புதன், 25 ஜனவரி, 2023

அருள்வாக்கு கேட்ட அனுபவம் உண்டா?

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

அருள்வாக்கு கேட்ட அனுபவம் உண்டா? அப்படி கேட்டவை பலித்திருக்கிறதா?

# இல்லை. அதாவது கேட்டதே இல்லை.

& கேட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் ரேடியோவில் காலை மங்கள இசை முடிந்தவுடன், வரும் ஐந்து நிமிட நிகழ்ச்சி " அருள்வாக்கு" கிருபானந்த வாரியார் சொன்ன அருள் வாக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது. (ஆமாம், நீங்க சொல்வது எந்த அருள்வாக்கு? )

நெல்லைத்தமிழன்:

பூஜாரி அல்லது பட்டாச்சாரியார் ஜீன்ஸ் அணிவது, அவங்க வீட்டார் அணிவதை மக்கள் ஏற்கப் பழகிட்டாங்களா?

# பழகிவிட்டால் நல்லது. கிராப்தலையை, தட்டுச் சுற்று வேட்டியை ஏற்றுக்கொள்ளவில்லையா- அதுபோல.

& இடத்துக்கேற்ப உடைகள் சிறிது மாறுபடுவது இயல்பே. பெங்களூரில் கோவில் பூசாரிகள் யாரும் திறந்த மார்புடன் பெரும்பாலும் இருப்பதில்லை. குளிர் பிரதேசங்களில் ஸ்வெட்டர் அணிந்த பூசாரிகள்தான். ஆனால் பூசாரிகள் பெர்முடா கால்சட்டை அணிந்து வந்தால் நம் மனதில் அவர்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் ஏற்படாது. 

முற்காலத்தில் கஷ்டப்பட்டுச் சென்ற யாத்திரைகளுக்கும் தற்காலத்திற்கும் என்ன வித்தியாசங்கள்?

# அந்தக் காலத்தில் என் காதில் விழுந்தது காசி யாத்திரை தாண்டிய எதுவும் இல்லை.  காசிக்கு செல்பவர்கள் திரும்ப வருவது அபூர்வம் என்கிற கருத்து கூட ஒரு காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது.ஆதிசங்கரர் சென்று வந்தாரே தவிர 1950களில் பத்ரிநாத் கேதார்நாத் யாத்திரை பற்றிக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. திருப்பதி யாத்திரை பெரிய விஷயமாக இருந்தது மாட்டுவண்டி மட்டும் இருந்த காலத்திலே. யோசித்துப் பார்த்தால் அன்றைய யாத்திரைக்கும் இன்றைய யாத்திரைக்கும் மலைக்கும் மடுவுக்கும் போல நிறைய வித்தியாசங்கள் அகப்படுகின்றன. " காசிக்கு நீ மட்டுமா போனாய் உன் கையில் இருக்கும் சொம்பு கூடத்தான் போனது " என்று  சொல்கிற சமத்காரம் வழக்கத்தில்  உண்டு. தியாகராஜர் கீர்த்தனையில் கூட  சொல்லப் பட்டு இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். 

= = = = =  

சு நா மீ 09 : 

முந்தைய பகுதி சுட்டி : சு நா மீ 08 

ஒரு வாரம், ஒரு மாதம் இரண்டு மாதங்கள்  என்று நாட்கள் ஆகியும், நாகேஸ்வரனையோ அல்லது சுசீலாவையோ தேடி யாரும் வரவில்லை. சுப்பா ராவ் இறந்துவிட்டார். அவருடன் சேர்ந்து சுந்தரி, நாகராஜ் இருவரும் இறந்து விட்டனர் என்று காந்தாமணி கதை கட்டிவிட்டதால், தியாகராஜன் பெரும் சோகத்தில் ஆழந்தார். தனிமையை வெல்ல, அதுவரை தனியே வசித்து வந்த தயாளன், அவர் மனைவி, குழந்தை எல்லோரையும் தன் கூடவே வந்து வசிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் என்ற காந்தாமணியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். 

