வியாழன், 17 நவம்பர், 2022

உணர்வுகள்...

 என் அப்பா இந்த உணர்வை அடைந்திருப்பாரா என்று தெரியாது.  ஆனால் எல்லா அப்பாக்களும் அடையும் உணர்வுதான் இது என்று நினைக்கிறேன்.

என் அப்பாவிடம் பள்ளி சென்று வர பஸ் காசு கேட்பதே பயங்கர அனுபவம்.  அவரும் என்ன செய்வார், பாவம்!  இரண்டு தங்கைகளைக் கரையேற்ற வேண்டும்.  அப்புறம் தனது நான்கு குழந்தைகளை கவனிக்க வேண்டும்.  சொற்ப சம்பளத்தில் சாத்தியமா என்ன...   இயலாமை கோபமாக ஆத்திரமாக வெளிப்படும்.  

சமயங்களில், கொடுத்துதான் ஆகவேண்டும் என்கிற உண்மை நிலையும் உணர்ந்து கொடுக்கப்படும் காசு வீசி எறியப்படும்! எப்போதும் அல்ல...  சில சமயங்களில்.   பொறுக்கிக் கொள்ள வேண்டும்.  இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.  நாங்கள் படிப்பில் அப்படி ஒன்றும் அப்பாவை மகிழ்வித்து விடவில்லை!

கட்டுரை நோட்டு வாங்க, ஆய்வகத்துக்கு பணம், டியூஷன் பீஸ் என்றெல்லாம் அத்தியாவசிய செலவுகளுக்கே காசு வாங்குவது கடினமான சூழ்நிலையில், ஸ்கூலில் டூர் போகிறார்கள் என்றோ,  அல்லது மிட்டாய் வாங்கி கொள்கிறேன், குச்சி ஐஸ் வாங்கி கொள்கிறேன் என்று காசு வாங்க முடியுமா என்ன..  அதுதாங்க பாக்கெட் மணி என்பார்களே..  அது.   பஸ்ஸுக்கான காசையும் பாக்கெட்டில்தானே போட்டு எடுத்துச் செல்கிறோம் என்று நினைப்பேன்.

அந்த மாதிரி செலவுக்கான காசை நானே "சம்பாதித்து"க் கொள்வேன் என்பது வேறு விஷயம்!  அதற்காக தேன் மிட்டாய், தேங்காய்  மிட்டாய் சுவைகளை இழக்க முடியுமா?!   விடுங்கள்...  சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

எனக்கு இரண்டே மகன்கள். என் அக்காவை, தங்கையை அப்பாவே 'கரையேற்றி' விட்டார்!  எனவே எனக்கு அந்தக் கஷ்டம் இல்லை.  திட்டமிட்டு சம்பளம் வந்தததும் இதற்கு இவ்வளவு என்று அத்யாவசியத் தேவைகளுக்கு பங்கு போட்டு பிரித்து விடுவோம்.  பேப்பரில் சுற்றி, பெயர் எழுதி ரப்பர் பேண்ட் போட்டு வைத்து விடுவோம்.  ஆனாலும் மாசக் கடைசியில் இடிக்கும்தான்.  அதையும் சமாளிப்போம்.  பட்ஜெட்டில் வைக்கும்போதே 65 ரூபாய் தேவை என்றால் 70 ரூபாய் வைப்பது, 75 என்றால் நூறாக வைப்பது என்று வைப்போம்.  அதிக காசு இது மாதிரி சமயங்களில் உதவும்.  சொல்ல வந்தது இதுவும் அல்ல...  விட்டுவிடுவோம்!

டூர் செல்லவும், பொம்மைக் கார் வாங்கவும் நோட்டு வாங்கவும் என்னிடம் காசு கேட்டுக் கொண்டிருந்த மகன்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர்.  ட்ரெஸ் முதல் பட்டாசு வரை அவர்களின் ஒவ்வொரு செலவுக்கும் நாம்தானே காசு கொடுக்க வேண்டும்?  நாமே வாங்கியும் கொடுப்போம்.

பஸ்ஸுக்கு என்னிடம் காசு கேட்காமல் அவர்களே செலவு செய்து பஸ் பாஸ் எடுத்துக் கொண்டபோது வியப்பாகவும் (என்ன இதில் வியப்பு என்கிறீர்களா?) பெருமிதமாகவும் இருந்தது.  சற்றே ஏக்கமாகவும் இருந்தது.  அவர்களே ஹோட்டல் பில் செட்டில் செய்கிறார்கள்.  கார் வாங்கினார்கள், பைக் வாங்கினார்கள்.  சைக்கிள் வாங்க என்னிடம் அவர்கள் அப்ளிகேஷன் போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன.  கொஞ்சம் யோசித்து தாமதமாகத்தான் வாங்கித் தந்தேன்.  

என்னிடமும் கலந்தாலோசித்து இப்போது என்னை எதிர்பார்க்காமல் அவர்கள் வாங்கி கொள்கிறார்கள் என்னும்போது சந்தோஷம்தானே முழுசும் வரவேண்டும்?  ஏன் லேசான கோபமும் ஏக்கமும் வருகிறது?  இந்த உணர்வு உங்கள் எல்லோருக்கும் வந்திருக்கும்தானே?  நான் தந்தால் கூட மறுத்து விடுகிறார்கள்.  "வச்சுக்கோ... பின்னால் உதவும்..  எல்லாம் நம் காசுதானே " என்கிறார்கள்.  எனக்கும் சேர்த்து பல சமயம் செலவு செய்கிறார்கள்.

