செவ்வாய், 3 ஜனவரி, 2023

சிறுகதை : அறம் - துரை செல்வராஜூ

 அறம்

துரை செல்வராஜூ 


வெயில்..   நல்ல வெயில்..

பங்குனி மாதத்திலேயே பட்டையைக் கிளப்புகின்றது..

இருந்தாலும் நிழல் அற்றுப் போன நெடுஞ்சாலையில் பேருந்துகளும் லாரிகளும் இன்ன பிற வாகனங்களும் ஆங்காரத்துடன் பறந்து கொண்டிருந்தன..

அனல் தெறிக்கின்ற அந்த நேரத்திலும் பேருந்திற்காக மக்கள் அங்குமிங்குமாக  காத்திருந்தனர்...  அவரவர் பயணம் அவரவர்க்கு..

அவர்களின் ஊடாக - தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாக இரண்டு பைகளுடன் நின்றிருந்தார் சுந்தரேஸ்வர சிவாச்சாரியார்.. 

ஸ்ரீ ஏலவார் குழலி உடனாகிய வேதபுரீஸ்வரர் கோயிலின்
கும்பாபிஷேகம்..  சூரிய உதயத்துக்குப் பின் இரண்டாவது முகூர்த்தம்..
சுபயோக சுப வேளையில் திருக்குடமுழுக்கு நல்லபடியாக நிறைவேறியது..

யாகசாலை பிரதிஷ்டைக்கு என இங்கு வந்து  ஐந்து நாட்கள் ஆகிவிட்டன.. குடமுழுக்கு நடந்ததும் மாலை மரியாதை பொன்னாடை சம்பாவனை என எல்லாருக்கும் சிறப்பு செய்யப்பட்டதும் யாகத்திற்கு வந்திருந்த பலரும் ஊருக்குப் புறப்பட்டனர்.. இவரும் சீர்காழிக்குப் போக வேண்டும்..

புறவழிச்சாலையும் நெடுஞ்சாலையும் குறுக்கிடும் இடம்..  நேராகச் சென்றால் கும்பகோணம், மயிலாடுதுறை.. அந்தப் பக்கம் திருவாரூர்..  இந்தப் பக்கம் திருச்சி..

அகன்ற சாலைகளின் மத்தியில் பெரியதான நடுத் திட்டு.. அதுவும் கால சூழ்நிலைகளால்  ஆங்காங்கே கனரக வாகனங்களால் இடிபட்டு நொறுங்கியிருந்தது...  

கொஞ்ச நேரத்துக்கு முன் கும்பகோணம் வரைக்கும் போகும் பேருந்து ஒன்று இங்கே நிற்காமல் போய் விட்டது...

கோயிலிலேயே சொன்னார்கள் - பேருந்து நிலையத்துக்குப் போய் விட்டால் நல்லது என்று..  இவர் கேட்கவில்லை - இங்கிருந்து போவதற்கும் அங்கிருந்து வருவதற்கும் நேரம் விரயம் ஆகும் என்று.. ஆனால், இங்கே காத்துக் கிடப்பதில் காலத்தின் கணக்கு சரியாகிக் கொண்டிருக்கின்றது..

அதோ.. அதோ.. புதிய பேருந்து ஒன்று வருகின்றது.. சிதம்பரம் என்று டிஜிட்டல் புள்ளிகள்.. மகிழ்ச்சி இவருக்கு..

கையை நீட்டினார்... பேருந்து வேகம் குறைந்து நின்றது.. 


" சீர்காழி.. சீர்காழி.. " - என்றார் நம்மவர்..

" வாங்க.. வாங்க.. " - என்றபடி கையை நீட்டி ஒரு பையை வாங்கிக் கொண்ட கண்டக்டர்  அதை இருக்கைகளுக்கு மேலாக இருந்த பரணில் வைத்தார்..

 " அந்த நடு சீட்ல உட்காருங்க!.. " - என்றபடி டிக்கெட்டைக் கொடுத்தார்.. 

பேருந்தின் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருக்க அந்த நடு இருக்கை மட்டும் ஒற்றை ஆளுடன்..

காரணம் புரிந்தது.. மூக்கு வரைக்கும் உற்சாக பானம்.. வியர்த்து விறுவிறுத்து சம்பாதித்த பணத்தை நாடும் மக்களும் வாழட்டும் - என்று மனதார மதுக் கடையில் தாரை வார்த்து விட்டு வந்திருக்கின்றான்...

" ஐய்ரே.. உக்காருங்க.." - என்றபடி இருக்கையைத் தட்டி வரவேற்றான்..

அவனைச் சுற்றிலும் மது வாடை.. மூன்று நாட்களாக ஹோமப் புகையில் இருந்தவருக்கு இன்று இப்படியான விதி..

" ஈஸ்வரா... இந்த சோதனை எவ்வளவு நேரத்திற்கோ!... " மனதில் நினைத்துக் கொண்டார்..

" என்னா... யோசிக்கிறீங்க... இவனோட பெரிய இம்சையா இருக்குமே.. அப்பிடி..ன்னா!..  எல்லாத்துக்கும் நீங்க தான்.. யா காரணம்!..  "

இருக்கையின் ஓரமாக ஒடுங்கிக் கொண்டு உட்கார்ந்த சிவாச்சாரியார் திடுக்கிட்டார்..

" உங்களாலத் தான் நான் ஒழுங்கா படிக்கலே!.. "

- இவர் என்னவோ அவனது கையைப் பிடித்து இழுத்து விட்ட மாதிரி உளறினான்..

" தகப்பனார் கூட ஸ்கூல்.. ல தமிழ் வாத்யாரா இருந்து எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தாரே!.. " - மனதில் நினைத்துக் கொண்டார்..

" உங்க ஆளுங்க நெறய மார்க்கு எடுத்துடறாங்க.. நமக்கு எங்கே கெடைக்கப் போகுது.. ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்... கடேசில ரிசல்ட் கிழிஞ்சு போச்சு.. எங்கப்பன் யார் கால்.. லயோ விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தான்.. அது சரியில்லாத வேலை தான்.. இருந்தாலும் பார்க்கிறேன்.. வேலை கிடைச்சதும் இழுத்து உக்கார வச்சி கலியாணத்தையும் முடிச்சிட்டானுங்க.. "

ஒரு விநாடி நிறுத்தி விட்டு மறுபடியும் தொடர்ந்தான்..

