சனி, 26 நவம்பர், 2022

அண்டார்டிகாவில் மானசா மற்றும் நான் படிச்ச கதை

 

 








சிங்கப்பூர்: சென்னையைச் சேர்ந்த மானசா கோபால் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவில் உள்ள வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.   நான்கு கண்டங்கள், 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து அவர் உணவு டெலிவரி செய்துள்ளார். இது உணவு டெலிவரிக்காக மேற்கொள்ளப்பட்ட உலகின் மிக நீண்ட பயணம் ஆகும். தன்னுடைய பயணத்தை வீடியோவாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  கையில் உணவுப் பையுடன் சிங்கப்பூரிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறார் மானசா கோபால். விமானம் மூலமாக ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகருக்குச் செல்கிறார். அங்கிருந்து அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் செல்கிறார். பிறகு அங்கிருந்து உசுவையா நகருக்கு செல்கிறார். இறுதியில் அங்கிருந்து அண்டார்டிகாவுக்கு விமானம் ஏறுகிறார். பனி மலையின் மீது நடந்து இறுதியில் வாடிக்கையாளரின் முகவரியை அடையும் மானசா, உணவுப் பையை அவரிடம் ஒப்படைக்கிறார்.  சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்த மானசா, உலக நாடுகளுக்குப் பயணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்டார்டிகாவுக்கு செல்ல விரும்புவதாகவும் அதற்கு நிதி திரட்டிக் கொண்டிருப்பதாகவும் சென்ற ஆண்டு அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில், ஃபுட் பாண்டா என்ற உணவு டெலிவரி நிறுவனம் அவருக்கு அண்டார்டிகாவுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

========================================================================================================================

நான் படிச்ச கதை (JK)

காட்டில் ஒரு மான்

- அம்பை -

முன்னுரை.

பெண்ணியக் கோட்பாட்டை வலியுறுத்தும் முக்கிய பெண் எழுத்தாளராக அறியப்படுபவர் அம்பை. அவரின் கதைகளானகாட்டில் ஒரு மான்”, “அம்மா ஒரு கொலை செய்தாள்”, “அடவிஆகிய கதைகளைப் பல விமரிசகர்களும்  சிறந்த கதைகள் என்று சிபாரிசு செய்கின்றனர். எஸ்ராவும் அப்படியே.

காட்டில் ஒரு மான்கதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஒரு அவார்டு திரைப்படம் போன்று, கதை எங்கே என்று கேட்க வைக்கும். கொஞ்சம் போரடிக்கும், இரண்டாவது வாசிப்பில் கொஞ்சம் புரியும். மூன்றாவது வாசிப்பில்தான் ஆசிரியரின் உள்ளக் கிடக்கைகளை புரிந்து கொள்ள முடியும். பொறுமை வேண்டும். .

இந்தக் கதை அம்பையின் சொந்தக் கதையாகத் தான்  எனக்குத் தோன்றுகிறது. முழுக் கதையும்  தரப்பட்டுள்ளது. தங்கம் அத்தை போன்று அம்பைக்கும் குழந்தைகள் இல்லை.

காட்டில் ஒரு மான்

அம்பை

அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வரைவாள் வார்த்தைகளில். இரவு நேரமா, அந்த பழைய வீட்டுக்கூடமா, கூடப்படுத்த சித்தி மாமா குழந்தைகளின் நெருக்கமா என்னவென்று தெரியவில்லை. அந்த கதைகள் வண்டின் ரீங்காரமாய் மனதில் ஒரு மூலையில் ஒலியுடன் சுழன்றவாறிருக்கின்றன.

தங்கம் அத்தை அந்த பழைய தூண்களும் நடுக்கூடமும் உள்ள வீட்டில் பல பிம்பங்களில் தெரிகிறாள். பெரிய மரக்கதவின் மேல் சாய்ந்தவாறு. அகல் விளக்கை புடவை தலைப்பால் மறைத்தபடி ஏந்தி வந்து புறையில் வைத்தபடி. தன் கணவன் ஏகாம்பரத்துக்குச் சோறிட்டவாறு. கிணற்றுச் சுவரில் ஒரு காலை வைத்து கயிற்றை இழுத்துக் கொண்டு. செடிகளுக்கு உரமிட்டவாறு.

தங்கம் அத்தை அழகுக் கறுப்பு. நீவி விட்டாற்போல் ஒரு சுருக்கமும் இல்லாத முகம்., முடியில் நிறைய வெள்ளி. அத்தை வீட்டில் காலால் அழுத்தி இயக்கும் அந்தக் கால ஹார்மோனியம் உண்டு. அத்தைதான் வாசிப்பாள். தேவாரப்பாடல்களிலிருந்து வதனமே சந்திரபிம்பமோ, வண்ணான் வந்தானே வரை மெல்லப்பாடியவாறு வாசிப்பாள். கறுப்பு அலகுகள் போல நீள விரல்கள் ஹார்மோனியக்கட்டைகளின் மேல் கறுத்தப்பட்டாம்பூச்சிகள் மாதிரிப் பறக்கும்.

