27.5.25

சிறுகதை : ஜோதிடம் - நெல்லைத்தமிழன்

 

ஜோதிடம்

(நெல்லைத்தமிழன்)

 

“நம்ம ஊர் திருவிழாக்கு வரவேண்டியதுதானே.. என்னை மாத்திரம் போகச் சொல்றீங்க”

 

“நீ என்ன தனியாவா போற? உன் கசின்ஸ்லாம் கூட வர்றாங்களே. அப்புறம் என்ன?”

 

“ஆறு நாள். நீங்க இங்க தனியா என்ன பண்ணுவீங்க? பேசாம கூட வந்தாலாவது உங்களுக்கும் பொழுது போகும். உங்களுக்குப் பிடிச்ச உணவை ஹோட்டல்ல சாப்பிடலாம். நீங்கதான் தமிழ்நாடு சாம்பார், தமிழ்நாடு ரவா தோசைனு ஆலாப் பறப்பீங்களே…. இந்தப் பெட்டி வேற மூட மாட்டேங்குது,”  துணிகளை அடுக்கிக்கொண்டே என்னைக் கேட்டாள்.


 

“அதுக்காக?… எனக்கு இன்னும் பத்து நாட்கள் நேரம் சரியில்லை. தனுசு ராசிக்கு ஒரு பெண்ணால் வாழ்க்கை மாறப் போகுதாம். வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுமாம். அதனால எங்கயும் போறதா இல்லை.”

 

“எவனோ ஜோசியம் சொன்னான்னு இப்படி பயப்படறீங்களே.. உங்க ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னாலாவது கொஞ்சம் அர்த்தம் இருக்கும். இவங்க யூடியூப் ஜோசியர்கள். ஒவ்வொரு ராசிக்கும் பலன் சொல்றேன்னு கல்லா கட்டறாங்க. தனுசு ராசி இருக்கற கோடிக்கணக்கானவர்களுக்குமா வாழ்க்கை இந்த பத்து நாட்களுக்குள்ள, ஒரு பெண்ணால மாறும்?”  

 

“உனக்கென்ன தெரியும் இந்த ஜோசியர்களைப் பத்தி. எப்படி புட்டுப் புட்டுச் சொல்றாங்க தெரியுமா? இப்படித்தான் ஒரு ஜோசியர், அமெரிக்காவுல யாரு அதிபரா வருவாங்கன்னு, தேர்தலுக்கு முன்னாடியே கரெக்டா சொல்லிட்டான். எவ்வளவு திறமை பாரு.  இன்னொரு ஜோசியர், அதான் அந்தப் பத்திரிகையின் ஆஸ்தான ஜோசியர், அந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னால, செத்த ஒருத்தன் ஜாதகத்தைக் கொடுத்து எப்போ கல்யாணம் ஆகும் இந்தப் பையனுக்குனு கேட்டதுக்கு டக்குனு சொல்லிட்டாராம், அடுத்த ஜென்மத்துல அவன் பொறந்து அவன் ஜாதகம் என்கிடா வந்தாச் சொல்றேன்னு. கேட்டவங்க அசந்துபோய்ட்டாங்களாம். அவர்லாம் தனுசு ராசிக்காரங்களுக்கு எச்சரிக்கையாச் சொல்லியிருக்காரு. உனக்கு எதுலயும் நம்பிக்கை கிடையாது. திருவிழாவையாவது நல்லா எஞ்சாய் பண்ணிட்டுவா.”

 

“ஃபிரிட்ஜ்ல தோசை மாவும், அடை மாவும் வச்சிருக்கேன். புதுசா மிளகாய்ப்பொடி பண்ணி வச்சிருக்கேன். நைட்ல கூப்பன் போட்ட பையை வெளில தொங்க விட்டீங்கன்னா, காலைல, பாலோ தயிரோ போட்டுடுவான். அதை வாங்கல்லாம் எங்கயும் அலையாதீங்க. இங்க வர்ற காய்கறிக்காரன்டயே காய் வேணும்னா வாங்கிக்கோங்க.”

