பவளக்கொடி முதல் சிவகாமி வரை....
இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது தெரிந்த விஷயம் எம் கே டி பாகவதர் பிறந்ததினம் மார்ச் ஒன்று. (1910) சரி, ஒன்றாம் தேதி இவரைப் பற்றி எழுதலாமே என்றுதான் தோன்றியது. புத்தகத்தைப் படித்த உடன் எழுத இருப்பது ஏழிசை மன்னரைப் பற்றி மட்டுமல்லாமல் இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகமாகவும் சொல்லி விடலாம் என்று தோன்றியது.

2010 ஆம் வருடம் பாகவதரின் நூற்றாண்டு வருடம். அதை ஒட்டி வெளிவந்திருக்கும் புத்தகம் இது.
மாலதி பாலன் எழுதி, விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ள 'ஏழிசை மன்னர் எம் கே டி பாகவதர்' என்ற இந்தப் புத்தகம் எம் கே டி பாகவதரின் பலப் பல சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது.

(ஆசிரியர் பற்றிய குறிப்புகள் சற்று கஷ்டப் பட்டாவது படிக்க முடியும் என்று நினைக்கிறேன்!)
சிறு வயதில் கேட்ட இவர் பாடல்களை வைத்து நான் அப்புறம் அவற்றை முத்திரைப் பாடல்களாக வைத்துக் கொண்டு (!) ராகம் கண்டு பிடித்திருக்கிறேன்!
எம் கே டி பாகவதர் பாடல்களில் ஒன்றையாவது கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாமா... அப்படி இருந்தால் (குறிப்பாக) 'சிவபெருமான் கிருபை வேண்டும், உன்னையே அன்புடன் வாரியணைத்து, உனையலால் ஒரு துரும்பசையுமோ, ராஜன் மகராஜன், எந்தன் ஜீவப்ரியே சியாமளா, காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை ' போன்ற சில பாடல்களையாவது கேட்டு விடுங்கள்...
பாகவதர் தன் கடைசிக் காலத்தில் வறுமையில் வாடினார், பஸ்ஸில் எல்லாம் போனார் என்றுதான் நானும் கேட்டிருந்தேன். இந்தப் புத்தகம் அதை முற்றிலும் மறுப்பதுடன் அவரின் பல பெருந்தன்மையான, மென்மையான, மேன்மையான குண நலன்களைச் சொல்கிறது.
தமிழகத்தின், இல்லை, இல்லை இந்தியாவின் முதன்முதல் சூப்பர்ஸ்டார் பாகவதர்தான். முதல் படத்திலேயே சிகரம் தொட்ட இரண்டே இந்திய நடிகர்கள் இவரும் சிவாஜி கணேசனும்தான் என்று சொல்கிறது. (சிவாஜி பின்.....னால் வந்தவர்.)
ஹொன்னப்ப பாகவதர், அந்த பாகவதர் இந்த பாகவதர் என்று நிறைய பேர் இருந்தாலும் தமிழ் நாட்டில் பாகவதர் என்றால் தமிழக மக்கள் மனதில் வருவது அவர் எம் கே டி மட்டும்தான்
இவர் சாரீர சௌந்தர்யத்தில் மட்டும்தான் படங்கள் ஓடுகின்றன என்று தயாரிப்பாளர்கள் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்றவர்களை எல்லாம் நடிக்க அழைத்து வர அவர்கள் நடித்த படங்கள் இவ்வளவு வெற்றி பெறாமல் அவர்கள் இசை உலகுக்கே திரும்பிச் சென்ற கதையையும் சொல்கிறது புத்தகம்.
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் MKTயும் என் எஸ் கிருஷ்ணனும் கைதானார்கள், அப்புறம் கஷ்டப்பட்டு விடுதலையானார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் செஷன்ஸ் கோர்ட், ஹை கோர்ட் அப்புறம் லண்டன் உச்ச நீதி மன்றம் (பிரிவி கவுன்சில்) என்று சென்ற அந்தக் கொலை வழக்கைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
அவருக்கு விடுதலை வாங்கித் தந்த புகழ் பெற்ற வி எல் எதிராஜ் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இவரைப் பற்றி ராண்டார் கை எழுதிய சில கட்டுரைகள் படித்த நினைவு இருக்கிறது. இந்த வி எல் எதிராஜுக்கு டியூஷன் எடுத்தவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்! இதை இப்படியும் சொல்லலாமோ டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனிடம் டியூஷன் படித்தவர் வி எல் எதிராஜ்!
