அமானுஷ்ய அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமானுஷ்ய அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.7.15

ஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும் - இறுதிப் பகுதி.





இரவு.
 
எல்லோரும் சிறிது  'சளசள' பேச்சுகளுக்குப் பின் தூங்கத் தொடங்கியாகி விட்டது. 
 
எவ்வளவு நேரம் தூங்கினார்களோ தெரியாது.  திடீரென ஒரு அசைவு தெரிந்தது.  சிறிய சத்தங்கள்.

 
பாலு விழித்துக் கொண்டான்.
 

                                                                            Image result for someone sleeping in dark images
 
யாரோ அசைகிறார்கள், நகர்கிறார்கள் என்கிற உணர்வு தெரிந்தது பாலுவுக்கு.
 
'யாரது' என்று கேட்கலாமா என்று வாய் வரை வந்த கேள்வி சட்டென்று உள்ளுக்குள்ளேயே அடங்கியது.
 
மாலை பேசிய பேச்சுகள் நினைவுக்கு வந்தன.  புதிய வகைத் திருடர்கள்.  ஒவ்வொருவர் தலைமாட்டிலும் ஒவ்வொருவர் நிற்பார்கள்...
 
முதுகுத் தண்டில் ஜிலீர் என்றது.  நாம் பேசியது கேட்டு நாகா வந்தது போல, இவர்களும் எங்காவது நின்று கேட்டிருப்பார்களோ!
 
ஆடாமல் படுத்தான்.  ஏதாவது அசைந்து வைத்தால் மண்டையில் ஒரு போடு போட்டால் என்ன ஆவது?
 
இப்போது பீரோவுக்கு அருகில் சப்தம் கேட்டது.
 

                                                                        Image result for someone sleeping in dark images
 
எவனோ ஒருவன் பீரோவிடம் நின்றிருக்கிறான் போலும். 
 
திடீரென பீரோ அருகில் ஏதோ உருண்டு விழும் சத்தம்.  அங்குதான் சந்திரா படுத்திருப்பான்.

 
சந்திராவிடமிருந்து ஒரு சத்தம் கிளம்பியது.  அதை அலறல் வகையிலும் சேர்க்க முடியாது.  ஓலம் என்ற வகையிலும் சேர்க்க முடியாது.  கொஞ்சம் சத்தமான, நீளமான முனகல் என்று சொல்லலாமா...
 
'சந்திராவுக்கு என்ன ஆயிற்றோ?  அசையவே கூடாது என்று படுத்திருக்கிறோம்...  இவன் என்னடாவென்றால் அலறுகிறானே..  என்ன நடக்குமோ?'
 
இன்னும் கொஞ்ச நேரம் கழிந்தது.  அசைவில்லை.  சத்தமும் இல்லை.
 
இருள்.  
 
 
                                                                          Image result for someone sleeping in dark images
 
 
 
இறுக மூடியிருந்த கண்களை மெல்லத் திறந்து பார்த்தான் பாலு.  ஒன்றும் புலப்படவில்லை.
 
தான் எங்கு படுத்திருக்கிறோம், எந்த திசையில் படுத்திருக்கிறோம் என்கிற உணர்வுக்கு வர கொஞ்ச நேரம் பிடித்தது.
 
'இங்கிருந்து ' லைட் ஸ்விட்ச்' எங்கிருக்கிறது?  எழுந்து வலது புறமாய் நான்கடி எடுத்து வைத்தால் இருக்கிறது.  அங்கு வகாப் இருப்பான்.  அவன் மேல் படாமல், அவன் தலைமாட்டில் யாராவது நின்றிருந்தால் அவனிடமிருந்து தப்பி, வகாப்புக்கும் ஆபத்து இல்லாமல் சட்டென ஸ்விட்சைத் தட்ட வேண்டும்'
 
நொடியில் சிந்தனை ஓடியது பாலுவின் மனதுக்குள்.
 

மூச்சை இழுத்துப் பிடித்துத் தயார் செய்து கொண்டான்.
 
 
தலை மாட்டில் நின்றிருப்பவன் சுதாரித்து அடிக்குமுன் தலை சட்டென விலக்கித் தூக்கி, வேகமாக எழுந்து, சட்டென பக்க வாட்டில் நகர்ந்து (அடி விழாமல் தப்பிக்கிறானாம்) வேகமாக வலது பக்கமாய் ஓடி ஸ்விட்சைப் போட்டான்.
 

