
உங்களுடன்/உங்களுக்குச் சில வார்த்தைகள்...
உங்களைப் போன்ற சக மாணவர்களை எதிரிகளாக பார்க்காதீர்கள்.
நீங்கள் லீடராய் இருக்கலாம்.உங்களிடம் தோற்றுப் போனவர் உங்கள் எதிரியல்ல சக மாணவர் என்பதை மனதார உணருங்கள்.
அவர்களிடம் நல்லது இருந்தால் பாராட்டுங்கள். நல்லது சொன்னால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது சொன்னால் எடுத்துச் சொல்லிக் கலந்துரையாடிப் புரிய வையுங்கள்.
இணைந்து பணியாற்றுங்கள். நாளை அவர்களும் லீடராகலாம், ஆகவேண்டும், மாற்றம் அவசியம் என்பதற்கு உடன்படுங்கள். கவிழ்த்தல் வேலைகளும், கலைக்கும் வேலைகளும் சென்ற தலைமுறையோடு செல்லட்டும்.
அதிகமாய் ஆசைப் படாமல் உங்களுக்கு தேவையானதை/தகுதியானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிவோ, பொருளோ உங்களுக்குக் கிடைப்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அழிவுக்கு ஆசைப் படாமல் அறிவுக்கு ஆசைப் படுங்கள்.
உங்களுக்கு சாதகமானவற்றுக்கு தப்பாயிருந்தாலும் ஆதரிப்பதையும், பொய் சொல்வதையும் செய்யாதீர்கள்.
உங்களுக்கு எதிரிகள் என்றில்லாமல், எதிர் முகாமில் இருப்பவர்களைப் பற்றி உங்களிடம் சொல்லி ஆதாயம் தேடுவோரை ஊக்குவிக்காதீர்கள். அது உங்களுக்கு நல்லது போலத் தோன்றினாலும் பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணருங்கள். இந்த மாதிரி நபர்கள் உங்களைப் பற்றியும் நாளை இதே போல் எங்காவது சொல்லக் கூடும் என்றும் உணருங்கள்.
எத்தகையப் பொருளுக்கு ஆசைப் பட்டும், எந்த மிரட்டலுக்கு அஞ்சியும் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய எந்தச் செயலிலும் எப்போதும் ஈடுபடாதீர்கள்.
கெடுதல் செய்வதையும், கேடு விளைவிப்போரை ஊக்குவிப்பதும் ராஜதந்திரம், சாணக்கியம் என்று நம்பி ஏமாறாதீர்கள். என் ஊர், என் நாடு என்பதைத் தாண்டி உலகமே நமது என்று எண்ணுங்கள்.
ஆளும் தகுதியும் அளக்கும் தகுதியும் அறிவால் வரட்டும், பொருள் இல்லாததை விட அருள் இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை என்பதை உணருங்கள்.

கற்கும் கல்வி மதிப்பெண் பெற மட்டுமல்லாது, மனதில் தங்கி நாளைய இந்தியாவை, உலகை ஆளட்டும்.
அடுத்தவர் அழிவில் அல்ல, வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. சேர்ந்து வளர்வோம். சேர்ந்து வாழ்வோம்.
வாழ்க வையகம்!


