8.2.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள்; புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயில்:: நெல்லைத்தமிழன்

 


இந்தக் கோயிலுக்கு முதல் முறை செல்லக் காரணமாக இருந்தவர் தஞ்சை பெரியகோயிலில் இருந்த guide திரு ராஜா அவர்கள்பிறகு ஒரு முறை (அக்டோபர் 2023) நம் மூத்த பதிவர் துரை செல்வராஜு சாருடன் சென்றிருக்கிறேன். பிறகு சமீபத்தில் ஜனவரி 2025ல் சென்றுவந்தேன். மூன்று முறையும் வழியைக் கேட்டுக்கொண்டே செல்லவேண்டியிருந்தது. முற்காலத்தில் கோயிலுக்கு முன்பு அக்ரஹாரம் இருந்திருக்கலாம். தற்போது இருபுறமும் குடிசைகள்தாம் இருக்கின்றன. அருகிலுள்ள வீட்டில் இருப்பவர் கோயில் சாவியை வைத்திருக்கிறார். அவர்தாம் மூன்று முறையும் கோயிலைத் திறந்து காண்பித்தவர்.

இந்தக் கோவிலுக்கு நிவந்தங்கள் இருந்தன என்பது இராஜராஜ சோழனுக்கு முந்தைய கல்வெட்டுகளில் தெரிகிறது. இது ஒரு பாடல் பெற்ற தலம் என்பதே கோவில் இற்றைக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதைச் சொல்லும்.

தாழமங்கை சந்திரமௌலீஸ்வரர் கோயில்

இந்தக் கோயிலுக்கு வரும் வழியில் தாழ மங்கைஎன்றொரு சந்திரமௌலீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். உள்ளே செல்லவில்லை.

தஞ்சாவூர் கும்பகோண வழித்தடத்தில் பசுபதிகோயில் என்ற இட த்தைச் சுற்றி சப்த மாதர்களுடன் தொடர்புடைய ஏழு கோயில்கள் உள்ளன. அவையாவன, சக்கரமங்கை (அபிராமி அன்னை), அரிமங்கை (மஹேஸ்வரி), சூலமங்கை (கௌமாரி), நந்திமங்கை (வைஷ்ணவி), பசுமங்கை (வராஹி), தாழமங்கை (மகேந்திரி) மற்றும் நாம் பார்க்கப்போகும் புள்ளமங்கை (சாமுண்டி). இந்த சப்த மாதர் கோயில்கள் எல்லாமே ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழைமையானது என்றால் மிகையல்ல.

புள்ளமங்கை கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்தக் கோயிலைக் கண்டோம். பெயரைப் பார்த்ததும் உள்ளே செல்லத் தோன்றியது.

பல்லவர் காலத்திலிருந்து இருக்கும் கோயில் இது. இந்தப் பெயரைப் பார்த்ததும் கோயிலுக்கு உள்ளே சென்றோம். அங்கு சிறிய திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதனால் முழுமையாக தரிசனம் செய்ய இயலவில்லை. கோயிலில் உள்ள பதாகை, கோயில் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்று சொல்கிறது. இராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டுவதற்கு முன்பே, இங்கு கருவூர் சித்தருடன் வந்து கோயிலில் சந்தனம் அரைத்து இறைவனை வழிபட்டான் என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழமங்கை ஊரே அழிந்தது, மிஞ்சியது இந்தக் கோயில் மாத்திரமே என்று சொல்கின்றனர். சில நேரங்களில் நாம் எதிர்பாராமல் சில கோயில்களில் தரிசனம் கிடைக்கும்தரிசனம் துரை செல்வராஜு சாரினாலும் கிடைத்திருக்கலாம். யாரே அறிவர்?

 

மிகச் சிறிய கோயில். ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்து, காவிரி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம்.

