இன்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.10.11

தீபாவளி பழசும், புதுசும் !

                          
புதுத் துணி எடுத்துத் தைக்கக் கொடுத்து, தையற்காரர் தைத்து விட்டாரா இல்லையா எனும் கவுன்ட் டவுனில் தீபாவளி பரபரப்புத் தொடங்க, எத்தனை ரூபாய்க்கு பட்டாசு வகைகள் வாங்க அனுமதி கிடைக்கும் என்று கணக்குப் போடும் மனம். 
         
முதல் நாள் இரவு முதல் அம்மா & பாட்டி செய்யும் பட்சணங்களை திருட்டுத் தனமாய் எடுத்து ஓடும் சுவாரஸ்யமும் தன பங்கு வெடி மத்தாப்பூக்களை பத்திரப் படுத்தி ஒளித்து வைத்து இரவு சீக்கிரம் படுத்து எப்போது விடியும் என்று ... 
    
மூன்று மணிக்கு எழுந்து (குளிக்காமல்) முதல் சர வெடி விடும் வழக்கமும், கடைக்குட்டியிலிருந்து தொடங்கி ஒவ்வொருவராக மனைப் பலகையில் அமர்ந்து பாட்டி கையால் தலையில் "கொஞ்சமா பாட்டி... கொஞ்சமா... நிறைய வைக்காதீங்க" என்று கெஞ்சலுடன் எண்ணெய் தேய்த்துக் கொண்டு... 
   
விறகு அடுப்பில் தவலையில் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் ஒரு வாளி எடுத்து குளிக்கப் போய், நாலடி பாத்ரூமில் கங்கா ஸ்நானம் செய்து கண்ணில் சீயக்காய்ச் சிவப்புடன் வெளி வந்து, தீபாவளி மருந்து வாங்கி, பாட்டி கையால் புதுத் துணி கையில் வாங்கி காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளே ஓடி ... 

புத்தாடையுடன் வெளி வந்து, சாமிக்கு, பெரியவங்களுக்கு நமஸ்காரம்  செய்து,  சாஸ்திரத்துக்கு வெடி வெடிக்கத் தொடங்கி நண்பர்களைப் பார்க்கக் கிளம்பி, அவர்கள் புத்தாடையைச் சிலாகித்து, நம் உடையைக் காட்டி,

   
தெருத் தெருவாக அலைந்து வெடித்து, பேசி, சிரித்து, முறைத்து, சண்டையிட்டு, கூடி மகிழ்ந்து இட்லி, பஜ்ஜி சாம்பார் என்று சாப்பிட்டு மிஞ்சிய வெடிகளை பத்திரப் படுத்தி, வெடிக்காத வெடிகளை மருந்தை வெளியில் எடுத்து பேப்பரில் கொட்டி கொளுத்தி, கைக்காயம் கால்காயம் பட்டு, பெற்றவர்களை டென்ஷன் ஏற்றி ... 
   
கனமான தீபாவளி மலர் புத்தகத்தை இரு கைகளால் தூக்கி, குமுதம் தீபாவளி மலராக இருந்தால் குனேகா மணத்தை கண்களை மூடி அனுபவித்து, கல்கி / ஆனந்தவிகடன் மலர்களில் இருக்கும் தெய்வப் படங்களை பரவசத்துடன் பார்த்து, தீபாவளி மலரின் ஒவ்வொரு பக்கத்திலும் (விளம்பரங்கள் உள்பட) இருந்த தீபாவளியை அனுபவித்து ....

முடிந்தால் அன்று வெளியாகி இருக்கும் புதுப் படத்துக்குப் போய் அல்லது இரண்டொரு நாள் கழித்து, பள்ளி செல்லும்போது புத்தாடை அணிந்து, பார்த்த அல்லது பார்க்கப் பட்ட புதுப் படங்களை அலசி..

ம் ... ஹூம்...

இப்போதெல்லாம் தீபாவளிச் சத்தம் ஆறு மணிக்கு மேல்தான் கேட்கத் தொடங்குகிறது. யாரும் அதிகாலையில் எழுவதில்லை. பட்சணங்கள் வீட்டில் செய்வதை விட கடையில் வாங்குவது எளிதாக இருக்கிறது. சுவாரஸ்யம்தான் மிஸ்ஸிங். 
              
ஆண்களுக்கு எப்போதும் உடை வகைகளிலும், நிற வாய்ப்புகளிலும் சாய்ஸ் கம்மி... ரொம்பக் கம்மி. பெண் குழந்தைகளுக்கு விதம் விதமாக வண்ண வண்ண உடைகள் எப்போதும் கிடைக்கும்.  ஆனால் இன்று தீபாவளிக்கு எந்த 'வயசுப் பெண்'ணாவது எடுக்கும் இரண்டு மூன்று உடைகளில் ஒரு உடையாகவாவது பாவாடைத் தாவணி எடுக்கிறார்களோ... நகரில் இந்த உடை அணிந்த பெண்களைப் பார்ப்பதே அரிய காட்சியாகி விட்டது.   
                   
வெடி வெடிப்பதை ஒத்திப் போட்டு பட்டி மன்றங்களும் இந்திய / உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாகத் திரைப் படங்களையும் பார்த்து,    
    
வெடிப்பதற்கு இடமின்றி, பக்கத்து வீடுகளின் முறைப்புக்கிடையில் சிக்கனமாகச் சத்தப் படுத்தி, நண்பர்களின்றி, கணினியும் தொலைக் காட்சியுமாக முடங்கி ... 
             
பழைய தீபாவளி மலரின் கனத்தையும், பழைய எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்திருந்த நாட்களையும் நினைத்து, அன்று உயிரோடு இருந்தவர்களோடு கொண்டாடிய தீபாவளிகளை வலியோடு நினைத்துப் பார்த்து .... 
                     
அவரவர்களுக்குப் பிடித்ததைச் செய்வதுதான் சந்தோஷம் என்றால் இப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் மக்கள்! நாம் விரும்பியதையே இப்போதும் செய்ய வேண்டும் நாம் ரசித்ததையே இப்போதும் ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன...
                      
இந்த வருடமும் தீபாவளி வந்து விட்டது. இதுவும் கடந்து போகும்!