வியாழன், 4 பிப்ரவரி, 2021

அனாதை நாய்கள்

 பாலத்தைத் தாண்டும்போது பாலத்தின் முடிவில் சுவரில் வரிசையாக நிறைய காக்கைகள் அமர்ந்து கீழே ஒரே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.  ஒன்றை ஒன்று  ,கரைந்துகொண்டும் சற்றே பரபரப்பாக இருந்தன.

சும்மா உட்கார்ந்திருந்தாலோ, ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையில் பார்த்தாலோ சாதாரண காட்சி.  ஆனால் இது வித்தியாசமாக இருந்ததால் தாண்டும்போது திரும்பிப் பார்த்தேன்.  மேலும் அதேசமயம் பாலத்தின் பின்புறமிருந்து நாய் ஒன்று சத்தமாக அலறும் சத்தம் வேறு கேட்டது.  அதைத்தான் அத்தனை காக்கைகளும் உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தன. 

பார்த்த காட்சி மனதை நெகிழ்த்தியது.  வேகமாகத்  தாண்டி விட்டதால் போட்டோ எடுக்க முடியவில்லை.

சுற்றிலும் நான்கைந்து நாய்கள் நின்றிருக்க, அவை யாவும் அந்த ஏரியாவைச் சேர்ந்த நாய்கள் என்று தெரிந்தது.  எத்தனை நாய்களைப் பார்த்திருக்கிறோம்?  இது தெரியாதா?!!  நடுவில் ஒரு நாய் நின்றிருந்தது.  ஆண் நாய்.  அது நின்றிருந்த பாணியிலும், வால் ஆடிக்கொண்டு இருந்த பாணியிலும் அதன் உடல் மொழியிலும் அதுவும் அதே ஏரியாவைச் சேர்ந்ததுதான் என்று தெரிந்தது.  

அது எதையோ தன் மற்ற தோழர்களுக்குச் சொல்ல முயன்று கொண்டிருந்தது.  நின்றுகொண்டிருந்த அதன் நாலு கால்களுக்கு நடுவே ஒரு குட்டி நாய் பாதுகாப்பாக மல்லாந்து படுத்து சரண்டர் ஆகி இருந்தது.  அதன் வாயிலிருந்துதான் பயக்குரல், அபயக்குரல் வந்து கொண்டிருந்தது.  அது சரண்டர் ஆனதும் மற்ற தனது தோழர்களிடமிருந்த காப்பாற்ற இது வந்து அப்படி நின்றிருக்க வேண்டும்.  மற்ற சகாக்கள் இன்னும் அந்த சரண்டரை அங்கீகரிக்கவில்லை போலும்.

சில நொடிகளில் அவதானித்த விஷயம் இது.  இதில் காக்கைகளின் கவனிப்பும் குறிப்பிடத்தக்கது.  கீழே அந்த ஜீவன்களுக்குள் என்ன நடக்கிறது என்று உற்று கவனித்துக் கொண்டிருந்தன.  ஒருவேளை நிலைமை எல்லை மீறினால் உதவிக்கும் சென்றிருக்குமோ என்னவோ...  அப்படியும் சில சம்பவங்கள் பார்த்திருக்கிறேன். 

அநேகமாக அந்தக் குட்டி நாய் காப்பாற்றப் பட்டு அந்த ஏரியாவின் மற்ற மெம்பர்களால்அங்கீகரிக்கப் பட்டிருக்கும்.  ஏனெனில் எங்கள் காம்பவுண்டில் சில மாதங்களுக்கு முன்னால் இப்படி ஒரு புதுமுகம் வந்து இதே மாதிரி செட்டில் ஆகிவிட்டது.  

அப்போது அங்கு ஏற்கெனவே மூன்று நாய்கள் இருந்தன.  ஒரு ஆண் நாய், இரண்டு பெண் நாய்கள்.  ஆண் நாய் எதிர்ப்பும் காட்டவில்லை.  ஆதரவும் காட்டவில்லை.இரண்டு பெண் நாய்களில் ஒன்று பயங்கர எதிர்ப்பு காட்ட, இன்னொன்று, புதுமுகம் அதன் அருகில் வந்தாலோ, அதன் கண்ணில் பட்டாலோ மட்டும் எதிர்த்தது.  வந்ததும் பெண் நாய்.  அப்போது அந்தப் புதுமுகம் நான்கு கால்களும் மடக்கி உட்கார்ந்த நிலையில் மெதுவாக நகரும்.  பயம், சரண்டர், ப்ளஸ் நட்பழைப்பு!  

இப்போது அது ஏழு குட்டிகள் போட்டிருக்கிறது.  ஆனால் அதற்கு காரணம் உள்ளே இருந்த ஆண் நாய் இல்லை! !  இப்போதும் சமயங்களில் அந்தப் புதுமுகம் அப்படிதான் நகர்கிறது!

====================================================================================================

சில வருடங்களுக்கு முன்னால் பேஸ்புக்கில் பகிர்ந்தது இது : 

நனையாமல் நிற்க, ஒதுங்க இடம் தேடி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாய் நாயொன்று ஓடுகிறது நடுச்சாலையில்.  விரட்டுகிறது அதை,  வெட்டவெளிச் சாலையும், அவ்வப்போது விரையும் வாகனங்களும்.  எதைத் தேடி ஓடுகிறது இந்த மூலையிலிருந்து அந்த மூலை, அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கு?  ஒதுங்க ஒரு இடம் கூட இல்லாமல் கான்க்ரீட் காடுகள்..