தங்கம் அத்தையைச்சுற்றி ஒரு மர்ம ஓடு இருந்தது. மற்றவர்கள் அவளைப்பார்க்கும் கனிவிலும், அவளைத் தடவித் தருவதிலும், ஈரம் கசியும் கண்களிலும் அனுதாபம் இருந்தது. ஏகாம்பர மாமாவுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அத்தையை அவர் பூ மாதிரி அணுகுவார். அவர் அத்தையை டா போட்டு விளித்து யாரும் கேட்டதில்லை. தங்கம்மா என்று கூப்பிடுவார். அப்படியும் அத்தை ஒரு புகைத்திரைக்குப்பின் தூர நிற்பவள் போல் தென்பட்டாள். முத்து மாமாவின் பெண் வள்ளிதான் இந்த மர்மத்தை உடைத்தாள். அவள் கண்டுபிடித்தது புரிந்தும் புரியாமலும் இருந்தது. வள்ளியின் அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம்.

அப்படின்னா ?’என்று எங்களில் பலர் கேட்டோம்.

வள்ளி தாவணி போட்டவள். ‘அப்படின்னா அவங்க பெரியவளே ஆகலை என்றாள்.

முடியெல்லாம் நெறய வெளுத்திருக்கே ?’

அது வேற

அதன்பின் அத்தையின் உடம்பை உற்றுக் கவனித்தோம். ‘பூக்காதஉடம்பு எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தோம். அவள் உடம்பு எவ்வகையில் பூரணமடையவில்லை என்று தெரியவில்லை. ஈரத்துணியுடன் அத்தை குளித்துவிட்டு வரும்போது அவள் எல்லோரையும் போலத்தான் தெரிந்தாள். முடிச்சிட்ட சிவப்பு ரவிக்கையும், பச்சைப் புடவையும், முடிந்த தலையுமாய் அவள் நிற்கும்போது அவள் தோற்றம் வித்தியாசமாய்த் தெரியவில்லை. பறவையின் உடைந்த சிறகு போல, அது வெளிப்படையாகத் தெரியாத பொக்கையா என்று புரியவில்லை.

ஒரு மாலை, பட்டுபோன பெரிய மரத்தைத் தோட்டத்தில் வெட்டினார்கள். கோடாலியின் கடைசி வெட்டில் அது சரசரவென்று இலைகளின் ஒலியோடு மளுக்கென்று சாய்ந்தது. குறுக்கே வெட்டியபோது உள்ளே வெறும் ஓட்டை. வள்ளி இடுப்பில் இடித்து, ‘அதுதான் பொக்கைஎன்றாள். பிளவுபட்டு, தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்திக்கொண்டு, உள்ளே ஒன்றுமில்லாமல் வான் நோக்கிக் கிடந்த மரத்துடன் அத்தையின் மினுக்கும் கரிய மேனியை ஒப்பிடமுடியவில்லை.

எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது? அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது? வெய்யில் காலத்தில் அத்தை, மத்தியான வேளைகளில் ரவிக்கையை கழற்றிவிட்டு, சாமான்கள் வைக்கும் அறையில் படுப்பாள். அவளருகில் போய்ப்படுத்து, ரவிக்கையின் இறுக்கத்தினின்றும் விடுபட்ட மார்பில் தலையை வைத்து ஒண்டிக்கொள்ளும் போது அவள் மென்மையாக அணைத்துக்கொள்வாள். மார்பு, இடை, கரங்களில் பத்திரப்பட்டுப் போகும்போது எது பொக்கை என்று புரியவில்லை. மிதமான சூட்டுடம்பு அவளுடையது. ரசங்கள் ஊறும் உடம்புடையவளாகப்பட்டாள். சாறு கனியும் பழத்தைப்போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில். அதன் உயிர்ப்பிக்கும் துளிகள் எங்கள் மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில், வருடலில், எண்ணை தேய்க்கும் போது படும் அழுத்தத்தில், அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப்போல் உயிர் வேகம் தாக்கியது. அவள் கைபட்டால் தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன. அவளுடைய கை ராசியானது என்பாள் அம்மா. தங்கச்சி பிறந்தபோது அத்தை வந்திருந்தாள். ‘அக்கா, என் பக்கத்தில இருக்கா. என்னைத் தொட்டுக்கிட்டே இரு. அப்பத்தான் எனக்கு வலி தெரியாது என்று அம்மா முனகினாள், அறையை விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது. கதவருகே வந்து திரும்பிப் பார்த்தபோது தங்கமத்தை அம்மாவின் உப்பிய வயிற்றை மெல்ல வருடியபடி இருந்தாள்.

ஒன்றும் ஆகாது, பயப்படாதே என்று மெல்லக் கூறினாள்.

அடியக்கா, ஒனக்கொரு…’ என்று முடிக்காமல் விம்மினாள் அம்மா.

எனக்கென்ன? ராசாத்தியாட்டம், என் வீடெல்லாம் புள்ளைங்க’ என்றாள் அத்தை. ஏகாம்பர மாமாவின் இளைய மனைவிக்கு ஏழு குழந்தைகள்.