என் அப்பா என்னிடம் கோபப்பட்டதுபோல என் மகன்களிடம் நான் கோபப்படக் கூடாது என்று தெளிவாக இருந்தேன்.  அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருந்தது இல்லை.  அத்யாவசிய தேவைகள் அவர்கள் கேட்பதற்கு முன்னரே நிறைவேற்றி விடுவோம்.  இது என்ன புதுசா சொல்றீங்க என்று நினைக்காதீர்கள்.  எனக்கு என் இளவயது அனுபவத்தில் அதுவே புதுசுதான்!  சினிமா, சுற்றல் என்கிற செலவுகளுக்கும் மறுத்ததில்லை.  அவர்களும் லிமிட் தெரிந்தேதான் செலவு செய்தார்கள், கேட்டார்கள்.

இப்போது மகன்களும் என்னிடம் எனக்கு ஒருபடி மேலே பதவிசாய், புரிதலுடன் பழகுகிறார்கள்.

புரிதலுடன் என்று சொல்லும்போது ஒரு பழைய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.  பெரியவன் எல் கே ஜியிலிருந்து யு கே ஜி செல்லும் முதல் நாள்.  அன்று அவனுக்கு முதல்முறை முழுநாள் பள்ளி.  இதுவரை அவன் அழவில்லை எனினும் முழுநாள் பள்ளி அவனை பாதிக்குமா?  அவனுக்கு பள்ளி முடியும் நேரம் உடனே என்னால் சில சமயங்களில் வந்து அழைத்துப் போகமுடியாமல் போகலாம்.  என்னசெய்வான் என்றெல்லாம் யோசித்தபடி சைக்கிளில் முன்னால் அவனை அமரவைத்து ஓட்டிக் கொண்டிருந்தேன். திரும்பித் திரும்பி என் முகத்தை சிலமுறை பார்த்தான்.  ஸ்கூல் நெருங்கும் சமயம் கையால் என் கையைத்த்தொட்டு என்னை அழைத்தான்.  "கவலைப்படாதேப்பா..   மத்தியானம் சாப்பிட்டுவிட்டு க்ளாஸ்லயே இருப்பேன்.  ஸ்கூல் முடிஞ்சதும் உள்ளேயே இருப்பேன்.  நீ வந்து கூப்பிட்டா மட்டும்தான் வெளியே வருவேன்.  யார் வந்து கூப்பிட்டாலும் போக மாட்டேன், அழ மாட்டேன்" என்றானே பார்க்கலாம்.  நான் எதை நினைத்து கவலையுற்றிருக்கிறேன் என்பது சொல்லாமலே புரிந்திருக்கிறது அவனுக்கு.  என் கவலை பறந்து போனது மட்டுமல்ல, அவனின் அந்த வயதில் அவன் புரிதலுடன் பேசிய பேச்சில் குளிர்ந்துபோய் கட்டியணைத்து முத்தம் கொடுத்தேன்!  மகிழ்ந்து போனான் பையன்.  

ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் மகன்களிடமிருந்து தள்ளியே தான் இருக்கிறேன்.  அபப்டிதான் இருக்க முடியும்.  இப்போது போய் கொஞ்ச முடியாது இல்லையா?!!   ஆனால் சின்னவன் - அவனும் வேலைக்குச் செல்பவன்தான் - இப்போதும் சில நேரங்களில் எதையாவது படிக்கும்போது என் மீது கால் போட்டுக்கொண்டோ கைகளை என் மீது வைத்துக் கொண்டோ படிப்பான்.  சிறு குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டால் அவர்கள் உங்கள் மீசையையோ, தாடியையோ, மூக்கு கண்ணாடியிலோ (போடுவது கண் சரியாகத்தெரிய..  ஆனால் சொல்வது மூக்கு கண்ணாடி!) விஷமம் செய்து கொண்டே இருப்பார்கள் தெரியுமா?  அது போல 

இரண்டு நாட்களுக்கு முன் கூட என் தாடியில் விஷமம் செய்து கொண்டே படித்துக் கொண்டிருந்தான்.  நகராமல் மயங்கி கிடந்தேன்!  சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது, சொல்லக் கூடாது இல்லையா?  அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை.

பெரியவன் தயங்கவே மாட்டான்.  சில சமயங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுத்து விடுவான்.  நான் பெற்ற செல்வங்கள்..!

======================================================================================================================


ஒரு திரைப்பட கதாநாயகன் அல்லது கதாநாயகி நூறு படங்களில் நடித்தால் அது ஒரு சாதனையாக கொண்டாடப்படுகிறது. ஒரு கவிஞர், பாடகர் அல்லது இசையமைப்பாளர் ஆயிரக்கணக்கில் பாடல்களை இயற்றுவதும், பாடுவதும், இசை அமைப்பதும் சாத்தியம்தான். ஆனால், எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய 40 ஆண்டுகால எழுத்து வேள்வியில் 1001 புதினங்களை எழுதி சாதனையைப் படைத்துள்ளார் என்றால் நம்ப மறுப்பீர்களா... அல்லது ஆச்சரியப்படுவீர்களா?
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கொவ்வாலி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட "கொவ்வாலி லட்சுமி நரசிம்ம ராவ்' ஆவார்.