நனையாமல் ஒதுங்க மரம் மரமாய் இடம் தேடி அலைந்தும், காய்ந்த இடம் காணாமல் உடல் நடுங்க அலைகின்றன நடுங்கும் நாய்க்குட்டிகள்.  வீடுகளின் ஒட்டிய வாசல்களிலிருந்து விரட்டப்பட்ட, ஒண்ட அங்கு வந்திருந்த நாய் ஒன்று தேடி ஓடுகிறது, இன்னுமொரு சாரல் விழா இடம் நாடி. 

'நானறிவேன் இந்த மனிதர்களை ; நாடுவதால் பயனில்லை.  நடப்பது நடக்கட்டும்' என்று பெய்யும் மழையில் நனைந்தபடி, ஒதுங்க இடம் தேடாமல், அங்குமிங்கும் அலைபாயாமல், குளிர் நடுங்கத் தரை பார்த்து நனைந்தபடி நிற்கிறது வயதான நாய் ஒன்று.

மரங்களை நனைக்கும் பேய்மழையில், பெரும் காற்றில், உடல் குனிந்து ஆடும் நீர் சொட்டும் மரங்களைப் பார்க்கிறேன்.  ஆமாம், எங்கே ஒதுங்கின இந்த காக்கை, குருவி, அணில்கள்?  ஒதுங்க ஒரு பத்திரமான இடம் வைத்திருக்குமோ அவைகள்?

பேருந்து நிறுத்தத்தின் சிறு இடத்தில் ஒதுங்கினார்கள்  மழையில் மட்டும் நனையும் நான்கு மனிதர்கள்.   நட்புடன் ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட்டன, ஏற்கெனவே அங்கு இடம் பிடித்திருந்த இரு நாய்கள். கை வீசி அதை விரட்டி களைப்பாறுகிறார்கள் அந்த ஆறறிவுகள்.  கருணை எதிர்பார்த்து அவர்கள் கண்களை நிமிர்ந்து பார்த்த ஐந்தறிவுகள், வேறு நாய்கள் மட்டும் நிற்குமிடம் கிடைக்குமா என்று மழையில் இறங்கி ஓடுகின்றன.

மறந்து பறக்கத் தொடங்கிய பறவை ஒன்று பாதி சிறகு விரித்துத் தாழப் பறந்து எங்கோ ஒரு அடர்மர மறைவில் மறைகிறது.

ஆடுகளும், மாடுகளும் ஒதுங்க மட்டும் இடம் இருக்க, பறவைகள் மர்ம இடங்களில் மறைந்திருக்க, நாய்கள் மட்டுமே அனாதையாய் அங்குமிங்கும் ஓடியபடி.

மழை நிற்கட்டும்..  பின்னர் கவி ஒன்று பாடலாம் "நாய் நன்றியுள்ளது.. நாய் மனிதனின் நண்பன்" என்று..

=================================================================================================

மேலும் மூன்று திரைக்கவிதைகள்...




காற்றின் வீச்சில் 
களைத்து ஆடினாலும்
கடமை தவறாமல்
காத்து மறைக்கிறது


************

உதறமுடியாத உறவுகளைக்
காண
உள்ளே வந்து வந்து
செல்கின்றன..

****************

கதவும் கட்டிக்கொண்டிருக்கும்
கலர்ப்புடவை

=====================================================================================================

"ஹாய்" என்று அழைக்கும் உற்சாகக் கையாட்டலா, "உதவி" என்று அழைக்கும் அபய கைய(சை)ழைப்பா?  இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?  உள்ளே மாட்டிக்கொண்டிருக்கும் மனிதன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளச் செய்யும் கடைசி முயற்சி போல படுகிறது எனக்கு!  திகில் கவிதை எழுத கை விழைகிறது!



======================================================================================================

சமீபத்தில் நான் சென்ற ஒரு திருமணத்தில் மண்டபத்தையும் அங்கு கூடியிருந்த மக்கள் வயிற்றையும் அதிரவைத்த குழுவினர்...   வாசலிலிருந்து மேடை மேல் ஏற்றுவதுவே அரை சுத்தமாக ஒரு மணிநேரம்...   வயிறுஅதிர்ந்தாலும், காது கிழிந்தாலும் கால்கள் ஆடுவதைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த வேண்டியதாய் இருந்தது!




==========================================================================================================

"வாளையும் கேடயத்தையும் வச்சுக்கிட்டு இருட்டுல புல்லுக்குப் பக்கத்துல என்னண்ணே பண்றீங்க வீராதி வீரரே...?"

"மண்டப வாசல்ல வெட்டியா நின்னுகிட்டு நீ இன்னா பண்றியோ அதேதான் அண்ணாத்தே..."  

===================================================================================================

முன்னோட்ட புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்.



தங்கையின் பேத்திக்கு வாங்கிய விளையாட்டு பொருள்.


காற்றாடிய கண்காட்சி.  பத்துபேர் இருந்திருந்தால் அதிசயம்.  ஆனால் 55 ஸ்டால்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த இந்தக் கண்காட்சிக்குப்பின் பிப்ரவரி 25 முதல் மார்ச் எட்டாம் தேதி வரை வொய் எம் சி ஏ அல்லது தீவுத்திடலில் பெரிய கண்காட்சி வழக்கம்போல நடைபெறும் என்று உள்ளே சொன்னார்கள்.


கார போளி பருப்பு போளி சுண்டல் என்று சிற்றுண்டிக் கடை வைத்திருந்தவர்கள் கூட நொந்துபோய் உட்கார்ந்திருந்ததைக் காண முடிந்தது.


அரங்கம் வைத்திருந்தவர்கள் பேச்சில் நிறைய ஆதங்கம் இருந்தது.  

கொரோனாவா, போதிய விளம்பரமின்மையா, புதிய இடமா...   காரணம் எதுவோ..   யாரையும் காணோம்...