நாமெல்லோரும் எம் ஜி ஆரின் கவர்ச்சியைப் பற்றிப் பேசுவோம். எம் ஜி ஆர் பாகவதரின் கவர்ச்சியைப் பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார். அவர் இருந்த இடம் விளக்கு போட்டது போல இருந்ததாம். அவர் சென்ற உடன் மின் விளக்குகள் எரிந்த போதும் இருளாகி விட்டது போல மக்களுடன் சேர்ந்து அவரும் உணர்ந்தாராம்.
சிறை புகுமுன் அவர் நடித்திருந்த படங்கள் ஒன்பது மட்டுமே.
அவர் நடித்த ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகள் தொடர்ந்து ஓடியது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சிவகவி, அசோக்குமார் போன்ற படங்களும் அரை வருடம் ஒரு வருடம் என்று ஓடிய படங்கள். பத்து வாரம் ஓடிய அவர் படம் தோல்விப் படம் என்று அறியப் பட்டது! அந்தக் காலத்தில் நிறையப் படங்கள் வந்திருக்காது என்றுதான் நானும் நினைத்திருந்தேன். அந்த வருடத்தில் வெளிவந்த முப்பது படங்களுக்கு நடுவில் வெற்றி பெற்ற படங்களாம் ஒவ்வொன்றும்.
சிந்தாமணியில் அவர் பாடிய பாடல்களை ஒலித்தட்டாக மாற்றக் கேட்டபோது சில காரணங்களால் அவர் முதலில் மறுக்க, துறையூர் ராஜகோபால சர்மாவை வைத்து (அவர் குரல் பாகவதர் குரல் போலவே இருக்குமாம்) பாட வைத்து வெளியிட, மக்கள் அது நகல் என்று இனம் கண்டு கொண்டதும், பின்னாளில் பாகவதரே அந்தப் படத்தின் பாடல்களை ஒலித்தட்டில் பாட முன்வந்து பாடியபோதும் அந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பாட மறுத்து விட்டாராம். எனவே அந்தப் பாடல் பாகவதர் குரலில் படத்திலும், அதே பாடல் து.ரா.சர்மா குரலில் ஒலித்தட்டிலும் இருக்குமாம்.
சிந்தாமணி படத்தின் மிகப் பெரிய வசூல் வெற்றியைத் தொடர்ந்துதான் மதுரையில் சிந்தாமணி என்ற தியேட்டரே கட்டப் பட்டது.
பாகவதரின் 'சத்யசீலன்' படத்தில்தான் ஜி ராமநாதன் இசையமைப்பாளராக அறிமுகமானார். அசோக்குமாரில் எம் கே டியின் நண்பனாக முதன் முதல் ஒரு முழு கதாபாத்திரத்தில் நடித்தார் எம் ஜி ஆர். பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்தில்தான் (இந்தப் படத்தின் வசனகர்த்தா புதுமைப் பித்தன். படம் முடியுமுன்னரே காச நோயில் அவர் இறந்து விட, கடைசி சில காட்சிகள் மட்டும் வேறு ஒருவர் எழுதி முடிக்கப் பட்டதாம்) எம் ஜி ஆரும், வி என் ஜானகியும் முதலில் சந்தித்துக் காதலாகி, மனம் புரிந்தனராம். வி என் ஜானகி பாபநாசம் சிவனின் அண்ணன் மகள் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும்! ராஜமுக்தியில்தான் பி. பானுமதியையும் தமிழில் முதலில் அறிமுகப் படுத்தினார் பாகவதர்.
அம்பிகாபதி மறுபடி சிவாஜியை வைத்து எடுக்கப் பட்டபோது கம்பராக நடிக்க முடியுமா என்று கேட்டபோது அன்புடன் மறுத்து விட்டாராம் பாகவதர். சிவாஜிக்கு மற்ற படங்களில் தந்தை வேடம் ஏற்கத் தயார், ஆனால் அம்பிகாபதியாக நடித்த நானே அதன் மறுபதிப்பில் கம்பராக நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்!