= = = = = =

சுந்தரம், மீரா தம்பதியினர், நாகேஸ்வரனுடன் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தனர். அப்படி செல்லும்போது, மீனாக்ஷி மாமியிடம், நாகேஸ்வரனையோ அல்லது சுசீலாவையோ தேடி யார் வந்தாலும் உடனே மீகாம் கம்பெனி மூலம் தனக்குத் தகவல் கொடுக்கவேண்டும் என்றும், தான் உடனே நாகேஸ்வரனைக் கொண்டு வந்து அவனின் தந்தையிடம் ஒப்படைத்து பிறகு அவரிடம் நாகேஸ்வரனை தமக்கு தத்து அளிக்க இயலுமா என்று கேட்கலாம் என்பது அவர் திட்டம். அதுவரை, சுசீலா படிப்பு, உடை, இருப்பிடம் எல்லாவற்றிற்கும் என்ன பணம் வேண்டும் என்றாலும் மீனாக்ஷி மாமி - மீகாம் அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொன்னார். அன்றிலிருந்து மீனாக்ஷி மாமிக்கு சுசீலா ஒரு பொன்முட்டை  இடும் வாத்து என்று ஆகிவிட்டாள். கேட்டது எல்லாம் கிடைத்ததால், சுசீலாவும் மீனாக்ஷி பாட்டியை விடாமல் பிடித்துக்கொண்டு விட்டாள்! அண்ணன் நாகராஜ் பற்றி அவளுக்கு எப்போதாவது கனவு மாதிரி சில ஞாபகம் வரும். ஆனால் அது பற்றி எதுவும் யாரிடமும் அவள் கேட்கவில்லை. 

தன்னுடைய தாய் தந்தை பற்றி அவள் கேட்கும்போதெல்லாம் மீனாக்ஷி மாமி அவளிடம், அவர்கள் இருவரும் சுனாமியில் இறந்துவிட்டதாக கூறி வந்தார். 

= = = =  ==  

நாகேஸ்வரனுக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்ததும், அவனிடம் நடந்த எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறி சிறு வயதில் எடுக்கப்பட்ட அவனின் புகைப்படம், அவன் தங்கை பற்றிய விவரங்களை சுந்தரம் அவனுக்குக் கூறினார். அவனுடைய தங்கைக்காக மீகாம் - நாகை அலுவலகம் மூலம் பண உதவிகள் செய்து வருவதையும் கூறினார்.  

அப்பொழுது சிறு வயதில் நடந்த எல்லா சம்பவங்களும் நாகராஜுக்கு மெல்ல மெல்ல நினைவு வந்தது. அவனும் தன் நினைவிலிருந்து தன்னுடைய அப்பா, காந்தா சித்தி, தயா மாமா, சுப்பா ராவ் பற்றி எல்லாம் சுந்தரத்திடம் கூறி, தன் பெயர் நாகராஜ் என்றும், தங்கை பெயர் சுந்தரி என்றும்,  அப்பாவிடம் திரும்பப் போய் சேருவது வரை பெயரை நாகேஸ்வரன் மற்றும் சுசீலா என்றே சொல்லவேண்டும் என்று சுப்பா ராவ் கேட்டுக்கொண்டதால், தான் அன்று முதல் அப்படி சொல்லிவந்ததாகவும் கூறினான். அப்பா பெயர் தியாகராஜன் என்றும் பெற்ற அம்மா பெயர் சந்தானலக்ஷ்மி என்று மட்டும் தெரிந்திருந்த நாகராஜுக்கு மற்ற விவரங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. 

மீகாம் - சிங்கப்பூர் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்த நாகராஜ், தன் மேஜை மீது, சிறு வயதில் தன் பெட்டியில் வைத்திருந்து எடுத்து வந்த புகைப்படமான தானும் சுந்தரியும் இருக்கும் படத்தை ஃபிரேம் செய்து வைத்திருந்தான். 

மீகாம் சிங்கப்பூர் அலுவலகத்தில் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்த பலர் வேலையில் இருந்தனர். அவர்களில் ஒருவர், மின்நிலா வாசகர். அவர் மின்நிலா 128 ஆவது இதழ் கடைசி பக்கத்தைப் பார்த்ததும், ஆச்சரியம் அடைந்தார். அந்தப் படத்தை தன்னுடைய உயர் அதிகாரியான நாகராஜின் மேஜை மீது பார்த்த ஞாபகம் அவருக்கு வந்தது. அவர் உடனே நாகராஜிடம் சென்று விவரங்கள் தெரிவித்தார். 

நாகராஜ் அவரிடம் மின்நிலா 128 ஆவது இதழை தனக்கு அனுப்பச் சொல்லி, அதைப் பார்த்து, உடனடியாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தான். 

