அனுப்புவாரா, தெரியாது!  அவரே மறுபடி பார்த்து ரசிப்பாரா, அதுவும் தெ....ரி.....யா.......து!

திருமணத்தின் முக்கிய நிமிடங்களில் எல்லாம் இவரை முன்னணியில் பார்க்க முடிந்தது.  ஊன்றுகோல் துணை இல்லாமலேயே அவர் நாற்காலியிலிருந்து எழுந்து சென்று மேடைக்கு முன்னால் நிற்பதை பலரும் பார்த்து புன்னகைத்தனர்.  அவ்வப்போது ஒரிஜினல் போட்டோக்ராபருக்கே டஃப் கொடுத்தார்!

திருமணத்தில் ஒரு சம்ப்ரதாயம், சீர்வரிசைத் தட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு பெண்கள் அணிவகுப்பார்கள்.  இங்கும் அப்படி பெண்களை அணிவகுக்க செய்ய ஆயத்தம் செய்தார்கள்.  ஒவ்வொரு பெண்ணாக (என் பாஸ் உட்பட) தாம்பாளத்தைக் கையில் ஏந்தி மேடையிலிருந்து இறங்கி கீழே அணிவகுக்க, நம்ம ஹீரோ உற்சாகமானார்.  நல்ல ஒரு க்ளிக் அவருக்கு மனதில் தோன்றியது போல.  வந்து நின்ற நான்கைந்து பெண்களின் முன்னே தன்"கேமிராவுடன் ப்ரசன்னமானார்.

ஃபோகஸ் சரியாக அமையாததால் அவர்களை கையால் சரியாக நிற்க சைகை செய்தார்.  அவர்களும் இங்கும் அங்கும் நகர்ந்து நின்றார்கள்.  இந்நேரத்தில் இன்னும் இன்னும் பெண்கள் சீர்வரிசைத்தட்டுடன் இறங்கி நிற்கத்தொடங்க,  எண்ணிக்கை அதிகமானது.  இவர் பின்னால் நகர்ந்து, பக்க வாட்டில் நகர்ந்து இன்னும் இன்னும் ஃபோகஸ் செய்தார்.  இவர் போட்டோ எடுப்பதைப் பார்த்துதான் மற்றவர்களும் வந்து சேர்ந்து நிற்பதாக அவருக்கு மனதில் தோன்றியதோ என்னவோ..  தான் சொல்கிறபடிதான் அவர்களும் இங்கும் அங்கும் நகர்ந்து நிற்பதாக எண்ணி விட்டார்.

முக்கியாக ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.  அவருக்கு காது கேட்காது.  எனவே பின்னாலிருந்து ஒரிஜினல் போட்டோகிராபர் போகஸ் செய்ய காத்துக்கொண்டிருப்பதை கவனிக்கவில்லை, அவர் 'மாமா... மாமா... மாமா... தள்ளுங்க....' என்று கதறுவதையும் கேட்கவில்லை.  ஒரு சிறந்த இயக்குனர் போல காட்சிகளை வடிவமைத்துக் கொண்டிருந்தார்.  உண்மையில் அந்தப் பெண்கள் வரிசை பின்னாலிருந்து ஒழுங்கு படுத்திக்க கொண்டிருந்த போட்டோகிராபர் சொல்படிதான் அசைந்து கொண்டிருந்தார்கள்.  

பின்னால் நகர்ந்து நகர்ந்து வந்தவர் ஒரு கட்டத்தில் போட்டோகிராபர் மேலே மோதிக்கொள்ளும் அளவு வந்து விட்டார்.  அவர் இவரை ஒரு இயலாமை கலந்த, அல்லது எரிச்சல் கலந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  பெண்ணின் அப்பாவைப் பார்த்து 'என்னதான் செய்ய' என்று சைகையும் காட்டினார்!

பொல்லாதவன் படத்தில் ரஜினி முதலாளி.  சுருளி வேலைக்காரர்.  ரஜினியின் மகள் பள்ளி செல்ல மறுத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பாள்.  பங்களாவெங்கும் ஓடி ஆட்டம் காட்டுவாள். கோபப்பட்டு ஓங்கிக் குரல் கொடுக்கும் சுருளி, ரஜினியைக் கண்டதும் அடங்கி கெஞ்சுவது போல அழைப்பார்.  ரஜினி 'என்ன ஆச்சு' என்று கேட்க, சுருளி "குழந்தை ஸ்கூலுக்கு போக சமர்த்தா அடம் பிடிக்குதுங்க" என்பார்.  அதிலேயே எரிச்சலை சாமர்த்தியமாகக் காட்டி விடுவார்.  அது என் நினைவுக்கு வந்ததது.

கடைசியில் பெண்ணின் தாய் அணிவகுப்பிலிருந்து வெளிவந்து "அப்பா..  கொஞ்சம் தள்ளிக்குங்க...  அவர் போட்டோ எடுக்கணும்" என்றதும்தான் பின்னால் திரும்பிப் பார்த்தார்!  நிலைமை புரிந்து அ வ சி யை மறைத்துக் கொண்டு மெல்ல நகர்ந்து தன் நாற்காலிக்குச் சென்றார்!  கடைசிவரை அந்த அணிவகுப்பை அவர் போட்டோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

=============================================================================================

திருமண மணடப டைனிங் ஹாலில் பார்த்த நறுக்ஸ்!





==============================================================================================


 நம் ஆதர்ச கதாநாயகர்களைப் பற்றி படித்தால் மகிழ்ச்சிதானே வரும்...   அப்படி வந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் பற்றி விவரங்கள் இங்கே படிக்கலாம்.


தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட இரும்புக்கை மாயாவி
தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக‌ அது புகழ்பெற்றிருக்கிறது.
இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்:
# தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர்.
# எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
# தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவின. 'தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன்' என்று கருதப்படும் இரும்புக் கை மாயாவி கதாபாத்திரம், அது உருவாக்கப்பட்ட இங்கிலாந்தில்கூட இவ்வளவு கொண்டாடப்பட்டதில்லை.
யார் இந்த மாயாவி?
விஞ்ஞானி பாரிங்கரின் உதவியாளரான லூயி கிராண்டேல், ஒரு விபத்தில் தனது வலக்கையை இழந்து, எஃகினால் செய்யப்பட்ட செயற்கைக் கரம் ஒன்றைப் பொருத்திக்கொள்கிறார். ஒரு பரிசோதனையின்போது பரிசோதனைக் கூடமே விபத்துக்குள்ளாக, அந்த விபத்தில் கிராண்டேல் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்கிறது. அதில் யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய விளைவு உண்டாகிறது. கிராண்டேலின் முழு உடலும் மாயமாக மறைந்து, அவருடைய உலோகக் கை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இந்த விபத்தால் மனக் குழப்பம் அடைந்த கிராண்டேல், தனக்குக் கிடைத்த சக்தியின் மதிப்பை உணராமல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார். பின்னர் தெளிவுபெற்று பிரிட்டிஷ் உளவுத் துறையான நிழற்படையில் சேர்ந்து மிகச் சிறந்த உளவாளியாகிறார்.
பொக்கிஷம் காக்கும் மாயாவி
உலகின் அரிதான கலைப் பொக்கிஷங்கள் மர்மமான முறையில் கொள்ளையடிக்கப்பட, நிழற்படையின் தலைசிறந்த உளவாளியான மாயாவி அதைத் துப்பறிய வருகிறார். கலைப் பொருட்களை ஏலம் விடுமிடத்தில் மாயத்தன்மையுடன் காத்திருக்கும் மாயாவிக்குப் பேரதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த இடத்திலும் அவை கொள்ளையடிக்கப்படுகின்றன. வெளியே தெரியாமல் பின்தொடரும் மாயாவி எதிரிகளிடம் சிக்க, மரணக் கடிகாரத்துக்கு அவரை பலியாக விட்டுவிட்டு, புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை கொள்ளையடிக்க பாரிஸ் செல்கிறார் வில்லன் பால் பிரபு. மாயாவி எப்படி மரணத்திலிருந்து தப்பிக்கிறார்? மோனலிசா ஓவியம் காப்பாற்றப்பட்டதா? கடத்தல், கொலை, கலகக் கூட்டமைப்பின் சதியை மாயாவி எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை.
எப்படி வந்தது?
ஹெச்.ஜி. வெல்ஸ் எழுதிய 'தி இன்விஸிபிள் மேன்' 1950-களில் காமிக்ஸ் வடிவில் வெளிவந்து சிறப்பாக விற்பனையானது. இங்கிலாந்தின் ஐ.பி.சி. என்கிற ப்ளீட்வே நிறுவனம் 1962-லிருந்து வேலியண்ட் என்ற காமிக்ஸை வெளியிட்டுவந்தது. அதனுடைய ஆசிரியர்கள் கென் மென்னல், ஜாக் லெக்ராண்ட் மற்றும் சிட் பிக்னெல் ஆகியோர், அந்த மாய மனிதனை காமிக்ஸ் வடிவில் கொண்டுவர வேண்டுமென நினைத்தார்கள்.
அப்போது அறிவியல் புனைவு, விஞ்ஞானக் கதைவரிசைகளில் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்த கென்னத் பால்மரிடம் மாய மனிதனை உருவாக்கும் பொறுப்பை அவர்கள் ஒப்படைத்தனர். முதல் கதைக்கு ஸ்பானியரான ஜீசஸ் ப்ளாஸ்கோ தனது அற்புதமான ஓவியங்களால் மெருகூட்ட, 06-10-1962 அன்று வெளியான 'வேலியண்ட்' இதழில் முதல் இரும்புக் கை மாயாவியின் சாகசம் 'The Steel Claw' என்ற பெயரில் வெளியானது.
அதே கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் அதிக நாவல்கள் எழுத வேண்டி கோரிக்கைகள் முன்வர, இரும்புக் கை மாயாவியின் முதல் மூன்று கதைகளை மட்டும் எழுதிய நிலையில் இந்தக் கதை வரிசையையும், காமிக்ஸ் உலகையும் விட்டு கென் பால்மர் விலகினார். அதற்கு அடுத்துவந்த கதைகளை டாம் டுல்லி எழுதி இரும்புக் கை மாயாவியின் சகாப்தத்தை நிலைநிறுத்தினார்.
தமிழகத்தைக் கலக்கிய கதை
அமர் சித்திரக் கதை, இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் போன்று மொழிமாற்றம் செய்யப்பட்ட காமிக்ஸ் இதழ்கள் தமிழில் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும், இரும்புக் கை மாயாவியின் வருகை தமிழ் காமிக்ஸ் துறையில் மிகப் பெரிய ஆர்வத்தைக் கிளறிவிட்டது.
அம்புலிமாமா நிறுவனத்தின் பிரிண்டிங் மெஷினை வாங்க, சென்னையில் தங்கிப் பயிற்சியெடுத்த சிவகாசியைச் சேர்ந்த முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன், அங்கு வந்திருந்த சாம்பிள் காமிக்ஸ் கதையான இரும்புக் கை மாயாவியைப் படித்தார். பின்னர் லண்டன் சென்று, அதற்கு முறைப்படி அனுமதி பெற்றுத் திரும்பினார்.
மக்கள் குரல் பத்திரிகையின் துணை ஆசிரியர் காமராஜுலு ஆங்கிலத்திலிருந்து அந்தக் கதையை தமிழுக்கு மொழிபெயர்க்க, The Steel Claw என்ற கதாபாத்திரத்துக்கு 'இரும்புக் கை மாயாவி' என்று பெயர்சூட்டினார் சௌந்தரபாண்டியன்.
தமிழில் ஐந்து லட்சம் பிரதிகள் விற்ற காமிக்ஸ், தமிழிலிருந்து ஆறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட காமிக்ஸ், நடிகர் எம்.ஜி.ஆரை வைத்து காமிக்ஸ் உருவாக்கியவர் என்று பல்வேறு புதுமைகளைச் செய்த முல்லை தங்கராசன், காமராஜுலுவின் மொழிபெயர்ப்பைத் தனது அசாத்திய மொழி ஆளுமையால் செழுமைப்படுத்தினார்.
இரும்புக் கை மாயாவி கதையைப் பல நடிகர்கள் திரைப்படமாக எடுக்க விரும்பியுள்ளனர். முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தமிழின் முதல் 3டி தொலைக்காட்சித் தொடரை ஆரம்பித்தபோது, இரும்புக் கை மாயாவியைத் தழுவிய கதையையே கொண்டிருந்தது.
நமது கலாசாரம் சார்ந்த கதைகளே பொதுவாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில் தமிழ் காமிக்ஸ் உலகின் போக்கையே மாற்றி, மொழிமாற்று காமிக்ஸ்களுக்கு முக்கிய இடம் கிடைக்கக் காரணமாக இருந்தது இரும்புக்கை மாயாவிதான்.
_ தி தமிழ் ஹிந்து
============================================================================ 