அவர் கஷ்டப்பட்ட நாட்களில், அவருக்கு உதவ டி ஆர் மகாலிங்கம், எஸ் எஸ் ராஜேந்திரன், பட அதிபர்கள், தொழிலதிபர் ஹரிராம் சேட் என்று பலர் முன்வந்தாலும் அதை மறுத்தே வந்திருக்கிறார் பாகவதர். டி ஆர் மகாலிங்கம் இவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன் மகனை பள்ளியில் சேர்த்த விழாவுக்கு இவரின் இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்து ஒரு லட்ச ரூபாய் வழங்க, அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து அவர் மகன் சுகுமார் கையிலேயே கொடுத்து 'நல்லா படிக்கணும்' என்று சொல்லி விட்டு வந்தாராம். அந்தக் காலத்தில் ஒரு லட்ச ரூபாய் என்பது இன்றைய ஒரு கோடி ரூபாய்க்குச் சமம். ஹரிராம் சேட் வற்புறுத்திக் கொடுத்த செவர்லே காரில்தான் கடைசி வரை பயணித்தாராம். அதே ஹரிராம் சேட் இவருக்காகக் கட்டிக் கொடுத்த மாளிகையை ஏற்க மறுத்த பின் அவர் காரை வற்புறுத்தி இவர் உபயோகிக்க வழங்கினாராம்- பாகவதரிடம் சங்கீதம் பயின்று, தனிக் கச்சேரி எல்லாம் கூட செய்திருக்கும், அவர் அதை இவருக்கு தந்தது குரு தட்சணையாக! அறிஞர் அண்ணா சொர்க்க வாசல் என்ற படத்தில் நடிக்க அழைத்தபோது அண்ணாவை நேரிலேயே சந்தித்துப் பேசியவர், பக்திமானாக அறியப்பட்ட தான் அவர் படத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்காது என்று அன்புடன் மறுத்து விட்டாராம்.
உண்மையும் நீதியும் ஜெயிக்கும் என்று நம்பிய அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் முருகன்தான் காப்பாற்றியதாக நன்றி சொல்ல வடபழனி முருகன் கோவிலுக்குத்தான் சென்றாராம். பின்னாளில் சர்க்கரை நோய் வந்தபோது மருத்துவ உதவியை நாடாமல் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலில் போய் வேண்டிக் கொண்டு அங்கேயே கட்டில் போட்டு படுத்திருந்தாராம். இன்சுலின் போட்டுக் கொண்டாலும் சரியான சிகிச்சை, முறையான சிகிச்சை காலத்தே செய்யாமல் போனதால் தனது நாற்பத்தொன்பதாவது வயதில் மறைந்தார்.
சிறையிலிருந்து வெளியில் வந்தபின் புதிய படங்களை அவர் ஒத்துக் கொள்ளாமல் இசைக் கச்சேரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆனால் அது கட்டுப் படியாகாமல் அப்புறம் அவரே சொந்தப்படம் எடுத்து என்று மறுபடி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழிசை மட்டும்தான் பாடுவேன் என்ற அவர் பாணி சபாக் காரர்களுக்கு பிடிக்காததால் வாய்ப்பு தர மறுக்கப் பட்டது - தமிழிசைச் சங்கம் தவிர, என்கிறது புத்தகம்.
அவர் நடித்த கடைசிப் படமான சிவகாமி படத்தின் காட்சிகள் அவரது நிஜ வாழ்க்கையை ஒட்டி அமைந்திருந்தன. சிவகாமி படத்தில் டி எம் எஸ் பாடிய ஒரு பாடல் ரொம்பப் பிரபலம். "வானில் முழு மதியைக் கண்டேன்... வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்.." என்ற பாடல்தான் அது.
நலிவுறும் நடிகர்களுக்கு சத்தமில்லாமல் பல உதவிகள் செய்து வந்தார் என்றும் தெரிகிறது. தெலுங்குக் கீர்த்தனைகள் எல்லாம் பாடம் செய்திருந்தும் தமிழிசையின் மேல் தீராத காதல் கொண்டிருந்தார். தமிழிசை மட்டுமே பாடினார். கச்சேரிகளிலும் அவரை அதுபோன்ற சங்கதிகள் பாட விடாமல் மக்கள் 'டாக்கி' பாடல்களைப் பாடச் சொல்லியே கேட்டு இன்புற்றனர்.
புத்தகத்தின் இறுதியில் சுப்புடு, கல்கி, எம் ஜி ஆர் உட்பட பல பிரபலங்கள் எம் கே டி பற்றி எழுதி இருப்பதும், எம் கே டியே சங்கீதம் பற்றி எழுதி இருப்பதும் இருக்கின்றன. அதில் அவர் இசைக் கருவிகள் பாடலை மூழ்கடிப்பதாகச் சொல்லப் படும் கருத்துகள் 1949 இல் சொல்லப் பட்டிருந்தாலும் இன்றைய நிலைக்குப் பொருந்துவது போலத் தோன்றுவது விந்தை! இப்போது பாகவதர் இருந்தால் என்ன சொல்வாரோ.... வாலி (வழக்கம் போல) எம் கே டி பற்றி ஒரு கவிதை பாடியிருக்கிறார்.
இது போல பல சுவாரஸ்யமான தகவல்கள் புத்தகத்தில். மொத்தத்தில் மிஸ் பண்ணக் கூடாத சுவாரஸ்யமான புத்தகம்.
197 பக்கங்கள் 80 ரூபாய் மட்டும்!