சென்னை டு மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை டு மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.1.14

மதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம்

                     



பயணத்தை உத்தேசித்து முன்னதாகவே செய்து வைத்திருந்த ரயில் ரிசர்வேஷனை எதிர்பாராத காரணத்தால் கேன்சல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமாகி, மறுபடியும் வாய்ப்பு உருவாகி பயணம் செய்ய வேண்டிய நிலையில் கிடைத்த பஸ்ஸைப் பிடித்து வெளியூர்ப் பயணம்! அப்படியும் ரயில்வே ரிசர்வேஷனைக் கேன்சல் செய்யாமல் ரயிலில் வந்த மாமாவுக்கு முன்னதாகவே வீடு சென்று விட்டேன்! [திரும்பும்போதும் அஃதே போல!  9.15க்கு ரயிலில் ஏறிய அவருக்கும் முன்னாலேயே 11.30க்கு பஸ் ஏறிய நான் சென்னையில் வீடு வந்து விட்டேன்!]


சீக்கிரமாகவே கிளம்பி கோயம்பேடு வரை செல்லாமல் ஆசர்கானாவில் பஸ் பிடிக்க நின்றபோது அங்கு நின்றிருந்த டிக்கெட் செக்கர்கள் 'பெருங்களத்தூர் சென்று விடுவது உசிதம்' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

வந்த பஸ்களை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது தாடி மீசை குங்குமப்பொட்டுச் செக்கர் பின்னால் ஒரு பாட்டியைக் காட்டி 'அவர்களும் மதுரை பஸ்ஸுக்குத்தான் காத்திருக்கிறார்கள்' என்றார்.
ஒரு பாட்டி இரண்டு பைகளுடன் அமர்ந்திருந்தார்!

அவ்வப்போது ஸ்லோ செய்து நின்ற பஸ்ஸை ஓடிச் சென்று அருகில் பார்த்தால் "சேலம்' என்றார் ஒருவர். 'திருச்சி" என்றார் அடுத்தவர். மறுநாள் மதுரையில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் திருச்சி பஸ்ஸில் ஏறி விடலாமா என்று நினைத்துக் கொண்டே பின்வாங்கி வந்துவிட்டேன்.
     
அடுத்து வந்த பஸ் 'மதுரை' என்ற போர்டைப் பார்த்ததும் அருகில் சென்றேன்..."மதுரை...?"  

"ஏறுங்க.." 
   

மிகச் சீக்கிரம் பஸ் கிடைத்து விட்ட சந்தோஷம் ஒருபக்கம். (இரவு எட்டரை மணி. காலை 4 முதல் 5 மணிக்குள் மாட்டுத்தாவணி சென்று விடலாமே) ஐந்தாம் நம்பர் சீட் கிடைத்த சந்தோஷம் மறுபக்கம்! அதுவும் ஜன்னலோர சீட்.! 

            
இரண்டுமே பிரச்னையானது என்று பின்னர் தெரிய வந்தது.
            
ஒவ்வொரு பிரச்னையாக வருகிறேன். 
    
முதலில் ஐந்தாம் நம்பர் சீட்டின் பிரச்னை!
         
ஒற்றையாக அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதில் உள்ள பிரச்னை, பின்னர் ஏறப்போகும் ஏதோ ஒரு ஜோடி "தனியாகத்தானே இருக்கிறீர்கள்... கொஞ்சம் மாறி உட்காருகிறீர்களா?" என்று நம்மைக் கிளப்பிவிடும் ஆபத்து முதல் பிரச்னை.
       
'சரி, ஏறுபவர்களில் நம் இனம் ஒன்று அருகில் உட்கார்ந்து விட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்' என்று பார்த்தால் எல்லோரும் இரண்டாவது வரிசையில் காலி இருக்கையை நம்பாமல் (ரிசர்வ்ட் ஆக இருக்கும் என்ற சந்தேகம்) பின்னால் விரைந்து கொண்டிருந்தார்கள்.
         
நாமாக யாரையாவது இழுத்து விடலாம் என்று பார்த்தால் அப்படி நான் முடிவு செய்தபொழுதில் தாண்டிச் சென்றவர்கள் என் அருகில் அமர்ந்தால் எனக்கு அரை இருக்கையே கிடைக்கும் சாத்தியக் கூறு இருந்த காரணத்தால் 'அடுத்தவர், அடுத்தவர்' என்று பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
     
அந்தக் குங்குமப் பொட்டுச்செக்கர் சொன்ன பாட்டி முதலிலேயே ஆசார்கானாவில் ஏறும்போதே என் பக்கத்து இருக்கையைக் காதலுடன் பார்த்தபோது 'பின்னால போங்க' என்று நானே தள்ளிவிட்டது தப்போ...  ஏதோ ஒரு ஜோடி வந்து நடத்துனர் துணையுடன் நம்மைப் பின்னால் விரட்டப் போகிறார்கள் என்ற சம்சயம் இருந்துகொண்டே இருந்தது. என் ராசி அப்படி!   
     

அலைபேசியில் என் சகதர்மிணியிடம் இந்தப் பிரச்னையை ஒலிபரப்பிக்கொண்டே இருந்தேன். 'நீயும் வந்திருக்கலாம்' 

            
இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது என் இருக்கை அருகே இன்னொரு வயதான மாது நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை சத்தியமாக நான் கவனிக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். நல்லவேளை நடத்துனர் அவரை பின் இருக்கை ஒன்றுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
              
அப்புறம் கடைசியாக அந்த டென்ஷன் பெருங்களத்தூரில் தீர்ந்தது. குண்டாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் (ஹிஹிஹி என்னை மாதிரியே..) ஒருவர் வந்து அருகில் அமரவும் பின்னால் போக வேண்டிய அவசியம் இல்லை என்ற நிம்மதியும், 'ஒற்றை இருக்கை' சுதந்திரம் பறிபோய் விட்டதே என்ற சோகமும் ஒருசேரத் தாக்கியது.