கொஞ்ச நாட்களாய் கேட்காமல் இருந்து இந்த வாரம் ஒரு கேள்வி!

சிலபேரை, ஆணாயிருக்கலாம், பெண்ணாயிருக்கலாம்...   அல்லது சில நடிகர்களை, சில அரசியல்வாதிகளை  உள்ளூர பிடிக்கும்.  ஆனால் வெளியே காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்கும்.  அப்படி உங்களுக்கு?

=======================================================================================

பூத்தூறலாய் வான்மழை
பூமியை லேசாக
நனைக்கிறது
கோடையை இதமாக்கும்
சிறு கொடை.
குடை பிடிக்க மாட்டோம்
கறுப்புக் காட்டி
திருப்பியனுப்ப மாட்டோம்..
காத்திருக்கிறேன் ஒரு
கனமழைக்கு
வெள்ளமாய் வேண்டாம்
உள்ளம் நிறையுமளவாவது
வா மழையே...
வறண்ட குளங்களை
வறண்ட கிணறுகளை
இருண்ட மேகத்தில்
வெயில் மறைத்து
வெப்பம் குறைத்து
மழை சேர்த்து
மனமும் நிரப்ப வா மழையே...  2014 

=======================================================================




உன்னுடைய நாவல் இதைத்தான் சொல்கிறது. வாழ்க்கை என்பது யுத்தம் எதிர்கொள் எனச் சொல்கிறாய். இந்த யுத்தத்தில் எந்த துக்கமும் வலியும் அபத்தமும் தோல்வியும் சாஸ்வதம் அல்ல. அழ வேண்டாம். புலம்ப வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். முதலில் இது இயல்பு, இயற்கை, சுபாவம் எனப் புரிந்து கொள் என்று உன் நாவல் மன்றாடுகிறது. இலக்கியத்துக்கும் உத்தியோகத்துக்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசாமல் மொத்த வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டு பேசுகிறது.
எடை போட்டு எழுபது ரூபாய்க்கு எடுத்த விரிசல் சக்கரத்தை இருநூறு ரூபாய்க்குத் தள்ளிவிடுவது அநியாயமா? வியாபாரமா? மூன்று லட்ச ரூபாய் சரக்கை கிணற்றில் இறக்கிவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஓடிப் போவது தற்காப்பா? நம்பிக்கை துரோகமா? லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவன் ஒரு இரவில் நொடித்துப் போவது துரதிருஷ்டமா? கடவுள் சித்தமா? விபசாரம் செய்த பணத்தில் லாரி வாங்குவதும் விபத்துக்கு ஈடாய் வந்த பணத்தில் விபசாரம் செய்வதும் வயிற்றுப் பிழைப்பா? வக்கிரமா? பிரியத்தின் நிமித்தம் கொடுத்த பிரிவுபசாரப் பணத்தை கணக்கு பார்க்கிற, விமர்சனம் செய்கிற வாத்தியார் ஞானியா? மூர்க்கனா? உதவி செய்தவனை முட்டாள் எனச் சொல்லும் பெண் அகங்காரியா? கணவனின் கவிதையைப் பொறுத்துக் கொள்ளாத மனைவியும் மனைவியின் அவஸ்தையை புரிந்து கொள்ளாத கணவனும் குழந்தை பெற்றுக் கொள்வது காதலா? காமமா?
எல்லாமே இயற்கை. இயல்பு. சுபாவம். அதைப் புரிந்து கொள் முதலில் என்று உன் பாத்திரங்கள் சொல்கின்றன. சரி, இந்தப் புரிதல் இல்லை என்றால் என்ன கஷ்டம்?
புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை, இதன் இயல்பைப் புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்? இந்த கூரிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் புரிதல் இல்லாமல் போனால் இருத்தலே இம்சையாகும். எதிலும் தெளிவின்றி எப்போதும் சுலபமின்றி இருக்கும் வாழ்க்கை நரகமாகிவிடாதா? தன்னையும் துன்புறுத்திக் கொண்டு உடன் வாழ்பவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?
இந்தப் புரிதல் இல்லாமல்தான் நமது இளைஞர்கள் தலை கலைந்து போகிறார்கள். அன்னியமாதல் பற்றி பேசுகிறார்கள். எதிலும் நம்பிக்கையற்று சிதைகிறார்கள். எதிர்மறையாய் யோசிக்கிறார்கள். எளிதில் கலங்குகிறார்கள். கவிதை எழுதி இலக்கியம் பேசி ஊர் விட்டு ஊர் போய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
பாலகுமாரனின் "இரும்புக் குதிரைகள்" நாவலுக்கு மாலன் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி.  R  கந்தசாமி சார் பதிவிலிருந்து...
===============================================================================


போச்சுடா!



===========================================================================================




\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

பொக்கிஷம் :  ஆனந்த விகடன், மஞ்சரி 1964, 66



துக்ளக்கில் இப்போதும் இந்த வழக்கம் உண்டு எனினும் மற்ற பத்திரிகைகளில் கிடையாது.  எது?  வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்லும் வழக்கம்.  இது விகடனில் 64 ல் இருந்திருக்கிறது.  இன்னொரு பகுதியில் ஒவ்வொரு வாசகர் கடிதத்துக்கு பதில் இருக்கிறது.  அது  இந்த வரிசையிலேயே இருக்கிறது!.



