மன்னார்குடியை அடைந்தபோது இரவு மணி 7.30. பயணக்
களைப்பு பாதி. பயணத்தில் சாப்பிடக் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள்
காலாவதியாகுமுன்பு வீண் செய்யாமல் சாப்பிடவேண்டுமே என்ற கவலை பாதி.
சப்பாத்திகளையும், உருளைக்கிழங்கு மசாலாவையும் மீள்சூடு செய்து சாப்பிட்டு முடித்தபோது இரவு மணி எட்டைத் தொட்டிருந்தது.
ராஜகோபால
ஸ்வாமி கோவில் ஒருநடை சென்று வந்து விடலாம் என்று பேசிக் கொண்டிருந்தோமே
தவிர, பேச்சிலேயே நேரம் சென்று விட, போலேரோவில் உட்கார்ந்து பயணம் செய்த
களைப்பில் பாதிபேர் படுத்துவிட, கோவில் செல்வது காலை அதிகாலை என்று
முடிவானது!
இரவு பதினொன்றரை மணிக்குத் தூக்கத்திலிருந்து
எழுப்பபட்டோம். "பெருமாள் வீதி உலா வருகிறார்... கோவிலுக்குத்தான் போகலை..
வந்து பாருங்க"
அங்கு வராததற்கு மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தரிசித்தோம்.
பெருமாள் புன்னகையுடன் பல்லக்கில் கடந்து சென்றார். தெருவெல்லாம் அவரை வரவேற்று புதிய கோலங்கள் தெருவை அடைத்து போடப்பட்டிருந்தன.
மறுநாள் காலை எழுந்து குளித்து கோவில் கிளம்புவதற்குள் ஆனை உம்மாச்சியுடன் ராஜகோபாலன் மறுபடி வீதியுலா வந்து காட்சி தந்தார். கோவில் புறப்பட்டோம்.
செருப்புகள்
வைக்க ஸ்டேன்ட் இல்லையோ என்று எங்களுக்குள் மெல்லிய குரலில் கேட்டுக்
கொண்டே சென்றதற்கு காதில் விழுந்து கோவில் வாசலில் ஓரமாக
உட்கார்ந்திருந்தவர் "தைரியமா அப்படியே போட்டுட்டுப் போங்க... எந்த பயமும்
வேண்டாம் .". என்றார்!
பெரிய கோவில்.
விறுவிறுவென பெருமாள் சன்னதியை அடைந்தோம். உற்சவரை உலா அனுப்பிவிட்டு தாயார்களுடன் ஏகாந்தமாய் இருந்தார்.
யாருமே
இல்லாமல் மிக அருகில் தரிசனம். கை நீட்டினால் நம் கையைப் பற்றி குலுக்கி
விடுவாரோ, அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்வாரோ என்று எண்ணும் அளவு அருகில்.
பட்டாச்சார்யார் சரித்திரம் சொல்லி கற்பூரம் காட்டி, இரண்டு மாலைகளை
பெருமாளின் திருமேனியிலிருந்து உருவி எங்களிடம் தந்து மகிழ வைத்தார்.
(தட்டில் 20 ரூபாய்)
கோவிலை அவசரச் சுற்றுச் சுற்றிக் கிளம்பினோம்!