 

“நீ வேலைக்காரியை வர்றவேண்டாம்னு சொல்லிட்டயா இல்லையா?”

 

“ஒவ்வொரு மாசமும் காசு கொடுக்கறோமில்ல. எதுக்கு அவளை வர வேண்டாம்னு சொல்லணும்? வந்து வீட்டை க்ளீன் பண்ணிட்டுப் போட்டும்.”


“ஐயையோ.. அதெல்லாம் எதுவும் வேண்டாம். பெண்ணாலதான் பிரச்சனை வரும்னு சொல்லியிருக்காங்க. அதுனால நீ வந்த பிறகு வரச்சொல்லிடு.”

 

“அப்போ நீங்கதான் காய்கறிக் குப்பை, மீந்தது என்று எல்லாக் குப்பையையும் காலைல 8 மணிக்குள்ள வெளியில வைக்கணும். இல்லைனா வீட்டுலயே கிடந்து நாறிக்கிட்டிருக்கும்.”


“ஏதோ நான் தனியா இருந்ததே இல்லைங்கற மாதிரிச் சொல்ற.  உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால நான் எப்படி வீட்டைப் பாத்துப்பேன் தெரியுமா? தரைல சாதத்தைப் போட்டால் அப்படியே உட்கார்ந்து சாப்பிடலாம் மாதிரி பளிச்சுனு வீட்ட வச்சுப்பேன். எல்லாம் நான் பாத்துக்கறேன்.”

 

“மார்க்கெட்டுக்குப் போறேன், மாலுக்குப் போறேன்னு வெளில எங்கயும் சுத்தாதீங்க.”

 

“திருவிழாவுக்கே வரமாட்டேங்கறேன். அப்புறம் எதுக்கு வெளில போகப்போறேன். இன்னும் பத்து நாளுக்கு வீட்டுக்குள்ளேயேதான் அடஞ்சு கிடப்பேன்.”

 

“பக்கத்துலதானே அக்கா வீடு இருக்கு. சாப்பாடு செய்ய போரடிச்சதுன்னா, அங்க போய்ச் சாப்பிடுங்க.”

 “ஏய்.. பொண்ணால வாழ்க்கையே மாறிடும்னு ஜோசியன் சொல்லிருக்கான்னு சொல்றேன். திரும்பத் திரும்ப மாட்டிவிடறதுலயே குறியா இருக்கயே. எங்கயும் வெளீல போகமாட்டேன். வீட்டுக்கும் யாரேனும் வந்தால், பொண்ணா இருந்தா கதவையே தொறக்கமாட்டேன். நீ விசாரப்படாம போய்ட்டுவா.”

….……….

….………

..…………

….……….

….……….


'அப்பாடா.. அஞ்சு நாள் ஓடிப்போயிடுச்சு. நாளைக்கு அவ வந்துடுவா.   அப்புறம் நாலு நாள்தானே'


………………..


“நான் சொல்லிட்டுத்தானே போனேன். தினமும் சமையல் குப்பையை வெளீல வைங்கன்னு. உள்ளவே வரமுடியலை. அப்படி நாறுது.”

 

“நான் என்னம்மா பண்ணட்டும். நீ இருந்தா எழுப்பிவிடுவ. காலைல எழுந்துக்க நேரமாயிடுது. அதுக்குள்ள குப்பையை எடுத்துட்டுப் போயிடறாங்க. அதுக்கு அப்புறம் நான் குப்பையை வெளீல வச்சா, எதுத்த வீட்டுக்காரன் கத்த மாட்டானா?”

 

“நாளைக்கு காலைல, இந்த பிரசாதங்களை உங்க அக்கா வீட்டுக்கு கொடுத்துட்டு வந்துடுங்க. நானும் வருவேன். ஆனா வீட்டுல ஏகப்பட்ட வேலை இருக்கு. வேலைக்காரி வேற முனகப்போறா.. வீடு இவ்வளவு குப்பையா இருக்கேன்னு.”  

 

“என்ன இது.. தோசை மாவ ஃப்ரிட்ஜுல வைக்காம வெளியில வச்சிருக்கீங்க. மிஞ்சின சாதத்தைத் தண்ணி ஊத்தி வைக்கவேண்டாமா? வீணாப் போயிடுச்சே.”