50 ஆண்டு காலம் புகழ்பெற்றவை என்றால் காலி மார்க் தொண்டாகியது 1964 அல்லது 66.


சார்மிஸ்.   பார்த்த மாதிரி இருக்கிறது.  பௌடர் ரோஸ் நிறத்தில் இருக்கும் என்று நினைவு.  தொடர்ந்து உபயோகிக்காததால் என் மேனியழகு மிகைபட மகாணவில்லை என்று நினைக்கிறேன்!


கேள்வி பதில் மாதிரி வாசகர் கடிதங்களுக்கு பதில்!

65 கருத்துகள்:

  1. சிலருக்கு (அல்லது பலருக்கு), வயதானதால், வேறு சொல்லிக்கொள்ளும்படியான சிறப்புகள் இல்லாத்தால், அல்லது பலரும் தன்னை அணுகாத்தால் அல்லது அலட்சியப்படுத்துவதால், தானே முன்வந்து முக்கியத்துவம் பெறத் துடிப்பார்கள். பாவம்தான் அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வேறு சொல்லிக்கொள்ளும்படியான சிறப்புகள் இல்லாத்தால்,  //

      வாங்க நெல்லை....

      அப்படி இருப்பவர்களையும் வயதான காரணத்தால் சற்று ஒதுக்கியே வைத்திருக்கிறோம். மரியாதை காரணமாகவும், வேவ்லெங்த் காரணமாகவும், வேறு காரணங்களுக்கும்!

      நீக்கு
  2. எனக்கு குளிர்பானங்களின்மீது அலாதியான விருப்பம். காளிமார்க் பவன்டோ ரொம்பப் பிடிக்கும். (இதிலெல்லாம் அளவுக்கு மீறிய இனிப்பு, 300-500 சதம் இருக்கு என்று தெரியும்வரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் எனக்கு குளிர்பானங்கள் மீது விருப்பம் இருந்ததில்லை. சமீப காலமாக ஒரு காதல் வந்திருக்கிறது! அதன் காரணமாக Cough ம் இருக்கிறது!

      நீக்கு
  3. நானும் பல இடங்களில் என்ன காய்கறி வாங்குகிறார்கள், என்ன, எப்படித் திருத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து இன்ன இன்ன செய்வார்கள் என அவதானிப்பேன். காய்களிகள் திருத்திய படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு அழகான கலை.  பார்க்கவும், நறுக்கவும் அழகுதான்!  நல்ல கத்தி கைவரணும்! நறுக்கி இருப்பதைப் பார்த்தாலே நமக்கு இன்னின்ன நாமே சமைக்கலாம் என்றும் கை துடிக்கும்.  சாப்பிடுபவர்கள் பாடு!

      நீக்கு
  4. பாலகுமாரன் கதைகள் ஆரம்பத்தில் என்னை ஈர்க்கவுல்லை. சில கதைகள்தாம் படித்திருக்கிறேன். அவருடைய நடை எனக்கு சுமாராகத்தான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரனின் ஆரம்ப கால கதைகள் படித்திருக்கிறேன்.  சொல்லி இருக்கிறேன்.  மாச சம்பளம் வந்ததும் நான் செய்யும் முதல் செலவுகளில் ஒன்று புத்தகக் கடைக்கு சென்று பாலகுமாரன் புத்தகம் ஒன்று வாங்குவதுதான்.  சமயங்களில் இரண்டு கூட வாங்கி விடுவேன்.  படித்து, பிடித்த வரிகளை பென்சிலால் அடிக்கோடிட்டு...   அநத கலெக்ஷன்ஸ் இன்னமும் இருக்கிறது!

      நீக்கு
  5. இதுவரை எனக்குப் பிடித்த காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி மாத்திரம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்தான்.   தொடர்ந்து அவ்வளவு கதைகள் கிடைக்காதே...  எனவே முத்து காமிக்சின் மற்ற ஹீரோக்களான ஜானி நீரோ - ஸ்டெல்லா, லாரன்ஸ் - டேவிடையும் பிடிக்கும்.  அப்புறம் Phantom - முகமூடி வேதாளர்.

      நீக்கு
  6. ​பலர் அப்படி. முக்கியத்துவம் பெற முந்தி முந்தி நிற்பார்கள். வயது காரணம் அல்ல. இந்தப் பெரியவர் வயதை ஒரு சாக்காக வைத்து கொண்டு சலுகை பெற துடிக்கிறார்.
    அவ்வளவு தான்.
    மழையை விளிக்கிறீர்கள். சென்னை மூழ்கி விடப்போகிறது.
    மாலனின் முன்னுரையை இரண்டு தடவை வாசித்தும் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளியவில்லை.
    போட்டோக்கள் எனக்கும் கைவந்த கலை என்று பறை சாற்றுகின்றன. நல்ல செட்டப். வெளிச்சத்தில் இருந்து இருட்டிற்கு, இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு என்ற தீம் பாராட்டுக்குரியது.
    கடைசி ஜோக்கில் 10 இல் இருந்து 9, 8 என்று சொல்லும் பையனுடைய அப்பா ராக்கெட் விடுபவராக இருப்பார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //  வயது காரணம் அல்ல. இந்தப் பெரியவர் வயதை ஒரு சாக்காக வைத்து கொண்டு சலுகை பெற துடிக்கிறார் //

      இருக்கலாம்.  இந்த வயதை சாக்காக வைத்து பெண்களை தோளோடு தோள் அணைப்பது, முதுகைத் தடவுவது போன்றவற்றையும் சில பெரியவர்களிடம் பார்த்திருக்கிறேன்!

      இன்னொரு கவிதையில் வெள்ளமாக வரவேண்டாம், மண் நனைய, மனம் நிறைய அளவோடு வா மழையே' என்றும் கட்டுப்பாடு விதித்திருந்தேன்!  இது 2015 சென்னை வெள்ளத்துக்கு முன்.  அளவோடு என்று கட்டுப்பாடு விதித்தது வெள்ளத்துக்குப் பின்!

      மாதம் ஒரு குழப்பவாதி போல..   பாலகுமாரனுக்காவது புரிந்திருக்கும் என்று நம்புவோம்.