இப்போது பஸ்ஸில் உடன் பயனிப்பவர்களைச் சுற்றிப் பார்த்தேன்.

      
பஸ்ஸில் எல்லோரும் பனிக்காலம், குளிர்காலம் என்று மண்டையின் பின்பக்கமாய் இருகாதுகளையும் மூடும் பத்து ரூபாய் வஸ்துவை மாட்டிக் கொண்டிருந்தார்கள்.  
      
நான் என் ஜன்னலை திறந்துதான் வைத்திருந்தேன். மற்றவர்களின் இருந்தக் கோலங்களைப் பார்த்தபோது ஜன்னல் திறந்திருப்பதற்கு பின்னர் எதிர்ப்பு வரும் என்று தோன்றியது. என் பக்கத்து இருக்கையாளரைப் பார்த்தேன். அலைபேசிக் கொண்டிருந்தார். 'ரிப்போர்ட்டிங்'கிலிருந்து மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று யூகித்தேன். பாம்பறியும் பாம்பின் கால்!  
       
அலைபேசியை வைத்தவர் ஒரு போர்வையை எடுத்து சுற்றிக் கொண்டார். அவர் காதிலும் அந்தப் பத்து ரூபாய் வஸ்து இருந்தது கவலையை ஏற்படுத்தியது. என் ஜன்னல் திறந்து வைத்திருக்கும் ஆசைக்கு,  அருகிலேயே ஒரு எதிரி.  
      

கொஞ்ச நேரம் கழித்து போர்வையை ஓரமாக வைத்தவர்,  ஒரு ஸ்வெட்டரை எடுத்து தலைவழியாக மாட்டிக் கொண்டார். அப்புறம் கூடவே போர்வையும். என் கவலை அதிகரித்தது. எந்நேரமும் 'ஜன்னலை மூடு' கோரிக்கை வரலாம்!    
      
இன்னும் சற்று நேரம் கழித்து மறுபடி போர்வையைத் துறந்தவர் ஒரு 'மங்க்கி'க் குல்லாய் எடுத்து போட்டுக்கொண்டவர், பத்து ரூபாய் வஸ்துவையும் காதில் மாட்டி போர்வையை மறுபடி அணிந்தார்.  'ஜுரமோ... அப்படியும் தெரியவில்லையே...'   
       
கொஞ்சம் தயக்கத்துடன் நானே ஜன்னலைப் பாதி மூடினேன். திரும்பிப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் மறுபடியும் போர்வையைத் துறந்தவர், பையிலிருந்து ஒரு கம்பளியை எடுத்துத் தோளில் சுற்றிக் கொண்டார். போர்வையை தொடைகளில் சுற்றிக் கொண்டார்! என்னைத் திரும்பிப் பார்த்தார். ஜன்னலை ஒரு பார்வை பார்த்தார். கண்ணாடியைத் தள்ளி இன்னும் கொஞ்சம் மூடினேன்.
        
இது இருக்கையால் வந்த பிரச்னை. இரவு 1 மணிக்குமேல் ஜன்னல் மூடியிருந்தது பாதிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்!
   
பஸ் சீக்கிரம் வந்த பிரச்னைக்கு வருகிறேன். என் கணக்குக்கு பஸ் மதுரைக்கு அதிகாலை நான்கு மணிக்கு மேல் நான்கே முக்காலுக்குள் சென்று விடவேண்டும்.
     

கிளம்பும்போது எல்லாம் நல்லபடிதான் சென்றது.  போகப்போகத்தான் தெரிந்தது பிரச்னை! திடீர் திடீரென மெயின் ரோடை விட்டு இடதுபுறம் திரும்பி, மஞ்சள் போர்ட் பார்த்த ஊருக்குள் எல்லாம் சென்று சென்று திரும்பிக் கொண்டிருந்தது பேருந்து! 
           

எரிச்சலாக இருந்தது. 
     
ஒரு நல்ல விஷயம் பஸ்ஸில் வீடியோ இல்லை. ஆசீர்வதிக்கப் பட்டிருந்தேன். ஆனால் இடைவிடாத பாடல்கள் இருந்தன. டிரைவர் தூங்காமலிருக்க வேண்டுமே... அத்தனையும் 70, 80களின் மெலடிகளாக இருந்ததால் அவற்றையும் ரசிக்க முடிந்தது. சாதாரணமாகவே சின்னதாகத்தான் கேட்டது. அதுவும் டிரைவர் கேபின் கதவு மூடியதும் இன்னும் மெலிதாகக் கேட்டதில் சுகமான பயணம்.

         

இருந்த இருமலில் தூக்கமும் வரவில்லை. நல்லவேளை, விழுப்புரம் தாண்டிய பிறகு பேருந்து அப்புறம் எந்த ஊருக்குள்ளும் செல்லவில்லை. அதிகாலை 5.10க்கு மாட்டுத் தாவணியில் இறங்கி விட்டேன்! காத்திருந்த 'ஆஸ்தான ஆட்டோ'வில் ஏறி வீட்டை அடைந்தேன்!