இப்படி ஒடம்பு திறக்காம…’ என்று மேலும் விசும்பினாள் அம்மா.

ஏன், என் ஒடம்புக்கு என்ன? வேளாவேளைக்குப் பசிக்கலையா? தூக்கமில்லையா? எல்லா ஒடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்கு. அடிபட்டா வலிக்குது. ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தா சீ வடியுது. சோறு திண்ணா செரிக்குது. வேற என்ன வேணும் ?’ என்றாள் அத்தை.

அம்மா அவள் கையைப் பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.

ஒன் உடம்பைப் போட்டு ரணகளமாக்கி…: என்று அந்த கையை பற்றியவாறு அரற்றினாள்.

அத்தையின் உடம்பில் ஏறாத மருந்தில்லை என்று வள்ளியின் அம்மா வள்ளியிடம் சொல்லியிருந்தாள். ஊரில் எந்தப் புது வைத்தியன் வந்தாலும் அவன் குழைத்த மருந்து அத்தைக்கு உண்டு. இங்கிலீஸ் வைத்தியமும் அத்தைக்குச் செய்தார்களாம். சில சமயம் மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு அத்தை அப்படி ஒரு தூக்கம் தூங்குவாளாம். வேப்பிலையும், உடுக்குமாய் சில மாதங்கள் பூசைகள் செய்தார்களாம். திடீரென்று பயந்தால் ஏதாவது நேரலாம் என்று ஒரு முன்னிரவு நேரம் அத்தை பின் பக்கம் போனபோது கரிய போர்வை போர்த்திய உருவம் ஒன்று அவள் மேல் பாய்ந்ததாம். வீரிட்ட அத்தை துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க விழுந்து விட்டாளாம். அவள் நெற்றி முனையில் இன்னமும் அதன் வடு இருந்தது. அடுத்த வைத்தியன் வந்தபோது, ‘என்னை விட்டுடுங்க. என்னை விட்டுடுங்கஎன்று கதறினாளாம் அத்தை. ஏகாம்பர மாமாவுக்கு வேறு பெண் பார்த்தபோது அத்தை அன்றிரவு அரளி விதைகளை அரைத்துக் குடித்துவிட்டாளாம். முறி மருந்து தந்து எப்படியோ பிழைக்கவைத்தார்களாம். ‘உன் மனசு நோக எனக்கு எதுவும் வேண்டாம்என்று மாமா கண் கலங்கினாராம். அதன் பின் அத்தையே அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாள். அப்படித்தான் செங்கமலம் அந்த வீட்டுக்கு வந்தாள். எல்லாம் வள்ளி சேகரித்த தகவல்கள்.

அத்தை தன் கையை அம்மாவின் பிடியிலிருந்து விலக்காமல் இன்னொரு கையால் அம்மாவின் தலையை வருடினாள். ‘வுடு, வுடு. எல்லாத்தையும் வுடு. புள்ளைபொறக்கற நேரத்தில ஏன் கதையை எடுக்கிற?’ என்றாள். அன்றிரவுதான் தங்கச்சி பிறந்தாள். அதன் பின் ஊருக்கு ஒரு முறை போனபோதுதான் அத்தை அந்தக் கதையைச் சொன்னாள்.

மழைக்காலம். இரவு நேரம். கூடத்தின் ஒரு பக்கம் ஜமக்காளத்தை விரித்து, எண்ணைத்தலைப் பட்டு கரைபடிந்த தலையணை உரைகளோடு இருந்த சில தலையணைகளை போட்டாகி விட்டது. சில தலையணைகளுக்கு உரையில்லை. அழுத்தமான வண்ணங்கள் கூடிய கெட்டித்துணியில் பஞ்சு அடைத்திருந்தது. ஆங்காங்கே பஞ்சு முடிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவை நிதம் உபயோகத்திலிருக்கும் தலையணைகள் அல்ல. விருந்தினர் வந்தால், குழந்தைகளுக்குத் தர அவை. நாள் முழுவதும் விளையாடிவிட்டு, வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு படுத்தவுடன் உறங்கிவிடும் குழந்தைகளுக்கு முடிச்சுகள் உறைக்கவா போகிறது ?

சமையலறை அலம்பி விடும் ஓசை கேட்டது. சொம்பின் ணங்கென்ற சத்தமும், கதவின் கிரீச்சும், தென்னந் துடைப்பம் அதன் பின் வைக்கப்படும் சொத்தென்ற ஒலியும் கேட்டது. தகர டப்பா கிரீச்சிட்டது. கோலப்பொடி டப்பா. அடுப்பில் கோலம் ஏறும். அதன் பின் சமயலறைக் கதவை அடைத்துவிட்டுக் கூடத்தின் வழியாகத்தான் அத்தை வருவாள். யாரும் தூங்கவில்லை. காத்திருந்தனர்.

அத்தை அருகில் வந்ததும், சோமுதான் ஆரம்பித்தான்.

அத்தே, கதை சொல்லேன்அத்தே

தூங்கல நீங்க எல்லாம்?’

