சோழர் கோயில்கள் தொகுப்பு – இதுவரை பார்த்தது பகுதி 1
சோழர்கள் சைவ சமயத்தில் ஒழுகியவர்கள். அனேகமாக எல்லா அரசர்களும் வைணவ சமயத்திற்கு எதிர்ப்பாக இல்லாமல், திருமால் கோயில்களுக்கும் திருப்பணி செய்திருந்தாலும், காவிரி நதிப்பாதை முழுவதும் சிவனுக்கான கோயில்கள் கட்டினார்கள்.
அந்த வரிசையில் நான் தாராசுரத்தில் ஆரம்பித்து (அதற்கு முன்னால் வசந்த வல்லபராயர் கோயில், பெங்களூரு. இதுவும் சோழர் காலத்தைய கோயில்தான்) ஜனவரி 2025ல் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 70 வாரங்களுக்கு மேல் ஒரு தொடராக எழுதினேன். இன்னும் எழுதாமல் விட்ட கோயில்கள் அனேகம்.
அவ்வப்போது அவற்றையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இதுவரை, சோழர் காலக் கோயில்களாக நாம் பார்த்தவற்றை படங்களாக இந்த வாரம் கொடுக்கிறேன். இது என்ன என்ன கோயில்களை இதுவரை பார்த்தோம் என்று நினைவுபடுத்திக்கொள்ள உதவும்.
வசந்த வல்லபராயர் கோயில், பெங்களூரில் உள்ளது. இதில் தெரிந்த ஒருவர் தமக்கு 80 வயது நெருங்குவதால் குழுவாக திவ்யப் பிரபந்தம் சேவிக்க நினைத்ததால் நாங்கள் சென்றிருந்த கோயில். மிகப் பழைமையான ஆலயம்.
வசந்த வல்லபராயர் கோயில், பெங்களூர்
ஸ்ரீ வசந்த வல்லபராய ஸ்வாமி மூலவர் (இணையம்) இரு புறமும் பூமி, நீளாதேவித் தாயார்.
பல முறை தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதார தலமான திருமண்டங்குடிக்குச் சென்றிருக்கிறோம். பொதுவாக அங்கு இருக்கும் அர்ச்சகர் ஒருவர் ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டு தல புராணம், சிறப்புகள் என்று சொல்லுவார். ஒவ்வொரு முறை செல்லும்போதும் இதனைச் சொல்லுவார். சட் என்று நகர்ந்துவிட முடியாது. ஆனால் கோயில் பிரசாதம் நன்றாக இருக்கும். ஒரு முறை புள்ளம்பூதம்குடிக்குச் செல்லும்போது வழி மாறி இந்தக் கோயிலுக்கு வந்தோம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதாரஸ்தலம், திருமண்டங்குடி
மூலவர் ரங்கநாதர், நின்ற திருக்கோலம், தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதி.
அதனை
அடுத்து, சோழர்
தலைமுறையில் 18ம் தலைமுறையான
இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலின் சிற்பங்களைத்
தொடர்ந்து பல வாரங்கள் பார்த்தோம். அத்துடன் சோழர் வரலாற்றையும் எழுத ஆரம்பித்தேன்.
அத்துடன் அருகில் இருந்த தெய்வநாயகி அம்மன் கோயிலையும் பார்த்தோம்.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் நுழைவாயில் எதிரே உள்ள நந்தி. இங்குள்ள படிகள் தட்டினால் ஒவ்வொரு ஸ்வரம் எழுப்பும். அதனைப் பார்வையாளர்கள் உடைத்துவிடக்கூடாது என்பதற்காக இப்போது தடுப்பு போட்டு-வைத்திருக்கிறார்கள்.
ஐராவதீஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக உள்ள துவாரபாலகர்கள்.
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், நிலவு உலாவும்
நீள்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர்ச் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், அபிராமி அன்னையின் அருள் பெறுவோம்.
தாராசுரம் தெய்வநாயகி அம்மன் கோயில். என்னைச் சரணடை…. என் அருள் உனக்கு உண்டு. ஆமாம்.. இந்த முத்திரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒருவன் சரணடைகிறான் என்றாலே, தாள் பணிகிறான் என்றே அர்த்தம், அதாவது காலில் விழுதல். அதனால்தான் என்னைச் சரணடை என்ற முத்திரை, திருப்பாதங்களைக் காட்டியவாறே இருக்கும்.