ஆட்களை எதிர்பார்த்து அலங்காரங்களுடன் காத்திருக்கும் புத்தகங்கள்...

சாஹித்ய அகாடமி அரங்கில் நான் எதிர்பார்த்த புத்தகங்கள் இல்லை.  கிழக்குப் பதிபபகத்தை இந்த அளவு சிறிய அரங்கமாக நினைத்துக் கூடப் பார்க்க முடையவில்லை.  விகடன் அரங்கையும்!  அல்லையன்ஸ், வானதி போன்ற அரங்கங்கள் இல்லவே இல்லை.

================================================================================================


செவிக்குணவு கண்களுக்கு முடிந்து வயிற்றுக்கு ஈய வந்தபோது... A2B


வேறொரு A2B யில் ஆனியன் ரவா ஆர்டர் தந்து நீண்ட நேரம் காத்திருந்தபின் வந்தது.  மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது அது.  ஏற்கெனவே சர்வர் வந்து விசாரிக்கவே பத்து நிமிடங்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டியும் இருந்தது.  வழக்கம்போல கூகுள் மறுநாள் அபிப்ராயம் கேட்டபோது கடித்துக் குதறினேன்.  அதற்கு பொறுப்பாக 
A2B யிலிருந்து மன்னிப்பு கேட்டு பதில் வந்திருந்தது!  முன்னரே அப்படி ஒருமுறை ரிலையன்ஸ் சென்றுவந்தபின் அப்போது அபிப்ராயம் கேட்ட கூகிளுக்கு குறைந்த ஸ்டார் தந்தபோது 'எதற்கு என்று தெரியவில்லை.  நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொள்கிறோம்' என்று பதில் வந்தது.  இதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கிறார்கள் என்பது புரிந்தது.   'நீங்கள் ரொம்ப பாப்புலர் அபிப்ராயம் கொடுங்கள்' என்று நான் போகும் இடமெல்லாம் கேட்க, லொகேஷனை அணைத்து வைத்து விட்டேன்.  வம்பா இது!

======================================================================================

99 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இனிமேல்தான் படிக்க வேண்டும்.
    எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன்
    இருக்க இறைவன் அருள் என்றும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் பதிவு ஸ்ரீராம்.
    உலகத்திலேயே உசத்தியான ஜீவன் நாய்.
    அவைகளின் சமூக நாடகத்தைக் காணவும் சந்தர்ப்பம் கிடைத்து
    நன்றாக அலசி இருக்கிறீர்கள்.

    எத்தனையோ பாடங்களை அவைகள் கற்றுக் கொடுக்கின்றன
    நமக்கு .கருத்தில் ஏற்றி
    சில நன்மைகளைத்தான் செய்ய முடிகிறது. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்புக்கில் இன்று கூட ஒரு பெண் தினசரி எக்கச்சக்கமாக உணவு சமைத்துக்கொண்டு தெருவில் திரியும் இந்த ஜீவன்களுக்கு எடுத்துச் செல்லும் வீடியோ பார்த்தேன்.  காயங்களுக்கு மருந்தெல்லாம் இட்டார்.

      நன்றி அம்மா.

      நீக்கு
    2. மழையில் நனைந்த நாய்கள்.
      அச்சோ பாவம். நாய் பட்ட பாடு என்று
      ஏன் சொல்கிறார்கள் என்று புரிகிறது.

      நாய் வேட்டையாடப் படுகிறது. விரட்டி அடிக்கப் படுகிறது.
      ஒரு துண்டு ரொட்டித் துண்டுக்காக
      எப்பொழுது பார்த்தாலும் வெள்ளை நாய்
      இன்னும் இருக்கிறது எங்கள் வீட்டுக்குப்
      பக்கத்தில்.
      மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.
      உயிரினங்களில் நாய்கள் மட்டும் ஏன் இத்தனை சிரமப் படுகின்றன. அடிபடுகின்றன
      என்பது புரியாத விஷயம்.
      இந்தக் குளிர்காலத்தில் இங்கே நாய்களைப் பாதுகாக்க ஷெல்டர்களும்,
      அதற்கு கொடைகளும் உண்டு.

      நீக்கு
    3. இப்போது நாங்கள் இருக்கும் பகுதியில் நாய்கள் அதிகம் காணப்படுகின்றன.  எல்லாமே என்னைக் கண்டதும் அறிமுகமில்லாவிடினும் நட்பு பாராட்டுகின்றன!  தீபாவளி சமயத்தில் வெடிச்சத்தம் கேட்டு அவை இங்குமங்கும் ஓடிய காட்சி காண மிகவும் கஷ்டமாக இருந்தது.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் தெருவிலும் ஒவ்வொரு வியாழனன்றும்
    ஒரு பெண்மணி காரில் வந்து,
    பைகளில் இருக்கும் ரொட்டித் துண்டங்களை
    ஒரு காகிததில் வைத்து ஒவ்வொரு நாய்க்கும் கொடுப்பார்.
    அவைகளும் கத்தாமல் கரையாமல்
    ஒழுங்காகச் சாப்பிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஹ்ரைன் பூங்கா ஒன்றில் வெள்ளி தோறும் ஒரு வட இந்தியப் பெண்மணி அங்கு இருக்கும் ஏகப்பட்ட பூனைகளுக்கு, பூனை உணவு கொடுப்பார். பூங்காவைச் சுற்றி ஆங்காங்கே அவரைக் கண்டதும் பூனைகள் ஓடிவரும். இதற்கெல்லாம் பெரிய மனது இருக்கணும்னு தோன்றும்.

