வியாழன், 12 ஜனவரி, 2023

இப்போல்லாம் இப்படிதான் ஸார்...

 2016 லும், ஏன், அதற்கு முன்னரே வேறு பல் கிளினிக்கிலும் கூட பல் எடுத்திருக்கிறேன்.  ஏதோ மயக்க மருந்து கொடுப்பார்கள், சற்று நேரத்தில் "ணங்" என்று மண்டையில் தாக்கும் ஓசையுடன் பல்லைக் கழற்றி கையில் கொடுத்து விடுவார்கள்.

இப்போது என்னடாவென்றால் சில முறைகளை வகுத்துக் கொடுத்தார்கள்.  ஒரு லெட்டர் எழுதித் தருவார்களாம்.  நாம் அதை எடுத்துக் கொண்டுபோய் ஒரு பொது மருத்துவரிடம் காட்டி "எஸ்..  இவன் பல்லை உடைக்கலாம், பிரச்னையில்லை" என்று கருத்து வாங்கி கொண்டு வரவேண்டும்.

"என்னங்க இது..   முன்னாடி எல்லாம் இப்படி கேட்டதில்லையே..."

"இல்லையே ஸார்..   எப்பவும் உண்டே..  2016 ல் பல் எடுத்தீர்கள்..  அப்போது கேட்கவில்லையா?'"

"இல்லையே..   கொரோனாவுக்கு அப்புறம் இப்படி ரூல் வந்திருக்கா?"

"இல்லை ஸார்..   முன்னாடிலேருந்தே...  வர்ற வெள்ளிக்கிழமை சர்ஜனை வரச்சொல்லி இருக்கோம்.  நாலு கேஸ் சேர்ந்திருக்கு.   நோ அப்ஜெக்ஷன் வாங்கிட்டா உங்கள் பெயரையும் சேர்த்துடுவோம்.  இல்லாட்டா அப்புறம் எப்போ அவர் டேட் கிடைக்குதோ அப்போது..."

"என்ன சர்ஜனா?  பல் எடுக்க சர்ஜனா?  ஏன்?  சாரே எடுக்க மாட்டாரா?   போன வாட்டி அவர்தானே எடுத்தார்.."

"சார் இப்போ இப்படிதான்..  நான் 2020 லேருந்துதான் இங்கே இருக்கேன்....  டூத் எக்ஸ்டராக்ட் பண்ணும்போது சரியா வரலைன்னா உடைச்சு எடுக்கணும்..   அப்புறம் ஒரு ஸூச்சர் போடுவோம்.  ஒரு வாரம் கழித்து வந்து ரிமூவ் பண்ணிக்கணும்.    வாட்ஸாப்ப்புல நீங்க ஒபினியனை அனுப்புங்க போதும்.."

இது சொல்லப்பட்டது ஒரு திங்கட்கிழமை மாலை.  வரும் வெள்ளிக்குள் ஒபினியன் வாங்க வேண்டும்.  இது ஒரு கஷ்டமா என்று சரி என்று சொல்லி விட்டேன்.

செவ்வாய் நினைவே இல்லாமல் சென்று விட்டது.  புதன் காலை அலுவலகத்தில் பெர்மிஷன் சொல்லி மருத்துவரை நாடினேன்.  யாரென்றே தெரியாத ஒரு பெண் மருத்துவர்.    லெட்டரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.  அவருக்கும் புதிதாய் இருந்திருக்க வேண்டும்.  "என்னவாம்..  என்ன இது?"

அழைத்துச் சென்ற நண்பர் விவரம் சொன்னார்.

என்னை நிமிர்ந்து பார்த்தவர் "பிபி இருக்கா?  சுகர்?"

"பி பி இருக்கு மேடம்..  சுகர் பார்டர்தான்..  பி பி க்கு இன்னின்ன மருந்து எல்லாம்    சாப்பிடுகிறேன்..   சுகருக்கு மருந்தெல்லாம் எடுப்பதில்லை?

சுகர் இல்லை என்றே சொல்லி இருக்கலாமோ என்று தோன்றினாலும் என் உடம்பு, என் பல்லாச்சே...  ஒரு பயம் வந்துடுதே...

"இப்போ ஒரு பி பி பார்த்துடுங்க..   குளுக்கோமீட்டர்ல ஒரு சுகர் பண்ணிடுங்க...  செஸ்ட் எக்ஸ்ரேயும் ஈ சி ஜியும் எடுத்துடுங்க...  எடுத்துட்டு என் கிட்ட வாங்க.."

அட, என்னடா..   ஒரு பார்வை பார்த்துட்டு 'ஹெல்த்தியாதான் இருக்காரு.. எடுத்துடலாம்'னு சொல்லி எழுதிடுவாங்கன்னு பார்த்தா...  ஏற்கெனவே பல் எடுக்க ஐயாயிரம்...  இப்போ இதெல்லாம் வேறயா...

ஒவ்வொன்றுக்கும் இங்கும் அங்குமாக அலைய வேண்டி இருந்தது.  பி பி சுலபமாக பார்த்தாயிற்று.  ஓரளவு க்ளுக்கோமீட்டர் சுகர் அளவும்.  

எக்ஸ்ரேக்கு சற்றே தாமதமானது.  அப்புறம் ஈ சி ஜி எடுப்பதற்குள் அந்த டாக்டர் வீடு கிளம்பி விட்டார்.

எக்ஸ் ரேயும் சரி, ஈ சி ஜி யம் சரி, அவற்றை  எடுத்த தொழில் நுட்பனார்கள் அதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்றுதான் சொல்லி இருந்தார்கள்.

ஆனால் மறுநாள் பழைய மருத்துவர் இடத்துக்குச் சென்றபோது அவர் லீவு என்று சொல்லப்பட, இன்னொரு பெண் மருத்துவரைப் பார்த்து முதலிலிருந்து வரலாறு சொன்னேன்.

எக்ஸ்ரேயை திருப்பித் திருப்பிப் பார்த்தவர் சற்றே சந்தேகத்துடன் தன்னருகில் இருந்த இன்னொரு மருத்துவரிடம் காட்ட அவரும் அதை நாலா திக்கிலும் வைத்து சோதித்தார் (பார்வையால் என்னையும்) 

பிறகு ஏதோ போனால் போகிறது என்பது போல உதட்டைப் பிதுக்கிக்கொண்டே தலையை பரவாயில்லை என்று ஆட்டி இவரிடம் எக்ஸ்ரேயைக் கொடுத்தார்.

இந்நேரத்தில் என் ஈ சி ஜியை பார்த்துக் கொண்டிருந்த இந்த மருத்துவர், ரெண்டுல  மூணுல லேசா வேரியேஷன்...  ஒரு எக்கோ எடுத்துடுங்களேன்...  " என்றார்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்......  பல்லே புடுங்க வேண்டாம் என்று வடிவேலு மாதிரி கத்தலாமா என்று ஒரு கணம் எழுந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டு அவர் கையிலிருந்த பேப்பர்களை பிடுங்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி எக்கோ எடுக்கும் இடத்தை அடைந்தேன்.

