இந்தப் பிரச்னை பிரபல எழுத்தாளர்களுக்கு இருப்பதில்லை என்று தோன்றும். அவர்கள் அனுப்பினாலே உடனே பிரசுரித்து விடுவார்கள் என்றும் தோன்றும். ஆனால் அந்தக் காலத்தில் அசோகமித்திரன் போன்றோரின் படைப்புகளை புரிந்து கொள்ளாமல் திருப்பிய அனுபவங்கள் உண்டாம்.
தினத்தந்தி, ராணி புத்தகங்கள் முதல் ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு குங்குமம் புத்தகங்கள் என்று படிப்போர் உண்டு. கலைமகள், மஞ்சரி என்று படிப்போர் உண்டு. பத்திரிகை ஆசிரியருக்கு புரிந்து ஏற்றுக் கொண்டால்தான் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப் படும். குங்குமத்தில் ஒரு முறை பாலகுமாரன் - சுப்பிரமணிய ராஜு ஆசிரியர் பொறுப்பு ஏற்ற வாரம் அசோகமித்திரன் கதை ஒன்றை பிரசுரத்துக்கு ஏற்றதாய் பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லி உள்ளார்.
அவருடைய கதை ஒன்றே கூட அந்த அனுபவத்துக்கு ஆன கதை ஒன்றையும் அவர் தன் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். தன்னுடைய 'காயத்ரி' கதையை ஆரம்பித்திருந்த நேரம். மிக உயர்ந்த வர்ணனைகளுடன் அட்டகாசமாக காயத்ரி என்ற பெண்ணின் பார்வையிலிருந்து தொடங்கும் நாவல் அது. அழுத்தப் பட்ட பெண்ணின் உணர்வுகளை சொல்லி வேறொரு தளத்தில் கொண்டு போக திட்டமிடப் பட்ட கதையாம் அது. அந்த வீட்டில் ஏதோ மர்மமாக நடக்கிறது என்ற வகையில் மட்டும் சொல்ல திட்டமிட்டிருந்த வேளையில் ஆசிரியர் சாவி மிகக் கோபமாக ஒரு கடிதம் எழுதி இருந்தாராம் திரு சுஜாதாவுக்கு. அந்தக் கடிதத்தில் கதை மிக ஆபாசமாகப் போவதாகவும், அவருக்கு அளிக்கப் பட்ட சுதந்திரத்தை அவர் (சுஜாதா) தவறாகப் பயன் படுத்துவதாகவும் எழுதி இருந்தாராம். சாவி அந்தக் கதையை நிறுத்துமளவு போனாராம். அதன் பிறகு சுஜாதா அந்தக் கதையின் போக்கை மாற்றி (ஒரு பழி வாங்கும் நோக்கத்துடனேயே!) Blue Film என்றெல்லாம் மாற்றி எழுதினாராம்.அதன் பிறகு ரத்தம் ஒரே நிறம் கதையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நமக்குத் தெரியும்.
இந்த வெகுஜனப் பத்திரிகைகளால் வெறுப்புற்ற சிலர் சில சிற்றிதழ்களை நடத்தினர். அதில் வெகுஜனப் பத்திரிகைகள் மீதான அவர்கள் கோபம் வெளிப் படும். அதே நேரம் மேற்படி வெகுஜனப் பத்திரிகை ஒன்றிலிருந்து இவர்களிடம் ஏதாவது எழுதித் தர சொல்லி கேட்டால் மிக்க சந்தோஷத்துடன் உடனே எழுதிக் கொடுப்பார்களாம். இப்போதெல்லாம் அந்தக் கவலை இல்லை என்று நினைக்கிறேன். இப்படி ப்ளாக் ஆரம்பித்து எழுதி விட்டுப் போய் விடலாமே...!