“ஜோசியக்காரன் பொண்ணால பிரச்சனைனு சொன்னது உன்னைத்தான் போலிருக்கு. வந்த உடனேயே வறுத்தெடுக்கறயே. இன்னும் நாலு நாளைத் தாண்டணுமே.”

 

“அப்பவே கேட்கணும்னு நினைச்சேன். எந்த ஜோசியன் சொன்னான்? லிங்க் கொடுங்க. எப்போப் பாத்தாலும் ஜோசியம் சொல்லியிருக்குன்னு இவ்வளவு பயப்படுறீங்களே.”


"இதோ..  இந்தா "


“கொடுங்க..    இருங்க பார்க்கறேன்.   அட அசடே.. நீங்க என்ன ராசி?”

 

“தனுசுதான்.”

 

“என்ன நட்சத்திரம்?”


“உத்திராடம் முதல் பாதம். அதான் எனக்கு மனப்பாடமாவே ஆயிடுச்சே. கோயிலுக்குப் போனா அர்ச்சனை பண்ண என்னைத்தானே சொல்லச் சொல்லுவ.”


“அடப்பாவி மனுசா.. ஜோசியர் சொல்றதையும் ஒழுங்காக் கேட்கறதில்லையா? அவரு பூராட நட்சத்திரத்துக்குத்தானே இப்படிச் சொல்லியிருக்கார்.”

45 கருத்துகள்:

  1. சிரித்துவிட்டேன், நெல்லை.

    காமெடி கதை கடைசில மனைவி சொல்றாங்க பாருங்க.....

    ஜோதிடம் - தலைப்பை விட, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு வைச்சிருந்தா?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. உண்மையில் வரவேண்டிய பெரும் பணம் வரவில்லையே என்ற எண்ணத்தில் ஜோதிடர்கள் கூறுவதை இடித்து எழுத முயன்றேன்.

      நீக்கு
  2. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் - இதுல தத்துவமும் அடங்கியிருக்கு மறைமுகமா...

    மனசு இருண்டிருந்தால் எல்லாமே எதிர்மறையாகத்தான் பார்க்கும்னு.

    தமிழ்நாட்டு சாம்பார், ரவா தோசைன்னு ஆலா பறப்பீங்களே!!! - ஹாஹாஹா நெல்லை!!!!!!! ஆராக்கும் இது?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரண்டவன் இல்லை. நிஜமாவே. நடப்பது நடந்தே தீரும், ஆனாலும் நமக்கு இறைவன் நாம்மே துணை என நினைப்பவன் நான்.

      தமிழ் உணவுல இவ்வளவு ஆசை வைத்திருக்கிறோமே. சரவணபவன் கதையாகிடப் போகுதுன்னு மனசு எச்சரிக்குது

      நீக்கு
  3. பரம்பொருள் மீது முழு நம்பிக்கையும், தன்னம்பிக்கையும், இருப்பவர்கள் இந்த ஜோசியம் பக்கம் போகமாட்டாங்க என்பது என் தனிப்பட்டக் கருத்து. நம்பிக்கை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் தெரியுமா? திருமணத்திற்கு ஜோசியம் பார்க்கும் வழக்கமே 1920-30 வரை நம்மிடம் கிடையாது.

      ஜோசியம், ஜோதிடர்களுக்கு மாத்திரமே நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கு (கூடவே பாவங்களையும்) என்பது என் எண்ணம். இதுபற்றி ஒரு நாள் அல்லது ஞாயிறு பகுதியில் எழுதுகிறேன். சுயதம்பட்டமாகிடுமோ என அச்சப்படுகிறேன்.

      நீக்கு
  4. கதை வாசிக்கறப்ப நம்ம நெல்லை இப்படிப் பதுங்கி ரூமுக்குள்ள கட்டில்ல புதைஞ்சு பயந்து படுத்திருப்பது போல கற்பனை வந்துச்சு சிரித்துவிட்டேன். எல்லாம் அந்த தமிழ்நாடு சாம்பார், தமிழ்நாடு ரவா தோசை செய்த வேலை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தோணுது, கதை எழுதறவங்க, அவங்க தனிப்பட்ட ஆசா பாசங்களைக் கதையில் எங்கேயாவது நுழைப்பாங்க என்று.