அங்கு சட்டையைக் கழற்றி கஷ்க்கத்தில் வைத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்த ஆண்களையும் முதல் மரியாதை ராதா போல நின்றிருந்த பெண்கள் வரிசையையும் கண்டபோது வெறுத்துப் போனது.

சீட்டைக் காட்டி, பெயர் பதிவு செய்து, அதை எடுத்துக்கொண்டு இருதய மருத்துவரிடம் சென்று காட்டி ஒரு சிறிய நோட்டுப்புத்தகம் போட்டுக்கொண்டு எக்கோ எடுக்கும் குழுவிடம் நோட்டைச் சமர்ப்பித்துக் காத்திருந்தேன். 

"முக்கா மணி ஆகும் சார்.."  சாம்பல் நிற பேண்ட்ஸ் ஷர்ட் அணிந்த பெண்மணி ஏகப்பட்ட குட்டி நோட்டுகளை மார்போடு அணைத்தவாறு சொன்னது எரிச்சலானது என்றால், 

அருகில் நின்றிருந்த நீலச்சட்டைக்கார இளைஞன் "மேலயே ஆகும்..   மெஷின் கொஞ்ச நேரமா ஓடல" என்று வயிற்றில் ரோட்  ரோலரை ஓட்டினான்.

வேறெங்கும் சென்று முயற்சிக்க நேரமில்லை.  இங்கே எடுத்து மருத்துவரிடம் சான்று பெற்று வாட்சாப் அனுப்ப இன்னும் மூன்று மணிநேரம் மட்டுமே நேரமிருந்தது.

அடுத்த ஒன்றே முக்கால் மணி நேரத்தில் இடம் கிடைத்து ("சார்..  சார்...  சட்டையைக் கழற்ற வேண்டாம்..  பட்டன மட்டும் அவுத்துக்குங்க போதும்..."  பதற்றத்துடன் அங்கிருந்த பெண்).  நல்ல வே(ளை)லையாக என் ரவா தோசை பனியனை முன்னரே கழற்றிக் கடாசியிருந்தேன்!

பட்டனை மட்டும் கழற்றி,  கட்டிலில் ஏறி மெஷின் அருகே இருந்த நிபுணர் பக்கமாக பக்கவாட்டில் (குழந்தைக்கு பால் கொடுப்பது போல) படுக்க வைக்கப்பட்டேன்.  என் நல்ல நேரம் அவர்தான் ஹெச் ஓ டி யாம்.  அவரே பார்த்து எனக்கு ரிப்போர்ட் எழுதி விட, நோட்டுடன் அந்தப் பெண் மருத்துவரைத் தேடி ஓடினேன்.

அவர் பெர்மிஷனில் சென்று விட்டாராம்.  எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.  செய்வதறியாமல் நின்றிருந்த என்னை விவரம் விசாரித்த இளைஞர் தானும் டாக்டர்தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, என்ன வேண்டும் என்று விசாரித்ததும் அவர் தோளில் சாய்ந்து விம்மாத குறையாக விஷயத்தைச் சொன்னேன்.

நோட்டை வாங்கி ரிப்போர்ட்ஸ் அனைத்தையும் ஆராய்ந்தவர், நோட்டில் ஏதோ எழுதிக் கொடுத்தார்.  தலையைச் சாய்த்துப் படிக்க முயற்சித்தேன்.  ஒன்றும் புரியவில்லை.  அடுத்தது பல பக்கங்கள் காலியாக இருந்தும் இந்தப் பக்கத்திலேயே கார்ட், இன்லெண்ட் லெட்டர்களின் பக்கவாட்டில் எழுதுவது போல என்னென்னவோ எழுதியிருந்தார். மேலும் கீழுமாக இரண்டு மூன்று அம்புக்குறி கண்ணில் பட்டது.  இன்னும் ஏதாவது டெஸ்ட் செய்யச் சொல்லி விடுவாரோ...

"சார்..   புடுங்கலாமா?"

சட்டன நிமிர்ந்தவர் கண்களில் கேள்விக்குறியுடன் கோபமும் தெரிய, என் தவறை உணர்ந்து சட்டென ஜகா வாங்கி,

"பல்லை எடுப்பார்களா ஸார்...  ஏதாவது ப்ராப்ளமா?"

சட்டென சாந்தமாகி, "ப்ராப்ளம்  எல்லாம் ஒன்றும் கிடையாது.  எப்படியும் எடுத்துடுவாங்க...  உங்கள் ஹெல்த் கண்டிஷன் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல அனஸ்தீஷியா பார்த்துக் கொடுப்பார்கள்..  தேவையானால் மாத்திரை ஏதாவது முன்னெச்செரிக்கையாக தருவார்கள்.  எடுத்துதானே ஆகணும்?  கொஞ்சம் ஜாக்கிரதையா எடுப்பாங்க.." என்றார் சதீஷ்!

'நன்றி ஸார்' சொல்லி நோட்டை அவரிடமிருந்து வாங்கி அங்கேயே டேபிளில் வைத்து போட்டோ எடுத்து டென்டலுக்கு வாட்சாப்பினேன்.

இங்கு ஒரு விஷயம் பற்றிச் சொல்ல வேண்டும்.  என் அறியாமை.  

"லிப்பிட் ப்ரொஃபைல் எப்போ பார்த்தீங்க?"\

"பதினைந்து நாட்கள் இருக்கும் ஸார்.."

"கொலஸ்ட்ரால் எவ்வளவு..."

"சரியா ஞாபகமில்லை ஸார்.."

" HbA1C பார்த்துடுங்களேன்..."

பார்த்தேனே.."

"எவ்வளவு?

"ஞாபகமில்லை.."

மருத்துவர் உதட்டைச் சுழித்தபடி பேப்பர்களை என்னிடம் நீட்டினார்.

திரும்பி வரும்போது என் நண்பர் என்னிடம் "ஸார்..  என்ன ஸார்..  இப்படி பதில் சொல்றீங்க..  உங்கள் ரிசல்ட் உங்களுக்கு ஞாபகம் இருக்கணும் ஸார்..."

"இல்லை நரேன்..  எனக்கு ஞாபகமே இருப்பதில்லை.  மனசிலேயே வாங்கி கொள்வதில்லை.  என் கண் பவர் கூட எனக்கு நினைவிருக்காது.  கண் டெஸ்ட் முடிந்து வந்தபின் கொஞ்ச நாள் நினைவிருக்கும்.  அப்புறம் மறந்து விடுகிறது.."

"தப்பு ஸார்..."   வேறொன்றும் நரேனால் என்னைச் சொல்ல முடியவில்லை!

மறுபடி இந்த வரிக்கு வருகிறேன்...

'நன்றி ஸார்' சொல்லி நோட்டை போட்டோ எடுத்து டென்டலுக்கு வாட்ஸாப்பினேன்.