அங்கிருந்த தகவல் பலகை சொன்னது, இந்தப் பூவுலகில் ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற பெயரில் ஆதிபராசக்தி அருளும் கோயில்கள் மிகக் குறைவே. ஆயிரங்கோடி நவராத்திரி பூஜைகள் செவ்வனே நிகழ்ந்தால்தான் ஒரு ராஜராஜேஸ்வரி ஆலயம் நாம் வாழும் பூமியில் தோன்றுமாம். அவ்வகையில் ராஜராஜேஸ்வரி அருள் புரியும் தாழமங்கை தலத்தை தரிசிப்பதே பெரும் புண்ணியம்.

 

ஸ்ரீராஜராஜேஸ்வரி உடனுறை சந்திரமௌலீஸ்வரர்தாழமங்கை. 

 

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்ராஜராஜேஸ்வரி அம்மன் தாழமங்கை

ராஜராஜேஸ்வரி அம்மனையும் சந்திரமௌலீச்வர ரையும் வணங்கிவிட்டு அடுத்தது நாங்கள் (அந்தச் சமயத்தில்) புள்ளமங்கை கோயிலுக்குச் சென்றோம். இந்தப் பகுதியிலேயே அன்று காலையில் சென்றிருந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில் படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர்  கோயில், வெண்ணாற்றங்கரை, தஞ்சை

2023 அக்டோபரில் நான் துரை செல்வராஜு அவர்களை திருக்கண்டியூர் ஹரசாப விமோசனர் ஆலயத்தில் முதல் முறை சந்தித்தேன். அன்று நாங்கள் வெண்ணாற்றங்கரையில் இருக்கும் வைணவ திவ்யதேசமான தஞ்சை மாமணிக் கோயிலை (அது மூன்று வெவ்வேறு கோயில்களாக அமைந்துள்ளது) சேவித்துவிட்டு பிறகு சில பல கோயில்களுக்குச் செல்வதாக எண்ணம். வெண்ணாற்றங்கரை அருகில் செல்லும்போதே முதலில் நாங்கள் குபேரன் வழிபட்ட தலமான ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலைக் கண்டதுமே எனக்கு இது சோழர் காலக் கோயில் என்பது தெளிவாக விளங்கியதுஇந்தப் பதிவு அந்தக் கோயிலைப் பற்றியது இல்லை என்றாலும், அங்கு நான் எடுத்த சில படங்களை இங்கு பகிர்கிறேன். சோழர் கால சிற்பக் கலையை வெளிப்படுத்துமாறு அவை அமையும்.

 

தஞ்சபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம்

A statue of a person sitting next to several columns

AI-generated content may be incorrect. 

பல்வேறு லிங்கத் திருமேனிகள்மற்ற கோயில்களைச் சார்ந்தவைகளாக இருக்கலாம்.

 

 

பஞ்சமுக ஆஞ்சநேயர்வராஹி.

 

துவாரபாலகர்கள் சோழர் காலக் கலையின் வெளிப்பாடு. 

 

ஆனந்தவல்லி அம்மை,    மஹாலக்ஷ்மி.

A building with pillars and a blue roof

AI-generated content may be incorrect.

இராஜகோபுரம் சிறியதாக இருந்தாலும் கோயில் பரந்து விரிந்துள்ளது

கோயிலை பெயிண்ட் அடித்து நவீனப்படுத்தியிருந்தாலும், இந்தக் கோயிலும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சுந்தரர் பாசுரங்கள் பாடியிருப்பதால் இது ஒரு வைப்புத்தலம்தஞ்சை என்ற பெயரே இந்தக் கோவிலின் காரணமாக வந்திருக்கவேண்டும் என்றால், இது முத்தரையர் காலத்திற்கும் முற்பட்ட து என்று திடமாகச் சொல்லலாம்அந்தச் சமயத்தில் இந்த தஞ்சபுரீஸ்வர ர் கோயிலைத் தரிசனம் செய்துவிட்டு, தஞ்சை மாமணிக் கோயில் என்று பிரபந்தங்களில் அழைக்கப்படும் மூன்று கோயில்களையும் தரிசனம் செய்தோம். பிறகு நாங்கள் புள்ளமங்கை  கோயிலுக்குச் சென்றோம்.

புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயிலுக்கு நாங்கள் ஜனவரி 2019, அக்டோபர் 2023 மற்றும் ஜனவரி 2025ல் சென்றிருக்கிறோம்

புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயில் 

பழங்காலத்தில் இந்தக் கோயில் புள்ளமங்கை என்று வழங்கப்பட்ட து. கழுகுகள் வந்து வணங்கும் தலம் என்பதால் அந்தப் பெயர். ஆலமரம் இந்த த் தலத்தின் விருட்சம் என்பதால் ஆலந்துறை. பிரமன் வழிபட்ட தலம் என்பதால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர். இந்தக் கோயில் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது (அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த கோயில் என்பது பொருள்). ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.

இறைவன் திருநாமம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர். இறைவி பெயர்கள் சௌந்தர நாயகி மற்றும் அல்லியங்கோதை. 

ஆரம்பகால சோழர் கோயிலான இது கல்வெட்டில் திருஆலந்துறை மஹாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபராந்தக சோழனால் கற்றளியாக மாற்றப்பட்ட இந்தக் கோயில் அதற்கு முன்பு செங்கலால் கட்டப்பட்ட கோயிலாக இருந்திருக்கவேண்டும் (7ம் நூற்றாண்டு)

இந்தக் கோயிலில் கருவறையும், அர்த்த மண்டபமும் மிகவும் பழைமையானவை. இந்தக் கோயில் வெளிப்புறச் சுவற்றில் (தேவகோஷ்டம் என்று குறிப்பிடப்படும்) விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் மற்றும் துர்கை உருவங்கள் இருக்கின்றன.

இந்தக் கோயிலின் சிறப்பு இங்கு அமைந்துள்ள மிகச் சிறிய அறுபதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள். கோயில் அமைந்த காலத்தில் காணக் கண் போதாத அற்புதக் காட்சியை இந்தச் சிற்பங்கள் தந்திருக்கவேண்டும். காலத்தால் சிறிது மங்கியிருந்தாலும் சிற்பங்கள் இப்போதும் அழகுற அமைந்துள்ளன.

இந்தக் கோயிலின் சிற்பங்கள், கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் தொடருக்கான ஓவியங்களுக்கு ஆதர்சமாக அமைந்திருந்தது என்று எங்கோ படித்த நினைவு.

 கோயில் என்பது என்ன? ஏன் அரசர்கள் கோயில்களைக் கட்டினார்கள்? ஒரு நிலத்தை வென்றவுடன், அரசர்கள் மக்களின் மனதை வெல்லவும், தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவும் கோயில்கள் கட்டுவது மரபு. இந்தக் கோயில்கள் மக்களின் சமய நம்பிக்கைப்படியும் அரசனின் சமய நம்பிக்கைப்படியும் அமைந்திருக்கும். இதைத் தவிர இந்தக் கோயில்கள் அரசு அலுவலகமாகவும் செயல்பட்டன. ஊர் நடைமுறைஇறையிலி நிலங்கள், நிவந்தங்கள் போன்றவற்றையும் அரசு நடைமுறைகளையும் கல்வெட்டுகளாக வெட்டி ஆவணப்படுத்தும் இடங்களாகவும் அவை செயல்பட்டன.

திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்

திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்

பருக்கு கோடிப் பத்திமையால் பாடா ஊரும்

பாங்கினோடு பல தளிகள் இல்லா ஊரும்

விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும்

விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்

அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே

திருநாவுகரசர் அருளிய இந்தப் பாசுரம், (தேவாரம், தனி திருத்தாண்டகம், ஆறாம் திருமுறை) கோயில் என்பது ஒரு ஊருக்கு எவ்வளவு இன்றியமையாதது, பக்தி வாழ்வின் நெறி என்பதையெல்லாம் உணர்த்துகிறதுஇங்கு வெண்ணீறு என்று சொல்லியிருப்பதால் சிவன் கோயிலைக் குறிப்பிட்டிருந்தாலும் எந்தக் கோயிலுக்கும் இது பொருத்தமான பாசுரம்தான்.