      நீக்கு
    2. இப்போது நாங்கள் இருக்கும் அப்பகுதியில் ஒருவர் இதே பணியைச் செய்கிறார்.  பேஸ்புக்கில் பிரபா மீனாட்சி என்பவர் கொரோனா காலத்திலும் இப்போதும் தொடர்ந்து இபபணியைச் செய்து வருகிறார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அடையார் ஆனந்த பவன் ( AAB ) என்பதை 2A + B என்று அர்த்தம் வரும் வகையில் A2B என்று பெயர்ப்பலகையில் குறிப்பிடுகிறார்கள்.

      நீக்கு
    2. ஆம்.  அடையார் ஆனந் பவன்தான் அது.

      நீக்கு
    3. ஓஹோ. மிக நன்றி கௌதமன் ஜி. ஸ்ரீராம்.
      அடையார் ஆனந்த பவன் விளம்பரம் நினைவுக்கு
      வருகிறது:)

      நீக்கு
    4. கூகிள் வேறே கருத்துக் கேட்குமா? இதெல்லாம் எனக்குப் புதிது. ஓட்டல்களில் சாப்பிட்டே வருடக்கணக்காய் ஆகிறது. அம்பேரிக்கா போனால் அங்கே குழந்தைகள் வாரம் ஒரு நாள் கூட்டிப் போவார்கள். அங்கே போவது தான்! இங்கெல்லாம் போகிறதில்லை.

      நீக்கு
  6. பேருந்து நிறுத்தத்தின் சிறு இடத்தில் ஒதுங்கினார்கள் மழையில் மட்டும் நனையும் நான்கு மனிதர்கள். நட்புடன் ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட்டன, ஏற்கெனவே அங்கு இடம் பிடித்திருந்த இரு நாய்கள். கை வீசி அதை விரட்டி களைப்பாறுகிறார்கள் அந்த ஆறறிவுகள். கருணை எதிர்பார்த்து அவர்கள் கண்களை நிமிர்ந்து பார்த்த ஐந்தறிவுகள், வேறு நாய்கள் மட்டும் நிற்குமிடம் கிடைக்குமா என்று மழையில் இறங்கி ஓடுகின்றன./////////////கொடூரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒதுங்கி இடம் தரும் அவைகளுக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை!

      நீக்கு
  7. கர்ட்டன் கவிதைகள் மிக அருமை,
    காற்றில் ஆடிக் காத்து நிற்கும்!!!! பலே பேஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   இன்னும் சுருக்கமாக அழகாகித் சொல்லி இருக்கிறீர்கள்.  நன்றி அம்மா.

      நீக்கு

  8. புத்தகக் கண்காட்சி ஈ கூட ஆடவில்லையோ!!
    யானையும் ,காவல் ஆளும் வரவேற்கக் காத்திருக்கின்றனர்.
    தொற்றின் பயம் விரட்டுகிறதோ என்னவோ.

    அத்தனை புத்தகங்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறது.
    படங்கள் வெகு அருமை ,. நன்றிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானையும் கிரேக்க வீரனும் கல்யாண மண்டபத்தில்.  புத்தகக் கண்காட்சியில் இல்லை அம்மா.

      நீக்கு
    2. அவ்வளவு கவனம் வல்லிம்மாக்கு.!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  9. 30000 வருடங்கள் காத்திருக்கும் கை.
    உண்மையான கையாக இருந்தால் உதிர்ந்திருக்கும். செதுக்கப் பட்ட
    கை தானோ.
    நட்புடன் அழைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. திருமண வரவேற்பின் இசைப் பதிவை
    கேட்க ஆர்வம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு செய்திருக்கலாம்.  காது கிழிந்திருக்கும்!

      நீக்கு
    2. ஓஓஓஓ பல்லே! பல்லே! பல்லே! என்று ஆடினார்களா? :))))

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கமலா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. ஹி.. ஹி.. ஹி... என்னமோ ஆகிறது எனக்கு! உங்களுக்கு முன்னால் நான் கண் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் போல!

      நீக்கு
  14. ஆதரவுஇல்லா நாய்களைப் பற்றி படிக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது .

    ஐய்யனார் கோவில் வாசலில் இப்படி இரண்டு பிரிவாக பிரிந்து நாய்கள் நின்று கொண்டு சண்டையிடும்.

    வளர்ப்பு செல்லங்களாக இருப்பவை சகல வசதிகளுடன் இருக்கும்.

    பேஸ்புக்கில் பகிர்ந்தது போல் மழைக்கு ஒதுங்கும் எங்கள் திண்ணையில்.

    மயிலாடுதுறையில் எங்கள் வீட்டுத்திண்ணையில் மழைக்கு ஒதுங்கும் ஆடுகள், நாய்கள் எல்லாம். இரவு வரும் வாட்ச்மேன் வரும் வரை சந்தோஷமாக இருக்கும் அவைகள். அவர் வந்த பின்னால் (அவர் இரவு படுக்கும் இடம் அதனால் )கம்பால் அடித்து பத்திவிடுவார்.

    திரைக் கவிதை அருமை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டு ஜன்னலில் பறவைகள் நம்பிக்கையுடன் வந்து அமர்ந்து உணவுண்டு செல்கின்றன.  பால்கனியில் கூடு கட்டிக்க குடி இருக்கின்றன.  அவை உங்களை புரிந்து வைத்திருக்கின்றன.

      நீக்கு
  15. இன்னிக்குக் காலம்பரக் கணினியைத் திறக்க வேண்டாம்னு முடிவெடுத்துப் படுத்துக் கொண்டிருந்தேன். எடுக்கும்படியான சூழ்நிலை. சொந்த வேலை ஒண்ணு மறந்து போனதைப் பார்க்க வேண்டி வந்தேன். அப்படியே ஓர் பறக்கும் வருகை! இஃகி,இஃகி,இஃகி! Flying visit!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் ஒரு காலை விசிட் அடிப்பீர்களே...