அது கிடைத்ததும் அவர்களும் சுறுசுறுப்பாகி ("மாட்டிடுச்சுடா இன்னொரு 5000") எனக்கு அது முதல் இரண்டு மணி நேரத்துக் கொருமுறை மெசேஜாக அனுப்பி மறுநாள் மாலை ஐந்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் என்றார்கள்.

மறுநாள் அங்கு சென்று சேர்ந்ததும் முதலாவதாக நான் என்றிருந்த நிலை மாறி இரண்டாவதானேன்.  ராமச்சந்திராவிலிருந்து ஒரு சர்ஜன் வந்திருந்தார்.

பல் எடுக்க சர்ஜன் வருவார் என்கிற இவர்கள் அறிவிப்பு, அதற்கு நோ அப்ஜெக்ஷன் ஒன்று பொது மருத்துவரிடமிருந்து வாங்கித்தர வேண்டும் என்கிற ப்ரோட்டாகால், அதை வாங்கப் போனால் அவர்கள் செய்யச் சொன்ன  சோதனைகள், எல்லாம் சேர்ந்து என்னை ஒரு வித லேசான பதட்டத்துக்குள்ளாக்கி இருந்தது நிஜம்.  இதற்கு முன் அனுபவங்களில் - ஈவன் இம்பிளான்ட் செய்தபோது கூட இல்லை - 

எனக்கு எப்போதுமே அனஸ்தீசியா உடனே வேலை செய்யாது. என் ரெகுலர் பல் மருத்துவர்களுக்கு அது தெரியும்.  கொஞ்சம் ஸ்ட்ராங்காக அனஸ்தீசியா டோஸ் கொடுத்து டைம் கொடுத்து ஆரம்பிப்பார்கள்.

இவர் சட் சட்டென இரண்டு டோஸ் கொடுத்து ஓரிரு நிமிடங்களில் குறடுடன் அருகில் வந்து விட்டார்.  சற்றே உணர்வு இருக்கும் நிலையிலேயே என்னுடைய "ஆ...  ஆ..." க்களுக்கு நடுவே பிடுங்கி விட, பாதியாய் உடைந்த பல்லையும் நெம்பி எடுத்து விட்டார்.  பத்து நிமிடங்களில் இந்த வேலை முடிந்து விட, இரண்டு தையல் போட்டு அனுப்பி விட்டார்.

வெளியிலிருந்து சர்ஜன்,  ஒரு பொது மருத்துவரிடம் ஒபினியன், பி பி, சுகர்,  எக்ஸ்ரே, ஈ சி ஜி, எக்கோ என்கிற டென்ஷன் முடிவுக்கு வந்ததது!

ஆனால் கேடராக்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த என் தோழிக்கும் இதே சோதனைகள் எழுதிக் கொடுத்து அவர் எடுத்துக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

"இப்போல்லாம் இப்படிதான் ஸார்.."

============================================================================================================== 

Face Book ல்  திரு R. கந்தசாமி அவர்கள் பதிவிலிருந்து..    சுவாரஸ்யமான நிறைய பகிர்வுகளை ஆங்காங்கிருந்து எடுத்துத் தருகிறார் அவர்.

ஒரு நாள், ஸ்டெல்லா புரூஸே எனக்கு போன் செஞ்சு வீட்டுக்கு வரச்சொன்னாரு.

இரவு 7 மணிக்கு, கோடம்பாக்கத்துல இருந்த அவங்க வீட்டுக்குப் போனா...

அவரும் அவரோட மனைவி ஹேமாவும் விளக்கு போடாமல், இருட்டுல நடு ஹால்ல உட்கார்ந்திருந்தாங்க!

நான் ஸ்விட்ச் போட்டுட்டு, “என்ன சார் இருட்ல உட்கார்ந்திருக்கீங்க”னு கேட்டேன்.

“வெளிச்சத்தைப் பார்க்கவே பிடிக்கல தம்பி... எனக்கு சர்க்கரை நோய், மனைவிக்கு கிட்னி பெஃய்லியர், டயாலிஸிஸ்... மருத்துவத்தோட போராடிக்கிட்டு இருக்கோம்.

நாங்க ரெண்டு பேருமே காதல் திருமணம் செஞ்சுக்கிட்டதால உறவுகளோட ஆதரவு இல்ல. பேச்சுத் துணைக்கு யாரும் இல்ல. தைரியம் சொல்லவும் ஆளில்ல.

அதான்... ரெண்டு பேருமே தற்கொலை செஞ்சுக்கலாம்கிற எண்ணம் வந்துக்கிட்டே இருக்கு..!

அதுக்கு முன்னாடி விகடன் பாலு சாரோட முகத்தைப் பார்க்கணும்னு நெனச்சுத்தான் உனக்கு போன் போட்டேன். அவரை எப்போ எப்பிடி சந்திக்கலாம்..?”னு கேட்டார்.

நான் பேச வாய் இல்லாமல், அதிர்ச்சியா அவரது மனைவியைப் பார்த்தேன்.

உடனே அவர்,

“காசு பணத்துக்கு அவ்வளவு பிரச்னை இல்லன்னாலும்... உறவுக்காரங்க ஆறுதலுக்குக்கூட வரமாட்டேன்றாங்க தம்பி..!"னு கண் கலங்கினார்.

நம்ம ஆசிரியர் செய்த பல நல்ல காரியங்கள் பற்றியும், கதைகளுக்கு அவர் அனுப்பும் பணத்தை, ‘அள்ளித்தரும் பொற்காசு’ என்றும் உண்மையான பெருமிதத்தோட சொன்னாரு.

“கவலைப்படாதீங்க... நான் ஆசிரியர்கிட்ட காலைல சொல்றேன்”னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு வெளிய வந்தேன்.

ஒருகிலோ ஆப்பிள் வாங்கிக் கொடுத்து நம்ம பாசத்தைக் காட்டி, அவங்களோட தற்கொலை எண்ணத்தை மாத்திறலாம்னு நெனச்சு, பக்கத்துல ரோட்டுக் கடையில ஒரு கிலோ ஆப்பிளும் பிரட்டும் வாங்கிட்டுப் போனேன்.

'“என்ன தம்பீ... வீட்டுக்குப் போகலயா...

அடடே... இங்க பாருங்க... நான் ராத்திரி நேரத்துல வெளிய போய் ஆப்பிலும் பிரட்டும்தான் வாங்கி குவிக்கிறேன்...! வீட்டுக்குக் கொண்டு போங்க!”

என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்..? புரியவில்லை.

வயதான பிறகோ, நோய் வந்த பிறகோ மனதில் ஒரு வெறுமை வந்து சேருமோ! எழுத்தாளருக்கு என்ன வெறுமை..?

மறுநாள்,

காலையில விகடன் ஆபீஸ் போனதும், ஆசிரியர்கிட்ட எல்லாம் சொன்னேன்.

“என்ன எதிர்பார்க்கிறாங்க... சரி... நான் வீயெஸ்வி சார்கிட்ட பேசிக்கிறேன்”னு என்னை அனுப்பிவிட்டார்.