" அதுவும் தான் தேவைப்படுதே மனுசனுக்கு.. தனிக்குடித்தனமும் ஆச்சு.. ஆனா, வருமானம் தான்  பத்தலை.. அப்பிடி இப்பிடி கைய நீட்டுனப்போ ஆபீசருங்க வந்து புடிச்சிட்டாங்க.. இப்போ சஸ்பெண்டு.. அங்கே போனா அம்மா - வராதே.. ன்னு விரட்டுறா.. இங்கே பொண்டாட்டி விளக்கமாத்தால அடிக்கிறா...
நான் என்ன பண்றது சொல்லுங்க.. நாலு வருசமா குடிப் பழக்கம் வேற!... "

பேச்சு நின்ற வேளையில் அவனிடமிருந்து  ' களக்.. ' என்றொரு சத்தம்..

கெட்ட வாடை பரவியது..  என்ன ஏது - என்று பேருந்தில் இருந்த எவரும் திரும்பிப் பார்க்கவே இல்லை.. 

பேருந்து மட்டும் இப்படியும் அப்படியும் சாய்ந்து குலுங்கியபடி விரைந்து கொண்டிருந்தது..

" காலையில போனேன்.. வேலை முடிஞ்சு போச்சு.. முன்னூறு ரூவா கொடுத்தான்.. அதுவும் கரைஞ்சு போச்சு.. ஆனா உங்க பாடு கொண்டாட்டம்.. ரெண்டு சொம்பு தண்ணி.. நாலு பூவு.. சூடம் சாம்புராணி தயிர் சோறு... முடிஞ்சது வேலை.. தட்டு..ல விழுவுற பணத்தை சுருட்டி எடுத்துக்கிட்டு வந்துடறீங்க.. யோகம் தான்.. அந்தக் காலத்து.. ல சரியா அறுக்காம உட்டுட்டானுங்க!.. "  - என்றபடி  அவரது பிடரியைப் பார்த்து ஏளனமாக சிரித்தான்..

இதுவரை எதுவும் பேசாமல் பொறுமையாக இருந்த சிவாச்சாரியார் - 

" இதோ பாருங்கோ... நீங்க யாரோ.. நான் யாரோ.. உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்னை?.. ஏன் இப்படி எல்லாம் தூஷிக்கறேள்?.. " - என்றார்..

" ஏ... இப்போ கூட நீ யாரோ.. நா யாரோ.. ன்னு தானே வருது.. நாம ரெண்டு பேரும் ஒன்னு..ன்னு ஐய்யிரு வாய்.. லேருந்து வர மாட்டேங்குதே!.. "

தலையை ஆட்டியபடி சிரிக்க முற்பட்டவன் முன் பக்கக் கம்பியில் முட்டிக் கொள்ள - அடி வயிற்றில் இருந்து பெரிய சத்தத்துடன்  ஏதேதோ  வெளியே வந்து விழுந்தன... 

" கண்டக்டர் சார்.. இவரைக் கொஞ்சம் பேசாம வரச் சொல்லுங்களேன்!..
இந்த இடத்தை வேற நாஸ்தி பண்ணிட்டார்.. " -  பரிதாபமாகக் குரல் கொடுத்தார் சிவாச்சாரியார்..

" சொல்லலாம் ஐயரே.. ஆனா நாளைக்கு நாலு பேரோட வந்து பஸ் மேல கல்லெடுத்து அடிப்பானே!.. "  - நடத்துனரின் குரலில் ஏளனம்..

" யோவ்.. ஐய்ரே.. கண்டக்டர் என்ன நாட்டாமையா?..  அவங்கிட்ட போய்ச் சொல்றே!.. என்னா செய்ய முடியும் என்னைய!.. நான் யார் தெரியுமா?.. "
- வாயைத் துடைத்துக் கொண்டவன் கத்தினான்..

" நீங்க யாரா வேணாலும் இருந்துட்டுப் போங்கோ.. நா சிவனே.. ன்னு வர்றேன்..  ஒங்களுக்கு ஒரு இடைஞ்சலும் செய்யலை!.. "

" நீ செய்யலே.. ன்னா என்னாயா?.. ஒங்கொப்பன் செஞ்சிருப்பான்.. உம் பாட்டன் செஞ்சிருப்பான்!.. "

' வித்தக நீறணிவார் வினைப் பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே!.. '

சிவாச்சாரியாரின் மனதிற்குள் பஞ்சாட்சரம் ஒலித்துக் கொண்டிருந்தது...

" இத்தனை பேர்  இந்த பஸ்.. ல இருக்கேள்..  இவர் பேசறது சரியில்லை.. ன்னு ஒருத்தராச்சும் நல்லது சொல்ல மாட்டேங்கறேளே!.. " 

சிவாச்சாரியார் சக பயணிகளைப் பார்த்துக் கேட்டார்..

யாதொன்றும் அறியாத பயணியர் நிறைந்திருந்த பேருந்திற்குள் சிரிப்பொலி மட்டும் கேட்டது..

" இஷ்டம்.. ன்னா சகிச்சிண்டு இருங்கோ.. இல்லே.. ன்னா பேஷா எறங்கிடுங்கோ..ண்ணா!.. "

- சிவாச்சார்யாரைக் கேலி செய்து சிரித்து மகிழ்ந்தது ஒரு கோஷ்டி..

பாபநாசம் நகரைக் கடந்து கும்பகோணத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது பேருந்து..

" கண்டக்டர்.. இங்கே என்னை எறக்கி விட்டுடுங்கோ!.. "

" நீங்க சீர்காழி..ல்லே போறீங்க!.. "

" இல்லே... இந்த பஸ்ல வர்றதுக்கு எனக்கு இஷ்டம் இல்லே!.. "

" சாபம் விட்டுட்டு போறீங்களா?.. "

" எனக்கெதற்கு அந்தப் பாவம்!..  ஸ்வாமி இருக்கிறார்.. அவர் பார்த்துப்பார்!.. "

நடத்துனரின் விசில் காற்றைக் கிழித்தது.. குலுங்கி அதிர்ந்து நின்றது பேருந்து..

