சனி, 21 ஜனவரி, 2023

11 வயதில் 12 புத்தகங்கள்.... மற்றும் நான் படிச்ச கதை (JKC)

 

========================================================================================================================================


சமையலில் எரிபொருள் சிக்கனத்திற்கு தீர்வு ;மேலூர் இரட்டை சகோதரர்கள் அசத்தல்... 


===========================================================================================================

11 வயதில் 12 புத்தகங்கள்: கடலூரை பூர்வீகமாக கொண்ட இளம் எழுத்தாளர் சாதனை... 


============================================================================================================

1.2 லட்ச ரூபாயை ஒரே வாரத்தில் ரூ.3 லட்சமாக்கிய ஆன்லான் டெக்னாலஜி நிறுவனம்...  


===================================================================================================================

பொது மக்களுக்கு தேவையானதை செய்து தரணும்!


=============================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

குளத்தங்கரை அரசமரம்

வே சு அய்யர்.

முன்னுரை

 

குளத்தங்கரை அரசமரம் என்பது . வே. சு. ஐயர் எழுதிய சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. ஆனால் இது ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய 'கடேர் கதா' என்ற சிறுகதையின் தழுவல் என்பதும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.

கதை எனப்படும்போது சொல்வது யார் என்பது முக்கியமில்லை. இந்தக் கதை ஊரின் குளத்தங்கரையில் நிற்கும் ஒரு அரசமரம் சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது. ருக்மணி என்ற சிறுமியின் கதை. ருக்மிணி 12 வயதில் நாகராஜன் என்ற இளைஞனுக்கு வாழ்க்கைப் படுகிறாள். இரண்டு குடும்பங்களும் சம அந்தஸ்து உள்ளவர். ருக்மணி, கணவன் வீட்டிற்கு செல்லக் காத்திருக்கிறாள். இடையில் ருக்மணியின் தந்தை சொத்துக்களை எல்லாம் இழக்கிறார். நாகராஜனின் தந்தை, நாகராஜனுக்கு ருக்மணியைக் கைவிட்டு  வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். ஆனால் நாகராஜன் ருக்மணியை மனப்பூர்வமாக காதலிக்கிறான். இதனை சரியாகச் சொல்லாததால் ருக்மணி மனம் வெறுத்து குளத்தில் விழுந்து உயிரை விடுகிறாள். நாகராஜன் சாமியாராகிறான்.

விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்என்ற வெளிப்படையான பிரச்சாரக் கருத்துடன் இக்கதை முடிகிறது.

.வெ,சு.ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் நூலுக்கு எழுதிய முன்னுரையில் சிறுகதை என்னும் தனித்த இலக்கியவடிவம் பற்றி குறிப்பாக சொல்லியிருப்பதனால் அவர் சிறுகதையின் வடிவம் பற்றிய உணர்வுடன் எழுதியவர் என்றும், ஆகவே இந்தக்கதை முதல்சிறுகதை என்றும் சொல்லப்பட்டது.

விமர்சகர் .நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா போன்றவர்களின் கருத்து இது. தமிழ்ச்சிறுகதை வரலாறு எழுதிய சிட்டி -சிவபாதசுந்தரம் இருவரும் அதை ஏற்றிருக்கிறார்கள்.

 புதுமைப்பித்தன் இந்தச் சிறுகதையோடு வ.வே.சு.ஐயர் யுகம் பிறக்கிறது என்கிறார்

முழுக்கதை, ஆசிரியர் எழுதியபடி வெளியிட்டால் 2 பதிவுகளாகத் தான் வெளியிட வேண்டி வரும். ஆகவே வழக்கம் போல் கதைச் சுருக்கத்தை ஆசிரியரின் வாக்குகளிலேயே தருகிறேன்.

 மொபைல் மட்டும் உபயோகித்து இந்தப் பதிவைப் படிப்பது கடினம். (நாங்கள் தலைப்பையும்,கடைசி வரியையும் மாத்திரமே படிக்கிறவர்கள் என்கிறீர்களா? அதுவும் சரி தான்.)


பார்ககப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது.

இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாகயிருக்கும் போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்றுப் போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது.

 நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத்தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள்அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விலாசம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமத்த நீல ஆகாசம் ஞாபத்துக்கு வரும்.

அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால்நம்ம ருக்மிணி அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்என்று உடனே வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்.

ருக்மணிக்குப் பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்மூர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்குக் கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது

காமேசுவரையர் ருக்மிணிக்குக் கல்யாணப் பந்தலில் நிறையச் சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்பத் திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டு போய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்குத் தலை பின்னிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப்போகும்போது அவளை அழைச்சுக்கொண்டு போகாமல் போகவே மாட்டாள். மாப்பிளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும் ருக்மணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான்.

இப்படி மூணு வருஷ காலம் சென்றது. அந்த மூணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சிப் போய்விட்டது. ரொக்க ஐவேஜியெல்லாம் ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம். அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்மூர்ப் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள் தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துத்தான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்க்க வேண்டியதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க்காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார்.

காமேசுவரையர் ஐவேஜியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டது ராசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக் கண்டால் பத்து நிமிஷம் நின்று பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதைக் கண்டுவிட்டால், ஏதோ அவசர காரியமாகப் போகிறது போல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாகப் போய்விடுவார்.

ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே  பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சு போய்விட்டது.

இனிமேல் நாகராஜனைப் பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விட்டது.

தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்திப் பெண்ணாம். தகப்பானருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்தப் பெண்ணைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். காலாக்கிரமத்தில் ராமசாமிஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்துச் சேர்த்துவிடுமாம். இதெல்லாம் எனக்குக் கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.

நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜன் மனதில் மாத்திரம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவு கூட அடையாளமில்லை.

கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிகையும் வாசித்து விட்டுப் போய்விட்டார்கள்.

நாகராஜனோடு கூடப் படித்துக் கொண்டு இருந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனைப் பார்க்கிறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே? நம்ம குளத்தங்கரை தானே?

ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். நாகராஜன், வேறு பெண்ணைக்  கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதி விட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்து விட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி இதெல்லாம் வாஸ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான்.

 நாகராஜனும், ”அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட் போது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப் போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார், லட்சரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்சரூபாய் சொத்துச் சேருமாம். இப்படி, தானே வருகிற சீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?" என்று சொன்னான்.

ஸ்ரீநிவாசன் அவனுக்கு, ”எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமாஎன்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங் கரையும்படியாக ருக்மிணிகாகப் பரிஞ்சு பேசினான்.

நாகராஜன் அவனைப் பார்த்து, ‘ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம்விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாகப் போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியமால் வைத்துக் கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குத் தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை. ஆனால் ஒன்று மாத்திரம். இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது, இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியதென்று நிச்சயித்துவிட்டேன். நான் எத்தனை மறுத்தும் அப்பாவும் அம்மாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள. ஆகையால் மன்னார்கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப் படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமங்கலியத்தில் நான் தானே முடிச்சப் போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்த சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சிதின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா? என்று சொல்லி முடித்தான்.

ஞாயிற்றுக் கிழமை. இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது. ஆனால் அவர்களைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுவதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர் கட்டுப்படுகிறவர்களும் இல்லை.

காமேசுவரையாரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள் தான் துணை.

சனிக்கிழமை ராத்திரியாச்சு. ஊரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாகக் குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப் பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொரு தடவை பின் பக்கம் பார்த்துக் கொண்டே வந்து, கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும் போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சு கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாய்க் கவனிக்கலானேன்.

இனி கதை சுருக்கம் இல்லை. ஆசிரியர்  எழுதியது முழுதாக.

ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

எதிரேச்சையாய் நாகராஜன் தலையைத் தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக் கொண்டு, ”ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமோ நீ?” என்று கேட்டான். ”நீங்கள் இருக்கிற இடத்தில தனியாக நான் இருக்க வேண்டிய நாள் இன்னும் வரவில்லையே”.

நாகராஜன், ”இந்த வேளையில் நாம் இங்கேயிருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள் ; வா, அகத்துக்குப் போய்விடலாம்என்றான். அதற்கு ருக்மிணி, ”உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று இந்த ஒரு மாதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த மூணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமேயொழிய மனுஷாளுக்குத் தெரியாது. நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்களும் என்னைக் கைவிட்டு விட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரை அழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது. நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான், அதில் சந்தேகமில்லை.”

நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே. நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன்ஆமாம், போகலாம் என்று தான் இருக்கிறேன்என்றான்.  அப்படி அவன் சொன்னதும் ருக்மணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் வந்துவிட்டது.

அப்படியானால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்தானே?" என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், ”உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமை தானே? அதற்காகத்தான் அவர் பேச்சைத் தட்டாமல் புறப்படுகிறேன். ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒருநாளும் தள்ளிவிட மாட்டேன்என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. ”நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டுவிடுகிறது! நான் கவலைப்படாமலிருக்கிறது! என்னை ஒரு நாளும் கைவிட மாட்டீர்கள்! ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள்! நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்!” என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள். நாகராஜன்வா, போகலாம், நாழியாகிவிட்டது. இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது" என்று சொல்லி முடித்தான்.

ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது.

ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப் போலே தூக்கி மார்போடே அணைத்துக் கொண்டு, ”என்ன ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி. நான் என்ன செய்யட்டும்" என்ற கருணையோடு இரங்கிச் சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

எல்லையில்லாத துன்பம். எல்லையில்லாத கஷ்டம். அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டுநான் சொல்லக்கூடியது இனிமேல் ஒண்ணுமில்லை. மன்னார்க்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்குச் சொல்லமாட்டேன்என்கிறீர்கள். இன்றோடு ன் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத் துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதை நம்பிக் கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக் கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம். உங்களை இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள், அவள் நம்பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிற போதுகூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக்கேட்டுக் கொள்வதுஎன்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பிதேம்பி அழுதாள்.

நாகராஜன் உடனே அவளைத் தரையிலிருந்து தூக்கியெடுத்து, ”பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவைத்து விடாதே, நீ போய் விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுங்கும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்றுப்போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது. வா அகத்துக்குப் போகலாம்" என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான்.

மழை தாரை தாரையாகக் கொட்ட ஆராம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் என் கண்ணுக்கு மறைந்து போய்விட்டார்கள்.

ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது, மழை நின்றுவிட்டது.

ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை.

என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டுவருகிறது.

காரணம் ஒண்ணும் தெரியவில்லையே என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும் போது மீனா, ”என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது?” என்று கத்தினாள்.

குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன, வையாதே போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய்விட்டாளே என் ருக்மிணி!

அதற்குள்ளே, ”நாகராஜன் வரான், நாகராஜன் வரான்என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம் நிசந்தான். அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துவிட்டான். மல்லிகைச் செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ”ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!” என்று கதறிக் கொண்டு கீழே மரம் போல சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் என்று அடங்கிப்போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் மூர்ச்சை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து, விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்திலே ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தைப் பார்த்து, ”என்னுடைய எண்ணமத்தனையும் பாழாக்கிவிட்டு ஜூலியெத் மாதிரி பறந்தோடிப் போய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய்ப் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலை செய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகசியம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்தக் கதி நமக்கு இன்று வந்திருக்காதே! ‘குஸும ஸத்ருசன்ஸத்ய: பாதி ப்ரணயி ஹருதயம்' என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி! நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!” என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தித்தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்தரீயத்தையும் அப்படியே தாறாய்க் கிழித்துவிட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து, நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்.

ஆசிரியர்

வே சு அய்யர்  (வரகனேரி வேங்கடசுப்ரமணிய அய்யர் (1881-1925)) திருச்சியைச் சார்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரர். மதராஸ் பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞர் தேர்வு பெற்று பாரிஸ்டர் படிப்பை முடிக்க லண்டன் சென்றார். 1910 இல் படிப்பு முடிந்தாலும் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்து பட்டத்தைத் துறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்களில் தீவிரவாதியாக மாறினார்.


சர்க்கார் உதவியால் பாண்டிச்சேரி வந்து வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளித்தவர் இவரே. 1909இல் காந்தியைச் சந்தித்தவர் சந்திப்புக்குப் பின் அஹிம்சாவாதியாக மாறினார். பாரதியின் உற்ற நண்பர்.

ஏகாந்தன் ஐயா இக்கதைக்கு எழுதிய விமரிசனம்.