மாலையில், ஸ்டெல்லா புரூஸ் எனக்கு போன் செய்து, “வீயெஸ்வி சார்கிட்டயும் எல்லா விஷயமும் சொன்னேன்.  பாலு சார் 25000 பணம் அனுப்பி வச்சிருக்கார்.  ‘பணத்தை விட உங்க முகத்தைப் பார்க்கணும் சார்’னு சொன்னேன்.

’சனிக்கிழமை பொன்ஸீகூட படைப்பைக்கு வாங்க’னு சொன்னார். மகத்தான மனுசன்..”னு சொல்லி உருகினாரு.

நம்ம ஆசிரியரும் என்னைக் கூப்பிட்டு, “அவங்களுக்கு கார் அனுப்புறேன். நீங்களும் வந்துருங்க. கேமரா வேணாம்”னு சொன்னாரு.


சனிக்கிழமை அதிகாலையில புரூஸையும் அவரது மனைவி ஹேமாவையும் கார்ல அழச்சுட்டு படப்பைக்குப் போனேன்...

அங்க இருந்த பசும்பச்சையான மரங்களையும், கலர் கலரான பறவைகளையும் பார்த்த ஹேமாவோட முகத்துல அப்படி ஒரு பிரகாசம்!

நிறைய பேசினார்.

ஆனா, ஸ்டெல்லா புரூஸ் மட்டும்,

“நீங்க கொடுத்த பணம் மருந்துகள் வாங்க ரொம்ப உபயோகமா இருந்துச்சு. அதவிட, இந்த உடம்பையும் உயிரையும் எப்படி வெச்சுக்கிறதுனுதான் தெரியல..?” என்று ஒரு கேள்வியோட நிறுத்திக்கிட்டார்.

“முதல்ல இந்த முட்டைதோசையைச் சாப்பிடுங்க... முட்டை சைவம்தான். முட்டையைப் பொறிக்கி எடுக்கிறோம். முட்டையைக் கிள்ளினா கோழிக்கு வலிக்காது.

ஆனால், கீரையைக் கிள்ளி பிடுங்கும்போது கீரைச்செடிக்கு வலிக்கும்... அதுக்கு உயிர் இருக்கு... உணர்வு இருக்கு! அதனால, கீரை அசைவம்!

‘முட்டை சைவம்தான்!’னு ஒரு கட்டுரையை நான் 1956-ல ஆனந்த விகடன்ல எழுதினேன்!”னு நம்ம ஆசிரியர் சொன்னதும்,

உடனே ஸ்டெல்லா புரூஸ்,

“எப்ப இருந்து மனுசன் சைவம் - அசைவம்னு பிரிச்சுப் பார்த்தான்..?”னு கேட்டு, ஆசிரியரோட முகத்தைப் பார்த்தாரு.

“ம்ம்ம்... சரியான கேள்வி கேட்டீங்க...

நீங்க முதல்ல என்கிட்ட எழுப்பின சந்தேகத்துக்கு இப்ப நீங்க கேட்ட கேள்வியேதான் பதில்.

அறிவு!

‘உடம்பையும் உயிரையும் எப்படி வெச்சுக்கிறதுனு தெரியலையே’னு கேட்கிற அறிவு!

அந்தத் தேடல் அறிவு, வேட்டை அறிவு, பசி அறிவு, எந்த சீஸன்ல எது கிடைக்கும்கிற அறிவு, எந்தப் பக்கம் தப்பிச்சு ஓடலாம்கிற அறிவு... அதாவது எப்படியும் உயிர் பிழைக்கலாம்கிற அறிவு! இந்த அறிவுதான் உடம்பையும் வளர்க்குது... உயிரையும் வளர்க்குது..!”

- ஸ்டெல்லா புரூஸிடம் அடுத்த வார்த்தை வரவில்லை.

உடனே ஆசிரியர் என் பக்கம் திரும்பி, “புரியுதா பொன்ஸீ..?”னு கேட்டார்.

பெரியவர்கள் பேசும்போது இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும். ‘முட்டை சைவம்தான்னு இதுவரைக்கும் 25 தடவ சொல்லியிருக்கீங்க சார்’ என்றா சொல்வது..?

இங்கிதம் தெரிந்தவன் என்பதால், ஸ்டெல்லா புரூஸின் மனதை மாற்ற நம்ம ஆசிரியர் அவருக்கு கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார் என்பதைப் புரிந்து கொண்ட நான்,

“நல்லா புரியுது சார். இந்த விளக்கம் இதுவரை எனக்குத் தெரியாது சார். இதுமாதிரி விளக்கங்களை பள்ளிக்கூடத்துலயே வாத்தியார்கள் சொல்லிக் கொடுக்கணும் சார். ‘உடம்பையும் உயிரையும் வளர்க்கிறது எது’ன்னு என் பையன்கிட்ட சொல்லி வளர்ப்பேன் சார்!”னு சொன்னேன்.

உடனே புரூஸ்,

“எனக்குச் சொல்லித்தந்த வாத்தியாரே, அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சிட்டு வேலைக்கு வந்துட்டாரு. நான் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொடுத்தே ஓஞ்சு போனேன்..”

இப்போது ஸ்டெல்லா புரூஸும் ஹேமாவும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் இடையில் பேசவே இல்லை.

சிறிது நேரத்தில் சென்னைக்குப் புறப்பட இருந்த சமயத்தில்,

நம்ம ஆசிரியர்,

ஒரு அழகான கூண்டை அவர்கள் இருவரின் கைகளில் கொடுத்தார். உள்ளே...

இரண்டு 'காதல் கிளிகள்' (Love Birds).

“இவங்க உங்க கூடவே இருப்பாங்க. இவங்ககூட மனசுவிட்டுப் பேசுங்க. நல்லா பொழுது போகும்!”

- பொன்ஸீ 
நன்றி: விகடகவி

==============================================================================================================

விட்டு விடுங்களேன்..  
அதது அதனதன் போக்கிலேயே 
போகட்டும்..

குடை பிடிப்பதால் 
மழை நின்று விடுகிறதா என்ன!

வெயிலின் கோபத்தைவிட 
வெள்ளத்தின் கோபம் ஆபத்தானது.

===========================================================================================================

ஸ்ரீரங்கம் ஆண்டாள் 2013 ல் அப்போதைய பாகன் ஸ்ரீதர் விலகியதைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது.  அதே ஆண்டாள் இப்போது பாகன் ராஜேஷுடன் தினசரி பேசுவது வாடிக்கையாகி பிரபலமடைந்திருக்கிறது.  மனம் மாறிய ஆண்டாள்!




=============================================================================================================

காத்திருந்து, துல்லியமாக திறமையாக எடுக்கப்பட்டு ரசிக்க வைக்கும் புகைப்பட வரிசையில் இணையத்திலிருந்து இன்றும் ஒரு படம்!


==============================================================================================================

பொக்கிஷம் :

இதுவன்றோ விளம்பரம்...

இன்னா இஷ்ட்ராங்குப்பா...

