12.8.26

டூரிஸ்ட் இடங்கள், பிரபல கோயில் நகரங்கள், போன்றவற்றில் உருப்படியான ஹோட்டல்களே இருப்பதில்லையே. ஏன்? + சரோஜாதேவி பகுதி 11

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன் : 

1 அரசியல்வாதிகள் அவங்க ஆட்சி செய்யும்போது அயோக்கியர்களாகவும் பிறர் ஆட்சி செய்யும்போது உத்தமர்களாகவும் பேசுவது ஏன்? சமீப உதாரணங்கள் கேள்வித்தாள் கசிவு, தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என இப்போது பேசும் ஸ்டாலின். 

# தற்காலத்தில் அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். " நீ மட்டும் என்ன செய்தாய் ? இதுவேதானே " என்பது அதன் பிரதான‌விசேஷம்.‌

& அரசியல்வாதி என்ற ஒரு வார்த்தை போதும் வார்த்தை மாறுபவர்கள் என்பது தெரிந்துகொள்ள! 

2 பெண்கள் தங்களுக்குப் பிடித்த உணவை செய்கிறார்களா இல்லை பெரும்பாலும் ஹோட்டல் நடத்துபவர்கள் செய்வதுபோல கணவன் குழந்தைகள் மாமியார் மாமனார் என அவர்களோட விருப்பத்திற்காகப் பண்ணி அதையே தங்களுக்குப் பிடித்ததாக எண்ணிக்கொள்கிறார்களா?

# தாங்கள் நன்றாகச் செய்யும் பலவற்றையும் செய்து எல்லாரையும் "பழக்கி" விடுகிறார்கள்.‌

3 நல்ல டூரிஸ்ட் இடங்கள், லட்சம் பேர் போகும் கோயில் நகரங்கள், போன்றவற்றில் உருப்படியான ஹோட்டல்களே இருப்பதில்லையே. என்ன காரணம்?

# எது செய்தாலும், அது எவ்வளவு மோசமானாலும் அத்தனையும்  விற்றுப் போகும் என்பதால்தான்.

& டூரிஸ்ட் இடங்களில் உள்ள ஹோட்டல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  கோவில் பக்கத்தில் உள்ள ஹோட்டல் = அது ஹோட்டல் நடத்துபவர்களுக்கு கடவுள் இட்ட சாபம். ' இங்கே பாரு, இந்தத் தலத்துக்கு வருபவர்கள்  எனக்காக வருபவர்கள் - அதை உனக்காக வருபவர்களாக மாற்றாதே - அதை மீறி நன்றாக எல்லாம் செய்தால், உன் வியாபாரத்தை கெடுப்பேன்' என்று சொல்லி சாபம் கொடுத்திருப்பார்! 

4. என்னுடைய கணிப்பு, ஒரு பொருளுக்கு அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் வந்தால், பொருள் சுத்த வேஸ்டாக இருக்கும் என்பது. அல்லது 10 பைசா பொருளை 5 ரூபாய்க்கு விக்கறான்னு நினைப்பேன். உங்கள் எண்ணம் என்ன?

# முற்றிலுமாக அப்படியல்ல.  சில பொருட்களை வேண்டுமென்றே குறைந்த விலைக்கு ஆரம்பத்தில் மிக அதிக விளம்பரத்துடன் விற்று போட்டியாளர்களை கூண்டோடு அழித்து விடுவதும் ஒரு வியாபார உத்தி.

5. குழந்தைக்கு மாட்டுப்பால் நல்லது என்று சொல்றாங்களே. அப்போ கன்றுக்கு பால் வேண்டாமா? நாம் அதீதமா பால் சாப்பிட்டா கால்சியம் வரும் அது வரும் இது வரும்னு ஏமாற்றுகிறோமா?

# காட்டுப் பிராணியாக இருந்த மாடு வீட்டுப் பிராணி ஆன பிறகு அதன் உணவு முறையும் அதன் பால் சுரக்கும் அளவும் பெருத்த மாற்றத்துக்கு உள்ளானது என்பதால் இப்பொழுது நாம் பால் அதிகம் சாப்பிடா விட்டால் கன்றுக்கு மட்டுமல்ல,  மாட்டுக்கும் அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

6. 'நான் சொல்றேன்.. இந்த டூத் பேஸ்டுதான் நல்லது', 'நான் சொல்றேன் இந்த ஹேர் ஆயில் உறுதி செய்யப்பட்டது' என்றெல்லாம் டாக்டர் மாதிரி கோட் போட்டுக்கிட்டு விளம்பரத்துல வர்றாங்களே.. இவங்க போலி டாக்டரா? இல்லை அந்தப் பொருளை இருபது ஆண்டுகள் ஆய்வகத்துல சோதனை செய்திருக்காங்களா? எப்படி அரசு இந்த போலி டாக்டர் விளம்பரங்களை அனுமதிக்குது?