ஏகாந்தன்

கதையின் சுட்டி. அழியாக் சுடர்கள்

12 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. பாலகுமார், பாலசந்தர் இளைஞர்களின் கண்டுபிடிப்பு சூப்பர்.

    வாழ்த்துகள். பாராட்டுவோம்,

    மற்றும் குட்டிப் பெண் சஜினி பிரமிப்பு! வியக்க வைக்கிறாள். நிறைய எழுத வேண்டும். பாராட்டுகள்! வாழ்த்துகள்

    மற்ற செய்திகளும் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  4. குளத்தங்கை அரசமரம் கதை, ஏகாந்தன் அண்ணா அறிமுகப் படுத்தியதும் கதையைப் பற்றி அண்ணா எழுதும் முன்பே வாசித்து அங்கு கருத்தும் சொன்ன நினைவு. அவர் கதையைப் பற்றிய எழுதிய பதிவிற்கும் கருத்து சொன்ன நினைவு....

    அங்கு பார்த்து அதையே இங்கு தருகிறேன்....டைப்பிங்க் மிச்சம் பாருங்க அதான்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை. அந்தக் காலத்துத் தமிழில். அப்போதெல்லாம் டைவேர்ஸ் பண்ணினால்தான் அடுத்த கல்யாணம் என்பதெல்லாம் இல்லை போலும். அதான் தைரியம்..நாகராஜன் சீக்ரெட் சர்ப்ரைஸ் என்று விளையாட்டாய் செய்ய வினையாகிப் போனது. வாசித்து வரும் போதே ருக்மணி தற்கொலை பண்ணிக்கப் போகிறாள் என்று தெரிந்துவிடுகிறது…நாகராஜன் சொல்லியிருக்கலாம்…மரத்தின் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அதான் ஆசிரியர்!!!

    கடைசியில் ஆசிரியர் சொல்லுகிறார் எந்தப் பெண்ணின் மனதையும் நோகச் செய்யக் கூடாதுகுழந்தைகளே என்று….அருமை…

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இறுதியில் முடிவு ரொம்ப மனசைப் படுத்தியது. என்ன விளையாட்டோ அந்த நாகராஜனுக்கு…சொல்லவும் நினைத்துச் சொல்லாமல் அது என்ன சஸ்பென்ஸ்…நண்பனும் சொல்லியும் அவன் தவறுகிறான்…பின்னர் வருந்தி என்ன பயனோ….

    ஆசிரியர் எழுதும் போது மரம் அவர்களின் சம்பாஷணையிக் கேட்பது போல் மரம் கதை சொல்வது போலவே போகும் இல்லையா அப்போ அவர்கள் கொஞ்சம் தள்ளிச் சென்/ரதும் அப்புறம் சம்பாஷணைக் கேட்கவில்லை என்பதையும் மரம் சொல்லுவது போல் சொல்லி ஆனால் தான் கேட்டதை வைத்து அதை விவரிக்கும் விதமாய் ருக்மணியின் மனதைப் பற்றிச் சொல்வதாய் நகரும்…..

    நல்ல கதை…

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைத்து செய்திகள் பகிர்வும் அருமை.
    கதை நிறைய தடவை படித்து இருக்கிறேன்.
    அந்தக்கால பெண்ணின் நிலமை பால்யவிவாகம், வரதட்சிணைகொடுமை, மிக எளிதாக இன்னொரு கல்யாணம் செய்ய முயல்வது எல்லாம் படித்து வருத்தப்பட்டு இருக்கிறேன்.
    கதை படித்து முடித்ததும் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதை தடுக்க முடியாது. அன்றும், இன்றும் அப்படித்தான்.
    பகிர்வுக்கு நன்றி.
    விளையாட்டு வினையாகி விட்டது நாகராஜ் வாழ்க்கையில்.

    பதிலளிநீக்கு
  8. வ.வே.சு. ஐயரின் சிறுகதையை எபி வாசகர்களுக்கெனக் கொண்டுவந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தொடர்பான அடியேனின் கட்டுரைக்கு லிங்க் கொடுத்தமைக்கும் நன்றி ஜேகேசி சார்.

    பதிலளிநீக்கு
  9. கண்டுபிடிப்பாளர்களை வாழ்த்துவோம்.

    அரசமரம் சொல்லும் கதை அந்தக்காலத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டிய கதை. நெஞ்சை தொட்டு நிற்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!