இவரை எழுத்தாளராக மாற்றிய சம்பவமே ஒரு மைக்ரோ கதைக்கு கருவாக அமையும்...
1912-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தனுக்கு என்ற கிராமத்தில் ஏழை குமாஸ்தாவின் கடைசி மகனாக பிறந்தவர் லட்சுமி நரசிம்ம ராவ். அன்றைய இன்டர்மீடியட் வரை படித்தவர்.
விடுமுறைக்காக சகோதரியின் பொடூரு கிராமத்திற்குச் சென்றார். இயற்கையிலேயே புத்தகங்களைப் படிப்பதில் நாட்டமுள்ள அவர் அருகிலிருந்த வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார்.
அந்தரங்க வீட்டின் சிறுகுழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென சிறுநீரும் மலமும் கழித்தது. அங்கே வந்த குழந்தையின் தாயான அந்த வீட்டு எஜமானி அருகே இருந்த பெரிய பக்தி நூலிலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதை ஒரு பேப்பர் நேப்கின் போல உபயோகித்து குழந்தையைச் சுத்தப்படுத்தி தாளை வெளியே எறிந்து விட்டு வந்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இளைஞரான ராவ்.
""புத்தகத்தைக் கிழித்து இப்படி உபயோகப்படுத்தலாமா..?'' என ஆத்திரத்துடன் கேட்டார். அமைதியாக அந்தப் பெண் சொன்ன பதில் அந்த இளைஞரின் தலையில் சம்மட்டியாக இறங்கியது.
அவள் சொன்னாள் ""எனக்கும் படிக்கத் தெரியும். ரொம்ப நாளாக வீட்டில் இருக்கிறதே படிப்போம் என நானும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒன்றும் புரியவில்லை. பெரிய புத்தகமாக இருந்தாலென்ன? படித்தால் புரியாத புத்தகத்தால் என்ன பயன்? வேறு எப்படித்தான் பயன்படுத்த முடியும்?''
அந்த நொடி தான் தெலுங்கு எழுத்தாளராக கொவ்வாலி லட்சுமி நரசிம்ம ராவ் அவதாரம் எடுத்த நேரம்.
படித்தால் புரியவேண்டும். படிப்பவர் யார்? அவர் படிக்க விரும்பும் விஷயங்கள் என்ன? இதை முதலில் அறிய வேண்டும் என அந்த இளம் உள்ளம் முடிவெடுத்தது. இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி இளைஞர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, ஆந்திர மாநிலம் முழுவதும் ஓராண்டு சுற்றித் திரிந்தார். அப்போது அவர் பசியையும் பட்டினியையும் மட்டும் சந்திக்கவில்லை; நட்பையும் துரோகத்தையும், நல்லவர்களையும் கெட்டவர்களையும், குழந்தைகளையும் பெரியவர்களையும், ஆண்களையும் பெண்களையும் என சமுதாயத்தின் பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்தார். பேருந்து நிலையங்களிலும், ரயில்வே பிளாட்பாரங்களிலும் பசியுடன் படுத்துத் தூங்கினார். பின்னாளில் அவர் படுத்துக் கிடந்த பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மட்டுமல்ல; எங்கெல்லாம் தெலுங்கு மொழி ஒலித்ததோ அங்கெல்லாம் அவர் எழுதிக் குவித்த புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. இன்றும் விற்றுக் கொண்டிருக்கின்றன.
தாயை இழந்த மகனை காணாமல் தந்தை ஊரெல்லாம் தேடியும் பலனில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ராஜமுந்திரியில் தந்தையைத் தேடி தனையன் வந்தார். மனமும் மூளையும் அவர் பெற்ற அனுபவங்களால் நிரம்பி வழிந்தது. கைகள் பரபரத்தன. எழுத ஆரம்பித்தார். தெலுங்கு பேசும் அன்பர்கள் அனைவரும் "கொவ்வாலி' எனக் கொண்டாடும் அந்த எழுத்தாளர் 1935-இல் எழுத ஆரம்பித்தார். "கிராமத்து தேவதை' என்ற பெயரில் அவருடைய முதல் புத்தகம் வெளிவந்த போது அவருக்கு வயது 23.
அவருடைய ஜனரஞ்சகமான சரளமான எழுத்து நடை, எளிமையான வார்த்தைகள், ஆழமான கருத்துப் பிரயோகங்கள் என்று எல்லாம் சமகாலத்து விவகாரங்களைப் பேச ஆரம்பித்தன. ஒன்றன்பின் ஒன்றாக அவருடைய புதினங்கள் தெலுங்கு வாசகர்களைக் கட்டிப் போட்டது. எளிமையான வார்த்தைகளில் சமுதாயச் சீர்கேடுகளை தீயெனச் சாடினார். பெண்களின் பிரச்னைகள் குறிப்பாக பால்ய விவாகம், விதவைகளின் அவலம், மறுமணம், ஜாதிக் கொடுமைகள், ஏழைகள் படும் பாடு, பணக்கார பண்ணையார்களின் திமிர் ஆட்டம் என 1940-களிலேயே அவர் எழுத ஆரம்பித்து விட்டார்.
நாம் தெலுங்கு டப்பிங் படங்களில் பார்க்கும் வில்லனைப் போல இருந்த ஒரு ராஜமுந்திரி பெரிய மனிதரின் (!) ஆட்டங்களை ஒரு நாவலில் எழுத... புத்தகம் விற்பனையில் சக்கைப் போடு போட்டது.
வெகுண்ட பண்ணையார் எழுத்தாளரைக் கொல்ல ரௌடிகளை ஏவினார். சரஸ்வதி கடாட்சமும், வாசகர்களின் அன்பும் எழுத்தாளரைக் காக்க... பொறுமிச் செத்தார் பண்ணையார். மீண்டும் "வாள் முனையை விட பேனா முனையே வலிமையானது' என நிரூபிக்கப்படது.
ஆண்டுக்கு சுமார்30 நாவல் என்ற கணக்கில் அவர் எழுதிய கதைகள் சமுதாயப் பிரச்னைகளோடு நின்றுவிடவில்லை. இழையோடிய நகைச்சுவையுடன் அரசியலையும், வரலாறு மற்றும் பக்திப் படைப்புகளையும், குழந்தைகளைக் கவரும் ஃபேண்டஸி கற்பனைகள் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.
தன்னுடைய புத்தகங்கள் அனைவரையும் சென்றடைய குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ராயல்டியை குறைத்துக்கொண்டார். தெலுங்கர்களும் அவர் விரும்பியபடியே அவர் புத்தகங்களைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப் படித்தனர்.
எதனால் அவர் "தெலுங்கு எழுத்தாளர்களின் பிதாமகர்' என்றும் "பாக்கெட் நாவல்களின் தந்தை' எனவும் அழைக்கப்படுகிறார்...?
படப்பிடிப்புக்காக ரயிலில் சென்று கொண்டிருந்த "சகலகலாவல்லி' என்று பாராட்டப் பெற்ற நடிகை பி.பானுமதி. ரயில் பயணத்தில் கொவ்வாலியின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த சுவாரசியத்தில் இறங்கவேண்டிய ஸ்டேஷனை கோட்டைவிட்டார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸியில் படப்பிடிப்புக்குப் போனதாக எழுத்தாளரிடமே சொல்லி சிரித்து இருக்கிறார்.
இத்தனை பிரபல எழுத்தாளரை தெலுங்கு சினிமாவுலகம் விட்டு வைக்குமா என்ன...? அன்றைய நடிகை கண்ணாம்பா, தான் ஆரம்பித்த ராஜேஸ்வரி பிச்சர்ஸ் நிறுவனத்தின் முதல் படத்தின் கதையை எழுதும் வாய்ப்பை இவருக்குத் தந்தார். அதனால் அவர் தன் ஜாகையை சென்னைக்கு மாற்றினார்.
இப்படி தொடர்ந்து 10 படங்களுக்கு பணியாற்றிய எழுத்தாளர் கொவ்வாலி லட்சுமி நரசிம்மராவுக்கு திரையுலகின் படாடோபமும், கட்டுப்பாடுகளும், விதியில்லாத விதிகளும் பிடிக்காமல் மீண்டும் தன் எழுத்து மேஜைக்கு திரும்பினார்.
இவருடைய கற்பனா விலாசத்தைப் பாராட்டி சென்னை பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத் தெலுங்குத் துறைகள் விழா எடுத்துச் சிறப்பித்தன.
இவரின் ஆயிரமாவது புத்தகத்தின் தலைப்பு "மந்திராலயா' என்கிற மாயாஜாலக் கதை. ஆயிரத்து ஓராவது கடைசி புத்தகம் "கவி வேமண்ணா' என்ற கவிஞரின் வாழ்க்கை வரலாறு ஆகும். இவருடைய எழுத்துக்களால் தெலுங்கு புதினங்கள் புத்துயிர் பெற்றன.
நன்றி: தினமணி, மற்றும் முகநூலில் திரு R. கந்தசாமி
===========================================================================================