(தொடரும்) 


41 கருத்துகள்:

  1. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாள் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அந்தக் காலத்தில் ரேடியோவில் காலை மங்கள இசை முடிந்தவுடன், வரும் ஐந்து நிமிட நிகழ்ச்சி " அருள்வாக்கு" கிருபானந்த வாரியார் சொன்ன அருள் வாக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது. (ஆமாம், நீங்க கேட்பது எந்த அருள்வாக்கு? )

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது தளத்தில் வெளியான பதிவையே மாற்றி விட்டேன்..

    இரண்டு நாட்களுக்கு முன்னரே தேதி இட்டிருந்தேன்..

    இருப்பினும் , அந்தக் காணொளியில்
    அமங்கல வார்த்தை ஒன்று..

    சற்றே மனதில் உறுத்தல்.. எனவே,

    இப்போது பதிவையே மாற்றி விட்டேன்..

    அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  5. சு நா மீ கதை சுபமாக நடக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  6. நமது தளத்திற்கு மீண்டும் வந்து புதிய பதிவினைக் காணும்படி கேட்டுக் கொள்கின்றேன் ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  7. பதிவிற்கு வந்ததற்கு மகிழ்ச்சி..
    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  8. 'வாக்கு' இன்றும் உண்டு... ஆனால் அருள்...

    பதிலளிநீக்கு
  9. அருள்வாக்கு அழகேசன்கள் என்று நிறைய சகடைகள் உண்டு.

    நாகராஜ் மின்னிதழ் படித்தாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மின்நிலா படித்தார் என்பதே சரி. மின்நிலா 130 ஆவது வார இதழ் கடைசி பக்கம் காண்க.

      நீக்கு
    2. அருளாபுரம்
      அருள்வாக்கு அழகேசன்!..

      கில்லர்ஜி..
      அடுத்த பதிவு தயார் செய்து விடுங்க..

      நீக்கு
  10. அருள் வாக்கு கேட்டதே (நான்) இல்லை.

    எனக்கு இறைவன் பாதங்களைத் தொழுவதைத் தவிர இப்படியான ஈடுபாடுகள் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கஷ்டப்பட்டு யாத்திரைகள் முன்பு சென்றதற்கும் இப்போது செல்வதற்கும் வித்தியாசம் உண்டு. முன்பு இன்னும் இயற்கையோடு ஒன்றி இருந்தவை இப்போது சாலைகள் தங்குமிடங்கள் என்று சில கெட்டும் வருகின்றன. ஆனால் கூடுதல் இடங்களைப் பார்க்க வசதியாக இருக்கு என்பதையும் மறுப்பதற்கில்லை.

    எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டுச் செய்தால் தான் அதன் அருமை சுகம் தெரியும். எளிதாகக் கிடைப்பதற்கு மதிப்பு குறைவுதான்....இப்போது பலருக்கும் எல்லாமே எளிதாகக் கிடைப்பதால் வாழ்க்கையின் பொருளும், பணத்தின் அருமையும் தெரிவதில்லை. குற்றங்கள் பெருகுகின்றன, சமூகம் கெட்டுத் தொலைந்து கொண்டிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பானுமதி கேட்டிருக்கும் அருள்வாக்குக்கு என் மாமியார் தீவிர ரசிகை. பக்தை. அப்படியே அருள் வாக்குச் சொல்லுபவர்களின் கால்களில் விழுந்து விடுவார், சின்ன வயசா இருந்தாலும். கடவுளையே நேரில் பார்த்த மாதிரி உணர்வு பொங்கும். அவங்களை "அம்மா! தாயே! மகமாயி!" என்றே கூப்பிடுவார். ரொம்ப உரிமையாகச் சொல்லுடி மகமாயி! உனக்கு என்ன வேணும்டி மகமாயி என்றெல்லாம் கேட்பார். அவங்க என்ன செய்யச் சொல்றாங்களோ அதை அப்படியே தட்டாமல் செய்வார்.