சிவாச்சாரியார் இறங்கிக் கொண்டார்.. அவரது முகம் சலனம் இன்றி இருந்தது..

புகையைக் கிளப்பியபடி பேருந்து நகர்ந்த வேளையில் அதற்கு நேர் எதிராக லாரி ஒன்று அசுரத் தனமாக வந்து கொண்டிருந்தது - மது மயக்கத்துடன்...

சக்ராயுதன் சும்மா இருந்தாலும் சக்ராயுதம் சும்மா இருக்காதே!..

***
தொடர்ச்சி :

புகையைக் கிளப்பியபடி பேருந்து நகர்ந்த வேளையில் அதற்கு நேர் எதிராக லாரி ஒன்று அசுரத் தனமாக வந்து கொண்டிருந்தது - மது மயக்கத்துடன்...

சக்ராயுதன் சும்மா இருந்தாலும் சக்ராயுதம் சும்மா இருக்காதே!..

நெற்றியில் திருநீறும் குங்குமமுமாக அந்தப் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் -
எதிரே, அசுரத் தனமாக வந்த லாரியைக் கண்டு திடுக்கிட்டு அதிர்ந்த வேளையில்,

சிவாச்சாரியாரின் பூஜா கைங்கர்ய புண்ணிய பலத்தினால் நூலிழையில் விலகிய பேருந்து கும்பகோணத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது..

கண்ணெதிரே நடந்ததைக் கண்டு பதறிய சிவாச்சாரியார் நிம்மதிப் பெருமூச்சுடன் - " ஈஸ்வரா!.." என்றார்..

சுழன்று வந்த சக்ராயுதமும் பாவிகளை மன்னித்தவாறு திரும்பிச் சென்று பரந்தாமனிடம் அடைக்கலமானது.

***

92 கருத்துகள்:

  1. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. புத்தாண்டின் முதற் செவ்வாய் ஆகிய இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரத்தால் அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கதை நன்று. நமக்கு எப்போதுமே அநீதிக்கு உடனே இறைவன் நீதியளித்துவிடவேண்டும் என்ற ஆசை. அப்படி நடந்துவிடுமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அப்படி நடப்பதில்லை என்பதுதான் நிஜம்.

      நீக்கு
    2. யெஸ்ஸு நெல்லை. டிட்டோ....அந்தக் கணக்கே வேறு.....

      கீதா

      நீக்கு
    3. செய்தார்க்கு செய்த வினை..
      கூலி மிகச் சரியாக கிடைக்கின்றது..

      நமக்குத் தான் தெரிவதில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படம் அழகாக்க் கோர்க்கப்பட்டிருக்கிறது.

    அவரவர் நடத்தைக்கு அவரவர் நியாயம் கற்பித்துக்கொள்கிறார்கள். இறைவனின் நியாயம் எப்படி இருக்குமோ!

    இருந்தாலும் போகப்போக கோயில்களுக்கானவர்கள் எண்ணிக்கை வெகுவாக்க் குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது. ஒரு கோயில் என்பது அனைவருக்குமானது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது என்று இருக்கும்போதுதான் கோயிலும் ஊரும் வளம்பெறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவரவர் நடத்தைக்கு அவரவர் நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். இறைவனின் நியாயம் எப்படி இருக்குமோ!.. //

      இறைவனின் நியாயங்கள் என்றும் மாறுவதேயில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. புதன் கேள்வி...1. உழைப்பு என்பதற்கான விளக்கம் என்ன? சைக்கிளில் சேலை விற்று வளமாக வாழ்பவன் அந்தச் சேலையை நெய்பவனைவிட உழைப்பாளியா? இல்லை அதே சேலையை ஏசி கடையில் விற்று இன்னும் வளமுடன் வாழ்பவன் பெரிய உழைப்பாளியா? நெய்பவன் கண்ணில், உழைப்பில்ஙாமல் அதிகம் சம்பாதிக்கும் இவர்கள் சோம்பேறிகள், பிறர் உழைப்பில் வாழ்பவர்கள் என்ற எண்ணம் வராதா? 2. இந்த உலகில் உழைப்புக்கேற்ற ஊதியம் என்று ஏன் இல்லாமல்போய்விட்டது? அடைப்பைச் சரி செய்பவர், வீடு கட்டுபவர், சாலையைப் பராமரிப்பவர், ஏசியில் அமர்ந்து வேலைபார்ப்பவர் என கூலியில் ஏன் இத்தனை வித்தியாசம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      தங்களது மகளின் திறமைகள் வியக்க வைக்கிறது. நேற்றைய பதிவில் அவர்கள் செய்த இனிப்புக்கள் நன்றாக உள்ளது. ஓவியத்திலும், சமையல் போன்ற கலைகளிலும் மிகுந்த திறமைகள் உள்ள தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை கூறி விடுங்கள். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. துரை அண்ணா கதை நல்லாருக்கு வழக்கம் போல் பாசிட்டிவ்.

    ஆனால் முடிவு இப்படி இருக்க வேண்டும் என்று எல்லோர் மனதிலும் இருப்பது போன்று...ஆனால் யதார்த்தமோ என்று தோன்றுகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் யதார்த்தத்தில் அப்படி இல்லை....

      கீதா

      நீக்கு
    2. //ஆனால் யதார்த்தத்தில் அப்படி இல்லை...//

      யதார்த்தம் அப்படித்தான்..