      போட்டோவுக்கான பாராட்டுகள் மனதை நிறைக்கின்றன!  நன்றி.

       ராக்கெட் விடுபவர் -  பார்த்த தொழில் சார்ந்த நல்ல அவதானிப்பு.  

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
  7. பொக்கிஷம் பகுதி அருமை! என்ன இருந்தாலும் விகடன்!
    கோவில் படங்களும், பதங்களும்(கே.ஜி.ஜி.யிடம் சுட்டது ஹிஹி) மிக அருமை!
    கல்யாணத்திற்கு போனோமா, உறவு, நட்புக்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டோமா? சாப்பிட்டோமா, மொய் எழுதினோமா என்று இல்லாமல் அடுக்களை வரை போய் புகைப்படும் எடுப்பது நீங்கள்தான். ரசித்தோம்.
    கையில் விலங்கோடு எதற்காக போராடுகிறார்? அதுவும் மாமியார் வீட்டின் முன்?
    தினமும் மழை பெய்கிறது என்கிறார்கள், இல்லையா? மழை வேண்டி உருக்கமான, அழகான கவிதை எழுதியிருக்கிறீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.  பொக்கிஷப் பகிர்வை ரசித்ததற்கு நன்றி.

      கோவில் படங்களோடு வரிகளையும் ரசித்ததற்கும் நன்றி.

      2009 லிருந்து எதை எழுதலாம், எப்படி எழுதலாம், எதை ஒரு பதிவாக மாற்றலாம் என்று என்னை அலைய விட்டு விட்டார் KGG.  அதுதான் காரணம்!

      கையில் விலங்குடன் டீக்கடைக்காரர் -  மேலே விளக்கத்துக்கு லிங்க் கொடுத்திருக்கிறேனே .. பார்க்கவில்லையா?

      // தினமும் மழை பெய்கிறது என்கிறார்கள், இல்லையா? மழை வேண்டி உருக்கமான, அழகான கவிதை எழுதியிருக்கிறீர்களே? //

      அது 2014 ல் எழுதப்பது!  FaceBook ல் இருந்து எடுத்தது.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. https://sivamgss.blogspot.com/2025/06/blog-post_19.html//திருமணம் ஆக வேண்டி பிரமசாரிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...    சென்று பார்த்து கமெண்ட் செய்து வந்தேன்.  காபி செய்ய முடியவில்லை.  சுலோகம் மட்டுமல்லாமல் எலலவற்றையும் காபி செய்ய முயன்றேன், வேறு ஒருவருக்கு அனுப்ப.

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஆம். 20 ல் அனுப்பி 24 ல்தான் சித்தி ஆயிற்று,

      நீக்கு
  11. விலங்குடன் டீ ஆற்றுபவர் லிங்க் ப்ளாண்க். ஒண்ணுமே இல்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி செய்திருக்கிறேன். 

      "சுவாரஸ்யமான செய்தி, கதை எழுதலாம்" என்னும் வரியை க்ளிக் செய்யவும்.

      நீக்கு
  12. தாத்தாவைப் பற்றிய பகுதியை வாசித்துச் சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்.

    மீண்ட குழந்தைப்பருவம் தாத்தாவுக்குப் பொழுது போச்சுனா, ஜாலியா இருப்பார் போல. இல்லைனா முடியாத மாதிரி ஒரு போஸ்!!!

    இப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தாவிடம் கோபம் கொள்ள வேண்டிய குணங்களும் உண்டு என்பதை நான் இங்கு சொல்ல மாட்டேன். படம் சாட் ஜிபிடி

      நீக்கு
  13. வயாதாவர்கள் ஒரு சிலர் இப்போதைய ட்ரெண்டியாக இருப்பவர்களோடு நன்றாகப் பேச முடியும், அவர்களே கூட வந்து அழகாகப் பேசுவார்கள்.

    ஆனால் எல்லோரும் அப்படியல்ல. சிலரோடு பேச நமக்குப் பொறுமை வேண்டிவரும். அப்ப நினைச்சுக்குவேன், மூளை நல்லா இருக்கணும், அடுத்தடுத்த தலைமுறைக்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கணும், என்று.

    ஒரு சில தாத்தாக்கள் கொஞ்சம் தங்கள் வயதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்குவாங்க குறிப்பாகப் பெண்களிடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவுக்கு வயதானது என்றே சொல்ல மாட்டார்கள்.  அவர் இளைய சமுதாயத்துடன் அவர்களுக்கு சமமாக கற்றுக்கொண்டு உரையாடினார். 

      எங்கள் கே ஜி எஸ் மாமா கூட அப்படிதான்.  அவர் எந்த வயதினரோடும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்.

      நீக்கு
    2. ஆமாம் சுஜாதாவுக்கு வயதானதா!! ம்ஹூம். இல்லைனா இளைய சமுதாயம் கூட அவரை வாசிக்கிறார்களே!

      கே ஜி எஸ் மாமாவுக்கு அசாத்திய அறிவு நிறைய விஷயங்கள் தெரிந்தவர். அது வாட்சப் குழுவில் அவர் பதில்களில் தெரிந்து கொண்டது

      கீதா

      நீக்கு
  14. ஆஹா.....காய் நறுக்கி வைத்திருக்கும் அழகு படங்கள் செமையா இருக்கு ஸ்ரீராம். நல்லா எடுத்திருக்கீங்க. வண்ண மயமாய்! பார்த்ததுமே இதை வைத்து என்ன செய்யலாம் புதியதாய், என்று மனம் போகிறது அந்த அளவு அழகா நறுக்கி வைச்சிருக்காங்க. அந்த நீள நீள வெங்காயம், புலாவ், வெங்காயப் பச்சடி இதுக்காக இருக்கும்னு தோன்றுகிறது.

    நானும் இப்படிப் படம் எடுத்ததுண்டு. அவங்க கிட்ட கேட்டுக் கொண்டு. ஆனால் ஒரு சிலர் வீட்டில் யார் நடத்தறாங்களோ அவங்க ரொம்ப செண்டியாக இருந்தால் எடுக்க விடுவதில்லை. ஆனா சாப்பிடுவதை எல்லாம் படம் எடுப்பார்கள்!