நின்று பார்த்துவிட்டு, அருகில் வந்து அமர்ந்தாள். காமாட்சியும் சோமுவும் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் இரு தொடைகளிலும் தலை வைத்துப்படுத்து அண்ணாந்து அவளைப் பார்த்தனர். மற்றவர்கள் தலையணைகளில் கைகளை ஊன்றிக் கொண்டனர்.

அத்தை களைத்திருந்தாள். நெற்றியில் வேர்வை மின்னியது. கண்களை மூடிக்கொண்டு யோசித்தாள்.

அது ஒரு பெரிய காடு…’ என்று ஆரம்பித்தாள்.

அந்தக் காட்டில எல்லா மிருகங்களும் சந்தோசமாய் இருந்தது. காட்டில பழ மரமெல்லாம் நெறய இருந்தது. ஒரு சின்ன ஆறு ஓடிச்சு ஒரு பக்கம். தாகம் எடுத்துச்சின்னா அங்க போயி எல்லாம் தண்ணி குடிக்கும். மிருகங்களுக்கு எல்லாம் என்னவெல்லாம் வேணுமோ எல்லாம் அந்த காட்டில சரியா இருந்தது. அந்தக் காட்டில வேடன் பயமில்லை. திடார்னுட்டு அம்பு குத்துமோ, உசிரு போகுமோன்னு பயமேயில்லாம திரிஞ்சிச்சுங்க அந்த மிருகங்க எல்லாம். எல்லா காடு மாதிரியும் அங்கயும் காட்டுத்தீ, வெளி மனுசங்க வந்து மரம் வெட்டறது, பழம் பறிக்கிறது, திடீர்னு ஒரு ஆளு வந்து பட்சிங்கள சுடுறது, ஓடுற பன்னியை அடிக்கிறது அதெல்லாம் இல்லாம இல்ல. இருந்தாலும், அங்க இருந்த மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் பழகிப்போன காடு அது. ஆந்தை எந்த மரத்தில உக்காரும், ராத்திரி சத்தமே இல்லாம காடு கிடக்கிறபோது எப்படி அது கத்தும், எந்த கல்லுமேல ஒக்காந்துகிட்டு தவளை தின்னுட்டு களகளன்னு தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் போடும், எந்த இடத்தில மயிலாடும் என்று எல்லாம் தெரிஞ்சு போன காடு.

இப்படி இருக்கிறப்போ ஒரு மான் கூட்டம் ஒரு நா தண்ணி குடிக்கப் போச்சுது. அதுல ஒரு மான் தண்ணி வழியா போனப்போ விலகிப் போயிடிச்சு. திடீர்னு அது வேற காட்டில இருந்திச்சி. பாதையெல்லாம் இல்லாத காடு. மரங்கள்ல எல்லாம் அம்பு பாஞ்ச குறி இருந்தது. அந்தக் காட்டில ஒரு அருவி ஜோன்னு கொட்டிச்சு. யாருமே இல்லாத காடு மாதிரி விரிச்சோன்னுட்டு இருந்தது. மானுக்கு ஒடம்பு வெடவெடன்னு நடுங்கிச்சி. இங்கயும் அங்கயும் அது ஓடிச்சி. அந்த பழகின காடு மாதிரி இது இல்லயேன்னுட்டு அலறிட்டே துள்ளித் துள்ளிக் காடெல்லாம் திரிஞ்சிச்சு. ராத்திரியாச்சு. மானுக்கு பயம் தாங்கல. அருவிச் சத்தம் அதை பயமுறுத்திச்சு. தூரத்தில ஒரு வேடன் நெருப்பை மூட்டி அவன் அடிச்ச மிருகத்தை சுட்டுத் தின்னுட்டு இருந்தான். அந்த நெருப்புப்பொறி மான் கண்ணுக்குப் பட்டது. அது ஒளிஞ்சிக்கிட்டது. தனியாக் காட்டைச் சுத்திச் சுத்தி வந்து களைச்சிப் போய் அது உக்காந்துகிட்டது.

இப்படி நெறய நாளு அது திரிஞ்சுது. ஒரு நா ராத்திரி பெளர்ணமி. நெலா வெளிச்சம் காட்டில அடிச்சது. அருவி நெலா வெளிச்சத்தை பூசிக்கிட்டு வேற மாதிரி ரூபத்தில இருந்திச்சு. பயமுறுத்தாத ரூபம். நெலா வெளிச்சம் மெத்து மெத்துன்னுட்டு எல்லாத்தையும் தொட்டுது. திடீர்னு மந்திரக்கோல் பட்டமாதிரி அந்த மானுக்கு பயமெல்லாம் போயிடிச்சு. அந்தக் காடு அதுக்கு பிடிச்சுப் போயிடிச்சு. காட்டோட மூலை முடுக்கெல்லாம் அதுக்கு புரிஞ்சிப் போயிட்டது. வேறு காடாயிருந்தாலும் இந்தக் காட்டிலேயும் எல்லாம் இருந்துச்சு. அருவி இருந்துச்சு, மரம், செடி எல்லாம் இருந்தது. மொள்ள மொள்ள மிருகங்க பட்சிக எல்லாம் அது கண்ணுல பட்டுது. தேன் கூடு மரத்தில தொங்கறது தெரிஞ்சிது. நல்லா பச்சப்பசேலுன்னு புல்லு தெரிஞ்சிது. அந்த புதுக்காட்டோட ரகசியமெல்லாம் அந்த மானுக்கு புரிஞ்சிடிச்சு. அதுக்கப்பறமா, பயமில்லாம, அந்த மானு அந்தக் காடெல்லாம் சுத்திச்சு. பயமெல்லாம் போயி சாந்தமா போயிடிச்சு