      நீக்கு
    2. சில நாட்கள் முடியறதில்லை. இன்னிக்குக் கண்ணாடி இல்லாமல் வரலை. இப்போத் தான் போய் வாங்கி வந்தேன்.

      நீக்கு
  16. செல்லங்கள் பற்றிய கட்டுரை அருமை. திரைக்கவிதைகளும் "சிக்" கையைப் பார்க்கப் பார்க்கத் திக் திக் தான். தங்கை பேத்தி பெரிய பெண்ணாகி வருகிறாள் என்பது விளையாட்டுப் பொருட்களில் இருந்து தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா..  அந்தக் கை ஒரு 'திடுக்'கை தருகிறதோ!

      நீக்கு
  17. புத்தகக்கண்காட்சிக்கெல்லாம் நான் போனதே இல்லை. இங்கேயும் நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள் இரண்டு இடங்களில். போனது இல்லை. சதாசிவ பண்டாரத்தாரின் புத்தகம் என்னிடம் இருந்தது. யாரோ படிக்க வாங்கிக் கொண்டு போனது! திரும்பி வரலை. இந்தச் சரித்திரத்தில் "அத்திமலைத் தேவனில்" நரசிம்மா ராஜேந்திர சோழன் காலத்தில் கங்க மன்னன் ப்ருத்வீபதியுடன் போர் எனக் குறிப்பிட்டிருக்கார். ஆனால் அது ராஜராஜனுக்கும் முன்னால், சுந்தர சோழருக்கும் முன்னால் நடந்தது எனப் பொன்னியின் செல்வனில் படிச்சிருக்கோமே என நினைத்துக் கொண்டேன். சந்தேகத்தை எப்படித் தீர்த்துக்கறது? புரியலை. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடந்தையில் கூட நிரந்தர புத்தகக் கண்காட்சி பார்த்திருக்கிறேன்.  நிரந்தர புத்தகக் கண்காட்சி சுவாரஸ்யமில்லை என்று தோன்றும் எனக்கு.  இதோ கலைத்து விடுவார்கள் என்று இருந்தால்தான் செல்லும் ஆசை, ஆர்வம் வரும்!  இன்னும் இரண்டே பீஸ்தான் இருக்கிறது என்று கூவுவார்களே..  அது போல!

      நீக்கு
    2. அம்பத்தூரிலும் நிரந்தரப் புத்தகக்கண்காட்சிகள் நடக்கின்றன/நடந்தது/நடக்கலாம். அவை எல்லாம் இடது சாரிப் புத்தகங்களாகவே இருக்கும். ஆங்காங்கே ஒன்றிரண்டு பொன்னியின் செல்வன்/இல்லைனா விக்கிரமன் எனக் கிடைக்கும். ஆன்மிகப் புத்தகக் கண்காட்சியில் திருவான்மியூரில் அறிவுக்கனலே! அருட்புனலே! என்னும் விவேகானந்தர்/ராமகிருஷ்ணர் பற்றிய ரா.கணபதியின் புத்தகமும், தெய்வத்தின் குரல் ஐந்து, ஆறாம் பாகங்களும், வள்ளலாரின் சரித்திரமும் வாங்கினோம். மாமாவும் படிப்பார் என்பதால் இவை எல்லாம் வாங்கினோம். இன்னும் சில புத்தகங்கள் எல்லாமும் இப்படியானவை! வாங்கி இருக்கோம். ஆனால் சென்னை புத்தகக்கண்காட்சி பற்றிய விமரிசனங்களைப் பல்லாண்டுகளாகப் படித்து வருகிறேன். போனதில்லை/வாங்கியதில்லை. ஒரு
      தரம் அம்பத்தூரில் இருக்கையில் பச்சையப்பாக் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தப்போ அண்ணா பெண் அழைத்துப் போவதாய்ச் சொல்லி இருந்தாள், முதல்நாள் கூட்டத்தில் 2,3 பேர் மயங்கி விழுந்ததாகச் செய்திகள் தொலைக்காட்சியில் வந்தன. உடனே நம்மவரும் மறுத்துவிட்டார்/என் அண்ணாவும் போகாதே, உனக்கு ஆஸ்த்மா இருக்கு எனத் தடுத்துவிட்டார். அதன் பின்னர் அம்பத்தூரை விட்டே வந்தாச்சு.

      நீக்கு
  18. செல்லங்களாகப் பிறந்தாலும் அதிர்ஷ்டம் செய்திருந்தால் நல்ல வீட்டுச் சூழ்நிலையில் வளரலாம். உருளைக்கிழங்கு பராட்டாவைத் தான் காரபோளி என்கிறார்களோ? ரவாதோசை சொதப்பலாக இருக்கே! மொறுமொறுனு காணப்படவில்லை. தோசை வார்க்க என்று ஓர் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரவா தோசையா? பரோட்டாவா? என்று ஶ்ரீராம்தான் வந்து தெளிவு படுத்த வேண்டு்ம்.

      நீக்கு
    2. Ceylon வீச்சு பரோட்டாவை நம்ம ஊர் ரவா தோசை என்று ஜாதி மாற்றம் செய்யலாமா கீசா மேடம்?

      ராவா தோசைல நடுவுல தேங்காய் சட்னி, அதன் மேல் சிறிது சாம்பார் என்று விட்டுக்கொண்டு சாப்பிடும் என்னைப் போன்றவர்களுக்கு எதற்கு நாக்கைப் பதம் பார்க்கும் முறுகல்?