    பல வருஷங்களாகிவிட்டது விழாக்கள் சென்று. இடையில் ஒன்றே ஒன்று மட்டும் போய் வந்தேன். ஆனால் அங்கு எல்லாமே வேறு ஒரு இடத்தில் செய்து கொண்டு வந்து பரிமாறினார்கள். காஃபிக்கு மட்டும் அங்கு அடுப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும்போதே கை துறுதுறு என்கிறதே படமெடுக்கச்சொல்லி!  என்ன செய்ய!

      அங்கே அனுமதி வாங்க எல்லாம் யாருமில்லை. சாப்பிடுபவர்களும் பரிமாறுபவர்களும்தான்! நான் பாத்துக்க க்ளிக்கி விட்டேன்!

      நீக்கு
  15. காய்களைப் பார்த்தால் இரவு விருந்துக்கானது போன்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த நேரம் எடுத்தேன் என்று நினைவில்லை.  மதிய சாப்பாட்டுக்கு கூட இருக்கலாம்.  காலை டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பும் நேரம் நைசாக நறுக்கி வைத்திருப்பதில் கொஞ்சம் கொஞ்சம் அல்லி டிபன் பாக்சில் வைத்து எடுத்துக் கொண்டு போனால்  வீட்டில் சமையலுக்கு ஆகும்!!

      நீக்கு
  16. இரும்புக்கை மாயாவி தகவல்கள் சுவாரசியம். மாயாவியே சுவாரசியம் தான்.

    நான் நினைப்பது - இந்தக் காமிக்ஸ், புராணங்களில் இருந்து இன்ஸ்பிரேஷன். காமிக்ஸ்லிருந்தும் புராணங்களில் இருந்தும் (எல்லா நாட்டுப் புராணங்களும் தான்) நம்ம இயக்குநர்கள் உந்தப்பட்டு அதான் ஹீரோயிஸம் கொண்டு வராங்க என்று. ஹீரோவுக்கு உடம்பே முறிந்திருந்தாலும், சதியைக் கண்டுபிடிப்பார், முறியடிப்பார், இறுதியில் வெல்வார்.

    காமிக்ஸ் படங்களை ஃபேண்டஸி படங்களை ரசிப்போம்.

    கதாநாயகர்கள் பறந்து பறந்து பந்தாடுவதை நாம் கேள்விகள் கேட்பதுண்டு. புராணங்களை ரசிக்கிறோம், நம் படங்களும் அதிலிருந்து ஈர்க்கப்பட்டுத்தான் கதாநாயகர்களை உருவாக்குறாங்க ஆனால் நம்மால் ஏனோ அதை ஏற்க முடியாமல் கலாய்ப்போம். ஒரு வேளை நம் கண் முன் நிஜமானவர்கள் நடிப்பதால் இருக்கலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக காமிக்ஸ் கேரக்டர்களால் இன்ஸ்பைர் அழகிதான் படம் எடுக்கிறார்கள்.  அதில் ராஜமௌலி பெஸ்ட்.  இன்னொரு பாஹுபலி அவராலேயே தரமுடியாது   சினிமாவிலும் நாம் ரசிப்பதற்கு காரணம் நம்மால் செய்ய இயலாதவற்றை அவர்கள் செய்கிறார்கள்.  நம்மால் செய்ய முடியாதவற்றை கற்பனையில் நன் செய்வதுண்டு.  கற்பனையில் பங்களா கட்டி இருக்கிறேன்.  என்னை எதிர்த்த என் அதிகாரியை நறுக்கென நாற்பது கேள்விகள் கேட்டு திணறடித்திருக்கிறேன்.  இதையெல்லாம் கக்கூஸ் கனவுகள் என்று சொல்வேன்.  முடிந்ததும் அலம்பிவிட்டு வந்து விட வேண்டியதுதான்!!!

      நீக்கு
    2. நிச்சயமாக அதனா, தான் மாஸ் என்று கொண்டாடுகிறார்கள். நம்மால் செய்ய முடியாதவற்றை ஃபேண்டஸி கதாபாத்திரங்கள் செய்வதால்......

      ஹைஃபைவ்....ஸ்ரீராம். நான் பாத்ரூம் கற்பனைகள், அடுக்களை கற்பனைகள் என்று நினைத்துக் கொள்வேன். நானும் இப்படிக் கற்பனையில், கேள்வி கேட்பதோடு அல்லாமல் ஒரு சில கராத்தேக்களும்.....இது சில ஆண்களுக்கு!!!!

      //முடிந்ததும் அலம்பிவிட்டு வந்து விட வேண்டியதுதான்!!!//

      ஹாஹாஹாஹஹா சிரித்து முடியலை ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  17. ஸ்ரீராம், உங்க கேள்விக்கு - ஒவ்வொரு துறையிலும் எனக்கு ஒரு சிலரைப் பிடிக்கும். ஆனால் சொல்ல மாட்டேனே!!!! தயக்கம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரைக்கும் 'என் கேள்விக்கென்ன பதில் ' என்று பாடிக் கொண்டிருந்தேன்.  நீங்கள்தான் முதல் ஆள், கேள்வியை மதித்ததில்!  அல்லது மற்றவர்கள் இதில் ஏன் மாட்டிக்கொண்டு..  அதுதான் தயக்கம் இருக்கிறதே என்று ஒதுங்கி விட்டார்களோ!!!  ஹிஹிஹி..

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம்...நாமதான் எல்லாமும் வாசிச்சிருவமே!!!
      நான் பிடிக்கும் என்று மனதில் உள்ள ஆட்களைப் பெரும்பான்மையோருக்குப் பிடிக்காது!!!!!!

      கீதா

      நீக்கு
  18. மழைக்கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். சென்னைக்காகப் பிரத்யேகமாக எழுதப்பட்ட கவிதை!!? 2014 ல்....

    நீங்க வெள்ளமாய் வேண்டாம்னு சொன்னாலும்....அது சில சமயம் கேக்க மாட்டேங்குதே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ஹூம்..   யார்தான் என் பேச்சை எல்லாம் கேட்கிறார்கள்!