பிடிப்பின் வலிகள் 
முதலைகளாய் 
சுற்றிச் சுழன்றாடிக் 
காத்திருக்கின்றன 
என் 
ஒரு தவறான உடலசைவுக்கு 

================================================================================================

இவர் யார் தெரிகிறதா? (வழக்கம்போல யாரும் பதிலே சொல்ல மாட்டீர்கள்!!)


====================================================================================================================

இது நான் சென்ற ஒரு அலுவலகத்தில் பார்த்த காட்சி. ஏதோ வசதிக்காகத்தான் போட்டிருக்கிறார்கள் போல... என்ன வசதி என்றுதான் புரியவில்லை!!

=============================================================================================================

பொக்கிஷம் :-

ஏன் கயத்தாறில் பிடித்திருக்கக் கூடாதா?!!

உன்னை நானறிவேன்.. என்னை நீ அறிவாய்...!


சில்பி வரைந்த அகோர வீரபத்திரர் சிற்பம்

ஒருபொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ...


நடிகர்கள் கதை எழுதிய காலமும் உண்டு!

குடுகுடு ஜோக்...


93 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பத்தில் முதல் பகுதி என்னை மிகவும் நெகிழ்வுறச் செய்தது. தங்கள் மகன்கள் இப்போதும் கூட (நான் சொல்வது நன்றாக வளர்ந்து விட்ட நிலையில்) தங்களிடம் மிகவும் பாசமாக (இங்கு பாசம் என்பது வெளிப்படையாக காட்டுவது ) இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.மீண்டும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  வாழ்க நலம்.

      நீக்கு
  4. அப்பா கட்டுரையை படித்தபோது சுஜாதாவின் அன்புள்ள அப்பா கதை/கட்டுரை நினைவில் வந்தது. 

    https://www.valaitamil.com/sujatha-appa-anbulla-appa_1725.html

    மகன்களுக்கு கல்யாணம் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம் அவர்களின் தொட்டும் தொடாமலும் இருக்கும் பாசம். அவர்களை சார்ந்து இருக்கும்போது தான் தெரியும் முதுமையின் அவஸ்தை.
     
    bikeஇல் இருப்பவர் NTR. 

    நம்ம ஊர் ராஜேஷ்குமாரை விட அதிகம் எழுதிய கொவ்வாலி லட்சுமி நரசிம்ம ராவ் பற்றி அறிய வியப்பு உண்டாகிறது. 

    பாட்டுக்கு பாட்டு. 

    தலைவலியும் திருகு வலியும் 
    தனக்கு வந்தால்  தானே தெரியும். 
    தவிர்க்க வேண்டி 
    தானம் தான் செய்ய முடியுமா? 

    நாற்காலி வைத்த urinal சிறுவர்களுக்கு. ஏறி நின்று அடிக்க. 

    பொக்கிஷம் அந்தக்கால வழக்கமான ஜோக்குகள் தான். அதிலும் குதிரை ரேஸ் ஒரு காலத்தில் குமாஸ்தாக்களையும் ஓட்டாண்டி ஆக்கியது உண்மை. என்னுடைய ஒன்று விட்ட  அண்ணன் ஒருவர் சீரழிந்ததை நான் அறிவேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால்ய சிநேகிதன். சேர்ந்து பத்தாவது வரை படித்தோம். அதற்காக ஜிஎம் ஆக இருக்கும் அவன் அலுவலகத்துக்குச் சென்று மற்றவர்கள் முன்னால் வாடா போடா எனப் பேசுவோமா?