                                                                         Image result for someone sleeping in dark images
 
 
இரண்டாவது அடி வைக்கும்போதே யார் மேலோ, அநேகமாக வகாப் மேல், இடறித்தான் ஓடினான்.  தூக்கத்தில் நகர்ந்திருப்பான் போலும்.  
 
 
வகாப் "ஒய்..." என்று பெருங்குரலெடுத்து அலறினான்.
 
அதே நேரம் பாலு விளக்கைப் போட்டிருந்தான்.  வகாப் சுவரோரமாய் ஒண்டியபடி அலறிக் கொண்டிருந்தவன், வெளிச்சம் பரவியதும் சட்டென நிறுத்தி விட்டு விழித்தான்.
 
"நீதான் மிதிச்சியா?"
 
"ஏண்டா கத்தறே?" - பாலு.
 
"சந்திரா கத்தியதும் திருடனோ, பேயோ என்று பயம் வந்து விட்டதுடா...அசையாமப் படுத்திருந்தேன்.   நீ மிதிக்கவும் பயந்து விட்டேன்"
 
"என்ன ஆச்சு?  ஏண்டா ராத்திரில கூத்தடிக்கறீங்க?' என்றான் சந்திரா, எழுந்து உட்கார்ந்து கொண்டு.
 
"உதைடா அவனை!  இவன் சவுண்டு விட்டுட்டு நம்மைச் சொல்றான்" - வகாப்.

 
முனியாண்டி சுவரில் பாதி சாய்ந்தவாறு நடப்பதைப் பார்த்தவாறிருந்தான். 
 
"உனக்கு சந்திரா கத்தினது கேட்கலை?" -  பாலு.
 
"இல்லை.  நீ லைட்டப் போட்டதுலதான் எழுந்தேன்"
 
"நீ பயப்படலையா"
 
"நானா? ஹ!"

 
பீரோவிலிருந்து கோட் ஸ்டாண்டின் மேல் தாவிய பெரிய சைஸ் எலி ஒன்று கீழே குதித்து, முனியாண்டியை அலறவிட்டுத் தாண்டி, எங்களைக் குறுக்கே கடந்து,  ஜன்னலுக்காய் ஓடி மறைந்தது.
 
முனியாண்டி விதிர்விதிர்த்து எழுந்து நின்றிருந்தான். 
 
"நாங்களே தேவலாம்" என்றான் வகாப்.

 
பீரோவின் அருகில் ஒரு பாத்திரம் விழுந்து கிடந்தது.  அதிலிருந்து ரவா லாடு வெளியே வந்திருந்தது.  காட்சி புரிந்தது.  சந்திரா அசடு வழிந்தான். 
 
"சத்தம் கேக்கவும், பாத்திரம் வேற மேல விழாவும் நான் உருட்டுக் கட்டைத் திருடன்னு நினைச்சு பயந்துட்டேண்டா" என்றான்.
 
கதவு தட்டும் சத்தம் கேட்டது.  தொடர்ந்து நாகாவின் குரலும் கேட்டது.
 
பாலு கதவைத் திறந்தான்.
 
"என்னடா சத்தம்?  முனியாண்டி ஏன் அலறினான்?  என்ன ஆச்சு?" என்றான் நாகா.
 
நடந்ததைச் சொன்னார்கள்.
 

                                                                                          Image result for someone sleeping in dark images

கிளம்புமுன் நாகாவின் முகத்தில் இலேசாக ஒரு ஏமாற்றம் தெரிந்ததோ?

 
 
                                                                                         முற்றும்.

24.6.15

ஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்



இது நடந்தது 1950 களில்.

டிவி இல்லாத காலம்.  ரேடியோ கூட இருக்காது.  பார்க்குக்குச் செல்ல வேண்டும், ரேடியோ கேட்கக்கூட.

அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தால் பொழுது போக வேண்டுமே...   திருமணமானவர்களும், ஆகாதவர்களும் கலந்து தங்கியிருந்த மேன்ஷன் போன்ற ஒரு இடம்.  ஆனால் பெரிய அறைகள்.
பார்க், சினிமா, கடைத்தெரு, லைப்ரரி போகாத ஒரு மாலை நேரம்.  நண்பர்கள் குழுமிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

                                                    Image result for five friends conversing clip art images

பாலு, கண்ணன், தேசிகன், வகாப், ஜான்சன், சந்துரு, முனியாண்டி என்று ஜமா சேர்ந்திருந்தது.