      உதாரணமா தீவிர ஆன்மீகவாதிகள், நாஸ்திகனை வைத்து ஒரு கதை எழுதும்போது தங்களின் நம்பிக்கையைக் கொஞ்சமாவது கதையில் நுழைப்பாங்க என நினைக்கிறேன்.
      ஜீவி சாருக்குத் தெரியும்.

      நீக்கு
  5. யூகிக்க முடிந்தாலும் ரசிக்க முடிந்தது. இதே கருவில் சற்று பெரியதாக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன், எங்கேயோ போய் விட்டது, மறுபடியும் எழுத முடிகிறதா என்று பார்க்கலாம், ஆனால் உங்களை காபி அடித்தது போல் ஆகி விடுமே..!!//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் (வெங்கடேச்வரன் என்றுதான் ஆரம்ப காலம் தொட்டு எழுதிக்கொண்டிருந்தேன். ஶ்ரீராம் 'ஸ்' வரவேண்டாமோ எனப் போன வாரம் கேட்டதால் இந்த மாற்றம்.

      தனுர் ராசிக்கு அப்படி ஆகும் இப்படி ஆகப் போகிறது என அனேகமா எல்லா ஜோசியர்களும் ஒரு மாதமாக ஆசை காட்டுகிறார்கள். (இதுபோல போன அல்லது அதற்கு முந்தைய வருடம் பணம் கொட்டும்னாங்க. குப்பைதான் அதிகமானது). எனக்கு வரவேண்டிய பெரும் பணம் ஆறு வருடங்களாகவே வரவில்லை.

      இந்த வருடம் ஒரு பெண்ணால் திருப்பம் எனத் தாளிக்கறாங்க. நடைப்பயிற்சியின்போது யோசித்து உடனே எழுதி, இரண்டு முடிவுகளைக் கொடுத்து கேஜிஜி சாரின் ஆலோசனையை யோசித்து, நமக்கு அத்தனை திறன் இல்லை என்பதால் கதையை சிலவற்றை எடுத்துவிட்டு அனுப்பிவிட்டேன்.

      நீக்கு
    2. பானுக்கா நானும், சனி தசை பத்தி எழுதியிருந்தேன் ஒரு சும்மா என் தங்கைகள் ஜோதிடப் பித்துக்கள் முத்துகள் பேசுவதை வைத்து ...எங்கள் தளத்தில் சும்மா அனுபவம் போல அதையே கதையாக மாற்றினால் என்று தொடங்கி வைத்திருந்தேன். நானும் உங்களைப் போலவெ யோசித்து அப்படியே கிடைக்கு

      கீதா

      நீக்கு
    3. பா.வெ. மேடம்... நானே இதைக் காப்பியடிச்சு இன்னொன்று எழுதலாம்னு நினைச்சிருக்கேன். இந்த யூடியூப் ஜோசியர்களுடைய வியாபாரம் தாங்கலை.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. நல்ல நகைச்சுவையுடன் உள்ளது. கடைசியில் சிரித்து விட்டேன். ஜோசியம் பயம் சில சமயங்களில் அனைவருக்கும் வரும் போலும். ஆமாம் மீன ராசிக்குத்தான் இப்படி பெண்ணால் ஒரு கண்டம் வருமென அடிக்கடி மிரட்டுவது பார்த்தேன்./ படித்தேன்.

    சகோதரி கீதா ரெங்கன் சொல்வது போல் கதை படிக்கையில் தமிழ் நாட்டு உணவுகள் அந்த கதா பாத்திரத்தை தங்களுடனேயே நினைவூட்டின. . உங்களுக்கு நன்றாக நகைச்சுவை கதைகள் எழுத வருகிறது. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மிக்க நன்றி.