      பசங்களுக்கு அவர்களுக்கான வாழ்க்கை துவங்கும்போது, விலகல் இருக்கத்தான் செய்யும். மனதில் நெருக்கம் அப்படியே இருக்கும். நாம் நடந்துகொள்வது, அவர்கள் வாழ்க்கை முடிவுகளில் மூக்கை நுழைக்கும் விதம் எனப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

      இளையவனிடத்தில் இயல்பான சிநேகிதம், மூத்தவனிடத்தில் அமைதியைக் கண்டிருக்கிறேன். நல்ல பசங்க.

      நீக்கு
    2. சுஜாதா கட்டுரை நானும் படித்திருக்கிறேன். மறுபடி ஒருமுறை படிக்க வேண்டும்.

      கல்யாணத்துக்குப் பிறகு என்கிற கமெண்ட் வரும் என்று அறிவேன். நானும் யோசித்திருக்கிறேன்.

      அது NTR அல்ல!

      அந்நக்காலம. போல தேடிச் சென்று சீரழியாமல் இந்தக்காலத்தில் வீட்டிலிருந்தபடியே பணத்தை இழக்கலாம். ஆன்லைன் ரம்மி மற்றும் இன்ன பிற சூதாட்டங்கள்!

      நீக்கு
    3. // இளையவனிடத்தில் இயல்பான சிநேகிதம், மூத்தவனிடத்தில் அமைதியைக் கண்டிருக்கிறேன். நல்ல பசங்க. //

      கவனித்த சிறு சந்திப்பு நேரத்தில் அவதானித்ததா?

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம். ரொம்ப விளக்கமா எழுதலை.

      நீக்கு
  5. அகோர வீரபத்திரர் என்று இருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  6. கொவ்வாலி லட்சுமி நரசிம்ம ராவ் அவர்களைப் பற்றி அறிந்ததும் வியப்பு தான் உண்டாகிறது...

    மாமனிதர்..

    பதிலளிநீக்கு
  7. இன்றைய பதிவின் முதல் பகுதி கனமானது..

    எதுவும் சொல்வதற்கில்லை..

    தஞ்சாவூர் ஒரிஜினல் அசோகாவை வாயில் போட்டுக் கொண்ட மாதிரி அமைதியாக ஆழமாக ரசித்துக் கொள்வது தான்..

    பதிலளிநீக்கு
  8. பெரும்பாலும் பசங்க கிட்ட ரொம்ப அன்பை வெளிப்படுத்துவதோ, இல்லை வெளிப்படையாகப் பாராட்டுவதோ இயல்பானதில்லை என நினைக்கிறேன். அவற்றை மற்றவங்கள்ட சொல்லிப் பெருமிதம் அடையத்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே... அதே... பதிவின் முக்கிய புள்ளி, அவர்களுக்கு நாம் செலவு செய்தது போக, நம் கையை எதிர்பார்க்காமல் அவர்கள் செலவை மட்டுமல்ல, நம், மற்றும் ஙீட்டுச் செலவுகளையும் அவர்கள் ஏற்கும் அந்த ஆரம்பக் காலம்.

      நீக்கு
    2. நம் கையை எதிர்பாராமை.... என் பசங்களுக்கு அதனைப் புரியவைத்திருக்கிறேன். பசங்க, ஆசைப்பட்டு ஏதேனும் வாங்கித்தருவதைத் தவிர வீட்டுச் செலவுகளில் பங்கேற்கும் காலம் வராது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
    3. நெல்லை சொல்லுவதை என் மாமியாரெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க. அவங்க எப்போதுமே மிகைப்படுத்திப் புகழுவதில் திறமைசாலி. அதிலும் என் கடைசி நாத்தனார் சுயம்பு எனச் சத்தியம் செய்து சொல்லுவார். எதுவுவே சொல்லிக் கொடுக்க வேண்டாம் என்பார். மற்றக்குழந்தைகளையும் வாய் நிறையப் புகழ்ந்தாலும் கடைசிப் பெண் மட்டும் ரொம்பவே தனி. எங்க வீட்டில் அப்பாவோ/அம்மாவோ அப்படிப் புகழ்ந்து பேசினதில்லை. ஓரள்வுக்கு வேலை தெரியும். நீங்களும் சொல்லிக் கொடுங்க என்பார்கள். கண்டிச்சாலும் எல்லாருக்கும் முன்னாடியே கண்டிப்பார்கள்.

      நீக்கு
    4. நான் இதில் சற்றே மாறுபடுகிறேன்.

      நீக்கு
  9. கொல்வாலி அவர்கள் ராஜேஷ்குமாருக்கு முந்தைய தலைமுறை. ஆனால் கொல்வாலி சமூக அக்கறையையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் எனத் தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவரைப்பற்றி நான் இப்போதுதான் முதன்முறை கேள்விப்படுகிறேன்.

      நீக்கு
  10. ஜோக்குகளை ரசித்தேன். அதிலும் படிக்கும்படி இருப்பது சிறப்பு, வியப்பு

    பதிலளிநீக்கு
  11. உணர்வுகள் வெளிப்படுத்த முடியாதவை.....

    பதிலளிநீக்கு
  12. நான் ரொம்பவே பசங்களைவிட்டு விலகியிருக்கிறேன். மனைவி ரொம்ப நெருக்கமாக இருப்பாள். இது நல்லதா அல்லது தவறா என்பதைக் காலம்தான் எனக்குப் புரியவைக்கும். நான் சரி என்றே நம்பிச் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை குழந்தைகளிடம் காட்டும் கண்டிப்பு அவர் தப்புச் செய்கிறாரோ என்னும் எண்ணத்தை எனக்குள் அடிக்கடி உண்டாக்கும். பொதுவாகவே அம்மாவிடம் குழந்தைகள் நெருக்கம் அதிகம் இருந்தாலும் அப்பாவிடமும் சகஜமாகப் பழகும் சூழல் இருக்கணும். அதிலும் அவர் பெண்ணைப் புகழ்ந்து பாராட்டாமல் இருப்பதை அவர் பெண் கண்களில் கண்ணீரோடு சொன்னதைக் கற்பனை செய்து பார்த்து மனம் வருந்துவேன்.