      நமக்குத் தான் புரிவதில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  8. பொதுவாக மாஸ் சைக்காலஜி என்று சொல்வாங்க...அதாவது எல்லோருமே சமூகத்தில்/சமுதாயத்தில் நடக்கும் அக்ரமங்களுக்கு உடனே தண்டனை கிடைக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அந்நியன் ஸ்டைல்...ஆனால் அப்படி எல்லோரும் பொங்கி எழுவதில்லை...நம் மனதில் இருக்கும் நியாயங்களை இப்படி வெளிப்படுத்துவதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி ....அந்த எண்ணங்களைத்தான் கதைகளிலும், திரைப்படங்களிலும் காட்டுகிறோம் என்று தோன்றுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சகோ,
      ஒரு சிறுகதையை வாசித்த கோணத்தில்
      யார் யார் என்னலாம் பின்னூட்டம் போடறாங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசை. இதன் மூலம் இன்னொருத்தர் எவ்வளவு கூர்மையாக ஒரு கதையை வாசிக்கிறாங்க, ரசிக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கத் தான்.
      அதை வைத்துக் கொண்டு எபிக்கு ஒரு கதையை எழுதத் தான் இந்த முயற்சியும். அதனால் இந்தக் கதை சம்பந்தமா இன்னும் என்னலாம் உங்களுக்குத் தோன்றுகிறதோ அதையெல்லாம் சொல்லக் கேட்டுக்கறேன்.
      நான் பிறகு வருகிறேன், சரியா?

      நீக்கு
    2. நானோ நீங்களோ மிகச் சரியாக இருக்கும் பட்சத்தில் நமக்கெதிரான குற்றங்களுக்கு உடனே நீதி கிடைத்து விடுகின்றது என்பது நான் புரிந்து கொண்ட விஷயம்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  9. படம் பொருத்தமாக நல்லாருக்கு கௌ அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கதை படித்து மனது கஷ்டமாக போனது. ஒருவர் செய்த தப்புக்கும் ஒருசிலர் கேலி செய்து சிரித்தற்கும் இவ்வளவு பெரிய தண்டனையா?
    சிவாச்சாரியார் துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகி விட்டார்.
    அவர் மனதில் அவன் மனகுறையால் இப்படி பேசிவிட்டான், இறைவனிடம் பாரத்தைப்போட்டு விட்டு இறங்கி விட்டார். இவ்வளவு பெரிய தண்டனை அவர் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா கோமதிக்காவுக்கு எழுந்த இந்தக் கருத்துகள் எனக்கும் தோன்றியது. ஒருசிலர் செய்த தவறுக்கு பெரிய தண்டனை என்பது போன்று...

      அதே போல கும்பகோணத்தில் பல வருடங்களுக்கு முன் ஒரு பள்ளி தீப்பற்றி எரிந்து போனதே அதில் சிக்கியம் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் மாட்டிக் கொண்டு மடிந்த அந்த நிகழ்வு என் மனதுள் பல கேள்விகளை எழுப்பியது. அதற்கு எனக்கு மனம் ஏற்கும் வகையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

      கீதா

      நீக்கு
    2. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளுக்குக் கண் சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி சிறுபான்மை நிறுவனம் ஒன்று நடத்திய மருத்துவமனையில் பல பேருக்கு முழுப் பார்வையும் போயே விட்டது..

      அதற்கு என்ன நீதி கிடைத்து என்ன செய்ய முடியும்?...

      நீக்கு
    3. @ கோமதிஅரசு..

      // இறைவனிடம் பாரத்தைப்போட்டு விட்டு இறங்கி விட்டார். இவ்வளவு பெரிய தண்டனை அவர் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.. //

      உண்மை தான்..

      பகைவனுக்கும் அருள்வாயே.. என்று இவர் நடந்து கொண்டாலும் பகவான் அப்படி நடந்து கொள்வதாக இல்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. சிவாச்சாரியார் படம் நன்றாக வைரந்து இருக்கார் சார்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு..

    அன்பின் கோமதி அரசு அவர்களது தளத்தில் எனது பிரச்னைக்கு தாங்க்ள் சொல்லியிருந்த ஆறுதல் மொழிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

    @ ஸ்ரீராம்..

    // சிலந்தி கடித்ததனால் இவ்வளவு விளைவு ஏற்படுமா? இது ஏதாவது விஷச்சிலந்தியா?.. //

    தங்கள் அன்பினுக்கும் ஆறுதல் மொழிகளுக்கும் நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா நானும் பார்த்தேன். சிலந்தி கடி இப்படி தொடர்கிறதே என்று தோன்றியது. உங்கள் கஷ்டங்கள் விரைவில் குணமடைந்திட வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. // உங்கள் கஷ்டங்கள் விரைவில் குணமடைந்திட வேண்டும்.. //

      தங்கள் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி சகோ..

      நீக்கு


  14. @ ஸ்ரீராம்..

    சிலந்தி கடித்ததனால் இவ்வளவு விளைவு ஏற்படுமா? இது ஏதாவது விஷச்சிலந்தியா?.

    அது என்ன கண்றாவிப் பூச்சி என்று தெரிய வில்லை..

    அதன் கடிவாய் அடையாளம் அதுமாதிரி இருந்தது..

    குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் சில வாழைகளும் சீமைக் கருவேல புதர்களும் தான்..

    இதெல்லாம் எனது கர்ம வினை..

    அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  15. @ நெல்லை..

    // கதை நன்று. நமக்கு எப்போதுமே அநீதிக்கு உடனே இறைவன் நீதியளித்துவிடவேண்டும் என்ற ஆசை. அப்படி நடந்துவிடுமா என்ன?.. //

    நான் குவைத்தில் வேலை செய்த போது நடந்த சம்பவம் இது..

    இரவு வேலை முடியும் நேரத்தில் (4:30), பீஹாரி முஸ்லீம் சமையல்காரன் ஒருவனுக்கும் தமிழகத்தின் பணியாளன் விக்னேஷ் என்பவனுக்கும் வாய்த் தகராறு முற்றிய நிலையில் மேற்பார்வையாளர் ஆகிய நான் தலையிட்டேன்..

    அந்தப் பீஹாரி வெறி பிடித்தவனாக கையில் கத்தியுடன் என் மீது பாய்ந்து விட்டான்.. நான் சாமார்த்தியமாக விலகிக் கொள்ள அப்போதைக்கு பிரச்சினை ஓய்ந்தது..

    இதை கண்டித்திருக்க வேண்டிய தலைமைச் சமையல் காரன்
    குஞ்ஞிமோன் என்ற மலையாளி கண்டு கொள்ளவேயில்லை.. காரணம் நான் ஹிந்து..

    அந்த விக்கினேஷிடம் சொன்னேன் காலையில் புகார் செய்யலாம் என்று..