நினைக்க வைப்பதற்கு இப்படி ஒரு வழி!

மாமனார் மேல் அபப்டி என்ன கோபமாம்?!


ஹிஹிஹி...  ஜோக்குதான்....


ஒரே ஒரு டைப்பிஸ்ட்தானா?!


98 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. பல் வைத்தியர் என்று இல்லை எல்லா வைத்தியரும்
    எல்லா டெஸ்டும் எடுக்க சொல்கிறார்கள்.
    முன்பு போல பொது மருத்துவம் இல்லை, தனி தனியாக சிறப்பு வைத்தியம் படித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வியாதிக்கு ஒவ்வொரு வைத்தியர். டெஸ்ட் எடுக்க சொல்வது வைத்தியத்தை எளிதாக்க , பக்கவிளைவை தடுக்க என்கிறார்கள். நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  கேட்டுதான் ஆக வேண்டும்.  வேறு வழி.  நம் பயத்தை காசாக்குகிறார்கள் என்றும் தோன்றும்.  

      /எல்லா வைத்தியரும்எல்லா டெஸ்டும் எடுக்க சொல்கிறார்கள்.//

      ஆம்.  கேட்டராக்ட் பற்றி சொல்லி இருக்கிறேனே..

      நீக்கு
  3. ஸ்டெல்லா புரூஸ் தன் மனைவி இறந்தவுடன் தற்கொலை செய்து கொண்டார் தானே?

    //அதான்... ரெண்டு பேருமே தற்கொலை செஞ்சுக்கலாம்கிற எண்ணம் வந்துக்கிட்டே இருக்கு..!//

    முன்பே இதை சொல்லி வந்து இருக்கார் போலவே!
    உறவுகள், நட்புகள் இல்லா தனிமை கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்து கொள்ள முடியாத தனிமை..  அனுபவித்த மனக்கொடுமை..  அதிலேயே பிறந்த எழுத்துகள்...

      நீக்கு
  4. முதலில் போட்ட கருத்தை காணவில்லையே!

    பதிலளிநீக்கு
  5. பல் வைத்தியர் பற்றி கருத்து போட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒளிந்து கொண்டிருந்தவற்றை காதைப் பிடித்து இழுத்து வந்து விட்டேன்.

      நீக்கு
  6. கவிதை, பொக்கிஷபகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. முழுமையான பிள்ட் டெஸ்ட் + சிறு நீர் (தேவையானால் ECG)
    பரிசோதனை எல்லா குழப்பங்களையும் சுலபமாக்கி விடும். என் அனுபவ உண்மை இது.
    பல தடவைகள் இந்த தளத்தில் யாராவது தங்கள் உடல் நிலை பற்றிச் சொல்லும் பொழுது சொல்ல வேண்டும் என்று நான் நினைத்திருந்தது.
    கொலஸ்ட்ரால், சுகர், தைராய்ட் இந்தக் கோளாறுகள் எல்லாம் இப்பொழுது வெகு சகஜமாகியிருக்கிறது.
    ஆரம்பத்திலேயே இன்ன குறைபாடு என்று தெரிந்து விட்டால் மாத்திரைகளே போதும்
    என்ற உடற்கூறு அறிவியல் சாத்திரம் கொடிகட்டிப் பறக்கும்
    காலம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா இதற்கு முக்கிய காரணம் நாம் சிறு வயதிலிருந்தே நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாரிக்கப்படாதது, தயாரித்துக் கொள்ளாமல் இருப்பதுதான் காரணம். உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான சாப்பாடு அளவான சாப்பாடு நடைப்பயிற்சி இதெல்லாம் நம்மில் எத்தனைப் பேர் செய்கிறோம்...நாம் வீட்டு வேலைகள் வீட்டிலுள்ளவர்களுக்காக எவ்வளவோ நேரம் செலவழிக்கிறோம் ஆனால் நமக்காக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை. குறிப்பாகப் பெண்கள்.

      நம் குழந்தைகளை அதற்குப் பழக்க வேண்டும். அதுவும் இப்போதெல்லாம் நம் குழந்தைகளில் பலர் கணினித் துறையில் அதுவும் பெரும்பாலும் உட்கார்ந்துகொண்டே இருக்கும் தொழில், நேரம் கெட்ட நேரத்தில் வேலை சர்க்கேடியன் ரிதம் பாதிப்பு அதனால் விளையும் பின் விளைவுகள் நம் வாழ்க்கை முறை....எல்லாமே காரணம். வெறும் மருத்துவ டெஸ்டுகள் மருந்துகள் மட்டும் போதாது

      கீதா

      நீக்கு
    2. பொருந்தும். கணினித் துறை மட்டுமல்ல....மருத்துவர்களில் பலர் மத்தவங்களுக்கு அறிவுரை செய்வாங்க ஆனா அவங்களைப் பார்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு. அவர்களின் சர்க்கேடியன் ரிதமும் பாதிப்புக்குள்ளாகிறதுதான்....நேரம் கேட்ட நேரத்தில் வேலை...

      கீதா

      நீக்கு
    3. நமக்கான மருத்துவ பரிசோதனை குறிப்புகளை கோர்த்து ஃபைலில் வைத்திருக்க வேண்டும்.
      மருத்துவ டெஸ்டுகளின்
      Range அளவுகளோடு
      நமக்கான டெஸ்ட் ரிப்போர்டை ஒத்திட்டுப் பார்க்கும் பொழுது 'இந்த இந்த தொந்திரவுகள் எல்லாம் தமக்கில்லை என்று ஒரு சந்தோஷம் வரும் பாருங்கள் -- அதுவே இருக்கும் வேறு சில்லறைத் தொந்தரவுகளை விரைவில் குணப்படுத்த மாமருந்து.

      நீக்கு
    4. ஜீவி ஸார்...   அப்படியெல்லாம் ஒழுங்காக மெயின்டெயின் செய்பவனாக இருந்தால் பல்லையுமே சீராக வைத்திருப்பேனோ என்னவோ!  நான் ஒரு ஒழுங்கில்லாதவன்.  எல்லாவற்றையும் கைமாற்றி வைத்துத் தொலைப்பவன்!

      நீக்கு
    5. உடற்பயிற்சி...    கீதா...   கொலஸ்ட்ரால் கொஞ்சம் ஏறியதும் நடைப்பயிற்சி ஆரம்பிப்பேன்.  கொஞ்சம் குறைந்தததும் அல்லது நான்கைந்து மாதங்களில் நிறுத்தி விடுவது வழக்கம்!!

      நீக்கு
  8. அது என்ன ஞாபகமில்லை, ஞாபகமில்லை?.. ஒரு
    ஃபைல் போட்டுக்க மாட்டீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸார்...    ஆறு மாதத்துக்கொருமுறை டெஸ்ட் செய்து, அந்த பி டி எஃப்பை அப்படியே கைதவறுதலாய் எங்கோ வைத்து விடுவேன்!

      நீக்கு
  9. 'இப்போலாம் இப்படித்தாங்க.. ஸார்..'