தாராசுரம் கோயில்களைப் பார்த்த பிறகு அடுத்து பழையாறை வட தளி சோமநாதஸ்வாமி திருக்கோயிலைப் பார்த்தோம். கோயிலுடன் திருநாவுக்கரசர் வரலாற்றையும் பார்த்தோம். அந்த ஊரில் பிறந்த மங்கையர்கரசி அவர்களின் சிலையையும் அந்தக் கோவிலில் கண்டோம். மகேந்திர பல்லவனின் வரலாறும் திருநாவுக்கரசருடன் சேர்ந்தது என்பதால், பல்லவர் கட்டிய குடவரைக் கோயில் உள்ள திருவெள்ளறையைச் சுருக்கமாகப் பார்த்தோம். பழையாறை வடதளி கோயிலில் உள்ள சோழ கமலாம்பிகை அம்மன் கோயிலையும் தரிசனம் செய்த பிறகு, நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்படுகிற நாதன் கோயில் வைணவ திவ்யதேசத்தைத் தரிசனம் செய்தோம்.
சோமநாதஸ்வாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் (பழையாறை வட தளி)
பழையாறை வட தளி சோமநாதஸ்வாமி தரிசனம். மங்கையர்கரசியின் பிறந்த ஊர்.
பழையாறை வடதளி சோம கமலாம்பிகை அம்மன்.
நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில் (பழையாறை)
நந்திபுர விண்ணகரப் பெருமான் மூலவர் வீற்றிருந்த கோலத்தில் ஜெகன்னாதப் பெருமாள் உபய நாச்சியார்களுடன். மூலவர் படத்தை மிக அழகாக எடுத்திருக்கிறார்கள்.
நந்திபுர
விண்ணகரம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில். இந்தக் கோயிலுக்கு
சுந்தரச் சோழரும் (8ம் நூற்றாண்டு) நிவந்தங்கள் விட்டிருக்கிறார். அந்தக் கோயிலைத்
தொடர்ந்து நாம் பார்த்த து, கொஞ்சம் தூரத்தில்
இருந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை. இதனை இப்போது இராமனாதன் கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்
(ஏன் என்று புரியவில்லை).
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை (இராமநாதன் கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்) கோயில் முகப்பிலேயே பெரிய அளவில் துவாரபாலகர்கள். இது பொதுவாக சோழர்களின் கோயில் அமைப்பு.
துவாரபாலகர்கள் மிக அழகாக இருக்கின்றன. இது பழுவேட்டரையர்களின் கலைப்படைப்பாக இருக்கலாம்.
பிற்பாடு, தென் தமிழகக் கோயிலுக்காக சோழர் வரலாறு பற்றி பிறர் எழுதியிருந்த ஒரு பழைய வரலாற்று நூலைப் படித்தபோது, பஞ்சவன் மாதேவிக்கு ஒரு புதல்வன் இருந்தான் என்றும் ஆட்சிப் போட்டிக்கு வரவே இல்லை என்றும் படித்தேன். அவனது மகனும் பொறுப்பில் இருந்திருக்கிறான்.
அதனைத்
தொடர்ந்து நாம் பார்த்த கோயில் தஞ்சை பெருவுடையார் கோயில்.
தஞ்சை பெருவுடையார் கோயில். இராஜராஜேச்வரம் கோயிலின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறதா? இதில் முன் மண்டபத்தின் மேல் இருக்கும் பகுதியில் இரண்டாவது தளம் அமைந்திருந்தது. அது பழுதுபட்டு இடிந்துவிட்டது. தற்போது முதல் தளம் மாத்திரமே இருக்கிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
கருவூர்த்தேவர் சன்னிதி.
தஞ்சை
பெருவுடையார் கோயில் துவாரபாலகர். தென் தமிழகத்தில்தான் பெரிய சிற்பங்கள் இருக்கிறது
போலிருக்கிறதே என்று பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் ஒரு முறை எழுதியிருந்தார். அவர்
தஞ்சையை விதிவிலக்காக எண்ணினாரா என்று தெரியவில்லை.
ராஜராஜன் திருவாயில், தஞ்சை பெருவுடையார் கோயில். மன்னன் இராஜராஜன் வருவான் என்று காத்திருக்கவில்லை.
தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றி பல வாரங்கள் பார்த்தோம். இடையில் போரடிக்க க் கூடாதே என்று என்னுடைய மெக்சிகோ பயணத் தொடரை 14 வாரங்கள் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்த தஞ்சை பெருவுடையார் கோயில் படங்கள், கடைசியில் இராஜராஜ சோழனின் பள்ளிப்படையுடன் முடிவடைந்தது.
இராஜராஜன் பள்ளிப்படை
இதைச் சாக்கிட்டு சோழர்களின் வரலாற்றை விரிவாகப் பார்த்தோம். தொடர்ந்து வரலாறு மற்றும் கோயில் சிற்பங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது அயர்ச்சியாக இருக்குமோ என்று எண்ணி, ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் காட்சி சாலையில் இருந்தவைகளை மூன்று வாரத் தொடராகப் பகிர்ந்துகொண்டேன்.
பிறகு
கோயில் தரிசனம் தொடரில் மற்ற கோயில்களைப் பார்க ஆரம்பித்தோம். அதுபற்றி அடுத்த வாரம்
பார்க்கலாம்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!