      நீக்கு
    3. போளியில் காய்கறிகள் வைத்துத் தருவார்கள்.  பராத்தா வகையறா இல்லை அது.  அதைக் கூட போட்டோ எடுத்திருக்கலாம்!  ரவா தோசை பற்றி நான் குறிப்பிட்டிருப்பது அதற்கு முந்தைய அனுபவத்தை.  இங்கு படத்தில் காணப்படுவது பரோட்டா.

      நீக்கு
    4. பரோட்டாதான் பானு அக்கா.


      சிலோன் வீச்சு பரோட்டா எல்லாம் இல்லை.  அடையார் ஆனந் பவனில் பரோட்டா என்று கேட்டதும் இதைதான் தந்தார்கள்.  வெகு சுவையாக இருந்தது!

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. நான் எங்கே பரோட்டாவைக் கண்டேனா? (Bh)புரோட்டாவைக் கண்டேனா? ரவாதோசைனு ஶ்ரீராம் சொல்லி இருந்ததால் அதான் போலிருக்குனு நினைச்சுட்டேன். :)))))

      நீக்கு
  19. அனைவருக்கும் காலை வணக்கம். அனாதை நாய்கள்−தலைப்பு திடுக்கிட வைத்தது. ஶ்ரீராமுக்கு என்ன கோபம்? என்று தோன்றியது. மனிதாபிமானமிக்க, நெகிழ்ச்சியூட்டும் தலைப்பிற்கு வேறு தலைப்பு கொடுத்திருக்கலாமோ?
    திரைக்கவிதைகள் சிறப்பு.
    இந்த மாத இறுதியில் சென்னை வநதாலும் வருவேன், அதுவரை புத்தக கண்காட்சி இருக்கும் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த திடுக்கிடல்தான் படிக்க வைக்கும்.  நீங்கள் திடுக்கிட்டது எனக்குப் பிடித்திருக்கிறது!  பதிவைப் படித்ததும் பதிவு அப்போது இன்னும் மனதில் நன்றாய் ஒட்டும்.  தலைப்பைப் பார்க்கும்போது உள்ளடக்கம் சட்டெனப் புரியக்கூடாது!  அலுவலகத் தபாலில் சப்ஜெக்ட் எழுதுவது போல ஆகிவிடும்!

      நீக்கு
  20. இந்த கார போளி போல மஹா ப்ராடு உலகத்துல கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வேறு ஏதோ எதிர்பார்த்து சென்றிருப்பீர்கள் போல..   அதுதான்!!!

      நீக்கு
  21. இந்த கார போளி போல மஹா ப்ராடு உலகத்துல கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் நானும் சென்றமுறை இன்னொரு அடையார் ஆனந் பவனில் காரபோளி சாப்பிட்டிருக்கிறோம்!  சாப்பிட்டுவிட்டு ஜீவி ஸார் வீடு சென்றோம்!

      நீக்கு
  22. இந்த கார போளி போல மஹா ப்ராடு உலகத்துல கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'இந்த' என்கிற வார்த்தைக்கு விசேஷ அர்த்தம் ஏதும் உண்டா?!!!

      நீக்கு
    2. முக்கா, முக்கா 3 தரம் அப்பாதுரைக்கு! இஃகி,இஃகி,இஃகி! எனக்கெல்லாம் இந்த மாஜிக் வரதில்லை. கருத்துக் காணாமல் போறது தான் நடக்கும். :)))

      நீக்கு
  23. தென்றல் வந்து தழுவியபோது 
    சிலிர்த்தது 

    திரைசீலை. 

    இன்றைய பதிவு PETA  பதிவா? 

    சொத்துரிமை பத்திரம்
    ஆதிகால மனிதனின் 
    கைநாட்டு.
     
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   ஹைக்கூ போல மிக அழகாக இரண்டு சொல்லி இருக்கிறீர்கள் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  24. பதிவில் முதலில் என்னைக் கவர்ந்தது சிலோன் வீச்சு பரோட்டா... பிறகு புத்தகங்கள்.

    ஏற்கனவே இதில் சில புத்தகங்களை வாங்கியதாக ஒருமுறை படம் போட்டிருந்தீர்களே..

    பதிப்பகங்களுக்கு செம லாபம் போலிருக்கிறதே... டிஸ்கவுன்ட் 10 சத்த்திற்கும் அதிகம் கொடுத்தார்களா? புத்தகத் திருவிழாவிற்குப் பதில் ஆன்லைனில் 20 சதம் டிஸ்கவுன்ட் கொடுத்து, வந்து கலெக்ட் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அது பெட்டராக இருக்கும். எல்லாப் புத்தகங்களையும் டிரான்ஸ்போர்ட் செய்து, ஸ்டாலுக்குப் பணம் கொடுத்து, ஆட்களை உட்கார வைத்து, அதற்குமேல் பத்து சதம் டிஸ்கவுன்ட் கொடுப்பதற்குப் பதில் இதைச் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பரோட்டா.   அவ்வளவுதான் நெல்லை.  சிலோன் வீச்சு எல்லாம் இல்லை.
        அதுபோல இந்த மாதிரி ஹோட்டல்களில் பேயர் வைக்க மாட்டார்கள்.  ஆனால் பிரி பிரியாக அழகாக இருந்தது.

      இதே புத்தகங்களைதான் வாட்ஸாப் குழுவில் படம் போட்டிருந்தேன்.  மாற்றமில்லை!

      ஒன்றைத்தவிர மற்றவற்றை 20% தள்ளுபடியில் வாங்கினேன்.