அப்போது அந்த ஊரில் புதுவகையான திருடர்கள் வந்திருந்தனர்.  ஊர் முழுவதும் அதைப் பற்றிப் பேச்சாக இருந்தது.

இரவு அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழையும் திருடர்கள் தூங்கிக் கொண்டிருப்போரின் தலை மாட்டில் இரும்பு உலக்கை, அல்லது மரக்கட்டையுடன் சத்தமின்றி நிற்பார்களாம்.  ஒருவன் அந்த இடத்தைத் தேட்டை போடுவானாம்.   நடுவில் யாராவது தூக்கத்தில் அசைவது போலவோ, எழுவது போலவோ தெரிந்தால் மண்டையில் ஒரு போடு போடுவார்களாம்.  கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறி விடுவார்களாம்.

இதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

"இவர்களை நாம் பிடித்துக் கொடுத்தால் என்ன?" என்றான் வகாப்.  எப்போதுமே துணிச்சலான ஆசாமி.

"மண்டை தெறிச்சுடும் தெரியுமில்ல.... பிடிச்சுக் கொடுக்கறாராம்..."  சந்துருவின் எகத்தாளம்.

இப்படியே பேச்சு போய்க்கொண்டிருக்க, தனியாக அறையில் தங்கியிருப்பவர்களின் ரெகுலர் சப்ஜெக்டான ஆவி சமாச்சாரத்தில் பேச்சு வந்து நின்றது. 

பாலுவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கைக் கிடையாது.  "எல்லாம் சுத்த ஹம்பக்!"

அவரவர்கள் ஆளுக்கு ஒரு அனுபவத்தைச் சொன்னார்கள்.

இந்நேரத்தில் நாகசாமி ஒரு போர்டுடன் அங்கு ஆஜரானான்.

"என்ன அது?"

"ஒய்ஜா போர்ட்"

"அப்படீன்னா?"


"ஆவிகளோட பேசலாம் தம்பிகளா...  நீங்க பேசிகிட்டிருந்தது அங்க வரைக்கும் கேட்டது.  அதான் இந்த போர்டை எடுத்து வந்தேன்"

"எப்படி நாகா? "

"உள்ள வாங்க... சொல்றேன்"

வராண்டாவை விட்டு எல்லோரும் உள்ளே சென்றனர்.

போர்டை மேஜை மேல் வைத்தான் நாகா.  



"இது எல்லோருக்கும் கைவராது.  நல்ல மீடியமா இருந்தால் அழகாக வரும்.."

"மீடியமா?  அப்படின்னா?"

"சில பேர்கள் ஆவிக்கு ரொம்ப நெருங்கியவர்களா இருப்பாங்க"

"அட, ஏம்ப்பா பயமுறுத்தறே?"

"விடு.. ரொம்ப விளக்கம் எல்லாம் கேட்டால் பதில் சொல்ல நேரம் இல்லை!"

என்ன செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் சொன்னான்.


"ரூம்ல நடுல இந்த போர்டை வை.  லைட்டை அணைச்சுட்டு ஓரமா ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏத்தி வை.  யாரும் பேசக் கூடாது. எல்லோருக்கும் இதுல முழு நம்பிக்கை வரணும்...."

"ஓ... ஆவி வரல்லைன்னா ங்க யாருக்கோ நம்பிக்கை இல்லைன்னு சொல்லிடலாம் இல்லையா?"   சந்துரு மறுபடியும்!

"சும்மா இரு சந்துரு!   இதை சாதாரணமா வீட்டுல வச்சு ட்ரை பண்ண .மாட்டாங்க தெரியுமா..?  கெட்ட சக்தி வீட்டுக்குள்ள வந்துடும்னு.."



"ஏய் தம்பி..  அப்போ என் ரூம்ல வச்சு மட்டும் செய்யலாமா?  நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது?"

"ஏய்.. பல பேர் இருக்கற ரூம்ல அப்படி நடக்காதுப்பா..."

என்ன நியாயமோ!  

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த நாகா, பாலுவைத் தேர்ந்தெடுத்தான்.  விபூதிப் பட்டையும், சாந்தமான முகமும் பாலுவுக்கு.

"ம்ம்..  இதை இங்க வைக்கிறேன்.  இதுல விரலை வச்சுக்கோ.."

