செவ்வாய், 21 டிசம்பர், 2010

குட்டிச் சுவரில் வெட்டி அரட்டை..

ராசி...

"ராசி நல்ல ராசி...உன்னை மாலையிட்ட மங்கை மகராசி... உன் கை ராசி.." ஏ.எம். ராஜா பாடிக் கொண்டிருந்தார்.

அடுத்த பாடலாக,

"ராசிதான்..கை ராசிதான்.." பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் ரேடியோக் காரர்கள் பாடல் போடும் 'தீம்' புரிந்தது.

கூடவே சில சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்தது!

காலையில் பூவோ கீரையோ வாங்கும்போது கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

சில பேர்,"ராசியான கை உங்க கையால முதல் போணி பண்ணினா ரொம்ப ராசி சார்.." என்பார்கள். சில பேர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர்களைப் பொறுத்தவரை நம் கைகளுக்கு ராசி கிடையாதா, அல்லது அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா என்றும் தெரியாது!

எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது.

அப்படித்தான் சொல்ல வேண்டும். பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு எல்லாம் கிடையாது.

பட்டறிவு. அதாவது பட்ட அறிவு...!


சில வியாபாரிகள் நாம் முதலில் போய் நின்றிந்தாலும் கூட நம்மை கவனிக்காது, அல்லது கவனிக்காத மாதிரி வேறு வேலை செய்துகொண்டே வேறு ஆட்களுக்கு விற்பனை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் அதில் சந்தோஷம்தான். உண்மையில் முதல் ஆளாக நாம் வாங்கி விடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வும் எனக்கு இருக்கும். ஏனென்றால் மறுநாள் அவர்களைப் பார்க்கும்போது எங்கே 'நேற்று சரியான வியாபரமே இல்லை சார்' என்று மறைமுகமாக சொல்வார்களோ என்று பயமாக இருக்கும். சிலசமயம் அதனாலேயே அங்கு வாங்க வேண்டிய பொருள் இருநதால் கூட, முதல் நாள் அங்கு முதல் ஆளாக வாங்க வேண்டிய சந்தர்ப்பம் வந்திருந்தால், இன்று தவிர்த்து விடுவேன்! ராசியில்லாதவன் என்று பெயர் வாங்குவதில் விருப்பம் இல்லை எனக்கு! ஒரு வேளை நேற்று வியாபாரம் ரொம்ப அமோகம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எனக்குத் தேவை இல்லை. பின்னதில் கிடைக்கும் சிறு மனச் சந்தோஷத்தை விட முன்னதில் தவிர்க்கும் மனச் சுருக்கம் பெரிது. என்ன சொல்கிறீர்கள்?


முதல் வியாபாரம் என்று சொல்வதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தந்திரம் என்று கூட சொல்லலாம். ஆட்டோ ஆகட்டும், பொருட்கள் ஆகட்டும், 'முதல் போணி சார்...' என்று குரல் கொடுத்தார்கள் என்றால் நாம் பேரம் பேசக் கூடாது என்று அர்த்தம்!

ராசியான கை என்று சொல்லப் படுபவர்களை எல்லா இடத்திலும் அப்படிதான் சொல்கிறார்களா என்று ஒரு சந்தேகம் உண்டு. எனக்கு அபபடி இல்லை. ஒருவர் இப்படி. இன்னொருவர் அபபடி! ராசியான கை என்று சொல்லும்போது மகிழ்ந்து போகாமலிருக்கப் பழகி விட்டேன். மாற்றுக் கருத்தில் மனம் சுருங்காமலிருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்!

வியாபாரிகள் இப்படிச் சொல்வதில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தந்திரமும் உண்டு என்று தெரியும் ஏன் 'உம' விகுதி சேர்க்கிறேன் என்றால் என் நண்பர் ஒருவர் இருக்குமிடம் தேடி சில பொருட்கள் வரும். விலையும் டோக்கன் அமவுண்ட் தான்! 'நாம் கே வாசி' ஓரிரு ரூபாய் வாங்கிச் செல்வார்கள்.


"இப்படி ஒருவரைப் பற்றி கைராசி என்று சொல்கிறீர்களே, அப்போது பக்கத்தில் நிற்கும் மற்ற வாடிக்கையாளர் மனம் என்ன நினைக்கும் என்று யோசிக்க மாட்டீர்களா" என்று என் வியாபார நண்பர் ஒருவரைக் கேட்டேன்.

"எனக்கு எல்லார் கையுமே ராசிதான் சார்...அதனாலதானே எங்க பொழைப்பு...ஆனால் சில பேரு கை ரொம்ப ராசி.." என்றார்!

என்னையும் சில பேர் உங்க கை ராசி சொல்லியிருக்கிறார்கள் என்பதில் ஒரு ரகசிய திருப்தியும் உண்டு. நான் இப்படிச் சொல்லியிருக்கிறேன் என்று வெளியில் சொல்லி விடாதீர்கள்.

அவர்கள் ராசி பார்ப்பது இருக்கட்டும், அவர்களிடம் பொருள் வாங்கிய நாம் என்ன பார்ப்பது? வாங்கி வந்த பொருள் சரியில்லை, அல்லது தொலைந்து விட்டது என்றோ நாம் முதலில் ஆட்டோவிலோ டேக்சியிலோ ஏறிச் சென்ற வேலை நடக்கவில்லை என்றால் அந்தக் கடைகளை நாம் தவிர்க்க வேண்டுமா அல்லது முதலில் 'போணி' செய்வதை தவிர்க்க வேண்டுமா?!!

