எங்கள் B+ செய்திகள்.
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
=======================
வாஷிங்டனில் சுத்தமான இருபத்திரண்டு கேரட் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாவைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று செய்தி சொல்கிறது தினமணி. இது போன வாரமே வந்திருக்க வேண்டிய செய்தி விட்டுப் போனது!
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்திச் சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது திரவத் தங்கத்தை உருவாக்கக் கூடிய 'கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்' என்ற பாக்டீரியவைக் கண்டு பிடித்துள்ளனர். இதில் தங்கக் குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்கக் குளோரைடை இந்த பாக்டீரியவுக்கு உணவாகச் செலுத்த, ஒரு வாரம் கழித்து தங்கக் குளோரைடு திடத் தங்கமாக மாறியிருந்ததாம்.
======================
டிரைவர்கள் வண்டி ஒட்டிக் கொண்டே செல்ஃபோன் பேசுவதால்தான் விபத்து நடக்கின்றது என்று சொல்கிறார்கள். அப்படிப் பேசுபவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மேன்ட்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த - ஆமாம், பள்ளிதான்! - மாணவிகள் மோனிஷா, ஹரிஷ்மா, (11 ஆம் வகுப்பு)மாணவர் எதிராஜ் (12 ஆம் வகுப்பு).இவர்கள் கண்டுபிடித்துள்ள 'ஓட்டுனர் கைப்பேசித்தடை ஒலிப்பான்' செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சின் அலையின் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். எஞ்சின் அணைக்கப் பட்டால் மட்டுமே ஒலி எழுப்புவதை நிறுத்துமாம். (தினமணி)
===============
விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்குப் போகும் இந்நாளில் தகப்பானாரின் வற்புறுத்தலுக்காக பொறியியல் மெகானிகல் எஞ்சினியரிங் படித்து, வேலைக்குப் போகத் தொடங்கி, அப்புறம் விவசாயத்துக்குத் திரும்பியிருக்கிரார்கோவை கே ஜி சாவடியைச் சேர்ந்த ஆர் விஜயகுமார். ஜி டி நாயுடு ஊரான கலங்கல்தான் இவரது ஊருமாம். கலங்கலில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்ததால் கே ஜி சாவடிக்கு அருகில் முருகன் பத்தி என்ற ஊரில் பதினைந்து ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யும் இவர், தமிழகத்தின் கடும் மின்வெட்டால் பாதிக்கப் பட்டு ஐந்தரை லட்சம் செலவு செய்து சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து விவசாயம் செய்கிறார். சோலார் பேணல் வாங்க அரசாங்கம் முப்பது சதவிகிதம் மானியம் தரும் என்று சொன்னதை நம்பி அலைந்ததில் அவர்கள் சொல்லும் மாடல்தான் வாங்கியிருக்க வேண்டும் என்ற கண்டிஷன் பார்த்து, ஏற்கெனவே வேறு கம்பெனி மாடல் வாங்கியிருந்ததால், மானியம் தேவை இல்லை என்று திரும்பி விட்டாராம். இப்போது இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணீர் வருகிறது என்பதோடு உச்சி வெயிலில்தான் அதிகம் தண்ணீர் இறைக்கப் படுகிறதாம். (தினமணி கதிர்)
==============
சென்னை ராஜன் கண்மருத்துவமனையின் தலைவரும் மருத்துவ இயக்குனருமான டாக்டர் மோகன் ராஜன். பல நவீன கண் மருத்துவ சிகிச்சை உபகரணங்களுடன் ஒரு வேனை உருவாக்கி கிராமம், கிராமமாக, வீடு வீடாகச் சென்று கண் மருத்துவம் பார்க்கிறார். சாதரணமாக அந்த வேனில் மக்களை ஏற்றிக் கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவம் பார்க்குமிடத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இயக்கப் படும் இந்த வாகனத்தில் LAG LASER கருவி உட்பட எல்லாம் வைத்துக் கொண்டு வேனிலேயே சிகிச்சை செய்கிறாராம். நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், கிட்டப் பார்வை, தூரப் பார்வை ஆகியவைகளுக்கான கண்ணாடிகள் உட்பட எல்லாம் இலவசமாகவே வழங்கப் படுகிறதாம். (தினமணி கதிர்)
=================
மின்சாரம், சூரிய ஒளி மூலம் இயங்கும், புது விதமான ரிக்ஷாவைக் கண்டுபிடித்துள்ள சிவராஜ்: நான், எம்.பி.ஏ., பட்டதாரி. சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில், விளம்பரத் துறையில் பணியாற்றுகிறேன். ஆட்டோ மொபைல் துறையில் அதிக ஈடுபாடு உண்டு. நான் தயாரித்துள்ள இந்த வாகனம், சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் மிதிப்பது ஆகியவற்றின் மூலம், இயங்குகிறது. இதைச் செய்து முடிக்க, எனக்கு, மூன்று ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது.
பல முறை வடிவமைத்தும், திருப்தி ஏற்படவில்லை.ஒரு பக்கம் சார்ஜ் ஏறவில்லை; சார்ஜ் ஏறினால், வண்டியின் ஓட்டத்திற்கு தேவைப்படும் அளவில் இல்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேயிருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின், வெற்றி கிடைத்தது. இப்போது, சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இதற்கு பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது.புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முற்றிலும் வித்தியாசமான முறையில், இதை வடிவமைததுள்ளேன்.