கேரம்போர்ட் காயின் போலவும், தாயக் கட்டை போலவும் இருந்த ஒன்றை போர்டில் வைத்தான்.  சந்திராவை எதிரில் அமரவைத்தான்.

"நான் எதுக்குடா இங்கே?" சந்திரா நடுங்கினான்.

"ஒன்றும் ஆகாது.. உட்கார்.  பாலு!  மனதை ஒருமுகப் படுத்திக்கோ.. எல்லோருமே மனதை ஒருமுகப் படுத்துங்கப்பா..."

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே எல்லோரும் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தனர்.

கொஞ்ச நேரம் அமானுஷ்யமாகக் கழிந்தபின், சந்திராவிடம் நாகா "உங்கள் தாத்தாவை மனசார நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் இருங்க சந்திரா... மனசார அவரை இங்கே கூப்பிடுங்க... அவரை நீங்க நம்பறேன்னு உணர்த்துங்க..."

"என்னடா திடீர் மரியாதை!" சந்திரா.

"ஷ்... கொஞ்ச நேரம் மரியாதை இல்லாமப் பேசாம எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தே பேசுங்க.. ." -  நாகா.

ரொம்ப பில்டப் கொடுக்கிறானோ என்று தோன்றினாலும் சொன்னதைச் செய்தார்கள்.

"இப்போ ஏதாவது கேள்வி கேளுங்க சந்திரா...  வந்திருக்கறது யாருன்னு கேளுங்க"

கேள்விகள் கேட்கப்பட, கேட்கப்பட அந்த காயின் நகர வேண்டும்.  ஆனால் நகரவில்லை.   கொஞ்ச நேர முயற்சிகளுக்குப் பின், நாகா சட்டென்று வெளியில் சென்று, கொஞ்ச நேரத்தில் சிவநேசனுடன் வந்தான்.  சிவநேசன் விபூதி குங்குமத்துடனும், வெறித்த பார்வையுடனும் எப்போதுமே கொஞ்சம் மனநிலை பாதித்தவன் போல இருப்பான்.

"இவர் நல்ல மீடியம்.  பாலு!  நீங்க நகருங்க... சிவா! அப்படியே டேக் ஓவர் பண்ணிக்குங்க"

இப்போது அந்தக் காயின் நகர்ந்து 'பதில்' சொல்லத் தொடங்கியது! 

சந்திராவின் தாத்தா பிரதோஷம் என்று 'சபைக்கு'ப் போயிருப்பதாகச் சொல்லி, அவரை அறிந்தவர் என்று வேறு ஒரு ஆவி வந்திருப்பதாய்த் தகவல் சொன்னது.

சிவநேசன் காயினை நகர்த்த, நகர்த்த அவற்றை அருகிலிருந்து நாகா ஒரு பேப்பரில் என்ன பதில் வருகிறது என்று எழுதிக் கொண்டே வந்தான்.

நடுவில் நாகா திணறுவதைப் பார்த்த வகாப் "சிவா.. கொஞ்சம் மெல்ல நகர்த்துங்க... எழுத முடியலை" என்றான்.

நாகா, "ஹலோ... அவரா நகர்த்த்தறார்? அவர் கையில இல்லை கண்ட்ரோல்!  நான் பார்த்துக்கறேன் விடுங்க" என்றான்.

கேள்விகளுக்கு பதில் பொருத்தமாகச் சில வந்தாலும், நிறைய சம்பந்தமில்லாமல் இருந்தன.

"எனக்கு இந்த வருடம் டிரான்ஸ்பர் வருமா?' - பாலு.

"ஆமாம்.. வரும்"

"எங்கே?"

"கும்பகோணம்!" -  சிவநேசன் அறிந்திருந்த ஒரே பெரிய ஊர் கும்பகோணம் என்பது இரண்டு மூன்று பேர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது!

இப்படியே சில கேள்விகள் கடந்ததும் ஜான்சன், வகாப், சந்துரு ஆகியோர் எக்குதப்பாய்க் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்.

"வந்திருக்கறது ஆவின்னு எப்படி நம்பறது?" சந்துரு.

"உன்னை ஓங்கி ஒரு அறை விட்டா நம்புவியா?" என்றது போர்ட். 

"சரி.." என்ற சந்துரு கன்னங்களை மூட, சிவநேசனின் கைகளுக்கு எட்டாமல் நகர்ந்தான்.