கதையை முடித்தாள் அத்தை. கூடத்தின் மற்ற பகுதிகள் இருண்டிருந்தன. இந்த பகுதியில் மட்டும்தான் வெளிச்சம். இருண்ட பகுதியை காடாய் கற்பனை செய்து, கதைக்கேட்ட குழந்தைகள் அந்தமானுடன் தோழமை பூண்டு முடிவில் சாந்தப்பட்டு போயினர். தலையணைகளை அணைத்து உறங்கிப் போயினர். நீலமும் மஞ்சளும் கறுப்பும் கலந்த முரட்டுத்துணி தலையணையில் சாய்ந்து, ஒற்றைக்கண்ணைத் திறந்து, உறக்கக் கலக்கத்தில் பார்த்தபோது, எங்கள் நடுவே, இரு கைகளையும் மார்பின் மேல் குறுக்காகப் போட்டு தன் தோள்களை அணைத்தவாறு, முட்டியின்மேல் சாய்ந்து கொண்டு தங்கமத்தை உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

- அக்டோபர் 94

கதையின் சுட்டிகள்.

அழியாச்சுடர்கள்

வலைத்தமிழ்

ஒரு விமரிசனக் கட்டுரை.

நிசப்தம் சுட்டி

கதைக் கருவை உருவகமாக்கித் தலைப்பிலே தரும் உத்திகாட்டில் ஒரு மான்சிறுகதைத் தலைப்பில் காணலாம்….. இக்கதை ஒரு பெண்ணால் அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது. அந்த மானைப் போன்றவள்தான் அந்தப் பெண்ணும். மணமான அவளுக்குக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவளால் அனைவரிடமும் அன்பு செலுத்த முடியும். நல்ல எண்ணங்கள் கொண்ட அவள் குழந்தைப் பேறில்லாத ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் என்னென்ன பழிகள் உண்டாகும் என்பதை அறிந்து கொண்டவளாய் இருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தாள். எல்லாக் குழந்தைகளையும் அன்புடன் நேசித்தாள். பிள்ளை பெறாதவள் என்று கூறும் இச்சமுதாயத்தைத் தன் உள்ள உறுதியால் வென்று அந்த மான் போல் அச்சமின்றி வாழ்கிறாள் என்பதை உருவகமாக இச்சிறுகதை உணர்த்துவதைக் காணலாம்…tamilvu.org

காட்டிலே ஒரு மான் கதையும் அம்மா ஒரு கொலை செய்தாள் கதையும் ஒரே நிகழ்வின் இருநிலைகளைப் பேசுகின்றன. அம்மா ஒரு கொலை செய்தாள் கதையில் பூப்பு எய்திய பெண் அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறாள். அம்மா தன்னை ஆற்றுப்படுத்துவாள் எனக் காத்திருக்கிறாள். ஆனால் ஊரிலிருந்து வந்த அம்மாவோ இந்த இழவுக்கு என்னடீ அவசரம், இதுவேற இனிமே ஒரு பாரம் என்று குற்றம் சாட்டுகிறாள். ஈரமில்லாத சொற்கள் பட்டாக் கத்தியாய் அவளுக்குள் சொருகுகின்றன எனக் கதை முடிகிறது.

பூப்பு எய்திய சிறுமியும் பூப்பு எய்யாத அத்தையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தானே.        வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்எஸ். ராமகிருஷ்ணன்

நான் நினைத்த விமரிசனக் கருத்துகள் பலவும் முன்னரே வலையில் வந்து விட்டன. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் தீராமல் இருந்தது.

திருமணம் என்பது சந்ததிகள் உண்டாகவும் தானே? பூப்படையாத பெண்ணை முதல் தாரமாக திருமணம் செய்து கொடுப்பார்களா?

முதல் மனைவி இறந்தபின் குழந்தைகளை வளர்த்தியெடுக்க இரண்டாம் தாரமாக பூப்படையாத பெண்ணை திருமணம் செய்து கொண்டவரை நான் அறிவேன்.

இக்கேள்விக்கு அம்பையே பதில் தருகிறார்.

அம்பை தன் பார்வையை இவ்வாறாக முன்வைக்கிறார் "என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ளஉண்மைகளைபற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்தஉண்மையின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம்." (இயல்விருது ஏற்புவிழா)

"அம்பையின் சிறுகதைகளை பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களை தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன" என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

ஆசிரியர்


இயற் பெயர் லட்சுமி. கோயம்புத்தூரில் நவம்பர் 17, 1944 அன்று பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் , வரலாற்றில் முதுகலைப் பட்டமும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமெரிக்கன் ஸ்டடீசில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

1967-இல் கணையாழி பத்திரிகையில் வெளியான சிறகுகள் முறியும் என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதை.