      மீன ராசிக்குமா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஆம். மீனத்திற்குந்தான். "பெருமாள் உனக்கு தேதி குறிச்சாச்சு" என்றெல்லாம் தலைப்பு வேறு பயம் காட்டும். "நமக்கு நடக்க வேண்டியது நடந்தே தீரும்" என்ற நம்பிக்கை உடையவள்தான் நானும். ஆயினும் நான் வேறு அடிக்கடி கீழே விழுந்து எழுந்து வாழ்க்கை ஓடுகிறது என்னவாக இருக்குமென ஒரு ஆவல் கருதி நம் ராசிக்கு என்னதான் பட்டுள்ளார்கள் என்று பார்த்தால், சனியும், ராகு கேதுவும் அவரவர்கள் வீட்டை மாற்றுவது நம் வயிற்றை கலக்குவது போறாதென்று, இவர்கள் போடும் தலைப்பு வேறு வயிற்றை கலக்கும்.

      ஆனாலும் எங்கள் அப்பா ஒரு நல்ல ஜோசியர் என்பதால், எனக்கும், என் ரத்தத்தோடு ஜோசியம் பார்க்கும் ஆவல் சற்று இருக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கள் அப்பா சொல்லும் ஜோசியங்கள் எங்கள் குடும்பத்திலும், மற்றும் வெளியுலக வட்டாரத்திலும் நிறைய (நல்லதும், நல்லவையில்லாததும்) பலித்துள்ளதை அனுபவப்பூர்வமாக கண்டவள் நான். இதைப்பற்றிய நிகழ்வுகளைக் கூட சிலவற்றை எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. என் கருத்தில்,

      வாழ்க்கை ஓடுகிறதே ...

      போட்டுள்ளார்கள்.

      என்பதெல்லாம் சரியான வார்த்தைகள்.

      சிறு வார்த்தைப் பிழைகள் அந்த வரிகளின் அர்த்தத்தையே மாற்றி விடும் (இந்த ஜோதிட பகுதிகளில் அவர்கள் தலைப்பிட்டு வருவது போல்.) அதனால் மீண்டும் வந்து சிறு திருத்தம் அளிக்கிறேன். . நன்றி.

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன் மேடம், நிறைய ஜோசியக் காணொளிகளைப் பார்க்கிறேன். அவங்கதான் அத்தாரிட்டி மாதிரி சும்மா அடிச்சுவிடுவாங்க. நமக்கு அவங்கமேல நம்பிக்கை, பயபக்தி வர, காவி வேட்டி, ஐருத்திராட்சக் கொட்டை, ஸ்படிக மாலைகள், நெற்றியில் சந்தனம் விபூதிப் பட்டை குங்கும்ம், பின்புலத்தில் மேரி மாதாதவிர அனைத்து கடவுளர்கள் படங்கள், ஊதுபத்தி விளக்கு சகிதம் இருப்பாங்க. அப்படியும் காணொளி பாக்கறவங்க நம்பாம இருந்திடப் போகிறாங்களே என்று, பிரம்மஶ்ரீ, ஜோதிடப் புலி, என்று என்னென்னவோ டைட்டில் வச்சுப்பாங்க, சிங்கமுக சேரில் உட்கார்ந்துப்பாங்க.

      உதயகீதம் படத்துல வருகிற மாதிரி மரத்தடிக்கு மரத்தடி (இந்தக் காலத்துல நாட்டுக்கு நாடு, அந்தக் கால பழனி காளிமுத்து சித்த வைத்தியர் செய்ததுபோல) பிராஞ்சு தொடங்கிடுவாங்க.

      போதாக்குறைக்கு, காணொளில சொல்லவரும் விஷயம் இரண்டாக இருந்தாலும், தலைப்பை உடனே படித்தாக/பார்த்மாக வேண்டும் என்று எண்ணும்படியாக, இந்தத் தவறை இந்த லாசிக்கார்ர்கள் செய்துவிடாதீர்கள், இந்த ராசிக்கார்ர்கள் திருப்பதி பக்கமே செல்லக்கூடாது, இந்த ராசிக்கு பணமழை என்று எண்ணம்போல தலைப்பு வைப்பாங்க.