      என் பேச்சை நானே கேட்கமாட்டேன்.  அது எப்படி கேட்கும்? 

      நீக்கு
  19. மாலன் அழகாக எழுதியிருக்கிறார். பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் வாசித்தவர்களுக்குப் புரியும். நான் அவர் எழுதிய விதத்தை ரசித்தேன். அவர் சொன்னதிலிருந்து, ஓ இவை கதையில் இடம் பெற்றிருக்கும் போல என்றும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இரும்புக்குதிரை என்பதும் மெர்க்குரிப் பூக்கள் என்பதும் உவமைகள்தானே..  அழகான உவமைகள்..

      நீக்கு
    2. ஆமாம் அழகான உவமைகள் ஸ்ரீராம்....இதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கற்பனை உதிக்கலாம்.

      கீதா

      நீக்கு
  20. வாட்சப்பில் விளம்பரமா....அப்ப நாம ஒரு செய்தி அனுப்பினா அதோடு விளம்பரங்களையும் சேர்த்து அனுப்பிடுமோ? அது போல நமக்கு வரும் செய்திகளோடும்?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே யு டிட்யூப் மாதிரி FaceBook வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.  இப்ப இதிலுமா!

      நீக்கு
  21. ஸ்ரீராம், கதை எழுதலாம் .....கையில் விலங்குடன்..... வாசித்துவிட்டேன். நிஜமாகவே சுவாரசியமான செய்தி. வாசித்திருக்கிறேனோ என்றும் தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்திருக்க வாய்ப்பில்லை.  தினசரி செய்தித்தாள் படிக்கிறீர்களா என்ன?  இரண்டு நாட்களுக்குள் வந்த செய்தி.

      நீக்கு
    2. இல்லை, ஸ்ரீராம் நம் வீட்டில் ஏது செய்தித்தாள். எங்குன்னு யோசிச்சுப் பார்த்தேன் நினைவு வந்து.... குடும்பக் குழுவில் தம்பிகளில் ஒருவர் பகிர்ந்து ஜோக்கடித்திருந்தார்!!!!! தானும் இப்படிப் போராட்டம் செய்யப் போவதாக. சும்மா வேறு காரணம் சொல்லி கலாய்த்தல். அப்ப செய்தி வாசிக்கவில்லை. மேலோட்டமாகத் தலைப்பு மட்டும் உள்ளே இப்பதான் வாசித்தேன்.

      கீதா

      நீக்கு
  22. கோவில் படங்களும் அதற்கு வாசகங்களும் செம. ஏற்கனவே பார்த்த நினைவும் வருகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. பொக்கிஷம் பகுதி ஜோக் நல்லாருக்கு. அந்த வாசகர் கடிதத்தில் ஆசிரியர் கடைசி கருத்துக்குச் சொன்ன பதில் புன்சிரிப்பை வர வழைத்தது ரசித்தேன்!

    அது போலவே ஞாபகம் எப்போது வரும் - துணுக்கு செம கடைசி வரி!!! சிரித்துவிட்டேன்.

    காளிமார்க் ஃபேண்டா ரொம்பப் பிடித்தது ஒரு காலத்தில். கலர் கலர்னு நம்ம வீட்டில் சொல்வதுண்டு அப்ப. இப்பவும் விற்கப்படுகிறது.

    ஆனால் அதன் பின் குறிப்பாக 30 வயசுக்குப் பிறகு இப்படியான எந்த பானமும் குடிப்பதில்லை! டப்பாக்களில் வரும் பழ ரசங்கள், சுவையூட்டப்பட்ட பால் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் விருப்பம் இருந்ததில்லை. இப்போது இருக்கிறது. என்ன செய்ய? நன்றி கீதா

      நீக்கு
  24. சார்மிஸ் பார்த்ததுண்டு ஆனால் உபயோகித்ததில்லை.

    கேள்வி பதில் - கொஞ்சம் உற்றுப் பார்த்து வாசிக்க வேண்டும் போல!

    கடைசி ஜோக் புன்சிரிப்பு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எழுத்தும் சிறிது.  பேப்பரும் மங்கி இருக்கிறது...   62 வருடங்கள் பழசு!

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    நம் கௌதமன் சகோதரருக்கு ஒரு மெயில் நேற்று அனுப்பினேன். தயவு செய்து சிரமம் பாராமல் அதைப் பார்க்கவும். அவரிடமும் நீங்கள் சொல்லுங்கள்.உங்களுக்கு சிரமம் தந்தமைக்கு மன்னிக்கவும். இன்று எனக்கு கொஞ்சம் வேலைகள் வந்து விட்டன. (என் மகள் வயிற்றுப் பேத்திக்கு பிறந்த நாள்.) பிறகு நிதானமாக பதிவை படித்து விட்டு வருகிறேன். எப்போதும் போல காலையில் ஆழ்ந்து படிக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை எப்படியாவது கஷ்டப்பட்டு மன்னித்து விடுகிறேன் கமலா அக்கா...   கவலைப்படாதீர்கள்.  ரொம்ப சிரமம் என்றாலும் எப்படியாவது கௌதமன் சகோதரருக்கு (மூத்தவரா, இளையவரா?  யார் என்று தெளிவாகச் சொன்னீர்கள் என்றால் நானும் அவரிடம் சரியாகச் சொல்வேன்) விஷயம் சொல்லி விடுகிறேன்.  மற்றவர்கள் யாரும் அடித்துக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்.

      ஆனால் கௌதமன் சகோதரருக்கு நீங்களே மெயில் அனுப்பி இருக்கிறீர்களே...  மேலும் நான் அதை எப்படி பார்க்க முடியும்?