2021-க்கான சாகித்ய அகாடெமி விருது பெற்றவர்.

40 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..  வணக்கம்.  நேற்று காணோமே...

      நீக்கு
    2. நேற்று பூராவும் உள்ளூர் பயணத்தில் இருந்தேன். தோழர் கே.சி.எஸ்.அருணாசலத்தின் ' சின்னச் சின்ன மூக்குத்தியாம்' பாடலை நெடு நாட்களுக்குப் பிறகு கேட்டு ரசித்ததோடு சரி. தோழர் ஜே.கே.யின்
      தென்னங்கீற்று சோலை'யிலும் சுற்றித் திரிந்து உன்மத்தம் கொண்டேன். பின்னூட்டங்களோடு நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாதது ஒரு குறை தான்.

      நீக்கு
    3. * உள்நாட்டுப் பயணம் கிட்டத்தட்ட 600 மைல்கள்.

      நீக்கு
  2. அம்பை எழுத ஆரம்பித்தது 'கண்ணன்' என்ற சிறுவர்கள் பத்திரிகையில். கணையாழிக்கெல்லாம் வெகு முந்தைய காலத்தது இது.

    பதிலளிநீக்கு
  3. இவரின் 'அம்மா ஒரு கொலை செய்தாள்' கதையைப் பற்றி ஏற்கனவே இதே பகுதியில் எழுதியாயிற்று.

    பதிலளிநீக்கு
  4. பிச்சை புகினும் கற்கை நன்றே.... என் மனதைத் தொட்ட நல்ல நிகழ்வு. அவர் இன்னும் மிக உயர்ந்த நிலையை அடையடும், நல்ல வாழ்க்கைத் துணையோடு

    பதிலளிநீக்கு
  5. அம்பையின் காட்டில் ஒரு மான், நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. திருப்பதி சாய் அல்லது பாலா -- யாரின் அனுபவம் இது என்று தெரியவில்லை. வாழ்க்கையை அவர் எதிர் கொண்ட பாங்கு போற்றத்தக்கது. அம்பை போன்றவர்களின் ஒரு சார்பு எழுத்தை விட வாழ்க்கைக் கல்விக்கான வாழ்ந்து காட்டிய போதனை சிறந்த படிப்பினை கொண்டது.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  வாழ்க நலம்.

      நீக்கு
  8. இன்றைய பதிவின் தலைப்பே அமர்க்களம்..

    பதிலளிநீக்கு
  9. ஊர் சுற்றிய உணவு உலகைச் சுற்ற ஆரம்பித்த விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அவருக்கு அளிக்கப்பட வாய்ப்பு!  விளம்பரமும் இருக்கிறியாது!

      நீக்கு
  10. 30 ஆயிரம் கிலோ மீட்டர் 4 கண்டங்கள் தாண்டி அதுவும் அண்டார்டிகாவிற்கு உணவு சென்றதென்றால் அது உணவாகவா இருக்கும்? எதோ செய்தி ஏதோ வாசிப்பு என்றாகிவிட்ட காலமிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் என்ன சாம்பார் சாதம், தயிர் சாதமா அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?!!!

      நீக்கு
    2. அவர் டெலிவரி செய்த உணவு என்னவாகயிருக்கும் என்று வாசகரை யூகிக்கவும் சொல்லலாம்.

      நீக்கு
    3. அந்தப் பெண் பகிர்ந்திருக்கும் வீடியோவே இருக்கு ஜீவி அண்ணா. கீழே கொடுத்திருக்கிறேன்

      கீதா

      நீக்கு
    4. Today, I did a special food delivery to Antarctica 🇦🇶 from Singapore 🇸🇬!

      I got to deliver dried and packed vegetarian snacks, tea, biscuits, crackers, and other essential food items!

      Super excited to partner with the amazing folks at @foodpandasg to pull this off, it’s not everyday that you get to deliver Singaporean flavours across 30,000+ km and 4 continents to one of the most remote places on earth!

      இது அந்தப் பெண் சொல்லியிருப்பது....

      நான் கருத்திலும் கூட பதப்படுத்தப்பட்ட உலர் பதார்த்தங்கள் பிஸ்கட்ஸ் போன்ற பதார்த்தங்கள் இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன் அவரது அனுபவத்தில் அதைச் சொல்லியிருக்கிறார்.

      கீதா

      நீக்கு
  11. இவ்வளவு தூரம் பயணித்து டெலிவரி செய்த அந்த உணவின் விலைதான் என்ன ?

    நள்ளிரவில் சூரியன் தோன்றும் நாடு நார்வே. இதை நான் 35 வருடங்களுக்கு முன்பே கல்கண்டு பத்திரிகையில் படித்து இருக்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  12. திருப்பதி சாய்க்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்டார்டிகா சென்ற பெண்ணிற்கும் வாழ்த்துகள். அம்பையின் இந்தக்கதையும் படிச்சிருக்கேன். மனது வேதனைப்படும். அம்மா ஒரு கொலை செய்தாள் கதை படிச்சு அழுதிருக்கேன். அறிவு ஜீவி எனச் சொல்லப்படும் எழுத்தாளர்.