    பதிலளிநீக்கு
  13. முன்னெல்லாம் காசி யாத்திரை போவதெனில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு போகணும் என்பார்கள். ஏனெனில் திரும்பி வருவது நிச்சயம் இல்லை என்பார்கள். இதனாலேயே நாங்க 2,3 முறை காசி யாத்திரைக்கு எல்டிசி மூலம் ஏற்பாடு பண்ணியும் மாமியார்/மாமனார் வர மறுத்துவிட்டனர். எனக்குத் தெரிஞ்சு திருக்கயிலை யாத்திரை போகலாம் என்பது நம்ம எம்.என்.நம்பியார் மூலம் தெரியும். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு தரம் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் பின்னணியில் திருக்கயிலை தெரிய நம்பியார் படம் போட்டு வெளியிட்டிருந்தனர். உள்ளே அவர் தன்னுடைய அனுபவங்களையும் சொல்லி இருந்தார். அப்போத் தான் இங்கெல்லாம் போகலாம் என்பதே எனக்குத் தெரியும். ஆனால் பின்னாட்களில் நானே போவேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  14. சற்றும் எதிர்பாராமல் போனது கயிலை யாத்திரையும் பின்னர் அஹோபிலமும். அஹோபிலம் ஒரு முறை முன்பதிவு செய்து கடைசியில் என்னால் முடியாமல் போனது. ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முன் பதிவை வைத்துக் கொண்டே அடுத்த முறை பயணத்தில் பங்கேற்கலாம். பணம் திருப்பித் தரமாட்டோம்னு சொன்னதால் அடுத்த முறை ஆறு மாசம் கழிச்சுப் போனோம்.

    பதிலளிநீக்கு
  15. மின் நிலாவுக்கு இந்தப் படம் வந்தது எப்படி?

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கேள்விகளும் அதற்குரிய அனைத்து பதில்களும் நன்றாக உள்ளது.

    அருள் வாக்கு இதுவரை கேட்டதில்லை. நல்லதோ, கெட்டதோ நடக்கிற எதுவுமே நம் வினையின் பயன்கள். அதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.

    யாத்திரைகள் முன்பு கடினம். நானும் காசி யாத்திரை என்ற சொல்லைத்தான் அடிக்கடி கேட்டுள்ளேன்.முன்பு வீட்டின் ஆண்மக்கள் காசிக்கே நடைபயணமாக சென்றவர்கள் உண்டு. இப்போது எங்கு செல்வதற்கும் பணமானது யாத்திரைகளை சுலபமாக்குகிறது.

    எங்கள் மாமியார் அடிக்கடி சொல்வார். அவரின் மாமனார் அப்போது வீட்டில் ஏதாவது பிரச்சனைகள் தரும் கோபத்தில் காசிக்கு நடந்தே சென்று விட்டு வந்து விடுவாராம்.:)))) இப்போது நாம் ரோடில், அல்லது பார்க்கில் நடந்து தணித்துக் கொள்கிறோம். (கோபத்தை) ஹா ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. நாகராஜ் (தற்போது நாகேஸ்வரன்) கதை தெரிகிறது...

    சுந்தரம் மீரா தம்பதியின் மகன் ரயில் பெட்டிக்குள் சிக்கியவன் என்ன ஆனான்?

    கௌ அண்னா, ஹையோ க்ரேசி மோகன் கதை மாதிரி பெயர் கன்ஃப்யூஷன் ஹிஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அருள் வாக்கு எல்லாம் கேட்டது கிடையாது.
    அந்தக் காலத்து பயணம் இந்தக் காலம் நிறைந்த வித்தியாசம் உண்டு. அப்போது சிரமங்கள் அதிகம் அதனால் பக்தியும் கூட இருந்தது இப்போது இலகுவாக கிடைப்பதில் பக்தியும் குறைந்துவிட்டது.
    கதை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  20. அந்தக்காலத்து ஆன்மீக பயணம் மிகவும் சிரமம். போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவுக்கு எல்லாம் சிரமம்.
    இப்போது உள்ள ஆன்மீக பயணம் தனியாக போனாலும், குழுவாக போனாலும் வசதியாக போய் வரலாம். அப்போது நிம்மதியாக கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்தோம். இப்போது எல்லா கோயில்களிலும் கூட்டம் காத்து இருந்து இறைவனை வணங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. கதை நன்றாக இருக்கிறது.
    //நாகராஜ் அவரிடம் மின்நிலா 128 ஆவது இதழை தனக்கு அனுப்பச் சொல்லி, அதைப் பார்த்து, உடனடியாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தான். //

    நாகராஜின் அதிரடி நடவடிக்கையால் பலன் உண்டு என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.

    ,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!