எல்லோரும் சிறிது 'சளசள' பேச்சுகளுக்குப் பின் தூங்கத் தொடங்கியாகி விட்டது.
எவ்வளவு நேரம் தூங்கினார்களோ தெரியாது. திடீரென ஒரு அசைவு தெரிந்தது. சிறிய சத்தங்கள்.
பாலு விழித்துக் கொண்டான்.
யாரோ அசைகிறார்கள், நகர்கிறார்கள் என்கிற உணர்வு தெரிந்தது பாலுவுக்கு.
'யாரது' என்று கேட்கலாமா என்று வாய் வரை வந்த கேள்வி சட்டென்று உள்ளுக்குள்ளேயே அடங்கியது.
மாலை பேசிய பேச்சுகள் நினைவுக்கு வந்தன. புதிய வகைத் திருடர்கள். ஒவ்வொருவர் தலைமாட்டிலும் ஒவ்வொருவர் நிற்பார்கள்...
முதுகுத் தண்டில் ஜிலீர் என்றது. நாம் பேசியது கேட்டு நாகா வந்தது போல, இவர்களும் எங்காவது நின்று கேட்டிருப்பார்களோ!
ஆடாமல் படுத்தான். ஏதாவது அசைந்து வைத்தால் மண்டையில் ஒரு போடு போட்டால் என்ன ஆவது?
இப்போது பீரோவுக்கு அருகில் சப்தம் கேட்டது.
எவனோ ஒருவன் பீரோவிடம் நின்றிருக்கிறான் போலும்.
திடீரென பீரோ அருகில் ஏதோ உருண்டு விழும் சத்தம். அங்குதான் சந்திரா படுத்திருப்பான்.
சந்திராவிடமிருந்து
ஒரு சத்தம் கிளம்பியது. அதை அலறல் வகையிலும் சேர்க்க முடியாது. ஓலம்
என்ற வகையிலும் சேர்க்க முடியாது. கொஞ்சம் சத்தமான, நீளமான முனகல் என்று
சொல்லலாமா...
'சந்திராவுக்கு என்ன ஆயிற்றோ? அசையவே கூடாது என்று படுத்திருக்கிறோம்... இவன் என்னடாவென்றால் அலறுகிறானே.. என்ன நடக்குமோ?'
இன்னும் கொஞ்ச நேரம் கழிந்தது. அசைவில்லை. சத்தமும் இல்லை.
இருள்.
இறுக மூடியிருந்த கண்களை மெல்லத் திறந்து பார்த்தான் பாலு. ஒன்றும் புலப்படவில்லை.
தான் எங்கு படுத்திருக்கிறோம், எந்த திசையில் படுத்திருக்கிறோம் என்கிற உணர்வுக்கு வர கொஞ்ச நேரம் பிடித்தது.
'இங்கிருந்து
' லைட் ஸ்விட்ச்' எங்கிருக்கிறது? எழுந்து வலது புறமாய் நான்கடி எடுத்து
வைத்தால் இருக்கிறது. அங்கு வகாப் இருப்பான். அவன் மேல் படாமல், அவன்
தலைமாட்டில் யாராவது நின்றிருந்தால் அவனிடமிருந்து தப்பி, வகாப்புக்கும்
ஆபத்து இல்லாமல் சட்டென ஸ்விட்சைத் தட்ட வேண்டும்'
நொடியில் சிந்தனை ஓடியது பாலுவின் மனதுக்குள்.
மூச்சை இழுத்துப் பிடித்துத் தயார் செய்து கொண்டான்.
தலை
மாட்டில் நின்றிருப்பவன் சுதாரித்து அடிக்குமுன் தலை சட்டென விலக்கித்
தூக்கி, வேகமாக எழுந்து, சட்டென பக்க வாட்டில் நகர்ந்து (அடி விழாமல்
தப்பிக்கிறானாம்) வேகமாக வலது பக்கமாய் ஓடி ஸ்விட்சைப் போட்டான்.
இரண்டாவது
அடி வைக்கும்போதே யார் மேலோ, அநேகமாக வகாப் மேல், இடறித்தான் ஓடினான்.
தூக்கத்தில் நகர்ந்திருப்பான் போலும்.
வகாப் "ஒய்..." என்று
பெருங்குரலெடுத்து அலறினான்.
அதே நேரம் பாலு விளக்கைப்
போட்டிருந்தான். வகாப் சுவரோரமாய் ஒண்டியபடி அலறிக் கொண்டிருந்தவன்,
வெளிச்சம் பரவியதும் சட்டென நிறுத்தி விட்டு விழித்தான்.
"நீதான் மிதிச்சியா?"
"ஏண்டா கத்தறே?" - பாலு.
"சந்திரா கத்தியதும் திருடனோ, பேயோ என்று பயம் வந்து விட்டதுடா...அசையாமப் படுத்திருந்தேன். நீ மிதிக்கவும் பயந்து விட்டேன்"
"என்ன ஆச்சு? ஏண்டா ராத்திரில கூத்தடிக்கறீங்க?' என்றான் சந்திரா, எழுந்து உட்கார்ந்து கொண்டு.
"உதைடா அவனை! இவன் சவுண்டு விட்டுட்டு நம்மைச் சொல்றான்" - வகாப்.
முனியாண்டி சுவரில் பாதி சாய்ந்தவாறு நடப்பதைப் பார்த்தவாறிருந்தான்.
"உனக்கு சந்திரா கத்தினது கேட்கலை?" - பாலு.
"இல்லை. நீ லைட்டப் போட்டதுலதான் எழுந்தேன்"
"நீ பயப்படலையா"
"நானா? ஹ!"
பீரோவிலிருந்து
கோட் ஸ்டாண்டின் மேல் தாவிய பெரிய சைஸ் எலி ஒன்று கீழே குதித்து,
முனியாண்டியை அலறவிட்டுத் தாண்டி, எங்களைக் குறுக்கே கடந்து, ஜன்னலுக்காய்
ஓடி மறைந்தது.
முனியாண்டி விதிர்விதிர்த்து எழுந்து நின்றிருந்தான்.
"நாங்களே தேவலாம்" என்றான் வகாப்.
பீரோவின்
அருகில் ஒரு பாத்திரம் விழுந்து கிடந்தது. அதிலிருந்து ரவா லாடு வெளியே
வந்திருந்தது. காட்சி புரிந்தது. சந்திரா அசடு வழிந்தான்.
"சத்தம் கேக்கவும், பாத்திரம் வேற மேல விழாவும் நான் உருட்டுக் கட்டைத் திருடன்னு நினைச்சு பயந்துட்டேண்டா" என்றான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது. தொடர்ந்து நாகாவின் குரலும் கேட்டது.
பாலு கதவைத் திறந்தான்.
"என்னடா சத்தம்? முனியாண்டி ஏன் அலறினான்? என்ன ஆச்சு?" என்றான் நாகா.
நடந்ததைச் சொன்னார்கள்.
கிளம்புமுன் நாகாவின் முகத்தில் இலேசாக ஒரு ஏமாற்றம் தெரிந்ததோ?
முற்றும்.