    பதிலளிநீக்கு
  13. இது போல் பூப்படையாத பெண்ணை வைத்து "வாசந்தி"யும் ஒரு சிறுகதை எழுதி இருக்கார். கதைக்கரு நினைவில் இருக்கு. மற்றபடி கதைப்பெயர் எல்லாம்நினைவில் வரலை.

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    முதல் செய்தி மிகவும் பொடி தான எழுத்துக்கள். கைப்பேசியில் சிரமபட்டுத்தான் படிக்க வேண்டும்.

    தான் நினைத்த படிப்பை படிக்க சிரமபட்டு வெற்றி கண்ட சகோதரருக்கு வாழ்த்துகள் .

    நார்வே நாட்டின் துணை முதல்வராகி இருக்கும் சகோதரிக்கும், நீண்ட தூரங்கள் பயணித்து உணவை கொண்டு தந்த சகோதரிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய "நான் படித்த கதை" பகுதியில் எழுத்தாளர் அம்பை எழுதிய "காட்டில் ஒரு மான்" படிக்க மனது மிகவும் வேதனையுற்றது. இக்கதை ஏற்கனவே படித்திருக்கிறேனா என்பது சரியாக நினைவில் இல்லை. ஆனால் அவரின் மற்ற சில கதைகளை படித்துள்ளேன். பெண்களின் மனநிலையை துல்லியமாக படம் பிடித்து தந்த எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.

    முன்னுரை பின்னுரையுடன் இக்கதையை நம்மிடையே பகிர்ந்து கொண்ட சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் மனதை மிகவும் கவர்ந்தவர் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்லி அதை நிரூபித்த அந்த இளைஞர் பாலா??!! அவர் மேலும் மேலும் பல சிறப்புகளை அடையவேண்டும் என்று வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அண்டார்ட்டிக்கா செய்தி இணையத்தில் வாசித்தேன்....

    அண்டார்ட்டிக்கால இருக்கற பெங்க்வின் ஏதாச்சும் ஆர்டர் செய்திருக்குமோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    அங்கு தங்கியிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்காகத்தான் இருக்கும். அது சரி அங்கிருந்து தொடர்பு கொள்ள முடிகிறதே!!!! அதுவும் எல்லாமே குளிர்வித்துப் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பெம்மிக்கன், ஸ்லெட்ஜின் பிஸ்கட்டுகள் (இவை ஊட்டச்சத்து மற்றும் எனர்ஜி கொடுக்கும் பிஸ்கட்டுகள், மற்றும் சாக்லேட்டுகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் கையிருப்பு தீர்ந்திருக்குமோ?

    ஆனால் அவரது ஃபோட்டோவில் அந்தப் பையைப் பார்த்தால் சும்மா ஒரு வேளைக்கான/நாளுக்கான உணவு போலத்தான் இருக்கு....அதுவும் சிங்கப்பூரின் ஃபேமஸ் உணவு வகைன்னு...பிரயாணத்திற்கும் சேர்த்து உணவின் விலையா யம்மாடியோவ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பை எங்கே இருக்கு ஃபோட்டோவில்?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எனக்குத் தெரியலை.

      நீக்கு
    2. கீதாக்கா இங்கு பகிர்ந்த ஃபோட்டோவில் இல்லை, இணையத்தில் நான் முன்பே வாசித்துவிட்டேன் இந்தச் செய்தி, அந்தக் கட்டுரையில் ஃபோட்டோ இருக்கு...

      https://www.news18.com/news/buzz/woman-travels-30000-km-across-four-continents-to-deliver-food-from-singapore-to-antarctica-6419677.html

      இங்கு பாருங்க வீடியோ இருக்கு. அங்கு தங்கியிருக்கும் ஆராய்ச்சியாளர் ஒரு வீட்டில் கொண்டு டெலிவரி செய்கிறார்

      கீதா

      நீக்கு
    3. ஆனால் இந்தப் பயணத்தின் நோக்கம் உணவு அல்ல, அந்தப் பெண்ணின் அண்டார்டிக்கா செல்லும் ஆசையை நிறைவேற்றுவது.  அவ்வளவே,

      நீக்கு
  19. எனக்கு அம்பையின் இப்படியான கதைகள் மிகவும் பிடிக்கும். அம்மா கொலை செய்தாள் கதையும் எனக்கு மிகவும் பிடித்த கதை. ஜீவி அண்ணா அதை நான் படிச்ச கதையில் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன்.
    இப்படியான கதைகளில் அம்பையின் கருத்துகள் என் எண்ணங்களும் அப்படியே...

    இக்கதையை வாசித்த போது முதல் வாசிப்பிலேயே தெரிந்துவிட்டது கதையின் உள் அர்த்தம். அருமையான கதை.

