அமானுஷ்ய அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமானுஷ்ய அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.1.11

விடியும் வரை காத்திரு




மரிஷ்காவின் பூதங்கள் படித்து விட்டு தூங்கப் போனேன். அப்போதே மணி பதினொன்றரை இருக்கும். காலை முதல் எங்கெங்கோ சுற்றி விட்டு வந்த களைப்பு ஒரு பக்கம் மரிஷ்கா மகன் கவலை ஒரு பக்கம் என்று எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

திடீரென கேட்ட சத்தத்தில் விழித்துக் கொண்டேன். நாராசமாய் இருந்தது சத்தம். 'சட்'டென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதால் அது என்ன சத்தம் என்று கண்டு பிடிக்க சில வினாடிகள் பிடித்தன.

காலிங் பெல் சத்தம். இடை விடாமல் தொடர்ந்து...வெறுப்பேற்றும் வண்ணம் வீறிட்டபடி இருந்தது.

நான் எழுவதற்குள் வீடே எழுந்து விட்டது.

மனைவி ஒரு புறம் எழுந்து அலங்க மலங்க விழிக்க, மகன்கள் வாரிச் சுருட்டி எழுந்தார்கள்... அடுத்த அறையில் படுத்திருந்த அப்பாவும் எழுந்து வந்து விட்டார்.

"என்னடா அது...யாரது"

மணியைப் பார்த்தேன். இரவு ஒரு மணி.

இந்த நேரத்தில் யார்...? கதவைத் திறக்கச் சென்றேன்.

"நில்..! அவசரப் பட்டு கதவைத் திறக்காதே..." அப்பா அலறினார்.

"ஏன்? என்ன ஆயிடும்?" பெரியவன் கேள்வி கேட்டபடி கதவைத் திறக்க விரைந்தான். காரணம் சத்தம் சகிக்க முடியாதபடி இருந்தது.

"வேணாண்டா...நில்லு...மணியைப் பாரு..இது ஒருவகை டெக்னிக்...அவசரப் பட்டு திறந்து மாட்டிக்காதே..." என்ற அப்பா,

"ஏய்...யாரது..." என்று இரைந்தார். "யாராய் இருந்தாலும் கதவைத் திறக்க மாட்டோம்...யாருன்னு மரியாதையா குரல் கொடுங்க..."


பதில் இல்லை. சத்தம் கர்ண கடூரமாய் இருந்ததால் எல்லோருமே காதைப் பொத்திக் கொண்டோம்.

பெரியவன் செல்லை எடுத்து எதிர் வீட்டு நம்பருக்கு ஃபோனைப் போட்டான்.

"அங்கிள்...தூங்ககறப்போ எழுப்பிட்டேனா... ஸாரி அங்கிள்...எங்க வீட்டு காலிங் பெல்லை யாரோ விடாம அடிக்கிறாங்க...யாருன்னு பாருங்க அங்கிள்...பயமா இருக்கு"

"................."

"என்னடா என்ன சொல்றார்.." என்றேன், பையனின் சமயோசிதத்தை மனதுள் மெச்சியபடி...

"ஆண்ட்டி அங்கிளை கதவைத் திறக்காதங்கராங்கப்பா... பயப்படறாங்க..."

"எதிர் வீடுதானே..என்ன பயமாம்..பார்த்தால் என்னவாம்.." என்றாள் மனைவி!

காலிங் பெல் சத்தம் 'சட்'டென நின்றது.

மயான அமைதி.

"யாரு"

"ஏங்க... யாருங்க வெளில...பதில் கொடுங்க..."

"போலீசைக் கூப்பிட்டிருக்கோம். பதில் சொல்லிடுங்க.." இது சின்னவன். எல்லோரும் அவன்மேல் பாய்ந்து அவன் வாயை மூடினோம்.

செல் அடித்தது. பயத்துடன் எடுத்தால், எதிர் வீட்டுக்காரர்.

"யாருமே இல்லையே சார்! யாரையும் காணோமே..பெல் சத்தம் நின்னுடுச்சி போலேருக்கே.."

"அப்படியே வெளில பாருங்க.." என்றேன்.