      நீக்கு
    2. எங்க அப்பாவின் அதீதமான கண்டிப்பு இப்போது கூட எங்கள் மூவருக்கும் கசப்பான அனுபவங்களையே நினைவூட்டுகிறது. அதன் காரணமாகவே எங்கள் குழந்தைகளிடம் நாங்க கண்டிப்புக் காட்ட வேண்டியவற்றில் மட்டுமே கண்டிப்புக் காட்டிப் பொதுவாக சரளமாகப் பேசிப்பழகும்படியே வளர்த்திருக்கோம். ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளும் அளவுக்கு சகஜமாக நண்பர்கள் போல் பழகுவார்கள்.

      நீக்கு
    3. நான் குழந்தைகளிடம் சுதந்திரமாக பழக விட்டிருக்கிறேன் என்றாலும் என் பாஸ் தான் பையன்களிடம் இன்னமும் நெருக்கம்.

      நீக்கு
    4. கீதா அக்காவின் கருத்தை ஆதரிக்கிறேன்.

      நீக்கு
  13. முதல் கட்டுரை எனது மனதில் பாரத்தை இறக்கி விட்டது போல் உணர்கிறேன்.

    கழிவறை நாற்காலி யாராவது சும்மா ஓரமாக போட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை நினைத்துக் கொண்டே தான் படிச்சேன் கில்லர்ஜி! :( அதே போல் கோமதி அரசுவையும் நினைத்துக் கொண்டேன். அவர் அவருடைய தந்தை பற்றிச் சொல்லுபவை எல்லாம் நினைவில் வந்தன. எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) நினைவில்வருவார். அவர் அப்படித்தான் இருப்பார். அதே போல் எங்கள் அம்மாவின் மேல் அவருக்கு அலாதி அன்பு. ஐந்து பெண்களிலேயே என் அம்மாதான் அவருக்குப் பிடித்த மகள்.

      நீக்கு
    2. சந்தோஷம் தேவகோட்டை ஜி.


      இரண்டாவது வரியில் நீங்கள் சொல்லி இருப்பது(தான்) சரி!

      நீக்கு
    3. என் அப்பாவை பற்றி நான் சொன்னதை நினைவு வைத்து இங்கு பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி கீதா. அப்பா எல்லா குழந்தைகளிடமும் மிகவும் பிரியமாக இருந்தார்கள். நான் அப்பாவிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வேன்.(அப்பா செல்லம்)
      ஸ்ரீராம் ஸ்கூலில் டூர் போகிறார்கள் என்றோ, அல்லது மிட்டாய் வாங்கி கொள்கிறேன், குச்சி ஐஸ் வாங்கி கொள்கிறேன் என்று காசு வாங்க முடியுமா என்ன.. என்று கேட்ட போது அப்பா நினைவு வந்தது. அம்மா மறுத்தாலும், அப்பாவிடம் கேட்டு பள்ளி சுற்றுலா போய் விடுவேன், தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஆசிரியரிடம் பத்திரமாக கூட்டி போய் வாருங்கள் என்று பஸ் ஏற்றி விடுவார்கள். அழைக்க வரும் போது ஆசிரியருக்கு நன்றி சொல்லி அழைத்து வருவார்கள். தமிழ் அம்மா அப்பாவின் பண்பை எப்போதும் வியந்து போற்றுவார் என்னிடம்.

      நீக்கு
    4. டூரெல்லாம் நாங்க நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. என்சிசியில் அண்ணா இருந்ததால் அங்கே காம்ப் எனக் கூட்டிப் போவார்கள். ராமேஸ்வரமோ எங்கேயோ போய் வந்த நினைவு. தம்பியையும் என்னையும் என்சிசியில் எல்லாம் சேரக்கூட விடலை.

      நீக்கு
  14. @ கில்லர் ஜி

    // கழிவறை நாற்காலி யாராவது சும்மா ஓரமாக போட்டு இருக்கலாம்.. //

    இதுதான் சரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைப்பது சற்று வித்தியாசமானது. அந்த இரண்டாவது பேசினில் தண்ணீர் வரும் / செல்லும் பாதை அடைபட்டிருக்கலாம். அல்லது தாற்காலிகமாக ஏதேனும் பழுது ( Drain pipe repair work ) பார்க்கப்பட்டிருக்கலாம். அதை சரியாகும் வரை யாரும் பயன்படுத்தவேண்டாம் என்று தடுப்பதற்கு இந்த நாற்காலியை அங்கே போட்டிருப்பார்கள்.

      நீக்கு
    2. இருக்கலாமோ என்னவோ...   இது என் தலைமை அலுவலகத்தில் பார்த்தது,  இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம்.

      நீக்கு
  15. அருமையான பசங்க. திருஷ்டி சுத்திப் போடுங்க முதல்லே! கல்யாணம் ஆனாலும் இப்படித்தான் இருப்பாங்க. கவலை வேண்டாம். அடிப்படை மிக ஸ்திரமாகவும் உறுதியாகவும் இருக்கையில் கவலையே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா... என் தோழி சற்றுமுன் இதை எல்லாம் ஏன் பொதுவில் எழுதினாய் என்று கேட்டார்!

      நீக்கு
  16. @ ஸ்ரீராம்..

    அந்தக் காலம. போலத் தேடிச் சென்று சீரழியாமல் இந்தக் காலத்தில் வீட்டிலிருந்தபடியே பணத்தை இழக்கலாம்.. சீரழியலாம்.

    இன்ன பிற சூதாட்ட , xxx கேவலங்கள்!..