# இப்போதிருக்கும் சட்டங்கள் கெடுதல் விளைவிக்காத அளவுக்கு விளம்பரங்கள் சாமர்த்தியமாக அமைக்கப்படுகின்றன.

& சோதனை எல்லாம் ஒன்றும் செய்திருக்கமாட்டார்கள் என்று நூற்றுக்கு 90 பேர்கள் சொல்கிறார்கள். நீங்க வேண்டுமானால் நூறு பேர்களைக் கேட்டுப்பாருங்கள்! 

= = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


பேர்ல் ரவுண்டபவுட் பற்றி எழுதும்போது இந்தப் படத்தையும் பகிரத் தோன்றியது. இதற்கு முன்பு நின்றுகொண்டு நாங்கள் எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். பிற்காலத்தில் இது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று நினைத்திராத சமயம் அது. அதன் மீது அரசுக்கு எவ்வளவு கோபம் என்றால், அந்தப் படத்துடன் கூடிய நாணயத்தைக்கூட அரசு மாற்றிவிட்டது. இப்போதைய தலைமுறைக்கு அப்படி ஒரு ரவுண்டபவுட் இருந்ததே தெரியாது. 


எனக்கு என் அப்பாவை ரொம்பவே பிடிக்கும். (நல்லா அவர்கிட்ட அடிலாம் வாங்கியிருக்கேன்) ஆனாலும் அவருக்கு என் மீது தனிப்பட்ட அன்பு உண்டு (இந்தப் பய எதுக்கும் லாயக்கில்லாதவனாகவே இருக்கானே... இவன் எப்படிப் பிழைக்கப்போகிறான் என்ற எண்ணத்தினால் தோன்றிய அன்பாகவும் இருக்கலாம்). 

2000ல், என் சகோதரன் சௌதியில் வேலை பார்த்துவந்தான். அப்போ என்னிடம், அப்பாவை பஹ்ரைன் கூட்டிவாயேன், நாங்களும் வந்து பார்க்கிறோம் என்றான் (சௌதிக்கு வரவழைப்பது மிகக் கடினம்). அப்போது எனக்கு செலவுக்கணக்கு பார்க்கும் வழக்கம் அதிகம். அதனால் முயற்சி செய்யவில்லை. பிறகு காசைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படாத நிலை வந்தபோது என் அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் இனிமேல் நான் விமானத்தில் அவ்வளவு நேரம் பயணிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அப்பா மறைந்த அடுத்த வருடம் அம்மாவை பஹ்ரைன் கூட்டிவந்தேன் (முதல் இரண்டு முறை, நான் சென்னை வந்து, விமானத்தில் கூட்டிவருவேன். திரும்பச் செல்லும்போது கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு வருவேன். அப்படி என் நிலைமை இருந்தது). அம்மாவை என்னுடைய காரில் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றது என் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.

= = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 10: ராபின்ஹூட் நாநா ! 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 11 : " நாநாவின் திட்டம் : MCEL 01

" இரண்டு மூன்று நாட்கள் இங்கே தங்குவதற்கு முன்னேற்பாடாகத்தானே வந்திருக்கே?" என்று கேட்டான் நாநா. 

 " ஆமாம். ஆஸ்பத்திரிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்ததால மாற்று டிரஸ், லாப்டாப் எல்லாம் கொண்டு வந்தேன். இரு கார் டிக்கியிலிருந்து எல்லாத்தையும் கொண்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு சென்றான் பாபா. 

அவற்றைக் கொண்டு வந்ததும், " நீ நம்ம கெஸ்ட் ரூம்ல எல்லாத்தையும் வச்சுகிட்டு சௌகரியமாக தங்கிக்கோ" என்றான் நாநா. 

" டின்னருக்கு என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று சொல். நான் அறுஷ்காவுக்கு மெசேஜ் அனுப்பி வரவழைத்துவிடுகிறேன்." 