      இதுபற்றியே ஒரு பதிவு எழுதறேன்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    படங்கள் கதைக்குப் பொருத்தமாக அட்டகாசம். படங்களுடன் கதை படிக்கையில் அப்புசாமி, சீதா கதைகள் படித்த சுவாரஸ்யம் வந்தது. சூப்பர். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதைத்்தனியாக்க் குறிப்பிடணும் என நினைத்தேன். கதை எப்படி இருக்கோ இல்லையோ, முடிந்தவரை நல்ல படங்களைக் கோர்க்கணும் என நினைக்கும் கேஜிஜி சார் (னு நினைக்கிறேன்) பாராட்டப்படவேண்டியவர்.

      நீக்கு
    2. பாராட்டுக்கு உரியவர் நான் இல்லை.

      நீக்கு
    3. கதைப் படங்கள் சூப்பர். ஸ்ரீராம்?

      நீக்கு
    4. ஶ்ரீராம்... படங்களைக் கோர்த்து கதையைச் சிறப்பித்ததற்கு நன்றி. ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க.

      நீக்கு
    5. படங்கள் கோர்த்தவர் கீதா ரெங்கன் என்று ஸ்ரீராம் செய்தி அனுப்பியுள்ளார்.

      நீக்கு
  9. அட்டகாசம். உண்மை அன்றி வேறில்லை என்று ஒரு பிரமாணம் கொடுத்திருக்கலாம். சென்ற கோவிட் காலத்தில் பாஸ் ஆசுபத்திரியில் இருந்தது நினைப்பு வந்தது. படங்கள் பொருத்தம். ஏ பி உங்களை போன்றவர்களால் எப்படியோ தினசரி ஒரு பதிவு என்று மாற்றமில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். மிக்க நன்றி. பலர் எழுதுவதற்கும் எபி இடம் கொடுக்கிறதே. அதைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  10. ஒரு வருத்தமான, துயரமான செய்தி. 

    கீதா சாம்பசிவம் அக்காவின் கணவர் திரு சாம்பசிவம் இறைவன் அடி சேர்ந்தார்.  அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், அக்காவுக்கும் அவர் மகன், மகள் மற்றும் குடும்பத்தாருக்கும் இந்த துயரமான நேரத்தைத் தாங்கும், கடக்கும் மன வலிமையை இறைவன் அளிக்கப் பிரார்த்திக்கிறோம்.  

    உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா. மிக வருத்தமான செய்தி. செய்தியை படித்ததும் அதிர்ச்சியில் கண்களும், மனமும் கலங்கி விட்டன. கீதா சாம்பசிவம் சகோதரிக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வது போல சகோதரியின் கணவர் திரு. சாம்பசிவம் அவர்களின் இழப்பை தாங்கிக் கொள்ள, சகோதரிக்கும், அவர் மகன், மகள் குடும்பத்திற்கும் இறைவன் மன வலிமையை தர வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      உங்கள் துயரத்தில் நாங்களும் மிக வருத்தத்துடன் பங்கு கொள்கிறோம் சகோதரி.

      நீக்கு
    2. மிகவும் வருத்தமான செய்தி எனக்கு. சாம்பசிவம் சார் அவர்கள் மிக அருமையாகப் பேசக்கூடியவர்கள், உதவும் எண்ணம் கொண்டவர்கள். கீதா சாம்பசிவம் மேடம் பற்றி நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நேற்றுத்தான் இருவரைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தேன், திருவரங்கம் எப்போது போகப்போகிறோம், காணும் சந்தர்ப்பம் வரப்போகிறது என்று (துளசி டீச்சரின் அம்மா மண்டபப் பதிவைப் படித்தபோது).

      மகன் வந்திருக்கிறாரா இல்லை வரப்போகிறாரா, எப்போது என்று தெரியவில்லை. இந்தச் சமயத்தில் கீசா மேடத்திற்கு போன் பண்ணி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.