"ஐ...நானே கொஞ்சமா கதவைத் திறந்து 'க்ரில்'லைத் திறக்காம பார்த்தேன்...எனக்கு மட்டும் ஜாக்கிரதை இருக்காதா சார்..?"

ஜாக்கிரதையா...பயமா...

செல்லை வைத்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன்.

"ஐயோ...இது நிச்சயம் ஆவியோட வேலையாதான் இருக்கும்...நான் டீவில பார்த்துருக்கேன்...ராத்திரில போடுவான்.... 'நம்பினால் நம்புங்கள்'னு போடுவான் பார்த்துருக்கேன்..." என்றான் சின்னவன்.


"அட இவன் ஒருத்தன்...ஏதாவது சொல்லி குழப்பிகிட்டு...ஏண்டா நீ வேற...!" என்று சொன்னாலும் எல்லோருக்கும் சற்று உதைப்பாகவே இருந்தது.

இப்போது மின்சாரம் வேறு 'சட்'டென நின்று போனது. இருளும் அமைதியும் ஒரு சேர தாக்கியது.

"நம்ம வீட்டுல மட்டும்தான்பா கரண்ட் போய் இருக்கு...ஜன்னல் வழியாப் பாரு..எதிர் வீட்டுல எல்லாம் இருக்கு.."

ஆமாம். ஏதோ நடக்கிறது. யாரோ ஏதோ திட்டம் போட்டு ஏதோ செய்கிறார்கள்.

"போலிசுக்கு ஃபோன் செஞ்சுடலாமா..."

"லோகல் ஸ்டேஷன் நம்பர் என்ன.."

"தெரியாதே..."

"அட..இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க வேணாமா... நூறுக்கு போடலாமா..?"

"என்னன்னு சொல்லுவே...பேய் பெல் அடிச்சுதுன்னா..?"

"பேய்னு எப்படிச் சொல்ல முடியும்? எவனாவது அடிச்சிட்டு ஒளிஞ்சு நிப்பான்...கதவைத் திறந்த உடனே ஒரே போடு..." பெரியவன்.

செய்வதறியாமல் எல்லோரும் கூடி நின்றோம். பயமாகவும், அந்த அமைதியில் அமானுஷ்யமாகவும் உணர்ந்தோம்.

உறவினர் யாருக்காவது தொலை பேசி சொல்லலாமா என்றால் யாரையும் எழுப்ப பாவமாக இருந்தது.

தூக்கமும் வரவில்லை. எதிர் வீட்டுக் காரரை மறுபடி எழுப்ப தயக்கமாக இருந்தது. மறுபடி பெரியவன் ஒரு காரியம் செய்தான். இந்த முறை மேல் வீட்டுக் காரருக்கு செல்லில் தொடர்பு கொண்டான். ஏதோ கேட்டு விட்டு வைத்து விட்டான்.

"என்னடா.."

"எதிர் வீட்டு அங்கிள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விஷயம் சொல்லிட்டாராம். எல்லாரையும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு உள்ளே பத்திரமா இருக்கச் சொன்னாராம்.."

மறுபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று கவனமாக பார்த்துக் கொண்டிருந்தோம். கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தாலும் சிறு சலனங்களுக்கு நிறுத்தி கவனமாக ஆராய்ந்தோம்.

"என்னமோ வாடைப்பா..." சின்னவன்.

எனக்கும் முன்னாலேயே தெரிந்திருந்தது. பயமுறுத்த வேணாம்னு சொல்லாமலிருந்தேன்.

"ஏதோ பொசுங்கற வாடை.." பெரியவன்.

"கொள்ளிவாய்ப் பேயா இருக்குமோ.." அப்பா நேரம் காலம் தெரியாமல் கேட்டார். நகைச் சுவையாம்.

காலை வரை விழித்திருந்தோம். ஒரே இடத்தில் இருந்தோம்.

விடிந்து வெளிச்சம் வந்தது. எதிர் வீட்டுக் காரர் செல்லில் பேசினார்.

"சார்! யாரும் இல்லை..தைரியமா வெளில வாங்க..."

வெட்கத்துடன் வெளியில் வந்தோம்.

வெளியே...

காலிங் பெல் ஷார்ட் ஆகி புகைந்திருந்தது.

படங்கள் : நன்றி கூகிள்.