காணாமல் போன ரிக்ஷாக்காரர்களுக்கு இந்த வண்டி மூலம், புதிய வாழ்க்கை கிடைக்கும். வெயிலில் வாடாமல், கால் கடுக்க மிதிக்காமல், சொகுசாக இதை ஓட்டலாம்.ஆட்டோ ரிக்ஷா வடிவில் உள்ள இந்த வாகனம், 120 கிலோ எடை கொண்டது. இதில், மூன்று பேர் பயணம் செய்யலாம். மின்சாரம் மூலம், மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 150 கி.மீ., ஓட்டலாம். மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் செல்லும் திறனுடையது இந்த வாகனம். வணிக ரீதியில் உற்பத்தி செய்யும் போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்க முடியும்.
இந்த வாகனத்தை உற்பத்தி செய்து தர, பல நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.மக்களிடம் இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநில அளவில், மேலும் இதை பரவலாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.
==========================
சாதாரணமாக வீட்டிலுள்ள மின்சாதனங்கள் ஓட ஒரு கிலோ வாட் மின்சாரம் தேவைப் படும். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையில் சொந்த வீடு வைத்திருப்போர் யோசிக்காமல் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் வீட்டிலேயே சோலார் தகடுகள் மற்றும் பேட்டரிகள் அமைத்துப் பயன் பெற முடியும் என்று சொல்கிறார் தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை துணைப் பொது மேலாளர் சையத் அகமத். பேட்டரிகளில் சேமிக்காமல் அப்படியே உபயோகப் படுத்த மேற்கொண்டு 25,000 ரூபாய் செலவாகலாமாம். அதையும் மானியமாக வழங்குகிறார்களாம். அரசு சுமார் 90 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறதாம் அவர்களிடம் வாங்கினால் மானியமாக சுமார் 80,000 ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதில் முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆண்டிலும் அக்., மாதம் மட்டுமே, ஆன்-லைன் மூலம், மானியம் பெற விண்ணப்பிக்க முடியுமாம். (தினமலர்)
=================================
செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி, "அஜய்'யின் உரிமையாளர் ராணி தாஸ்: எம்.ஏ., பி.எட்., படித்துவிட்டு, "சிறுமலர்' பள்ளியில், அரசு ஆசிரியையாக, 37 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது, நெதர்லாந்து நாட்டில், காதுகேளாத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்து, சிறப்புப் படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என் கணவர், ஹவுசிங் போர்டில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு, அஜய் என்று ஒரு மகன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஆசிரியர் திட்டியதால், அவன் தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு, நாங்கள் நடைபிணமாகி விட்டோம்.
எந்த குழந்தையைப் பார்த்தாலும், அஜய் போலவே தெரியும். அதனாலேயே, எப்போதும், நிறைய குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது தான், என் மகனின் நினைவாக, படிக்க வசதியில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்காக பள்ளி துவங்கி, படிப்புதவி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். ஏற்கெனவே அனுபவம் இருந்ததால், காது கேளாத, ஏழை மாணவர்களுக்கான பள்ளியாக அது இருக்கட்டும் என்று தோன்றியது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஐந்து மாணவர்களோடு, பள்ளியை துவங்கினோம். இன்று, இந்த பள்ளியில், 141 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு மகனை இழந்த எங்களுக்கு, இப்போது நூற்றுக்கணக்கான மகன், மகள்கள்! எங்கள் மாணவிகள் வர்ஷா, சுபாஷினி இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 மற்றும் 12ம் வகுப்புகளில், மாநில அளவில் காதுகேளாதோரில், முதல் மதிப்பெண் வாங்கியிருந்தனர்.
இந்த, 20 ஆண்டுகளாக, பள்ளிக்கான கட்டட வாடகை, ஆசிரியர்கள் சம்பளம், கல்விச் செலவுகள், சீருடை என்று, எல்லாமே சொந்த பணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இப்போது அது சிரமமாகிக் கொண்டே வருகிறது. (முகப் புத்தகத்திலிருந்து)
=======================
விழுப்புரம் மாவட்டம் சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருக்கிறார்.தனது 17,000 ரூபாய் சம்பளத்தில் 10,000 ரூபாயை மரம் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்தான் தானேயும் நட்டு வைத்து வளர்த்து சேவை செய்யும் இவர் இதுவரை 5,00,000 மரங்களுக்கு மேல் நட்டு வைத்திருக்கிறார். சேவையை இன்னமும் தொடர்கிறார் கல்யாணங்களுக்கும் யார் வீட்டிலாவது பெண் குழந்தை பிறந்தாலும் அவர்களுக்கு ஒரு சந்தன மரக் கன்று கொடுக்கும் பழக்கமுடைய இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளாம். இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லையாம். அவர்களுக்கும் இரண்டு சந்தன மரக் கன்றுகள் நட்டு வைத்திருக்கிறாராம்.இன்றைய தினமலர் செய்தி இது.
======================