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவைத்துணுக்குகள் எல்லாம் ஓரளவு படிக்க முடிஞ்சது. சில்பியின் கைவண்ணம் அருமைனு சொன்னால் போதுமா? அந்த நடிகர்! நடிகர் தானே? டி.ஆர்.மஹாலிங்கமோ?

    பதிலளிநீக்கு
  18. அப்பா என்றால் ஏதோ உயரே கோபுரத்தில் ஏற்றி வைத்தாற்போலவும் கிரீடத்தைச் சுமந்து கொண்டிருக்காப்போலவும் முன் காலங்களில் நடத்துவார்கள். அப்பாவிடம் பேசவே பயமாகவும் இருக்கும். ஆனால் எங்கள் காலத்திலேயே நாங்க அதை மாற்றினோம். குழந்தைகளிடம் இயல்பாகப் பழகி, விளையாடி, வெளியே அழைத்துப் போய்னு எல்லாம் இருந்ததால் நாம் செய்யும்சின்னச் சின்னத்தவறுகளைக் கூட அவங்க சுட்டிக்காட்டுவாங்க. மற்றபடி பாசம்/மரியாதை போன்றவற்றுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. குடும்பச் செலவுக்கு எப்போதுமே யாரிடமும் வாங்கியது இல்லை. நாங்களே சமாளித்தோம். அதே போல் பையர் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் பணம் அனுப்பினாலும் தனியாகப் போட்டு வைச்சு அவருக்கே எந்தவகையிலானும் திருப்பிடுவோம். திட்டமிட்டுச் சேமித்து வந்ததால் பெண்ணின் திருமணமும் கடன் வாங்காமலும்/யாரிடமும் கைமாற்று என வாங்காமலும் திருமணம் முடிஞ்சு கையோடு உடனடியாக எல்லாச் செலவுகளையும் பணம் கொடுத்துத் தீர்த்து முடித்து ஒருவாரத்தில் நிம்மதியாக ஆனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வகையிலிருந்து நான் சற்றே மாறுபட்டாலும் தந்தை பற்றிய பழங்காலக் கண்ணோட்டம் சரியே!

      நீக்கு
  19. இந்தக் கொவ்வாலியைப் பற்றி இன்று தான் கேள்விப்படுகிறேன். மொழிபெயர்ப்பில் கூட எதுவும் படிச்சதாக நினைவில் வரலை. கவிதை நன்று என்றாலும் மனதை ஈர்க்கவில்லை. கழிவறை சமாசாரம் இது போல் பல ஜோக்குகள் பார்த்தாச்சு. அலுப்பும்/எரிச்சலுமாய் வரும் பார்க்க நேரிடும்போதெல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா.

      வலியைப் பற்றி சட்டென தோன்றியதை கவிதையாக்கினேன்.  கழிவறை ஜோக் இல்லை.  நிஜம்.  எங்கள் ஹெட் ஆபீஸ் சென்றபோது பார்த்தது.

      நீக்கு
  20. இந்த பெருமித உணர்வு மகிழ்வை தந்தது...

    வரும் இரு மகள்களும் அவ்வாறே இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருமகள்கள் வரும் காலம்தான் எப்போது! மருமகள்களை மகள்களாகவே பாவிப்போம். நன்றி DD

      நீக்கு
  21. ஒரு பாடலை எப்போது கேட்டாலும், ஏனோ மனம் பாரமாகும், கண்கள் கலங்கும் :-

    // முத்துக்கு முத்தாக...
    சொத்துக்கு சொத்தாக...
    ...
    ...
    சின்னத் தம்பி கடைசித் தம்பி //

    (அடியேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுதல் :- ஒரு வேளை இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருப்பவர், மேற்கண்ட பாடலை பாடியவரோ...?

      நீக்கு
    2. ஹிஹிஹி.. தம்பி வகையில் நானும் சின்னதம்பிதான்... பட விஷயத்தில் உங்கள் ஊகம் சரி.

      நீக்கு
  22. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சகோதரரே

    உண்மை. இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் எனக்கும் கண் கலங்கும். கேட்ட பின்னர் நீண்ட நேரம் அந்த வரிகளின் அர்த்தங்கள் மனதை சற்று பாரமாக்கும் அண்ணனாக வரும் எஸ். வி ரங்காராவின் நல்ல பாசமான நடிப்பு இதில் மனதை விட்டு அகலாதது.

    சின்னத் தம்பி கடைசித் தம்பி
    (அடியேன்) /

    திரையில் வரும் அந்த பாசமிக்க குடும்ப உறவுகள் போல் நீங்களும் உங்கள் குடும்பமும் இணை பிரியாது வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லவும் வேண்டுமோ..

      நீக்கு


  23. /(போடுவது கண் சரியாகத்தெரிய.. ஆனால் சொல்வது மூக்கு கண்ணாடி!)/

    ஹா ஹா ஹா. இதை ரசித்தேன். பொதுவாக கண்கள்தானே பார்க்கும் எதையுமே வடிகட்டி நம் மனதையும், அதன் மூலமாக உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது. அப்படிபட்ட கடமை மிக்க கண்களுக்கு இயல்பாக பெருந்தன்மை எனப்படும் மனோபாவம் வந்து விடுவதால், தனக்கு கீழ் செயல்படும், ஆனால், நம் ஜீவனுக்கு உதவும் கைங்கரியத்தை சிறப்பாக செய்து வரும் மூக்கிற்கு, தனக்குரிய அந்த கண்ணாடியை ஏற்று வழிநடத்தும்படி , சிம்மாசனப் பதவி தந்து சிறப்பிக்கிறதோ.? (இத்தனைக்கும் நம் இரு செவிகளும் அந்த கண்ணாடியின் கால்களை பவ்யமாக பிடித்து தாங்குகின்றன. அதனிடமும் நம் செயலுக்குரிய மரியாதையை இந்த கண்களும், மூக்கும் தரவில்லை என்ற பொறாமையான எண்ணங்கள் ஏதும் வரவில்லை. இது கண்களின் பெருந்தன்மையை விட மேலும் சிறப்பானதன்றோ...! எனவும் சிந்திக்க வைக்கிறது.) இப்படி சிந்தனைகளை உருவாக்கிய தங்கள் மூக்கு கண்ணாடி வார்த்தை அலசலுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண், மூக்கு, செவியின் சிறப்புகளை பற்றி வியந்து சொல்ல வந்ததில், வழக்கப்படி யான வணக்கம் சகோதரரே சொல்ல மறந்து விட்டேன்.:)))))

      நீக்கு
    2. சுவாரஸ்யமாக விளக்கம் கொடுத்து விடுகிறீர்கள் கமலா அக்கா.