சட்டென நாகா திரும்பி சந்துருவை அறைந்தான்!  கையோடு "ஸாரி ப்ரதர்..  நான் ஏன் அடிச்சேன்?" என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான்!

கடுப்பான சந்துரு, "டேய்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமாடறாங்கடா..." என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

இரண்டு நிமிடத்தில் சந்துருவின் குரல் கேட்டது. "டேய்.. கதவை ஏண்டா தாழ்ப்பாள் போட்டீங்க.. திறங்கடா"

"கதவைத் திறக்காதே"  நாகா அலறினான்.

"ஏன் நாகா?"

"நான் சொல்லலை... போர்ட் சொல்லுது"

"அடப் போடா..."  கதவருகே நகர்ந்தான் ஜான்சன்.

"உங்களால இப்போ கதவைத் திறக்கவும் முடியாது... சந்துருவும் இப்போ உள்ளே வரவும் முடியாது"

"ஏன்?" வகாப், ஜான்சன், பாலு, தேசிகன் குரலுடன் பாத்ரூமுக்குள்ளிருந்து சந்துருவின் குரலும் சேர்ந்து கொண்டது.

"லைட்டைப் போடுறா..."

"லைட் எரியவில்லைடா..."  ஸ்விட்சைத் தட்டிய பாலு அலறினான்.

"ச்சீ... கத்தாதே.. கரண்ட் இல்லை அஞ்சு நிமிஷமா... நாம மணிக்கணக்கா இதுல உட்கார்ந்திருந்ததுல இதைக் கவனிக்கல"
மணியைப் பார்த்தால் சுத்தமாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது தெரிந்தது.

"இன்னும் பத்து நிமிஷத்துக்கு அவனால் உள்ளே வர முடியாது.  அதுதான் நீங்கள் கேட்ட நிரூபணம்!"  சிவநேசன் கையை விட்டு காயின் தெறித்து விழுந்தது.

"அய்யய்யோ... நாம விடை கொடுக்காமலே ஆவி போய்விட்டது.  சொல்லிக்காமலேயே போய்விட்டது"  அலறினான் சிவநேசன்.


"போகட்டும். நல்லதாப் போச்சு"

"அப்படிப் போகக் கூடாதுடா...  அப்புறம் அது இங்க அடிக்கடி வர ஆரம்பிச்சுடும்.  அதைக் கோவப்படுத்திட்டீங்க" என்றான் நாகா.
"போடா... சந்துருவை இப்போ வெளியே வரவைக்கிறேன் பார்க்கறியா?"

கேட்டதோடு இல்லாமல் கதவைத் திறக்கவும் செய்தனர்.  கதவை உள்பக்கமாகத் தள்ளினர். உள்ளேயிருந்த சந்துருவும் கதவை இழுக்க, வகாப் கதவைத் தள்ளினான்.  முடியவில்லை.  ஜான்சனும் சேர்ந்து தள்ளினான்.  ஊ...ஹூம்!  மற்றவர்களும் இப்போது சேர்ந்து தள்ளினர். 

திறக்கவே இல்லை.  

நிமிடங்கள் கரைய கொஞ்சம் கொஞ்சமாக பீதி ஏறியது அவர்கள் முகத்தில்.

"சந்துரு... சந்துரு..." திடீர் சந்தேகம் ப்ளஸ் பயத்துடன் ஒருவன் குரல் கொடுத்தான்.

"ச்சே... இங்கதாண்டா இருக்கேன்.  கதவத் திறங்கடா.. தாழ்ப்பாளை எடுத்துட்டுத் திறங்கடா!" சந்துரு கூவினான்.

தாழ்ப்பாள் போடவே இல்லையே.. எங்கே திறக்க?

பத்து நிமிடம் கழிந்ததும் கதவு சட்டென விடுபட்டுத் திறந்தது.

"என்னடா இது?  எப்படிடா?"

"சில விஷயங்களை நம்பணும்.  சரி விடு.. இதுக்கு மேல இது பற்றியெல்லாம் பேச வேண்டாம்.. படுத்துக்கலாம்" என்றபடி போர்டை எடுத்துக் கொண்டு நாகா சிவநேசனுடன் வெளியேறினான்.


எல்லோரும் படுக்கச் சென்றனர், இந்தக் கதை இங்கு முடியவில்லை என்பதை அறியாமல்!





                                                                                                                                           ( தொடரும் )





படங்கள் : இணையம்.