    அதற்கு அவன் - எங்கள் பிரச்சினைக்குள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டதோடு புகார் அளிப்பதற்கு மறுத்து விட்டான்..

    அடுத்த சில மாதங்களில் நான் தலைமை அலுவலகத்துக்குச் சென்று விட்டேன்..

    சில நாட்களில் அந்தப் பீஹாரி அங்கே வந்திருந்தான் கை எலும்பு முறிக்கப்பட்ட நிலையில்..

    என்னவென்று கேட்க வேறொருவனுடன் புதிதாக தகராறு செய்தபோது அவன் இவனது வலக்கையை உடைத்து விட்டிருக்கின்றான்..

    இந்தப் பீஹாரி இரண்டு மாதங்களுக்கு முன் என் மீது வெறியுடன் பாய்ந்த போது வலக்கையில் தான் கத்தி இருந்தது..

    பதிலளிநீக்கு
  16. சட்டம் எப்போதும் ஒரே வடிவில் தான் வரும் ஆனால்,

    தர்மம் எந்த வடிவத்திலும் வந்தே தீரும்..

    அந்த பீஹாரி சம்பந்தப்பட்ட விஷயத்தை இந்தக் கதைக்காக இங்கே சொல்லி இருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநாதை, ஏதிலிகளுக்கு, அப்பாவிகளுக்கு எதிரான குற்றத்தை இறைவன் பொறுத்துக்கொள்வதில்லை என்பதை நான் கண்டிருக்கிறேன். அதே நேரம், ஒரு குற்றத்திற்குச் சமமானதாகத்தான் அவன் நீதி இருக்கும். எதிர்க்க இயலாதவர்களிடம் நான் அநீதியாக நடந்துகொண்டதில்லை.

      நீக்கு
    2. துரை அண்ணா உங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது.

      நமக்குத் தீங்கிழைக்க விழைந்தவருக்கு ஏதேனும் நடக்கும் போது நம் மனம் தர்மம் வென்றுவிட்டது அல்லது அறம் வென்றுவிட்டது என்று நினைப்பது சரியா...என் வீட்டிலும் பலரும் இப்படி பேசுவதுண்டு. தங்களுக்குத் தீங்கிழைக்க விழைந்தவருக்கு, தீங்கிழைத்தவங்களுக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால் அதை இப்படிச் சொல்வாங்க...

      இப்படி நினைப்பது, சொல்வது சரியா? அறமா தர்மமா?

      துரை அண்ணா இது என் மனதில் எனக்குச் சிறு வயதிலேயே கிடைத்த போதனைகளால் ஏற்பட்ட கேள்வி. தவறான கோணத்தில் அல்ல.

      எனக்குப் போதனை இப்படித்தான் சொல்லப்பட்டது. என் பாட்டி சொன்னது. அப்படிப் பட்டவர்களையும் இறைவன் இரட்சித்து அவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க பிரார்த்திக்கணும் என்று...

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      தங்கள் மனதில் உள்ளதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.

      /என் பாட்டி சொன்னது. அப்படிப் பட்டவர்களையும் இறைவன் இரட்சித்து அவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க பிரார்த்திக்கணும் என்று.../

      இப்படித்தான் எங்கள் வீட்டிலும் சொல்லி வளர்த்து என் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். அவர்களாக உணரும் போது நம்மை புரிந்து கொள்வார்கள். அப்படி உணரும் சமயத்தை அவர்களுக்கு தந்து விடு என வேண்டிக் கொள்வேன். என்னசொல்வது? இதுவும், துரைசெல்வராஜ் சகோதரர் சொல்வது போல நம் பூர்வ ஜென்ம தொடர்புகள்தானே...! இறைசக்தி ஒன்றுதான் நம்முடன் என்றும் சொந்தமாக வந்து கொண்டேயிருக்க வேண்டும்.அதைதான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      தங்களது கருத்துரைகளில் அன்றைய அன்பான விசாரிப்புகளுக்கும் மிக்க நன்றி சகோதரி. ஊருக்கெல்லாம் சென்று வந்தது சில தினங்களாக ஒரே அலுப்பாக உள்ளது. உங்கள் பதிவுகள் சில படிக்காமல் விடுபட்டு விட்டது. உங்கள் பதிவுகளுக்கும் விரைவில் வருகிறேன். தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. // இறைசக்தி ஒன்றுதான் நம்முடன் என்றும் சொந்தமாக வந்து கொண்டே இருக்க வேண்டும்.
      அதைதான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      அப்படி நானும் வேண்டிக் கொள்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. @ கீதா..

      // அறம் வென்று விட்டது என்று நினைப்பது சரியா.. //

      பக்தன் என்ற அளவில் சரி...

      எதிரிக்கும் இப்படியான நிலை வந்ததே.. என்று வருந்துபவனே ஆன்மீகவாதி..

      அருளாளர்!..

      மெய்ப்பொருள் நாயனார் - தன்னைக் கத்தியால் குத்திய முத்தநாதனை - பத்திரமாக ஊர் எல்லையில் விட்டு விட்டு வரும்படியாக தனது மெய்க் காப்பாளரிடம் கூறினார் என்பது பெரியபுராணம்..

      நீக்கு
    6. //அப்படிப் பட்டவர்களையும் இறைவன் இரட்சித்து அவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க பிரார்த்திக்கணும்// - எப்போ ஆசிரமம் ஆரம்பிக்கப்போறீங்க கீதா ரங்கன் ஸ்வாமி அவர்களே. ஆசிரமத்துக்கு வருபவர்களுக்கு இலவச உணவு உண்டா?

      நீக்கு
    7. ஹாஹாஹா நெல்லை.