    இதான் நம்ம கிட்டே இருக்கற கோளாறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்சனை டைஸ்டுகளினால் அல்ல. ஒவ்வொரு இடத்திற்கும் அலைந்து, காத்திருந்து.... என்பதனால்.... பல் னாக்டரே, அடுத்த தெருவில் இவற்றையெல்லாம் வைத்திருந்தால் அவ்வளவு பிரச்சனை இல்லை

      நீக்கு
    2. நம்மிடம் என்ன கோளாறு?..  ஒன்றுமில்லை.  பல் மருத்துவர் இங்குதான் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.  'எங்கோ எடுத்துக்கொண்டு வா...!'

      நீக்கு
  10. பல் எடுக்கும் நிகழ்வை ரசனையாக எழுதியிருக்கீங்க. ரவா தோசை பனியன்.... ஹா ஹா ஹா.... எனக்கு பல் வைத்தியம் பார்க்க, ப்ரெஷர்்இருக்கு என்பதால் ஒரு வாரம் உள்ளூரில் இருக்கவைத்த நினைவு வருது. பிறகுதான் பஹ்ரைன் போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் எனக்கு பல் எடுத்தபோதும் அந்த மருத்துவர் பிரஷர் இருக்கான்னு கேட்டார்.  ஆம் என்றேன்.  எவ்வளவு என்று கேட்டார்.  மாத்திரை எடுத்த்ட்டுக்கறேன் பெரும்பாலும் நார்மல்னு சொல்லிக்கொண்டே இருக்கும்போதே "ணங்"  என்னிடம் காண்பித்து விட்டு ட்ரேயில் போட்டு விட்டார்!

      நீக்கு
  11. விகடன் பாலு சார் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். வாழ்ந்து, தாழ்ந்து, உயர்ந்தவர் அவர்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை படித்திருக்கிறேன். அதற்கு முந்தைய இந்த எபிசோட் புதிது. எப்படி எப்படியெல்லாம் ஒருவர் வாழ்க்கை செல்கிறது பாருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மனநிலை அப்படியே இருந்திருந்திருக்கிறது.

      நீக்கு
  13. புதுப் பாகனுடன் யானை ஒன்றிய காணொளிகள் பல பார்த்திருக்கிறேன். உதவி பாகன்... தவறில்லை. பாகனுக்கு ஏதாவது ஆனால் கட்டுப்படுத்த ஒரு ஆள் வேணுமல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதவி பாகன் இல்லை.  பழைய பாகன் ஸ்ரீதர் பிரிந்து சென்று விட்டார். அப்போது ஆண்டாள் ரொம்பவே ஃபீல் செய்தாள்.  ஆனால் இப்போது புதிய பாகன் ராஜேஷுடன் இன்னும் அதிகமான ஒட்டுதல்.

      நீக்கு
  14. யானை ஓராண்டு ஆகிவிட்டால் மறந்துவிடும். திரும்ப முதலிலிருந்து புதியவர் பழகிக்கவேணைம்னு இவர் சொல்லியிருந்தார். திருக்குறுங்குடி யானை பேசினது நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறான கருத்தோ...   யானை அவ்வளவு எளிதில் மறக்கக்கூடிய ஜீவன் அல்ல.

      நீக்கு
    2. சரியான கருத்து என்றே தோன்றுகிறது. ஆனால் அதே சமயம், தன்னை வளர்த்தவர்களை, பெரிய சிங்கங்கள் (zooவில் இருப்பவை) உணர்ந்துகொண்டு அவர்களுடன் கொஞ்சுவதையும், ஒரு சிம்பன்ஸி இறக்கும் தருவாயில், தன்னை வளர்த்தவர் வந்தபோது, எழுந்து அவரிடம் மிக மிகப் பிரியத்தைக் காண்பித்து வருடிக்கொடுத்து பிறகு அசதியில் படுத்து இறந்துவிடும் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். அதுபோல தங்களுக்காகவே வாழ்ந்த ஒருவர் இறந்தபோது, எங்கோ இருந்த யானைக்கூட்டம் அவர் வீட்டுக்கு அருகில் வந்து சோகமாக இருந்து பிறகு சென்றதையும் கண்டிருக்கிறேன் (காணொளிகளில்).

      நீக்கு
    3. நீங்கள் சொல்லும் சம்பவங்களை நானும் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.  அபார ஞாபக சக்தி உள்ள ஜீவன் யானை.  புத்திசாலியும் கூட.\

      நீக்கு
  15. விகடன் பாலு அவர்களின் முட்டை பற்றிய வியாக்கியானம் வித்தியாசமானது, ஆனால் லாஜிக் இல்லாத்து. கொஞ்சம் விட்டால் இலைதழைகளைச் சாப்பிடும் ஆட்டையும் வெஜிடேரியன் கணக்கில் சேர்த்துவிட்டிருப்பார் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...    அப்படிப்பார்த்தால் வெஜிடேரியன் கணக்கில் இன்னும் கூட ஜீவன்கள் சேரும்!

      நீக்கு
  16. முன்ன எல்லம் பல் மருத்துவர்கிட்ட போனோமா பிடிங்கினோமான்னு வந்துடுவோம்....இப்ப இப்படி எல்லாம் இருக்கா...ஸ்ரீராம்....ம்ம்ம் இருக்கலாம் பாதுகாப்புக்காகத்தான்...மருத்துவருக்கும், நோயாளிக்குமாக இருக்கும்

    ஆனா எங்க வீட்டு ஆள் போற மருத்துவர் அவரேதான் பல்லு பிடுங்குகிறார், அவரேதான் ஓட்டையை அடைக்கிறார், பல்லுக்கு மூடி!!! போடுகிறார்,,,(பல்லுக்கு மூடி போட்டாலும் சொல் வந்துக்கிட்டேதானே இருக்கு!!!!!) புதுப்பல்லும் வைக்கிறார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. இனி பல்லை உடைச்சுருவேன்னு சொல்லாம இருங்கப்பா மக்களே கோபத்துலக் கூட!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடைக்கறதுக்கு முன்னாடி ஒபினியன் வாங்கணுமாக்கும்!

      நீக்கு
  18. ஆஸ்பத்திரியில் அட்மிட். டிஸ்சார்ஜ் ஆனதும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   என்ன ஆச்சு ஜெயக்குமார் ஸார்...   உடல்நிலையை கவனித்துக்கொண்டு வாருங்கள்.

      நீக்கு
    2. ஜெஸி ஸார் நேற்று கூட கேட்கணும்ன்னு நினைச்சேன். ராத்திரி ஆகி விட்டது. கேட்கவில்லை. உடல்
      நலம் தேறி வாருங்கள்.