      நீக்கு
  25. பெண்கள் நல்ல சேலை கடைகளை பார்த்து வாங்க முடியாத பெண்கள் போலத்தான் நானும் இந்த புத்தக கண்காட்சியை பற்றி ஒவ்வொரு வருடமும் அறியும் போது ஏங்கித்தான் போகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அந்த சமயத்தில் ஒருதரம் இந்தியா வருவதுதானே..   இப்பவும் நேரம் இருக்கிறதே..   இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் எட்டாம் தேதி வரை...   லீ மெரிடியனில் ரூம் புக் செய்யவா...

      நீக்கு
  26. நீங்கள் வாங்கின மரத்தில் பால்ரஸ் குண்டுகள் உள்ள விளையாட்டுப் பொருளை என் மனைவிக்கு ஒரு மாத்த்திற்கு முன் வாங்கிக் கொடுத்தேன். அநியாயத்துக்கு சுலபமா இருக்கு. அம்மா பஹ்ரைன் வந்திருந்தபோது பிளாஸ்டிக்கில் கொஞ்சம் கடினமான இதே விளையாட்டுப் பொருளைக் கொடுத்து அனைத்தையும் நடுவில் கொண்டுவந்தால் பரிசு தருகிறேன் என்றேன்... அம்மா ஆர்வத்தோடு முடித்துவிட்டு, எங்கே கிஃப்ட் என்று கேட்டது நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ரொம்ப சுலபமாக கொண்டு வந்து விட முடிகிறது.  இதைப் பார்க்கும்போது சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா ஞாபகம் வருகிறது.  ஹாஜா ஷெரிஃப் அவர் கையில் இதைத்தர, அவர் அதைச அவ ஜாக்கிரதையுடன் வாங்கி வந்து திண்ணையில் அமர்வார்!   செம நடிப்பு!

      நீக்கு
  27. நாய்கள் - சில சமயம் தனக்கான இடத்திற்காக போராடுவது பார்த்தாலே பரிதாபம் தான்.

    புத்தக சந்தை - நன்று. இங்கேயும் தற்போது ஒரு விழா தொடங்கி இருக்கிறது. ஒன்றாம் தேதி ஆரம்பித்து இருக்கிறார்கள். முடிந்தால் இந்த வார இறுதியில் செல்ல வேண்டும். சென்றால் தகவல்கள் பகிர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கும் சேர்ந்ததுதான் இந்த உலகம் என்பதை மனிதன் மறந்து விடுகிறான்.  அல்லது தெரியாதது போல இருக்கிறான் 

      டெல்லி பிரகதி மைதான் கண்காட்சி பற்றி என் நண்பன் ஒருவன் முன்னரே அடிக்கடி சிலாகித்துச் சொல்லி இருக்கிறான்.  சுஜாதா கூட தனது 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதி இருக்கிறார்.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  28. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் எங்கெங்கும் வாழ்க..
    நன்மைகள் என்றென்றும் சூழ்க..

    பதிலளிநீக்கு
  29. இப்படித்தான் ஆதரவற்று அலையும் நாய் பூனைகளைக் குறித்து இரக்கம் கொள்வதுண்டு..

    இருபதாண்டுகளுக்கு முன்பு
    இங்கே - பிள்ளைகளைப் பெற்ற பூனை ஒன்று காரில் அடிபட்டு போய்ச் சேர்ந்து விட்டது.. அவற்றின் மீது பரிவு கொண்டு பால் ஊற்றி வைத்தும் உணவகத்தில் இருந்து இறைச்சித் துணுக்குகளைக் கொண்டு வந்து போட்டும் ஆதரித்தேன்..

    பூனைக் குட்டிகள் வளர்ந்து விட்ட நிலையில் மேல் தளத்திற்கு வந்து சமையல் அறைக்குள் புகுந்து உருட்ட ஆரம்பித்து விட்டன...

    என் மீது பழி வந்து சேர்ந்தது.. செபாஸ்டியன் என்ற மலையாளி நேரிடையாக சத்தம் போட்டான்.. போடா.. சரிதான்.. என்று போய்விட்டேன்...

    அடுத்த சில நாட்களில் பூனைக் குட்டிகளைக் காண இயலவில்லை.. யாரோ சொன்னார்கள் என்று போய்ப் பார்த்தால் குப்பைக் கிடங்கின் இடுக்கில் அருகில் நெருங்க முடியாதபடிக்குக் குற்றுயிராய் உடல் அழுகிக் கிடந்தன..

    அப்புறம் தான் தெரிந்தது அவற்றின் மீது வெந்நீரைப் பிடித்து ஊற்றியவன் செபாஸ்டியன் என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ...   படிக்கவே கொடூரமாய் இருக்கிறது.

      நீக்கு
    2. கும்பளங்காய்க்குள் வெடியை வைத்து யானையின் தாடையைப் பிளந்து கொன்றவர்களையும் -

      டயரைத் தீவைத்துக் கொளுத்தி வழித் தடத்தில் வந்த யானையின் மீது எறிந்து யானையைக் கொலை செய்தவர்களையும் கொண்டது இந்த நாடு...

      நாமெல்லாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஸ்ரீராம்..

      நீக்கு
    3. ஆமாம்.  நீங்கள் சொல்லி இருப்பதில் இரண்டாவது சம்பவம் பற்றிய காணொளி வந்தபோது அதைப் பார்க்கவே மனம் வரவில்லை.  பார்க்கவும் இல்லை.  

      நீக்கு
  30. புத்தக நிலை வேதனையே....

    விளையாட்டு பொருட்கள் அவ்வளவு தானா...?

    A2B...? பாஸ் வாழ்க...!