      எல்லாமே அனுபவப் பாடம்தான்....இன்னிக்குக் கூட இதே பொருளில்தான் ஸ்ரீராமின் பதிவில் அவர் கவிதைக்கு ஒரு கருத்து சொல்லிருக்கேன். நிஜமாகவே நம் வீட்டில் என்னைப் பத்தி தப்பா புரிஞ்சுக்கிட்டவங்க என் கூடப் பேசாம இருக்கறவங்க (அப்படி யாரும் இல்லை...ஒரு நெருங்கிய உறவுதான் வெறுப்போடு...) அவங்களுக்காக என் பிரார்த்தனையில் அவங்க நல்லாருக்கணும் நல்ல குணம் அமையப்பெறணும், வெறுப்பட்ட மனசு வேண்டும் என்று....அவங்களை பாதிக்காம பட்டாத்தான் தெரியும்னு சொல்வாங்களே அதில்லாம எந்தவித பாதிப்பும் இல்லாம அவங்களுக்கு நல்ல புத்தியை மனவு வரணும் அவங்க புரிஞ்சுக்கணும்னு...

      இதுக்கு எதுக்கு ஆசிரமம் எல்லாம்....நம்ம வீட்டுல நமக்கு நெகட்டிவ் போதனைகள் செய்யாத நல்ல சூழல் இருந்தாலே போதும்....முதல்ல பெண்களுக்குப் புகுந்த வீட்டைப் பத்தி அவளைப் பெத்தவங்க துர்போதனை செய்யாம, மனவளக் கலையைச் சொல்லிக் கொடுக்கணும். அப்படிச் செய்தாலே பல குடும்பங்கள் நல்லாருக்கும். அது போல மகன்களுக்கும் பெற்றோர் சும்மா அவன் மனைவிய பத்திக் குத்தம் சொல்லிட்டே இருக்கக் கூடாது...உறவுகள் பாதிக்கப்படுவது இங்கிருந்துதான்...எனக்குச் சின்ன வயசுலயே இப்படியான அனுபவங்கள், அதிலிருந்து கற்ற பாடங்கள், போதனைகளுக்கு நிறைய நன்றி சொல்வேன்...

      //ஆசிரமத்துக்கு வருபவர்களுக்கு இலவச உணவு உண்டா?//

      ஹாஹாஹாஹா...நினைச்சேன்...நானே சாப்பாட்டுப் பிரியை அப்படி இருக்க இல்லாம இருக்குமா!!! அது சரி சாமிஜிக்கு எல்லாம் சாப்பாட்டுல பிரியம் இருக்கலாமோ?!!!!

      கீதா

      நீக்கு
  17. பேருந்தில் உள்ள (நல்ல)வர்களின் நிலை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நல்லவர்கள் காப்பாற்றப் படுவார்கள்
      அவர்களுக்கு ஒன்றும் ஆகாது...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..

      நீக்கு
  18. கதை நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை அருமையாக உள்ளது.

    தங்கள் உடல்நிலை பாதிப்பு இப்போது எப்படியுள்ளது? தாங்கள் உடல் நல பாதிப்புக்களை பற்றி கருத்துரையில் கூறிய விபரங்கள் மனதை கஸ்டபடுத்தியது. தெய்வம் தன் பக்தர்களை தன்னால் எவ்வளவு கஸ்டபடுத்த முடியுமோ, அவ்வளவு படுத்தி விட்டுத்தான் பிறகு ஒரு நிவர்த்தி தருவான் போலும்...! இதை நம் பூர்வ ஜென்ம வினையென்று நாமும் ஏற்றுக்
    கொண்டேயிருக்கிறோம். (என் மன, உடல் நல பாதிப்புகளினால் இப்படி சொல்லி விட்டேன். மன்னிக்கவும்) அப்படி முன் ஜென்ம வினைகளே விடாது தொடரும் போது இந்தக் கதையில் உள்ளபடி உடனடியாக இறைவன் நல்லவர்களுக்காக தன் நல்ல தீர்ப்பை தந்து விடுவானா என்ற புரியாத ஒரு பரிதவிப்பும் வருகிறது. ஆனாலும் நம்புவோம். இந்த நம்பிக்கை ஒன்றுதானே நம் மனபலங்களின் ஆணிவேர்.

    சிலந்தி கடித்து எனக்கும் பல தடவைகள் உடலெங்கும் அலர்ஜி மாதிரி தடிப்பு தடிப்பாக வந்து அவஸ்தை பட்டுள்ளேன். என் பேத்திக்கும்(மகள் வயிற்றுபேத்தி) இரண்டு தடவைகள் கண், காது, முகம் வீங்கி அவஸ்தைபட்டுள்ளாள். இதை காணாக்கடி என்போம். இதற்கு சில சிறந்த மந்திரிப்பவர்கள் மந்திரித்தால் உடனே படிப்படியாக குணம் தெரியும். தங்கள் உடல்நலம் நன்றாக பழையபடிக்கு ஆகி விட வேண்டுமென நானும் இறைவனை நம்பிக்கையுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // தங்கள் உடல்நலம் நன்றாக பழையபடிக்கு ஆகி விட வேண்டுமென நானும் இறைவனை நம்பிக்கையுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்...//

      இங்கே சிவஆலயத்தில் மந்திரித்து இருக்கின்றேன்..

      தங்களது அன்பின் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்!
    துறை அண்ணா, இன்றைய கதை அருமை ! இது போல பல நிகழ்வுகள் தினசரி வாழ்வில் காண்கின்றோம்..நடந்து கொண்டிருக்கும் மாடல் ஆட்சியில் சகராயுதத்துடன், சக்ராயுதன் வந்தால் இன்னும் மகிழ்ச்சி. கண்ணகியின் கணல் போல தீயோரை அழித்து, நல்லோரை காக்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சகராயுதத்துடன், சக்ராயுதன் வந்தால் இன்னும் மகிழ்ச்சி...