      நீக்கு
  19. ஸ்ரீராம் எனக்கு ஒரு டவுட்டு.....முன்பெல்லாம் இப்படி செக் பண்ணாமலெயே பல்லை பிடுங்கினாங்க...ஒண்ணும் ஆனதா தெரியலை அதாவது நான் சொல்றது வயசானவங்களுக்குத்தான்.....ஆனா இப்ப இப்படி முன் ஜாக்கிரதை அதிகமா இருக்கறத பார்த்தா அப்ப மருத்துவச் சட்டம் நம்ம ஊர்லயும் வலுவாக வந்துவிட்டதா? அப்ப ஏதாச்சும் ஆனா நோயாளி கேஸ் போட முடியுமோ? அதுக்குத்தான் இவ்வளவு முன்னெச்சரிக்கையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். அதுவும் சமீப காலத்தில் நோயாளிகள் கேட்கும் கேள்விகளும் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றனவே...

      நீக்கு
  20. அதென்னவோ இப்படித்தான் ஸ்ரீராம் கடைசி வரியைச் சொல்றேன். எதுக்கெடுத்தாலும் எல்லா டெஸ்டும் செய்துவிட்டுத்தான்....ஆனால் மருத்துவ சட்டம் நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்கா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பல் : உங்களைத் தொடரும் நிலையில் நான். அதனால் நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு ஒரு ஐ-ஒப்பனர்! நன்றி.

    உடைந்திருக்கும் கடைவாய்ப்பல்லினால் 3 நாட்களாகக் கடும்வலி. சாப்பிட முடியவில்லை. தூக்கம் போச்சு. ஆண்டிபையாட்டிக்ஸ். பெய்ன் கில்லர்.. கடைவாய்ப்பல் டிகே ஆகிவிட்டது. எக்ஸ்ட்ராக்ட் பண்ணிடனும் என்றாள் டெண்ட்டிஸ்ட். ஒரு 40+ சிந்தி லேடி. பண்ணுங்க என்றேன். சுகர் இருக்கா? இல்லை. கார்டியோ? ம்... எந்த ஹாஸ்பிட்டல்? மணிப்பால். கார்டியாலஜிஸ்ட் கிட்ட க்ளியரன்ஸ் வாங்கிட்டுவாங்க. அப்பத்தான் சர்ஜன் ஒத்துக்குவாரு..! ஓ..

    இன்று போகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சி பல் அல்லது உடைந்த பல்லை எடுக்கா விட்டாலும் ஆபத்துதான்.  பின்னர் இப்படி ஆகும், அப்படி ஆகும் என்று சொல்லும்போது பயப்படாமல் இருக்க முடியாது! 

      பல் எடுக்க எவ்வளவு?  அப்புறம் இம்பிளான்ட் ஐடியா இருக்கா?

      நீக்கு
    2. 7000 எனத் தெரிகிறது. இம்ப்ளாண்ட் இப்போதைக்கு இல்லை!

      நீக்கு
    3. பரவாயில்லையே...  எங்கள் ஆள் கம்மியாகத்தான் வாங்குகிறார்!!  இம்பிளான்ட் உடம்பில் வலு இருக்கும்போதே செய்துகொண்டு விட்டால் பின்னால் வசதி என்பது என் கருத்து.  தேவைப்படும் சமயத்தில் இப்போது செய்ய முடியாது என்று சொல்லி விட்டால்?  இம்பிளான்ட்டுக்கு முப்பது கே சொல்கிறார்கள்.

      நீக்கு
  22. .."இல்லை நரேன்.. எனக்கு ஞாபகமே இருப்பதில்லை. மனசிலேயே வாங்கி கொள்வதில்லை. என் கண் பவர் கூட எனக்கு நினைவிருக்காது. கண் டெஸ்ட் முடிந்து வந்தபின் கொஞ்ச நாள் நினைவிருக்கும். அப்புறம் மறந்து விடுகிறது.."//

    என்னைப்போல் ஒருவன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னைப்போல் ஒருவன் !// இல்லை இல்லை. என்னைப்போல் ஏகப்பட்டபேர். எனக்கெல்லாம் எல்லாமே என் மனைவிதான் நினைவில் வைத்துக்கொள்ளணும். ஹாஹாஹா

      நீக்கு
    2. ஞாபகம் வைத்துக்கொண்டுதான் என்ன செய்ய?  அது வேறு ரீடிங் மாறிக்கொண்டே இருக்கிறது!

      நீக்கு
  23. இதற்கெல்லாம் ஆரம்பபுள்ளி வேப்பமரத்தை நாம் மறந்து விட்டதே...

    இது கார்ப்பரேட்காரர்களின் சதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி!  பல் மட்டும் என்றால் பரவாயில்லை.  நம்ம உடம்பில் மல்டிப்பிள் பிரச்னைகள்!

      நீக்கு
  24. இந்நாளும் இனிய நாள்..

    எந்நாளும் வாழ்க..

    அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  25. பல்லைப் பிடுங்கும் புராணம் ரசனை..

    ரவா தோசை பனியன்... வித்தியாசமான சிந்தனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  ரவா தோசை உதாரணம் ரொம்பப் பழைய சிந்தனை!

      நீக்கு
  26. நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும்!...

    காதலும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்..

    நோயில்லா
    உடல் மட்டும் வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அந்த ஞானம் வருவதற்கு நாற்பதைத் தாண்டவேண்டும்!

      நீக்கு
  27. ரவா தோசை பனியன்// சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்....

    உங்கள் வேதனையிய அவஸ்தையை அலைய வைத்ததை சுவாரசியமா சொல்லிருக்கீங்க ஸ்ரீராம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. @ கில்லர் ஜி..

    // இது கார்ப்பரேட்காரர்களின் சதி.,//

    இப்போ தான் உப்பு இருக்கா.. புளி இருக்கா... பெருங்காயம் இருக்குதா..ந்னு கூடவே வந்துக்கிட்டு இருக்கானே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சறைப்பெட்டியையே அமெரிக்க்காக்காரன் சொந்தமாக்கிக்கொள்ள முயல்கிறான்.

      நீக்கு
  29. // எல்லா டெஸ்டும் எடுக்க சொல்கிறார்கள்... //

    அதுவும் அவர்கள் பரிந்துரைக்கும் இடத்தில் (Doctor / Lab) தான் எடுக்க வேண்டும்... இல்லையெனில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை DD.  எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம்.  ஆனால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.  எந்த மூலையில் எடுத்தாலும் மருத்துவர் பெயர் பார்த்து அவருக்குரிய கமிஷன் மெதுவாகவாவது அவரை அடைந்து விடும் என்று அறிக.

      நீக்கு
  30. திரு R. கந்தசாமி அவர்கள், நிமிடத்திற்கு ஒருமுறை பதிவு இடுவார்...!