      நீக்கு
    2. /உங்களை எப்படியாவது கஷ்டப்பட்டு மன்னித்து விடுகிறேன் கமலா அக்கா/

      ஹா ஹா ஹா. அதெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். இஷ்டப்பட்டே மன்னியுங்கள். மேலும், நம் எபி. ஆசிரியர்களில் ஒருவரான கௌதமன் சகோதரரை( உங்கள் மாமா என நினைக்கிறேன்.) தெரியாதது ஆச்சரியந்தான். ஹா ஹா. ஹா. எபியின் அவர் பகுதிக்கான ஒரு மெயிலென்று நினைத்து அவருக்கு அனுப்பி விட்டேன். . அதை தங்களுக்கும் அனுப்பலாமென்று "செவ்வாய்" மலர்ந்தருளினால், அனுப்பி விடுகிறேன். தெரியவில்லை அதனால்தான் அவசரமாக நேற்று இரவு அவருக்கு அனுப்பினேன். (மறுபடியும் இஷ்டப்பட்டே மன்னிக்கவும். ஹா ஹா ஹா.)

      நீக்கு
  26. சிறுவயதில் அம்புலிமாமா கதைதான் படித்திருக்கிறேன். மாயாவி எல்லாம் வீட்டில் கிடையாது.
    எங்கள் பிள்ளைகள் இவை எல்லாம் பிடித்திருக்கிறார்கள்.

    இங்கும் இடையிடை மழைதான் . மழைக் கவிதை பிடித்திருந்தது.

    முதியவர்களில் சிலர் தங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என நினைத்துத்தான் இப்படிச் செய்கிறார்கள் போலும் இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு பொறுமை இல்லாமல் இருக்கும் .

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  28. கல்யாண மண்டபம் செய்திகள், காய்கறிகள் நறுக்கி வைத்த படம் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    சில பெரியவர்கள் நன்றாக நடந்தாலும் இத்தனை வயதுக்கு இப்படி நடக்கிறார்களே என்று கண் வைத்து விடுவார்கள் என்று நினைப்பார்களோ ! அதுதான் அந்த நடிப்போ?


    பதிலளிநீக்கு
  29. இரும்பு கை மாயாவி படித்த காலங்கள் நினைவுகளில்.
    என் அண்ணன் வாங்கி வருவார்கள் முன், திருமணத்திற்கு பின் கணவர் வாங்கி வந்து தருவார்கள் அவர்களுக்கும் பிடிக்கும் என்பதால்.
    பிள்ளைகளும் விரும்பி படிப்பார்கள்.
    மழை கவிதை அருமை. இப்போது மதுரையில் மழையே இல்லை மழை பெய்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியில் திருமணத்தில் உறவினர் (வயதானவர்) நடந்து கொண்ட முறைகள் அவருக்கு மனதளவில் பிடித்துப் போனது போலும். அவரின் போட்டோ எடுக்கும் திறனை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்று நினைத்திருப்பார். உரிய வயதில், உரிய நேரத்தில் ஒரு பாராட்டை தராமல், மற்ற உறவுகள் இவர்களைப் போன்றவர்களை ஒதுக்கி வைப்பது எவ்வளவு பெரிய பாவம்.அதன் விளைவே இப்படியான செயல்கள். . சிலர் இது ஒரு வீண் ஜம்பமாக காட்டிக் கொள்வார்கள். தன்னை, தன் செயலை யாராவது கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற படாடோப உணர்வு அவர்களிடம் நிறைய இருக்கும். மனிதர்கள் மாறுபட்ட குணாதிசயங்கள் உடையவர்கள்தாமே..!

    இது போல் எங்கள் அம்மா வீட்டில் அருகில் இருக்கும் ஒரு உறவு. (ஆண்தான்) நடக்கவே சிரமபடுகிற மாதிரி ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பது போல காட்டிக் கொள்வார். யாரும் பார்க்காத போது நன்றாகவே நடப்பார். நாங்கள் வீட்டு வாசலில் அழகான கோலங்கள் போடுவது அவருக்கு எப்போதுமே பொறுக்காது. போட்டு முடிந்தவுடன் எங்கள் வீட்டை ஒரு முக்கியமான வேலைக்காக கடக்கிற மாதிரி நடந்து அப்போதுதான் கால்கள் ஏதோ சிரமம் தருகிற மாதிரி காட்டிக் கொண்டு அழகான கோலத்தை கலைத்து விட்டுப் போவார். மார்கழி மாதத்தில் கோலத்தின் நடுவில் வைக்கும் பூசணிப் பூக்களை பாதி நாட்கள் இவர் கால்கள் இடறாமல் இருக்காது. இப்படியும் சிலர். நீங்கள் பதிவில் சொன்னதை படித்தவுடன் எனக்கு இவர் நினைவுதான் வந்தது. என்னவோ விசித்திரமான மனிதர்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    பச்சைப் பசேலென்ற காய்கறிகளும், அதை அழகாக நறுக்கி வைத்திருந்த காட்சிகளும் கண்களை கவர்கின்றன. ஆனால், இப்போதெல்லாம் இப்படி நிறைய செய்வதை சாப்பிட இயலவில்லை. பார்க்கும் போதே போதுமென்ற உணர்வு வருகிறது.

    கவிதை அருமை. மழை அளவோடு பெய்தால், அதன் பயன்களும், மனதிற்கு நிறைவாக இருக்கும். அநாவசியமாக தொந்தரவு தரக்கூடிய மழைகளும், மனதிற்கு வெறுப்பைத்தான் தர வல்லவை. அதனால் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்" என்ற பழமொழி உண்டானதோ..? .

    இரும்புக் கை மாயாவி படித்திருக்கிறேன். ஆனால், நீங்கள் சொன்ன கதை நினைவில் இல்லை. அப்போதெல்லாம் எங்கள் அம்மா வீட்டில் அனேக புத்தகங்கள் தொடர்ந்து வாங்குவதில்லை. அம்மா நாங்கள் பிறப்பதற்கு முன்பு வாங்கிய புத்தகங்களில் இருந்து முக்கியமான எழுத்தாளர்களின் நாவல்களை பைண்ட செய்து வைத்துக் கொண்டிருந்தார். பிறகு நூலகத்திலிருந்து சில புத்தகங்கள் எடுத்துப் படித்தோம் . திருமணத்திற்குப் பின்னும் நேரம் கிடைப்பதை பொறுத்து அவ்விதம் படித்துள்ளேன். இன்னமும் படிக்கும் ஆர்வம் உள்ளது. நேரங்கள்தான் தடை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!