" அப்போவே கேட்க நெனச்சேன் - அறுஷ்கா ஆக்சுவலா எங்கே வேலை பார்க்கிறாங்க? முரளீஸ் கஃபேயிலா அல்லது இங்கேயா?"

" முரளீஸ் கஃபே, அங்கே வேலை பார்ப்பவர்கள், அறுஷ்கா, எக்ஸ்பர்ட் ஏகாம்பரம், கணபதி ஃபார்மசி ஆள்,  நீ, நான் இன்னும் நிறைய பேர் எல்லோரும் பனானா எண்டர்பிரைசஸ்லதான் வேலை பார்க்கிறோம். முழு விவரங்கள் அப்பப்போ நேரம் வரும்போது சொல்கிறேன்" என்றான் நாநா. 

" ஒரே மர்ம தேசமாக இருக்கே" என்றான் பாபா. 

******. *****

மறுநாள் காலை நாநா " ஆனந்தின் அம்மா அப்பா இருவரும் நாளை மறுநாள் இங்கே வருவதாக சொல்லியிருக்காங்க. " என்றான். 

" அப்போ நான் நாளை மாலைக்குள் வீட்டுக்குப் போய் ஜயராமனிடம் ஆனந்த்தின் அப்பா அம்மா, வீணாவையும் அவரையும் பார்த்துப் பேச மறுநாள் மாலை வருவார்கள் என்று சொல்கிறேன்" என்றான் பாபா. 

" அதுதான் சரி. நான் அவர்களை அழைத்துக் கொண்டு நாளை மறுநாள் உன் வீட்டுக்கு வருகிறேன். ஜயராமன் வீட்டுக்கு நாம் நான்கு பேரும் போவோம்" என்றான் நாநா. 

" பாவனா ஆனுவல் ரிப்போர்ட் பாபாவுக்கு அனுப்பிட்டியா?"

"அனுப்பிட்டேன் பாஸ்" 

" அப்படியா? நான் லாப் டாப்ல பார்த்து திப்பிசம் ஏதாவது இருக்கான்னு ஒரு மணி நேரத்தில் சொல்றேன்" என்றான் பாபா. 

முதல் வேலையாக ஜயராமனுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினான். 

" வணக்கம் சார். என் பார்ட்னர் தன்னுடைய அமெரிக்க ஃப்ரெண்ட் ஆனந்துக்கு வீணா ஃபோட்டோவை நேற்று அனுப்பியிருந்தான். ஆனந்த் அதைப் பார்த்து தனக்கு வீணாவைப் பிடித்திருப்பதாக செய்தி அனுப்பியுள்ளார். ஆனந்தினுடைய பெற்றோர்கள் கோவையில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உங்களைப் பார்க்க இரண்டு நாட்கள் கழித்து வர இருக்கிறார்கள். நான் நாளை மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிடுவேன். நெற்றிக் காயம் சரியாகி வருகிறது. நாளை முழுவதுமாக சரியாகிவிடும். 
மற்ற விவரங்கள் நாளை மாலையில் சொல்கிறேன் " 

பிறகு பாவனா அனுப்பிய ஆனுவல் ரிப்போர்ட்களை நிதானமாக ஆழமாக ஆராய்ந்தான். 

*"** **** 
பாபா, நாநாவிடம் சொன்னான்: 
"ஆடிட்டர் ரிப்போர்ட்களை ஆராய்ந்ததில் சில பாயிண்டுகள் கிடைத்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்று - கடந்த வருட ரிப்போர்ட்டில் இருந்த unclaimed funds இந்த வருட ரிப்போர்ட்டில் வெகுவாகக் குறைத்து காட்டியுள்ளார்கள். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் ஒரே வருடத்தில் எப்படி குறைந்தது என்று தெரியவில்லை" என்றான். 

" சரி வா நாம் இருவரும் இன்றைக்கு அந்த பாங்கிற்குப் போவோம். நீ முதலில் போய் மேனேஜரைப் பார்த்து அவரிடம் நீ ப்ரைவேட் டிடெக்டிவ் என்றும் ஒரு க்ளையண்டுக்காக பழைய டெப்பாஸிட்தாரர் ஒருவர் பற்றி சில தகவல்கள் வேண்டும் என்றும் சொல். சமயத்திற்குத் தகுந்தவாறு கற்பனைகளை சமயோசிதமாக உபயோகித்து சமாளிக்க கற்றுக் கொள்ள உனக்கு ஒரு சந்தர்ப்பம். அவர் எந்தெந்த விஷயங்களுக்கு தடுமாறுகிறார் என்று நோட் பண்ணு. எங்கேயாவது மாட்டிக்கொள்வோம் என்று தோன்றினால் அருவமாகி எஸ்கேப் ஆகிவிடு. பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றான் நாநா. 