    //திருமணம் என்பது சந்ததிகள் உண்டாகவும் தானே? பூப்படையாத பெண்ணை முதல் தாரமாக திருமணம் செய்து கொடுப்பார்களா?//


    அம்பை என்ன நினைத்து அலல்து வாசகர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து எழுதினாரோ தெரியவில்லை. அவர் விளக்கமும் பார்த்தேன்...அறிவு ஜீவி!!!

    ஜெகே அண்ணா, உங்கள் கேள்விக்கான என் கருத்து அல்லது அனுமானம் இதுதான்

    அப்போதைய காலத்தில் பூப்பெய்தும் முன் கல்யாணம் செய்துவிடுவார்கள். பூப்பெய்தியபின் தான் சாந்திமுகூர்த்தம் என்று நடத்துவார்கள். ....அதாவது பிறக்கும் போதேயோ அல்லது பிறக்கும் முன்னரே கூட, உன் பையன் என் பெண்ணுக்குத்தான் என்று சிறு வயதிலேயே சொல்லி பேசிக் கொண்டு உறவுகளில் செய்வதும் நடப்பதுண்டு. (என் அப்பா வழி குடும்பங்களில் இது அதிகம்) அப்படி அந்தச் சிறு வயதுகடந்துவிட்டால் எங்கேனும் ஆணின் மனம் மாறிவிடுவோ பெண்ணின் மனம் மாறிவிடுமோ அல்லது பெற்றோர் மனம் மாறிவிடுமோ என்று அறியா பருவத்தில் மணம் செய்துவிடும் வழக்கம் உண்டு. பூப்பெய்திய பின் மற்றவை எல்லாம் என்று....அப்படி தங்கம் அத்தைக்கும் மணம் ஆகியிருக்க்கலாம். அதன் பின்னும் பூப்பெய்தாமலேயே இருந்திருக்கிறாள் தங்கம் அத்தை.

    இதனால் சில உளவியல் பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. அப்போதைய காலத்திலும் சரி இப்போது இன்னும் அதிகம்.....ஒன்று மிகச் சிறு வயதிலேயே பூப்பெய்துவது மற்றோன்று நாள்பட்டு அல்லது அடையாமலேயே.......என் ட்ராஃப்டில் இருக்கு...கதைகளாக..!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பாலாவின் போதனை சிறப்பு படிக்கும் காலத்தில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது தெரிகிறது அவரது உழைப்புக்கு சல்யூட்.

    அம்பையின் கதை படித்திருக்கிறேன் இங்கு பகிர்ந்தது நன்று.

    பதிலளிநீக்கு
  21. அனைத்து நல்ல செய்திகளும் அருமை. திருப்பதி சாய் அவர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்.

    கதை நன்றாக இருக்கிறது. முன்பு படித்து இருக்கிறேன்.
    பூக்காத பெண் படும் துன்பங்களை அவளை போட்டு படுத்திய துன்பங்களை படித்து வருத்தப்பட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. இன்றைய கதையை பற்றி கருத்துரைகள் சொன்ன யாவர்க்கும் நன்றி. கதையை வாசகர்கள் பலரும் முன்பே வாசித்துள்ளனர் என்பதே கதையின் சிறப்புக்கு முத்திரை. புகழ் யாவும் அம்பையைச் சேரும். 

    அம்பை கதைகளில் நான் முதலில் தேர்ந்தெடுத்தது அம்மா ஒரு கொலை செய்தாள். ஆனால் அது முன்பே ஜீவி ஐயா அவர்களால் எ பி யில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அறிந்ததால் தான் இக்கதையை தேர்வு செய்தேன். ஜீவி ஐயா விளக்கமான பின்னூட்டம் எழுதுவார் என்று எதிர் பார்த்தேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  23. ...இந்தக் கதை அம்பையின் சொந்தக் கதையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.//

    ஏன் அப்படித் தோன்றுகிறது உங்களுக்கு !

    சில ’எழுத்தாளர்கள்’ உண்டுதான் - தனக்கு வாழ்வில் நிகழ்ந்ததையே -அதிலும் அபத்தக்காட்சிகளாக பொறுக்கி எடுத்து- மிர்ச் மசாலா தூவி ஏதேதோ கதைபண்ணிக்கொண்டிருப்பார்கள் ஆண்டாண்டுகளாக, சாரு நிவேதிதா போல. அம்பை இந்த ரகமல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ../இந்தக் கதை அம்பையின் சொந்தக் கதையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.//

      //திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார்.//

      குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தவர் ஏராளமான குழந்தைக் கதைகள் எழுதியுள்ளார். இது போலவே தங்கம் அத்தையும். 

      தகவல் உபயம் 

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88

      Jayakumar

      நீக்கு
  24. 08-01-22 அன்று இந்தப் பகுதியில் அம்பையின் 'அம்மா ஒரு கொலை செய்தாள்' கதை பற்றி விரிவாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
    விளக்கமான பின்னூட்டத்தை நான் எழுதுவேன் என்று எதிர்பார்த்ததாக ஜெயக்குமார் ஸார் குறிப்பிட்டிருப்பதால் இந்தத் தகவல். அம்பை பற்றிய மேலதிக வாசிப்பு ரசனை வேண்டுவோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!