புன்னகை மன்னன் விஷால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புன்னகை மன்னன் விஷால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.4.14

சினிமாவில் முத்தக் காட்சி




சமீபத்தில் வெளியாகியுள்ள விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் இதழோடு இதழ் பதித்து ஒரு முத்தக்காட்சி இடம் பெறுகிறதாம். முகநூலில் மற்றும் விமர்சனங்களில் பார்த்தேன்.
 


இது ஒன்றும் புதிதல்ல. புன்னகை மன்னன் முத்தக் காட்சியும், இன்னும் சில ஹிந்திப் பட முத்தக் காட்சிகளும் ரசிகர்கள் நினைவுக்கு வரலாம். புன்னகை மன்னன் பட முத்தக் காட்சிக்குப் பிறகு கமல் படங்களில் கொஞ்ச காலம் முத்தக் காட்சி கட்டாயக் காட்சியாக இருந்தது! அவருடன் நடித்த கதாநாயகிகள் எல்லாம் இதற்காக பயந்த காலம் இருந்தது! அல்லது பயந்தது போல பேட்டி கொடுத்த காலம் இருந்தது!

   

அதிகம் கவனிக்கப் படாத ஒரு முத்தக் காட்சி 'குஷி' படத்தில் கடைசிக் காட்சியில்.  பெரும்பாலும் ரசிகர்கள் எழுந்து போக ஆரம்பிக்கும் நேரம் என்பதால் கவனிக்கப் படவில்லை போலும்! ஜோதிகா விஜய்க்குத் தரும் லிப் டு லிப் கிஸ் அது. 

 

எம் கே டி பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படத்தில் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடலில் ஆடிக் கொண்டே வரும் டி ஆர் ராஜகுமாரி நடுவே ஒரு ஷாட்டில் பாகவதரை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தைப் பறக்க விடுவார். அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட காட்சி அது!
தமிழ் சினிமா வரலாற்றில் அதுவே 'முதல் முத்தப் புரட்சி' என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - இந்தத் தகவல் படிக்கும்வரை! 

 

1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் பேசும் படம் 'மேனகா'. புராணங்களை விட்டு வெளிவந்து தமிழில் எடுக்கப்பட்ட முதல் சமூகப் படமாம் அது. இதே படத்துக்கு இன்னொரு 'முதல்' சிறப்பும் உண்டு. அது கடைசியில்!
நாடகமாக நடிக்கப்பட்டு வந்த கதையை அதே நடிகர்களை வைத்து, அதே வசனங்களுடன் படமாக்கினார் அந்தப் படத்தின் இயக்குனர் ராஜா சாண்டோ.


டி கே சண்முகம், டி கே பகவதி, எம் எஸ் விஜயாள் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில்தான் நாயக, நாயகியர் முதன்முதலில் 'தொட்டு' நடித்தனராம். இந்தப் படத்துக்கு முன்பு வரை எவ்வளவு ஆருயிர்க் காதலர்களாக இருந்தாலும் 'சகியே, பிராண நாதா' என்றெல்லாம் பேசிக் கொண்டு,  போதிய இடைவெளியில் நின்றுதான் நடிப்பார்களாம்.  இந்தப் படத்தில் நாயகியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது, பாலியல் பலாத்காரக் காட்சி எல்லாம் இருந்ததாம். அதனாலேயே பரபரப்பாகப் பேசப்பட்டு வெற்றிகரமாக ஓடியதாம். 
 


இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நாயகன் நாயகியை ஒரு கையால் அணைத்து,  இன்னொரு கையால் அவள் வலது கையைப் பற்றி உள்ளங்கையிலிருந்து தொடங்கி தோள்பட்டை வரை முத்தமிட்டுக் கொண்டே செல்வாராம். 

 

அந்நாளில் இந்தக் காட்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. தீரர் சத்யமூர்த்தி கூட (அவரும் அந்தக் காலத்தில் நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளார்) இது பற்றி பத்திரிகையில் பேட்டி கொடுத்த அவர், 'தவறில்லை, ஆனால் இது மாதிரி முத்தக் காட்சியை ரொம்ப நீட்டக் கூடாது' என்ற வகையில் கருத்துத் தெரிவித்திருந்திக்கிறார்! டி கே சண்முகமும் இந்தக் காட்சியின் ஒத்திகை முதல் ரியல் ஷாட் வரை நடிக்கும்போது வரை ரொம்ப வெட்கப்பட்டதாய் ஒரு பேட்டியில் அப்போது தெரிவித்திருக்கிறார்.

கடைசியில் சொல்கிறேன் என்று சொன்ன இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? 
பின்னாட்களில் ஒவ்வொரு படத்திலும் பாரதியார் பாடல்கள் இடம் பிடித்தன.


ஆனால் மஹாகவி பாரதியார் பாடல் ஒன்று இடம்பெற்ற முதல் திரைப்படம் 'மேனகா'தான்.  அதில்தான் தீரர் சத்யமூர்த்தி நெகிழ்ந்து போனாராம். 

 

'வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய, வாழியவே" என்ற பாரதியாரின் பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றதாம்.

[இந்தப் படத்தின் பாடல்கள் கிடைக்கிறதா என்று யூ டியூப் உட்பட்ட தளங்களில் தேடித் பார்த்தேன். கிடைக்கவில்லை!]