திருவில் ஊர்- திரு இல் ஊர் லக்ஷ்மி கடாக்ஷம் இல்லத ஊர், நன்மை இல்லாத ஊர் என்று பொருள் கொள்ளலாம். பருக்கு கோடி வளர்ந்து பருத்துள்ள உடம்பை வளைத்து பக்தியால் இறைவன் நாமத்தைப் பாடாத ஊர். பல தளிகள்-கோயில்கள் இல்லாதமலர்ந்த மலரைப் பறிப்பதைக் காட்டிலு, அரும்பாக உள்ள (அருப்பு) மலரைப் பறித்து இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும்காடு என்றாலே அது நாடல்ல, விலங்குகள் வாழும் இடம் என்பது புரியும். அடவி என்பது வடமொழியில் பெருங்காட்டைக் குறிப்பது. அதனால் பெரும் காடு என்பதைக் குறிக்க இங்கு அடவி காடே என்று உபயோகித்துள்ளார்.

நாட்டை ஏன் இவை இல்லாவிட்டால் காடு என்று சொல்கிறார்? அதற்கு புறநானூற்றில் உள்ள ஔவையார் பாடலை நாம் துணைக்கு அழைக்கலாம்.

நாடா கொன்றோ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

ஒரு நிலத்தின் வாழ்வும் தாழ்வும் அதில் வாழ்கின்ற ஆடவரை (மக்களை) பொறுத்ததுஒரு நாட்டின் நிலத்திற்கும் வளத்திற்கும் புகழுக்கும் காரணமாவது நற்பண்பும் நல்லொழுக்கமும் நற்செயலும் உடைய ஆடவரே. நற்பண்பு இல்லாதவர்கள் வாழும் நிலம், நல்லதாகவே இருந்தாலும் தீய நிலமாகவே கொள்ளப்படும். நற்பண்பு உடையவர்கள் தீய நிலத்தில் வாழ்ந்தாலும் அது நல்ல நிலமாகவே கொள்ளப்படும். இதுவே உலக இயற்கை.

கோயில்கள் ஆன்ம அறிவை, கலையோடும் உணர்வோடும் சடங்குகள் வாயிலாக வெளிப்படுத்தும் இடமாகும். இதன் முக்கியத்துவத்தை அரசர்கள் உணர்ந்ததாலேயே, கோயில்களைக் கற்றளியாக எடுப்பித்தவர்கள், அரண்மனைக்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பொதுவாக தமிழகத்தில் 2-4ம் நூற்றாண்டிலிருந்து கோயில்கள் உருவாக ஆரம்பித்தன என்று கொள்ளலாம் (இருக்கும் கோயில்களை வைத்து. அதற்கு முன்பு அவை எந்த மாதிரியான நிலையில் இருந்தன, மண்ணினால் கட்டப்பட்டவையா, செங்கல்லினால் கட்டப்பட்டவையா என்பதெல்லாம் ஆய்வுக்குரியவை. )

A stone building with a door

AI-generated content may be incorrect.

 

A brick wall with a hole in the wall

AI-generated content may be incorrect.

இதுதான் மிகப் பழங்காலத்தின் கட்டிடமுறை (கற்றளிக்கு முன்பு)

 

 

A white stone building with pillars

AI-generated content may be incorrect.

A red carpet in a building

AI-generated content may be incorrect.

 

A close-up of a stone wall

AI-generated content may be incorrect.

 

A stone sculpture with writing on it

AI-generated content may be incorrect.

 

A stone wall with a stone pillar

AI-generated content may be incorrect.

 

A stone building with many statues

AI-generated content may be incorrect.

A stone carving of a hindu god

AI-generated content may be incorrect.

மிகவும் புகழ் பெற்ற விநாயகர் சிற்பம்.

விநாயகருடன் பதிவை முடித்துக்கொள்வது நல்லதுதானே. அடுத்த வாரம் தொடரலாம்.

(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!