      சாம்பசிவம் சாரின் நினைவுகள் எப்போதும் இருக்கும். சிலர் (நம் முனைவர் ஜம்புலிங்கம் சார்,.... ) பிறருக்கு உதவுவது என்றாலோ விவரங்கள் கூறுவது என்றாலோ உடனே செய்யும் க்ணம் கொண்டவர்கள்.

      நீக்கு
    3. மகன் ஆன் த வே. மகள் அமெரிக்காவில் இருப்பதால் .....

      கீதா

      நீக்கு
  11. ஆழ்ந்த அனுதாபங்கள். மிகவும் துக்ககரமான செய்தி. துக்கத்தை தாங்கக்கூடிய மனவலிமையை கீ சா மாமிக்கு ஆண்டவன் அருள்வாராக.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. சாம்பசிவம் சார் நலம் பெற்று வருகிறார்கள், பூரண நலம் பெற்று தாளகத்திற்கு கறிகாய்கள் வாங்கி வந்து பழைய மாதிரி கொடுத்து வித விதமாய் சமையல் குறிப்புகள், மற்றும் பதிவுகள் போட வேண்டும் கீதா என்று வேண்டிக் கொள்கிறேன்.

    என்று நேற்று கேட்டு கொண்டேன் கீதா சாம்பசிவம் அவர்களிடம்
    அதற்குள் இன்று இப்படி செய்தி வந்து விட்டதே!
    ஆழ்ந்த இரங்கல். இறைவன் கீதா சாம்பசிவம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், தேறுதலும் தரவேண்டும், மன வலிமையை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம், நேற்றே குறிப்பிடணும் என நினைத்தேன், அது மீள்பதிவு எனத் தோன்றியதென்று. வெளியில் செல்லும் விதமாக அவரது உடல்நிலை இன்னும் சரியாகவில்லை என்றே நினைத்தேன்.

      நீக்கு
    2. மீள் பதிவு என்று தெரிந்து தான் சொன்னேன் நெல்லை.

      எப்போதும் சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வருவது, இன்று என்ன சமைப்பது என்று மெனு சார் தான் சொல்வார்கள் என்பார் கீதா.

      அதனால் சார் பூரண நலம் பெற்று மீண்டும் அவர் காய்கள் வாங்கி வந்து சமையல் செய்ய சொல்ல வேண்டும், கீதா புதிதாக சமைத்து சமையல் குறிப்புகள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

      முன்பு விசாரித்த போது அவரே வாக்கர் வைத்து கொண்டு நடக்கிறார் என்றார்கள் படி படியாக முன்னேற்றம் அடைந்து இருப்பார் என்று நினைத்தேன்.

      நானும் பேசினேன் நேற்று நன்றாக இருந்தார்கள், கேட்டு வாங்கி உண்வு உண்டார்கள் என்று தான் சொன்னார்கள், தெளிவு கொடுத்து இரவு தூக்கத்தில் எடுத்து கொண்டு விட்டார் இறைவன்.

      எதுவும் நம் கையில் இல்லை .

      நீக்கு
  13. எதிர்பாராத நிகழ்வு. நன்றாகி வருகிறார் என்று இருந்த நிலையில் இப்படி....அக்காவுமே எதிர்பார்க்கவில்லைதான்....அக்காவுக்கு மனவலிமை உண்டு. இந்தத் துக்கத்தையும் கடந்து வர மனவலிமை கிடைக்கப் பிரார்த்திப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்ககிட பேசினேன். மனவலிமை வேறு. திடீர் இழப்பு தரும் அதிர்ச்சி, வருத்தம் வேறல்லவா? எந்தவித அறிகுறிகளும் இல்லாமல், திடுமெனப் பிரிவது பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும். எங்களின் பிரார்த்தனைகளும் கீதா சாம்பசிவம் மேடத்திற்கு.

      நீக்கு
    2. எனக்கும் மனசு இன்னமும் ஆறவேயில்லை. ஒரே சலனமாக இருக்கிறது.