      நீக்கு
  24. இவர் யார் தெரிகிறதா? (வழக்கம்போல யாரும் பதிலே சொல்ல மாட்டீர்கள்!!)

    S.V.Ranga Rao?

    Vaishnavi

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை.. வலிகள் முதலைகளாயின் அதன் பிடிப்பும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அது பிடித்தலில் உடும்பின் இனமல்லவா? பிடித்த பிடியை விடாது.

    அந்த படத்திலிருப்பவர்
    நடிகர் எஸ். வி. ரங்காராவ் அவர்கள் இளமையில் என நினைக்கிறேன். ஜாடை அப்படித்தான் உள்ளது. ஓ.. இதைத்தான் அந்தப்பாடல் மூலமாக சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் குறிப்பிட்டு விட்டாரோ? நானும் முதலில் அந்த படத்தைப் பார்க்கவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. இவர் யார் தெரிகிறதா? (வழக்கம்போல யாரும் பதிலே சொல்ல மாட்டீர்கள்!!)

    குணச்சித்திர நடிகர் திரு ரெங்காராவ் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  27. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் முத்துக்கு முத்தாக பாடலை குறிப்பிட்டு இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  28. உங்கள் இளமை காலம் அப்பாவின் குணநலன்கள் படிக்க கஷ்டமாக இருந்தாலும் சில அப்பாக்கள் அந்தக்காலத்தில் இருந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ள கடமைகள், பொறுப்புகளின் சுமை இப்படி நடந்து கொள்ள செய்யும் போல.
    அப்பாக்களை பற்றி பிரபலங்கள் சிலர் தங்கள் அப்பாவை பற்றி பகிர்ந்தவைகளை படித்து இருக்கிறேன்.

    உங்கள் பிள்ளைகள் உங்களுடன் நட்புடன், அன்புடன் இருப்பது படித்து மகிழ்ச்சி. அன்பும் , புரிதலும் என்றும் இப்படியே இருக்க வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இளமைக்காலம் அப்படி கஷ்டமாக எல்லாம் இல்லை கோமதி அக்கா.. எந்த அளவு கோபக்காரரோ அந்த அளவு பாசக்காரர் அப்பா.

      நீக்கு
    2. அப்பா பாசக்காரர் என்று தெரியுமே , அம்மாவிடம் மிகவும் பாசமாக இருந்ததும் தெரியும் நீங்கள் சொன்னது மூலம்.
      நான் சொன்னது உங்கள் இளமை காலம் பற்றி நீங்கள் எழுதி இருப்பதை படித்து.

      நீக்கு
    3. பாசத்தை கூட கோபமாய் காட்டுவார்கள் சிலர்.

      நீக்கு
    4. ஆரம்ப காலங்களில் என் அப்பா அப்படித்தான்.  கடைசி காலங்களில் பரிதாபமாய் இருந்தது.  என்னாலும்  பெரிதாய் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

      நீக்கு
    5. அப்பாவின் கடைசிக்காலத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நாங்க தான் வைத்துப் பராமரித்தோம். அண்ணா/தம்பி பொறுப்பேற்க முடியாத ஒரு சூழ்நிலை. பின்னர் அப்பா எங்களிடமிருந்து அண்ணாவிடம் செல்லும்போது எங்களைப் பாராட்டிப் பேசியதும் நினைவில் இருக்கு. கடைசி ஆறு மாதங்கள் அண்ணாவிடம் போய் விட்டார் நல்லவேளையாக. அப்போவும் அவருக்காக மருத்துவரிடம் செல்லுவது/அவரை அழைத்துச் செல்லுவது எல்லாம் நான் தான்.

      நீக்கு
  29. கவிதை உடலில் பிடிப்பு ஏற்பட்ட சமயம் சரியாக அமர்தல் இல்லையென்றால் சிறு அசைவு கூட வலியை ஏற்படுத்தும் என்று சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிப்பு போய் புது அவஸ்தை இப்போது! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  30. "தெலுங்கு எழுத்தாளர்களின் பிதாமகர்' என்றும் "பாக்கெட் நாவல்களின் தந்தையை பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.
    பொக்கிஷம் பகிர்வு அருமை

    பதிலளிநீக்கு
  31. //"கவலைப்படாதேப்பா.. மத்தியானம் சாப்பிட்டுவிட்டு க்ளாஸ்லயே இருப்பேன். ஸ்கூல் முடிஞ்சதும் உள்ளேயே இருப்பேன். நீ வந்து கூப்பிட்டா மட்டும்தான் வெளியே வருவேன். யார் வந்து கூப்பிட்டாலும் போக மாட்டேன், அழ மாட்டேன்"//

    நீங்கள் சொல்ல நினைத்ததை குழந்தை சொல்லி விட்டார்,சமத்து குழந்தை.

    பதிலளிநீக்கு
  32. உணர்வு மகிழ்வினைத் தருகிறது
    படம் ரெங்காராவ் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் !

    அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  34. அப்பா மகன்கள் அன்பு, புரிதல் இனிதாக தொடரட்டும்.

    குடுகுடுப்பை ஜோக்ஸ் செம ரசனை.சிரித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!