    பதிலளிநீக்கு
  31. 2இது வரை புத்தக சந்தைகளுக்குச் சென்றது கிடையாது இருக்கும்புத்தகங்களே படிக்கப்படாமல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  32. அநாதை நாய்களைபற்றிய ஆதங்கம் ஏனோ அனாதை மனிதர்களுக்கு கிடைப்பதில்லை

    பதிலளிநீக்கு
  33. நன்றியுள்ளதை நன்றியோடு நினைப்போம்.

    பதிலளிநீக்கு
  34. பின்னூட்டங்களில் ஆறே ஆறு பேர் பெயருக்கு புத்தகக் கண்காட்சியைத் தொட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தளத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதும் தம்பி துரை செல்வராஜ் புத்தகக் கண்காட்சியைக் கண்டு கொள்ளவே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.

    (வித்தியாசமாக பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்ததின் விளைவு! )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் எல்லா விஷயங்கள் பற்றியும் பேசி விடுவதில்லை.  ஏதாவது பேசுவதற்கு இருக்க வேண்டுமே என்றுதான் கதம்பமாக சிலபல விஷயங்களை போட்டு விடுவது !

      நீக்கு
    2. அன்பின் ஜீவி அண்ணா அவர்களது கருத்துரை கண்டு திகைத்தேன்...

      அது பற்றிச் சொல்வதற்கு எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை...
      இரண்டாண்டுகளுக்கு முன் தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கியரும் அரங்குகளைப் படம் எடுத்ததும் நினைவுக்கு வருகின்றன..ஆனால் அந்தப் படங்களைப் பதிவிட முடியவில்லை...

      சென்னைக்கு முதன்முதலாக 1981 ல் வந்தபோது மணிமேகலைப் பிரசுரம், கண்ணதாசன் பதிப்பகம், வானதி இதெல்லாம் நேரில் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தியதும் நினைவுக்கு வருகின்றது...

      எல்லாவற்றையும் எழுத இயலவில்லை.. நடுநிசியை நெருங்குகின்றது நேரம்...

      நீக்கு
    3. என் பின்னூட்டம் பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி, தம்பி.
      பாம்பறியும் பாம்பின கால் என்பார்கள். எழுத்தாளனுக்கு எதில் உண்மையான ஆர்வம் என்று சொல்லித் தெரிவதில்லை.. ஆதங்கமாக வெளிப்பட்டதை அதே அலைவரிசையில் புரிந்து கொண்டு பதிலளித்ததில் மனம் இலேசானது. நன்றி.

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    தெரு நாய்களின் நிலைமை பாவந்தான். நீங்கள் முக நூலில் எழுதிய மழையில் அவதியுற்ற நாய்கள் மிக பாவம். அதன் நிலை குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள். இப்போதும் இங்கு வீட்டருகில் சில நாய்குட்டிகள் படும் அவஸ்தைகளை காண்கிறேன். நான் இங்கு வரும் போது அது ஒன்றுக்கொன்று விளையாடியபடி நான்கு இருந்த நிலையில், இப்போது ஒன்றுதான் உள்ளது.அதையும் இன்று பார்க்கவில்லை அதற்கும் என்னவாயிற்றோ என மனம் கலக்கமுறுகிறது.

    அதென்னவோ எனக்கும் உங்கள் வியாழன் பதிவுக்கும் ஒரு ராசி உள்ளதாக உணர்கிறேன். நான் நினைப்பது வியாழனில், உங்கள் பதிவாக வருகிறது. ஒருவாரம், அடைசல் வீடு, இதோ இந்த வாரம் இந்த நாய்கள் பதிவு. நிறைய தடவைகள் இதுபோல்தான்...

    திரைச்சீலை கவிதைகள் அருமை.ரசித்தேன்.

    கல்யாண வீட்டின் சப்தம் அங்கு கொரோனா வராமல் விரட்டவோ என்னவோ:)

    சிலைகள் பேசிக் கொள்வதும் அழகு. நானும் இப்படித்தான் யோசிப்பேன்.

    அந்த ஒரு கை மிகவும் பயமுறுத்துகிறது.

    புத்தகங்கள் அனைத்தும் பார்க்க நன்றாக உள்ளது. படிக்கவும் தோன்றுகிறது. ஆனால் முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை கையில் அதை முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன். இப்போது படிப்பதற்குத்தான் முன்பு போல் கவலையில்லா நேரம் இல்லை. இரண்டு அத்தியாயங்கள் வாசிக்கும் போது மனம் அதில் ஒரு நிலைப்பட மறுக்கிறது. புத்தக கண்காட்சி நீங்கள் எப்போதும் சென்று விடுகிறீர்கள். உங்களுக்கு புத்தகத்தின் மேலிருக்கும் ஆவலுக்கு மனமார்ந்த பாராட்டுகள். கதம்பம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யம்தான் கமலா அக்கா..  சில சமயங்களில் நீங்கள் நினைப்பதே இங்கு பதிவாவது.  எண்ண அலைகள் ஒத்துப்போகிறதோ...அனைதஹியும் ரசித்துக் கருத்துத் தெரிவித்திருப்பப்பதற்கு நன்றி.  ஏற்கெனவே படிக்காத புத்தகங்கள் இருக்க, மறுபடி புத்தகக் கண்காட்சி செல்லக்கூடானது என்று நினைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

      நீக்கு
  36. ஆதரவற்ற நாய்களின் நிலைமை பரிதாபம். ஒதுங்க இடமற்று அல்லாடிய நாய்களைப் பற்றிய பகிர்வு நெகிழ்வு. மக்கள் கூட்டமோ, விற்பனையோ அதிகம் இன்றி சோர்வாகக் காணப்படும் புத்தகக் கண்காட்சி வருத்தம் அளிக்கிறது. பெரிய அளவில் நடைபெறும் வேளையிலாவது நிலைமை சீராகும் என நம்புவோம். தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!