      நிச்சயமாக வருவான்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய கதை நன்றாக உள்ளது. அந்த சிவாச்சாரியார் பஸ் பயணத்தின் போது சக பயணிகளால் வேதனைபடும் சமயம் எனக்கும் மனதுக்குள் நிறைய வேதனைகள் தோன்றியது. ஆனால் கதையின் முடிவு கலக்கமூட்டியது. இது கதைதானே என மனதுக்குள் கடந்து செல்ல முடியவில்லை. கருத்துரையில் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொல்வது போல் அந்த பயணிகளில் ஒரு சில நல்லவர்களின் நிலை என்னவாகும் என்ற கலக்கம் வருகிறது. கெட்டவர்களுடன் கொஞ்ச நேரம் பயணித்த வினையின் விளைவால் அவர்களுக்கு லேசான சிரமங்களை மட்டும் கடவுள் தந்து விட்டால் நல்லதென மனதுக்குள் தோன்றுகிறது. அப்படிபட்ட ஒரு சூழ்நிலைக்கும் அந்த இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    இந்த அளவுக்கு தாங்கள் எழுதும் கதைகள் மனதுக்குள் பதிந்து காலூன்றி நின்று விடுகின்றன. ஒரு கதையெனும் உணர்வு தோன்றாமல் நன்றாக எழுதி உள்ளீர்கள். (ஆனாலும் இப்படிபட்ட சம்பவங்கள் நம்மிடையே நடந்து கொண்டுதான் உள்ளன. ஒரு கதை என்பது வாழ்வை சார்ந்துதான் பிறக்கிறதென்பதையும், வாழ்வும் சில கதைகளில் வருவதை போலவே நடந்து முடிகிறது என்பதையும் நான் நம்புகிறேன்.)

    கதைக்கேற்ற ஓவியத்தை வரைந்த கௌதமன் சகோதரருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த பயணிகளில் ஒரு சில நல்லவர்களின் நிலை என்னவாகும்// இந்த நிகழ்வைத் தெரியாதவர்களாக இருந்த பயணிகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      ஒரு தவறு நிகழும்போது, நமக்கென்ன என்று இருப்பவர்களும் குற்றம் செய்ததில் பங்கு உள்ளவர்களே

      நீக்கு
    2. // கதைக்கேற்ற ஓவியத்தை வரைந்த கௌதமன் சகோதரருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். // நன்றி.

      நீக்கு
  22. // ஒரு கதை என்பது வாழ்வை சார்ந்துதான் பிறக்கிறதென்பது.. //

    இது தான் உண்மை..

    // ஒரு கதையெனும் உணர்வு தோன்றாமல் நன்றாக எழுதி உள்ளீர்கள்.. //

    தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  23. @ நெல்லை..

    // ஒரு தவறு நிகழும்போது, நமக்கென்ன என்று இருப்பவர்களும் குற்றம் செய்ததில் பங்கு உள்ளவர்களே.. //

    தவறு நிகழ்வதைக் கண்டு தட்டிக் கேட்க முயன்ற பலரது மண்டை உடைபட்டிருக்கின்றது..

    மணல்
    கொள்ளையைத் தடுக்க முயப்ற பலர் மண்ணோடு மண்ணாகியிருக்கின்றார்கள்..

    இந்த காலத்தின் சூழ்நிலை சரியில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்கள் பலவற்றின் பயணியர் இருக்கைகளை மதுப் பிரியர்கள் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதை நம்மால் கண்டிக்க முடிகின்றதா?..

      பேருந்து நிலைய சாக்கடையின் ஓரத்தில் தள்ளுவண்டி பிரியாணிக் கடைகள்.. அதை வாங்கித் தின்பவனே அதைக் கண்டு கொள்வதில்லை..

      ஒதுங்கிப் போவதே உத்தமம்
      என்கின்றனர்..

      நீக்கு
    3. துரை சார்..... ஸ்லீப்பர் பேருந்துகளில் ஏகப்பட்ட அநியாயங்கள் நடக்கின்றன. யார் கேட்பது? டிரைவர் கண்டக்டருக்கு அதில் பொறுப்பில்லை (கேட்கவும் முடியாது)

      நீக்கு
    4. நல்லவேளை.. இதுவும் புதன்கிழமைக்கான
      ஒரு கேள்வியாகி நல்லதொரு கதையின் வாசிப்பில் குறுக்கிடாமல் இருந்ததே! ஹஹ்ஹஹா..

      நீக்கு
  24. ஒரே வரி தான். திண்டுகல் தனபாலனின்
    பின்னூட்டம் அவர் எவ்வளவு கூர்மையாக கதையை வாசித்திருக்கிறார் என்று எண்ண வைத்தது. கதையை மேற்கொண்டு சிந்திப்பதற்கான யோசனையை கிளர்த்தக் கூடிய பின்னூட்டம். வாந்தி எடுக்க அந்தக் குடிகாரன் தலையை வெளியே நீட்ட எதிர்புறம் வந்த லாரி அவன் தலையைக் கொய்து கொண்டு போகிற மாதிரி கதையில் வாசித்திருக்க மாட்டோமா என்ற ஆவேசத்தை நமக்குள் ஏற்படுத்திய பின்னூட்டம்.
    நன்றி, நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்பது ஒளவை மூதாட்டியின் மூதுரை.

      அதுவே கெடுமதியாளர் ஒருவர் கூட்டத்தில் உளர் எனில், அது அந்தக் கூட்டத்தில் உள்ள எல்லோருக்குமான கேடு அல்ல.

      அப்படிக் கொண்டால் நல்லனவைக்கும் அல்லாதவைக்கும் வேறுபாட்டுப் பயன் இல்லாது போய்விடும்.

      நீக்கு
    2. @ ஜீவி அண்ணா..

      // நல்லனவைக்கும் அல்லாதவைக்கும் வேறுபாட்டுப் பயன் இல்லாது போய்விடும்.//

      எல்லாவற்றுக்குள்ளும் ரகசியங்கள் இருக்கின்றன..

      நீக்கு
  25. நம்மை உயர்த்திக்கொள்ள பிறவி எடுத்திருக்கிறோம். இறைவனின் தீர்ப்பை விமர்சிப்பது நம் வேலை இல்லை. அவன் தீர்ப்பை உடனே, நம் கண் முன்னே காட்டவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நம் ஆன்மீக வாழ்க்கையில் தடையை உண்டாக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக ஆழமான பின்னூட்டம். இறைவன் கணக்கில் காலம் என்பது ஒரு பராமீட்டர். ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குள் என்றால் நம் வாழ்விலேயே பார்த்துவிடுவோம் அவர்களுக்கான தண்டனையை. அதுவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தால். அதைவிட அதிகம் என்றால் நம்மால் பார்க்க முடியாது.

      தண்டனை கொடுப்பதை பார்த்தால் திருப்தி என்பது என்ன நியாயம்? நம் திருப்திக்காகவா தண்டனை கொடுக்கிறார்?