ராசியான பேனா, ராசியான சட்டை என்று நான் எதுவும் வைத்துக் கொண்டது கிடையாது. நண்பர்களிடமும் ராசி பார்ப்பதில்லை. என் வேலைகளைச் செய்யும் போது ராகு காலம் வந்தால் அஷ்டமி போன்ற தினங்கள் வந்தால் கவலைப் படுவது இல்லை. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். எப்போதும் இருப்பதைவிட கூட்டம் குறைவாக வேலைகளை எளிதில் முடித்து வரலாம்! அபபடி முடித்துமிருக்கிறேன்.

படங்கள் : நன்றி கூகிள், ஃபோட்டோ நெட்.


12 கருத்துகள்:

  1. // ராசியான கை என்று சொல்லும்போது மகிழ்ந்து போகாமலிருக்கப் பழகி விட்டேன். மாற்றுக் கருத்தில் மனம் சுருங்காமலிருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்!//

    அவசியமான ஒன்று.

    //எப்போதும் இருப்பதைவிட கூட்டம் குறைவாக வேலைகளை எளிதில் முடித்து வரலாம்! அபபடி முடித்துமிருக்கிறேன்.//

    நல்ல உத்தி:)!

    நல்ல பதிவு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  2. நா ராசியான கை. மொதல் பின்னூட்ட போணி பண்ணலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ள முந்திக்கிட்டாங்க... ;-)

    பதிலளிநீக்கு
  3. பின்னூட்டத்திலும் இது உண்டா

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு ஸ்ரீராம். நானும் ராசி போன்ற விஷயங்களைப் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. டிஎம்எஸ் டிஆரைத் சகட்டு மேனிக்குத் திட்டியது நினைவுக்கு வருகிறது (அகில உலக டிஆர் சேனைத்தலைவர் இன்னும் சென்னையிலயே இருக்குறதால் கொஞ்சம் கவனமா எழுத வேண்டியிருக்குது). போணி விவரம் நல்ல நகைச்சுவை. ஒரு காய்கறிக் கடைக்காரர்கள் "ஒரு நிமிசம் பொறு சார், அந்த அம்மா வந்து கொத்து கறிவேப்பிலையாவது வாங்கிட்டுப் போய்ரட்டும்" என்று எங்களைக் காக்க வைப்பார். அந்த அம்மா அழகா இருப்பாங்க, அதனால பொறுமையா இருந்தோம் :) ஒருமுறை பொறுமையிழந்த ஒருத்தர் அந்த அம்மாவைக் கையோடு அழைத்து வந்து விட்டார். காய்கறிக்கடை போட்டோ நல்லா இருக்கு. பம்மல் க்ருஷ்ணாநகர் ஸ்டாப்பில் அந்தப் பெண் நான் வந்த பஸ்ஸில் ஏறினால் அந்த நாள் முழுதும் ராசியாகப் பட்டது ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
  6. எனக்கு நம்பிக்கை இல்லா விட்டாலும், மற்றவர்களின் நம்பிக்கைக்காக முடிந்தவரை முதல் போணி செய்வது கிடையாது.

    // ராசியான கை என்று சொல்லும்போது மகிழ்ந்து போகாமலிருக்கப் பழகி விட்டேன். மாற்றுக் கருத்தில் மனம் சுருங்காமலிருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்!//

    Good.

    பதிலளிநீக்கு
  7. அந்த ராஜா-ஜிக்கி பாட்டை ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன்.. இருந்தா பதிவுல போடறது..

    பதிலளிநீக்கு
  8. //அவர்கள் ராசி பார்ப்பது இருக்கட்டும், அவர்களிடம் பொருள் வாங்கிய நாம் என்ன பார்ப்பது//

    சபாஷ் சரியான (போட்டி) கேள்வி :))

    பதிலளிநீக்கு
  9. //ராசியான கை என்று சொல்லும்போது மகிழ்ந்து போகாமலிருக்கப் பழகி விட்டேன். மாற்றுக் கருத்தில் மனம் சுருங்காமலிருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்!//

    Sriram, second one still learning is it !!

    பதிலளிநீக்கு
  10. இதுவும் ஒருவித நம்பிக்கைதான் !

    பதிலளிநீக்கு
  11. ரசனைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    ஆர் வி எஸ்,
    அப்போ தினமும் உங்கள் பின்னூட்டங்களை முதலாவதாக எதிர்பார்க்கலாமா...

    LK
    அதை நீங்கள்தான் சொல்லணும்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Gopi,

    வாங்க அப்பாதுரை, உங்கள் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது போல பதிவு.

    HVL, நன்றி. சேம் பின்ச்..!

    நன்றி தமிழ் உதயம், உங்களையும் கிள்ளிட வேண்டியதுதான்..!

    அப்பாதுரை, பாட்டு பதிவுல முதலிலேயே சேர்த்திருக்கணும். அதனால அப்புறம் சேர்க்கவில்லை. கிடைத்ததா?

    நன்றி சைவகொத்துபரோட்டா...தொடர்ந்து வாங்க...

    சாய்..நான் மகான் அல்ல..!

    நம்பிக்கைகளில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது, இல்லை ஹேமா...?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!