எச்சரிக்கைப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கைப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.4.16

ஹோட்டல் சாப்பாடும், பில்லும்




          நம்மில் எத்தனை பேர்கள் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தரும் பில்லை சோதிக்கிறோம்?  அப்படிச் செய்வது  கௌரவக் குறைவு என்று நினைப்போம்!  தனியாகச் சென்று சாப்பிட்டாலாவது ஓரளவு பில் சரி பார்ப்போம்.  அவர்களும் அதில் பெரும்பாலும் ஒன்றும் திரிசமன் செய்ய மாட்டார்கள்.  அப்படியும் நம் முகத்தைப் பார்த்து விட்டால் அப்படிச் செய்பவர்களும் உண்டு.  நீங்கள் கவனித்துச் சொன்னால், அப்போதுதான் பார்ப்பவர் போல சர்வரும் வந்து உங்கள் தோளருகே மூச்சு விட்டு நின்று படித்து விட்டு, ஏதாவது ஓட்டைச் சாக்குச் சொல்லி அதைத் திருத்துவதற்குக் கொண்டு போவார்கள்.   இதுவே இரண்டு மூன்று பேர்கள் அல்லது அதற்கும் மேல் அமர்ந்து சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுப்பவர்கள் எத்தனை பேர்கள் பில் சரி பார்த்துப் பணம் கொடுக்கிறார்கள்?

          எல்லா ஹோட்டல்களிலும், எல்லா நேரங்களிலும் இப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது.  ஆனால் பெரிய ஹோட்டல்களில் கூட 'தவறி விட்டது' போல, அதுவும் கண்டு பிடிக்கப் பட்டால்,  அடிக்கடி நடப்பது உண்டு.  நம்மூர்களில் நல்லவர்கள் அதிகம்!

          இப்படி வசூலாகும் பணம் யாருக்குப் போகும் என்பதும் புரியவில்லை.  ஒரு ஹோட்டலுக்கு அப்படி சேர்த்துக் கொடுக்க சர்வர்கள் ஒரு லாபமுமின்றி முன்வருவார்களா?  மாட்டார்கள் என்றால் இதில் வேறு ஏதோ அண்டர்ஸ்டாண்டிங் இருக்க வேண்டும்.  இந்த வகையில் எவ்வளவு வசூலாகியது என்பதை எப்படிக் கணக்கெடுப்பார்கள் என்பதும் தெரியவில்லை.
 
          சாதாரணமாக "கணினி மூலம் ரசீது கொடுக்கும் கடைகளிலேயே விலையைச் சரி பார்த்து வாங்கு"  என்பார் என் நண்பர். கணினி மூலம் தருவதால் எல்லாம் சரியாக இருக்கும் என்னும் 'உபயோகிப்பாளர் மனோபாவம்' நம்மைக் கட்டுப் படுத்துகிறது என்பார் அவர். 

          நாம்தான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள் ஆச்சே..  இது போல கணினி ரசீதில் என்னுடனேயே வந்து இருமுறை குறை கண்டுபிடித்துச் சரி செய்தும் காட்டி இருக்கிறார் அவர்.   நான் வாங்காத இரண்டு பொருட்களுக்கு விலை போடப் பட்டிருந்தது.  இன்னும் சொல்லப் போனால் அங்கு வாங்கப் படும் பொருட்களின் விலையை வெளிக் கடைகளில் வாங்கும் விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் சொல்வார்.


          எல்லாருமே நம் சகோதரர்கள்தான்!  அவர்கள்தான் நம்மை ஏமாற்றுகிறார்கள்.  இவர்கள் எல்லோருமே "உங்களுது எங்களுது,..எங்களுது எங்களுது" வகையறாவைச் சேர்ந்தவர்கள்.  ஏமாறத் தயாராய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களை எப்படிக் குறை கூற முடியும்?!  பாரில் அமர்ந்து குடித்து விட்டு, காசு கொடுப்பவர்களிடம்தான் ஏமாற்றுவார்கள், போதையில் அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள்.  இங்கு போதை இல்லாமலேயே நாம் ஏமாறுகிறோம்.

          இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த விஷயத்துக்கு வருகிறேன்.  சென்னையில் ஒரு புகழ் பெற்ற ஹோட்டலில் சாப்பிடச் சென்ற ஒருவர் சர்வீஸ் டாக்ஸ், வாட் வரி உடன் சேவைக் கட்டணம் என்று 48 ரூபாய் ஐம்பது பைசாவுக்குக் கட்டணம் சேர்க்கப் பட்டிருக்கவும் (அதுவும் இயற்கையாக இருக்க, சில்லரைக் கணக்குடன்தான் போடுவார்கள்!) டென்ஷனாகி விட்டார்.  ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டால் கட்டித்தான் ஆக வேண்டும் என்று கறார், உதாராகச் சொல்லி விட்டார்கள். 

          கட்டி விட்டு என்னைப் போலப் புலம்பாமல், சும்மா பதிவு எழுதிக் கொண்டிருக்காமல் அவர் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்று விட்டார்.  தீர்ப்பு கிடைத்து விட்டது சரி, பணம் கைக்குக் கிடைத்ததோ இல்லையோ! சில இடங்களில் நீங்கள்தான் முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்றெல்லாம் சொல்லி விடுவார்கள்.  ஆனால் பணம் கைக்குக் கிடைக்காது...   அது போல!


          ஆடம்பர ஹோட்டல்களில்தான் சேவைக் கட்டணம் வசூலிப்பார்கள்.  அதுவும் மெனு கார்டில் குறித்திருப்பார்கள்.  வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்து விடுவார்கள்.  அப்படி சேவைக் கட்டணம் வசூலிக்கப் படும் இடங்களில் சர்வர்களுக்கு டிப்ஸ் தர வேண்டிய தேவை இல்லை.  அதற்குத்தான் அவர்களே வசூலித்து விடுகிறார்கள்.  அது தெரியாமல், அல்லது தெரிந்தும் சிலர் டிப்ஸ்  தருவது உண்டு.  அவர்களை நாம் கணக்கில் எடுக்கவேண்டாம்.


          அதே போல எப்படி, எவ்வளவுச் சாப்பிட்டாலும் டிப்ஸ் தராமல் வருபவர்களும் உண்டு.  தரவேண்டும் என்று சட்டமா, என்ன?  அவர்களையும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டாம்!


          சேவை வரி மத்திய அரசுக்கும், வாட் வரி மாநில அரசுக்கும் செல்லும்.  குளிர் சாதன வசதி கொண்ட ஹோட்டல்களில் மொத்த பில் தொகையில் 40% சேவை வரி விதிக்கப்படும்.  வாட் வரி என்பது சாதாரண ஹோட்டல்களில் 2% மற்றும் ஆடம்பர ஓட்டல்களில் 14.5% வசூலிக்கப் படும்.

          இந்தச் சேவைக் கட்டணம் மட்டும் முழுக்க முழுக்க ஹோட்டல்களுக்குத்தான்.  இந்த சேவை வரி, சேவைக் கட்டண வித்தியாசமே நம்மில் பலருக்குத் தெரியாது.  அல்லது எனக்குத் தெரியாது!  இனியாவது கனமாய்ச் சாப்பிடுவோம்...  ச்சே கவனமாய் பணம் கொடுப்போம்!







அந்தச் செய்தி.