      / மனவலிமை வேறு. திடீர் இழப்பு தரும் அதிர்ச்சி, வருத்தம் வேறல்லவா? /

      உண்மை. செய்தி படித்ததிலிருந்து மனம் குமைகிறது. வேலைகள் ஓடவில்லை. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இந்த கடுந்துயரத்தை தாங்கும் சக்தியை இறைவன் கொடுத்தருள வேண்டுமென பிரார்த்தனைகள் செய்தபடி உள்ளேன்.

      நீக்கு
  14. மதுரைக்கு எங்கள் வீட்டுக்கு வந்து போன சமயம் சார் பேசியது நினைவுகளில் இருக்கிறது. படம் எடுத்து கொள்ளலாமா என்று கேட்ட போது எடுத்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள், பதிவில் போடலமா படத்தை என்று கேட்ட போது "வயதாகி விட்டது பதிவில் படம் போட்டால் என்ன போட்டுக் கொள்ளுங்கள்" என்று சம்மதம் தெரிவித்தார்கள்.

    "அன்பருடன் ராமர் வந்தார்" என்று பதிவு போட்டது நினைவுகளில் வந்து போனது.
    7424 பேர் படித்த பதிவு அது.

    https://mathysblog.blogspot.com/2016/06/blog-post_16.html

    மீண்டும் அந்த பதிவை பார்த்து படித்து வந்தேன்.

    என் கணவரும் , சாரும் உரையாடியது கொடைக்கானல் போக போகிறோம் என்ன இடங்கள் பார்க்கலாம் என்று சாம்பசிவம் சார் கேட்டபோது பூம்பாறை முருகன் பார்க்கலாம் அழகு முருகன் என்று என் கணவர் சொன்னார்கள்.

    முருகன் கோயிலுக்கு போய் வந்து அவர்களும் பதிவு போட்டது நினைவுகளில் வந்து போகிறது.

    திருச்சியில் வீட்டுக்கு வாருங்கள் என் பேரை விட கீதாமாமி பேரை சொன்னால் எல்லோருக்கும் தெரியும் என்று சொன்னது எல்லாம் மனதில் வந்து போகிறது.

    எங்களால் போக முடியாமல் போய் விட்டது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவை இப்போது பார்த்தேன். முதலில் சாம்பசிவம் சார் படத்தையும் நான் எழுதும்போது போடலாமா இல்லை கீதா சாம்பசிவம் மேடத்திடம் கேட்டுக்கொள்ளணுமா என்று யோசித்தேன். நீங்க போட்டுட்டீங்க. அதனால நானும் படத்தை இணைத்துவிடுவேன்.

      நீக்கு
  15. சாம்பசிவம் சாரின் மறைவைக் கேள்விப்பட்டு மிகவும் மன வருத்தமுற்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சோகத்தைத் தாங்கும் வல்லமையை சகோதரிக்கும் அவர் குடும்பத்திற்கும் இறைவன் அருள பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  16. நெல்லை உங்கள் கதை நன்றாக இருக்கிறது. நல்ல நகைச்சுவை கதை.

    எனக்கு பாக்கியம் ராமசாமியின் கதை காதாபாத்திரம் நினைவுக்கு வந்தது, சீதாமாமி, அப்புசாமி தாத்தா.

    ஆனால் கீதா அழகாய் இளமையான கதாபாத்திரங்களை கண் முன் கொண்டு வந்து விட்டார்.

    இப்போது யூடியூப் வீடியோக்கள் தலைப்பு படிக்காமலே இப்படி பீதியை கிளப்புகிறது.
    அதை அழகாய் கதை வடிவம் கொடுத்து விட்டீர்கள்.

    நட்சத்திரத்தைமாற்றி பார்த்து பட்ட அவஸ்தைகள் சிரிப்பு வந்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம். கீதா ரங்கன்(க்கா) அருமையான படங்களைக் கோர்த்திருக்கிறார்.

      இப்போல்லாம் நிறைய யூடியூப் வீடியோக்கள் கலவரமூட்டும் தலைப்பை வைக்கறாங்க. நன்றி

      நீக்கு
  17. ஹா...ஹா.... மனைவி குண்டைப்போட்டு விட்டாரே :)
    "பூராட நச்சத்திரத்துக்குத்தான்." முடிவு ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!