    பதிலளிநீக்கு
  31. ஸ்டெல்லா புரூஸ் பற்றியும் அவரது கடைசிகாலத் துயரங்கள் தற்கொலை செய்து கொண்டது வாசித்திருக்கிறேன். இந்த விஷயம் இப்போதுதான் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கவிதை அருமை. வெயில் பல நாள் பல மணிநேரம் அடிச்சாலும் நாம் நிழலில் கூரைக்கடியில் இருந்து தப்பிச்சுக்கலாம்தான் ஆனால் வெள்ளம் அப்படியா...ஒரு சில மணித்துளிகளில் நொடிகளில் கண் இமைக்கும் நேரத்தில் அடிச்சுட்டுப் போயிடுமே

    அதது அதன் போக்கில் விட்டால் சௌக்கியமே. மனுஷன அப்படி விடமுடியலையே....முடியாதே....மனுஷன் மட்டும்தான் அவனவன் போக்கில் விடமுடியாத ஆறு அறிவு! ஜீவராசி!!!!ன்னு நினைக்கிறேன்...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீரங்கம் ஆண்டாள் பேசுறதை நீங்களும் எடுத்து வைச்சிட்டீங்க போல!!! ஹாஹாஹா நானும் எடுத்து வைச்சேன் பகிர....இங்க கூட நெல்லையின் பதிவு ஒன்றில் ஞாயிறு அன்று சொல்லியிருந்த நினைவு...

    எப்படியும் தலைமைப்பாகன் ஸ்ரீதர் இருப்பாரே உதவிப் பாகன் தானே. அவரும் ஸ்ரீதர் எப்படிப் பழகுகிறார் ஆண்டாளுக்கும் அவருக்குமான மொழி என்ன எப்படி என்பதைப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாமே. ஸ்ரீதர் சொல்லியிருப்பது தவறல்ல. எல்லா விலங்குகளுக்குமே அதன் உரிமையாளர்.பயிற்சியாளர் மாறும் போது பிரச்சனைகள் உருவாகும். விலங்கியல் பூங்காவில் கூட

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டாள் பேசுவதை எடுத்து வைக்கவில்லை. கீதா. இது முற்றிலும் வேறு செய்தி!

      நீக்கு
  34. பழக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மாறினாலும் கூட விலங்குகள் கஷ்டப்படும். ஒத்துழைக்காது

    கீதா

    பதிலளிநீக்கு
  35. போத்தல் திறக்கும் ஜோக்ஸ் செம சிரிப்பு ....ஹா....ஹா.....வாய்விட்டு விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

    மற்றவையும் சுவாரசியமானவை.

    பதிலளிநீக்கு
  36. ஸ்டெல்லா ப்ரூஸின் கதையில் சோகம் கொப்புளிக்கிறது. நவீன விருட்சம் அழகிய சிங்கர் இவர்பற்றி எழுதியதை முன்பு படித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடனில் அப்போது ஸ்டெல்லா புரூஸின் முதல் கதை படித்து விட்டு அசந்து போயிருக்கிறேன்.

      நீக்கு
    2. அந்தக் கதையின் பெயர் அறை நண்பர்.
      கதைக் களம்:
      திருவல்லிக்கேணி பகுதி லாட்ஜ் ஒன்று
      அப்படி ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்லற மாதிரியான கதை அல்லவே அது?

      நீக்கு
    3. ஓ.. நான் சொன்னது 'அது ஒரு நிலாக்காலம்..'

      நீக்கு
  37. படம் - செம ஷாட்.

    அப்பெண்ணின் கண்களில் தெரியும் பயம் - அழகான விவரிப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஸ்டெல்லா புரூஸ் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்....உறவுகள் ஒதுக்கி வைத்து கொடுமை. காதல் மணம் என்றால் அதுக்காக இப்படியா? ம்ம்ம் அந்தக் காலகட்டத்தில் இப்படித்தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் பின்னணி நமக்குத் தெரியாது. இரண்டு சைடும் ஒதுக்கி வைக்கும்படியாக என்ன நேர்ந்தது என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் தெரியும்.

      நீக்கு
    2. இதுவும் தோன்றியது நெல்லை. அதைச் சொல்ல வர....உங்கக் கருத்து...

      கீதா

      நீக்கு
    3. நெருங்கி வந்தும் இவர்கள் சேரவில்லையோ என்னவோ...

      நீக்கு
  39. பொக்கிஷங்கள் ஓகே.....நொடியில் நிவாரணம் என்பதைத்தான் இப்படி நேரடி டெமோ...லொக்கு லொக்குன்னு சும்மா இருமி....ஹாஹாஹாஹா வேறு ஒரு வகை நினைவுக்கு வருகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    பல் பயங்களுடன் வந்த பல பயங்களையும் நகைச்சுவைகளுடன் தொகுத்து தந்து பதிவை சுவாராஸ்யமாக்கி உள்ளீர்கள். நீங்கள் பட்ட அவதிகளை எழுதியிக்கிறீர்கள். ஆனால், படிக்கும் போதே நிறைய இடங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன். பாவம்..! உங்கள் நிலைமை அன்று எப்படியிருந்திருக்கும் என உணர முடிகிறது. அந்த வேதனைகளை நகைச்சுவையாக மாற்றித் தந்த தங்கள் எழுத்து திறமைக்கு பாராட்டுக்கள். தற்சமயம் வலி உள்ளதா? எப்படி தைரியமாக இந்த முடிவெடுத்து சென்றீர்கள்?

    இதற்குத்தான் எனக்கிருக்கும் இந்த ப(ல்)ல தொந்தரவுகளுக்கு டாக்டரிடம் போகவே அஞ்சுகிறேன். போன வருடம் பல் வலி பொறுக்காமல் ஒரு டாக்டரிடம் (ஆனால் அவர் பல் மருத்துவர் அல்ல.....) சென்றோம் . அவர் எனக்கு சுகர் நிறைய இருப்பதால், இப்போது பல்லை அகற்ற முடியாது. எனக்கூறி ஆண்டியாயாடிக் மருந்துகள் கொடுத்து அதனால் வேறு சில உபத்திரவங்களை சந்தித்தேன்.என்னவோ இப்படியான வியாதிகளை ஒவ்வொரு தடவையும் சந்தித்து மீண்டு வருவது எனக்கு இப்போதெல்லாம் மிகுந்த சிரமமாக உள்ளது.

    கவிதை நன்றாக உள்ளது. வெள்ளத்தின் சேதங்களை விட வெய்யிலின் பாதகங்கள் ஏற்றுக் கொண்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆயினும் நாம் எது வந்தாலும், அக்கரை பச்சையாக்கி விடுவோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்துப் படித்ததற்கு நன்றி கமலா அக்கா.  ஒரு ஸ்டேஜில் பல்லுக்கோ மற்றவற்றுக்கோ மருத்துவரை நாடி விடுவதே நலம்.  முற்றிலும் புறக்கணிக்க முடியாது.

      நீக்கு
  41. பல் எடுக்கும் விழாவை திருவிழாவாக காட்டி விட்டீர்கள்… அருமை…
    தாலி கட்டும் நேரம் 2 நொடிகள் தான். ஆனால் அதற்குமுன் எவ்வளவு அலைச்சல், காலம், பணம் ஆகிறது? ஆனால் ஒன்று, இங்கு கட்டுச்சாதத்தில் கூட ரவா தோசை கிடையாது! (படிக்கும்போது சிரித்து விட்டேன்!)

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!