      நீக்கு
    2. எது இறைவனின் தீர்ப்பு நண்பரே?
      கதாசிரியரின் தீர்ப்பைத் தான் இறைவனின் தீர்ப்பு என்கிறீர்களோ?

      நீக்கு
    3. @ பெயரில்லா..

      // நம்மை உயர்த்திக் கொள்ள பிறவி எடுத்திருக்கிறோம்...//

      இதை உணரும் போது காலம் கடந்து விடுகின்றது..

      // அவனது தீர்ப்பை உடனே, நம் கண் முன்னே காட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நமது ஆன்மீக வாழ்க்கையில் தடையை உண்டாக்கும்.. //

      உண்மை உண்மை..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. @ bandhu..

      // தண்டனை கொடுப்பதை பார்த்தால் திருப்தி என்பது என்ன நியாயம்?..//

      பிழைத்துப் போகட்டும் விட்டு விடுங்க..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. @ ஜீவி அண்ணா..

      // கதாசிரியரின் தீர்ப்பைத் தான்..//

      இது வேறு பாக்கி இருக்கின்றது..

      மகிழ்ச்சி..
      நன்றி அண்ணா..

      நீக்கு
  26. கேஜிஜியின் கதைக்கான ஓவியம் துல்லியமான வெளிப்பாடு. அரசுப் பேருந்தின் யதார்த்த தோற்றம், சிதம்பரம் எழுத்துக்கள் டாலடித்தல் தாண்டி அந்த சிவாச்சாரியாரின் தோளில் -- கையில் பை,
    முப்புரி நூல், மறக்காமல் நெற்றியில் திருநீர் எல்லாவற்றையும் தாண்டி
    அவர் கழுத்தில் அந்த சிவப்புக் கயிறின் தீட்டல் --
    சிவாச்சாரியர் ருத்திராட்சம் பூண்டிருப்பதை எவ்வளவு
    அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று வியந்து போனேன்.

    பதிலளிநீக்கு
  27. கதையும் அருமை கதைக்கு ஏற்ற படமும் அருமை.

    முடிவில் இவ்வளவு பெரிய தண்டனையா? என்ற கேள்வி வந்தாலும் இறைவன் வழியில் குறுக்கிட நாம் யார் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முடிவில் இவ்வளவு பெரிய தண்டனையா? என்ற கேள்வி வந்தாலும் இறைவன் வழியில் குறுக்கிட நாம் யார் ?.. //

      அன்பின் வருகையும் தெளிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. என்னால் இந்தக் கதையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. பேருந்தில் உள்ள மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இப்படி ஓர் முடிவைக் கொடுத்தே இருக்க வேண்டாமோ? இறைவன் பார்த்துப்பான் என்ற அளவில் சிவாசாரியாரோ இறங்கியாச்சு. இனிமேலும் இப்படியான பழிவாங்கல் தேவையா? அதுவும் ஒருவன் செய்த தப்புக்காக. இது தமிழ்நாட்டில் நடக்கலைனாத்தான் அபூர்வம். கும்பகோணம் பேருந்துப் பயணங்களின் போது நானும் என் குழந்தைகளும் நிறையப் பட்டிருக்கோம். வாயையே திறக்காமல் உட்கார்ந்திருப்போம். அப்படியும் விட்டதில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இது தமிழ்நாட்டில் நடக்கலைனாத்தான் அபூர்வம்... //

      என்ன செய்ய..
      நனது தலையெழுத்து..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  29. சிவாசாரியாரை அருமையாகப் படமாக வரைந்துள்ள கௌதமன் சாருக்குப் பாராட்டுகள்,.

    பதிலளிநீக்கு
  30. கதையின்
    தொடர்ச்சி :

    புகையைக் கிளப்பியபடி பேருந்து நகர்ந்த வேளையில் அதற்கு நேர் எதிராக லாரி ஒன்று அசுரத் தனமாக வந்து கொண்டிருந்தது - மது மயக்கத்துடன்...

    சக்ராயுதன் சும்மா இருந்தாலும் சக்ராயுதம் சும்மா இருக்காதே!..

    நெற்றியில் திருநீறும் குங்குமமுமாக அந்தப் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் -
    எதிரே, அசுரத் தனமாக வந்த லாரியைக் கண்டு திடுக்கிட்டு அதிர்ந்த வேளையில்,

    சிவாச்சாரியாரின் பூஜா கைங்கர்ய புண்ணிய பலத்தினால் நூலிழையில் விலகிய பேருந்து கும்பகோணத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது..

    கண்ணெதிரே நடந்ததைக் கண்டு பதறிய சிவாச்சாரியார் நிம்மதிப் பெருமூச்சுடன் - " ஈஸ்வரா!.." என்றார்..

    சுழன்று வந்த சக்ராயுதமும் பாவிகளை மன்னித்தவாறு திரும்பிச் சென்று பரந்தாமனிடம் அடைக்கலமானது.
    ***

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்ணெதிரே நடந்ததைக் கண்டு பதறிய சிவாச்சாரியார் நிம்மதிப் பெருமூச்சுடன் - " ஈஸ்வரா!.." என்றார்..//

      அவருக்கு ஏற்பட்ட நிம்மதிப் பெருமூச்சு நமக்கும்.


      கதையின் முடிவு நன்றாக இருக்கிறது.

      நீக்கு
    2. கதையின் முடிவு நன்றாக இருக்கிறது.

      தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. எதற்கும் இருக்கட்டும் என்று கதையின் நிறைவைச் சொல்லாமல் இருந்தேன்..

    என்ம்க்கும் இப்போது நிம்மதியாயிற்று..

    இரண்டு நாட்களாக
    உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

    அனைவருக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  32. இன்னும் குணமடைய வில்லை..

    தங்கள் பிரார்த்தனைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  33. இந்த முடிவு இன்னும் பொருத்தமாக இருக்கிறது. ரசித்தேன்.

    விரைவில் பூரண குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..

      நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  34. சிறுகதையின் நிறைவாக புதிய திருப்பத்தையும் பதிவு செய்து வைத்த ஸ்ரீராம், கௌதம் ஆகியோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!