2.2.26

"திங்க"க்கிழமை  :  ஒரு எளிய உணவு  -  JKC  ரெஸிப்பி

 

ஒரு எளிய மதிய உணவு

சமைத்தால்தான் உணவா? சில காய்களை சமைக்காமலேயே உண்ணலாம். வாருங்கள் பார்க்கலாம்.

இன்றைய மதிய உணவு

தக்காளி சாதம்.

சேனை வறுவல்

சாலட் எனப்படும் பச்சை காய்களின் கலவை

வத்தல்/வடாம் என்றும் கேரளத்தில் கொண்டாட்டம் என விளிக்கப்படும் பொறித்த வடாம்.

முதலில் தக்காளி சாதம் செய்முறை காண்போம்.

தக்காளி சாதம் இரண்டு வகையில் செய்யலாம்.

முதல் வகை புளிசாதம், தேங்காய் சாதம் செய்வது போன்று தக்காளி தொக்கு ஒன்று செய்து கஞ்சி வடிக்கப்பட்ட சாதத்தில் பிரட்டி எடுப்பது. வேலை குறைவு, தொக்கு செய்தால் பிரிஜில் வைத்து பல நாள் உபயோகிக்கலாம். .

இரண்டாம் வகை குக்கர் வெஜ் பிரியாணி முறை. காரசாரமாக வெஜ் பிரியாணியில் வெஜிடபிள் போடாமல் மசாலா பொருட்கள் தூக்கலாக. சாதம் கஞ்சி வடிக்காமல் பிரியாணி போன்று குக்கரில் வேவித்து எடுப்பது.

இதன் செய்முறையை துரை அவர்கள் ஏற்கனவே எ பி யில் பதிவிட்டிருக்கிறார். நன்றி.  சுட்டி

"திங்க"க்கிழமை   :  தக்காளி சாதம்   -   துரை செல்வராஜூ  ரெஸிப்பி 


சேனை வறுவல்

சேனைக்கிழங்கை படத்தில் உள்ளபடி சிறு துண்டுகளாக்கி கழுவிக் கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் வேகவைத்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் பிரட்டி சிறிது எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

சாலட் எனப்படும் காய் கலவைக்கு எடுத்துக்கொண்ட காய்கள்.

கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, கேபேஜ். பச்சைமிளகாய் 1, கொத்தமல்லி, எலுமிச்சம் பழம்

வெள்ளரிக்காய் இல்லாததால் சேர்க்கவில்லை.

காய்கறிகளை துருவிக்கொள்ளவும், பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

எல்லாவற்றையும் கலந்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து பிரட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சம் பழத்திற்கு பதில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்தால் பிரமாதமாக இருக்கும்.

வடாம் பற்றி கூற தேவையில்லை.

பரிமாறப்பட்ட உணவு

 

ஊசிக்குறிப்பு.


பச்சையாக தின்னும் காய்கள் எவை?

அசை போடும் மிருகங்கள் ஐந்து எழுதுக?

இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் என்னுடைய படிப்பு, உத்தியோகம் மாறியிருக்கலாம். 

1958ஆம் வருடம். திருச்சி குருவியன்குளம் R C துவக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு முடித்து மேல் படிப்பிற்கு செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் சேர நுழைவு தேர்வு எழுதினேன். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அவை. இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும் பதில் சரி என்று கணிக்க முடியாததால் எழுதவில்லை. சேர்க்கை மறுக்கப்பட்டது. பின்னர் திருச்சி சானியன்குளம் ஆர்யன் செகண்டரி ஸ்கூலில் (RSS) 6, 7 வகுப்புகள், 8 முதல் 11 வரை கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் ஹை ஸ்கூல் என்று பள்ளிப்படிப்பு தீர்ந்தது. 


======================================================================================

ஸ்ரீராம் குறிப்பு!!

தலைப்பை ஒரு எலியின் உணவு என்று படித்தவர்கள் எல்லாம் கைதூக்குங்க 

==========================================================================================


சுவாரஸ்ய செய்தி ஒன்று....



அதிவேகத்தில் சுழலும் கருந்துளை ஒன்று, பிரபஞ்சத்தின் 'காலவெளி' (Spacetime) கட்டமைப்பைத் தன்னோடு சேர்த்துச் சுழற்றும் என்று, நுாறு ஆண்டுகளுக்கு முன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். அதை அவர் காலத்து விஞ்ஞானிகள் இருவர் கணிதவியல் ரீதியில் நிறுவினர்.

அதேபோன்ற ஒரு நிகழ்வை, அண்மையில், வானியலாளர்கள் முதன்முறையாக நேரடியாகக் கண்டு பதிவு செய்துள்ளனர். சீன அறிவியல் அகாடமி, பிரிட்டனிலுள்ள கார்டிப் பல்கலை ஆகிய வற்றின் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு 'சயின்ஸ் அட் வான்சஸ்' இதழில் வெளியாகி உள்ளது.

ஒரு நட்சத்திரம் ராட்சதக் கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கிச் சிதைந்தது.

அப்போது, அதிலிருந்து சிதறிய துகள்கள் கருந்துளையைச் சுற்றி ஒரு பிரமாண்ட ஒளித் தட்டை உருவாக்கின. இந்த தட்டின் சுழற்சியிலிருந்து மிக வலிமையான கதிர்வீச்சுகள் விண்வெளியில் பீய்ச்சிடித்தன. இந்தத் தட்டும் கதிர்வீச்சுகளும் 20​ நாட்களுக்கு ஒருமுறை அலைவுறுவதை எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ அலைகள்​ வாயிலாக விஞ்ஞானிகள் கண்டனர். இப்படி நிகழும் என 1918ல், ஜோசப் லென்ஸ்​ மற்றும் ஹான்ஸ் திர்ரிங் ஆகியோர் கணித்ததால், அதற்கு 'லென்ஸ்-திர்ரிங்' விளைவு என்று பெயரிடப்பட்டது.

எனவே, ஒரு கருந்துளை அதிவேகமாகச் சுழலும்போது, அது தன்னைச் சுற்றியு ள்ள கால-வெளிப் பரப்பை, ஒரு துணி போல இழுத்துச் சுழற்றுவதை (Frame--dragging) இது உறுதிப்படுத்துகிறது. இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முன்வைத்த, பொதுச் சார்பியல் கோட்பாட்டிற்கு கிடைத்த ஆதாரமாகக் கொண்டாடப்படுகிறது. விண்வெளி இயற்பியலில் கருந்துளையின் சுழற்சி, அதன் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும் நேரடித் தாக்கத்தை நிறுவும் மிக முக்கியமான மைல்கல்லாக சீனா-- பிரிட்டன் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.

- தினமலர் -

=============================================================================

இரண்டாவது சுவாரஸ்ய செய்தி ....

விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகவும் மிகப்பெரிய பிளாக்ஹோல்(Black Hole) ஒன்று, ஒரு நட்சத்திரத்தை விழுங்கிய பிறகு, பிரகாசமாக ஒளிரத் தொடங்கியுள்ளது. 10 டிரில்லியன் சூரியன்களுக்குச் சமமான ஒளியை உமிழ்ந்தது. 
 
- நவம்பர் 2025 இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!