" சரி. வெற்றிகரமாக விஷயத்தை முடிப்போம். இதன் மூலம் நாம் சாதிக்க வேண்டியது என்ன?" 

" பாங்க் மேனேஜரின் வீக் பாயிண்ட் என்ன என்று தெரிந்துகொள்வது. " 

" அதை வைத்து அவரை ப்ளாக் மெயில் செய்யப் போகிறாயா?" 

" சேச்சே அப்படி எதுவும் செய்யமாட்டேன். அவருடன் பேசி, நம்ம முரளீஸ் கஃபே எக்ஸ்பான்ஷனுக்கு பாங்க் லோன் கிடைக்கும்படி செய்துவிடுவேன். லோனுக்கு நான் கேரண்டி கையெழுத்துப் போடுவேன்." 

" நேரடியாகவே லோன் கேட்டு வாங்கலாமே?" 

" அங்கேதான் நீ பாங்க் மேனேஜர் போன்ற ஆட்களைப் புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைத்தால்தான் லோன் கிடைக்க சிபாரிசு செய்வார்கள்" 

" சரி . பார்ப்போம். கிளம்பு " என்றான் பாபா. 

(தொடரும்) 

9 கருத்துகள்:

  1. ஹோட்டல் என்றாலே உடலுக்கு தீங்கு விளைவிக்கிற இடம். நம் knowledgeக்கு தெரியாத அறியாதவர்கள் சமைக்கிற இடம். Food poison என்பதெல்லாம் இப்பொழுது சகஜமாக இருக்கிறது. இதில் உருப்படியான, உருப்படியில்லத என்ற பாகுபாடெல்லாம் உண்டா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலும் இருக்கிறது. பொதுவாக லாரிக்கார்ர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் சாப்பிட மாட்டார்கள். இந்த இந்த இடங்களில் சாப்பிட்டால் வயிறு பாதிக்காது என்று அறிந்து வைத்திருப்பார்கள்.

      நீக்கு
  2. அரசியல்வாதிகள், அவங்க -- என்று அன்னியப்பட்டு விலகிப் பேசுவதே ஒரு அரசியல் தானோ? நமக்கு வேண்டப்பட்ட ஆளும் தரப்பினர் இந்த பட்டியலில் வராதவராத உத்தமர்கள் போல நினைக்கிற அளவுக்கு நாம் அறியாமையில் உழல்கிறோமா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... எத்தனையோ அரக்கர்கள் கூட்டம் இருந்தாலும் நமக்கு சட் என ஒரு சிலருடைய பெயர்கள்தாம் நினைவுக்கு வரும். ஊழலின் ஊற்றுக்கண், தீயசக்தி, மோசமான அரசியல்வாதி என்றால் யாருக்காவது காமராஜர், பக்தவத்சலம் நினைவு வருமா? அரசியலில் இருப்பதால் அவர்களும் சில தவறுகள் செய்திருப்பார்கள்... காமராஜர் அவரை அறியாமலேயே சர்வாதிகாரம் குடும்ப அரசியலுக்குத் துணை போனது போல.

      எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, அவரைப் போல் வராது இவருடைய எழுத்து எனக்கு உயிர் என்று சொல்வதால், மற்றவர்கள் சரியாக எழுத்த் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்ள முடியுமா?

      நம் கருத்து விநோதமா? தவறா என்பதைப் பொதுக் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும்.

      நீக்கு
  3. "ஒரே மர்மத் தேசமாக இருக்கிறதே. ." என்றான் பாபா.
    கதையை அருமையாகக் கொண்டு போகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. சரோஜாதேவி --- தொடர்கதை என்ற தலைப்பில் 'சரோஜாதேவி' என்ற வார்த்தையை மட்டும் கொட்டை எழுத்தில் போடுங்கள். முடிந்தால் கலரில்.
    ஃபேஸ்புக் அறிமுகத்திலும் அப்படியே. அந்த வர்த்தைக்கு இருக்கு ம் கவர்ச்சியே அலாதி தான்!.

    பதிலளிநீக்கு
  5. முன்னோர்கள் நல்லாசி வழங்குவார்களாக
    இன்று ஆடி அமாவாசை ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!