கல்யாணி ஏன் சிரித்தாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாணி ஏன் சிரித்தாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.9.14

கல்யாணி ஏன் சிரித்தாள்? 03 :: கோல மயில்.

             
முதல் பகுதி சுட்டி இங்கே: மங்கா  
             
இரண்டாம் பகுதி சுட்டி இங்கே: விஸ்வம். 
            
கல்யாணி ஒன்றும் சொல்லவில்லை. 
                
அதற்குள் மங்கா மாமியின் குழுவைச் சேர்ந்த ஒருவர் வந்து, "மாமி கோலம் போடுகின்ற மாமி எங்கே? மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இங்கே ஒரு ரூமில் மாக்கோலம் போடவேண்டும் என்கிறார்கள். குலதெய்வ பூஜை செய்யவேண்டுமாம்!"
               
"கோலம் போடுகின்ற மாமியை வேலை எல்லாம் முடிஞ்சாச்சுன்னு நாந்தான் அனுப்பினேன். இப்போ என்ன செய்வது?"
        
"அம்மா - நான் கோலம் போடுகிறேன்!" என்றால் கல்யாணி. 
              
"மாக்கோலம் - இழைக் கோலம் போடத் தெரியுமா?"
           
"ஏதோ ஓரளவுக்குத் தெரியும்."
         
மங்கா மாமி கல்யாணியை அனுப்பி வைத்தாள். 
             
பிறகு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள். 
              
******** ******** ********** ************** 
            
இரண்டு மணி நேரம் கழித்து கல்யாண மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் கூடி அதிசயமாக எதையோ சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்ததை மங்கா மாமி பார்த்தாள். தன்னுடைய குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் என்ன விஷயம் என்று கேட்டாள். 
              
அவர் சென்று குழுவாகப் பேசிக்கொண்டிருந்த சிலரிடம் கேட்டு, வந்து, விஷயத்தைக் கூறினார். "மாப்பிள்ளை வீட்டார் ஒரு அறையில் மாக்கோலம் போடவேண்டும் என்று கேட்டிருந்தார்களாம். மாக்கோலம் போட்டாச்சு என்று சொன்னதும் அங்கு போய்ப் பார்த்தவர்கள் அதிசயப்பட்டுப் போய்விட்டார்கள்! மிகவும் பிரமாதமான கோலம்! மாப்பிள்ளை வீட்டார் கூட்டத்தில் வந்திருந்த சில நண்பர்கள், கோலத்தை ஃபோட்டோ எடுத்து, கோலத்தை வரைந்தவர் யாரோ அவர்களையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கவேண்டும் என்று பிரியப்பட்டார்களாம்! அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாமல், அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாளாம்!"
            
அப்பொழுதுதான் மங்கா மாமிக்கு கல்யாணியின் நினைவே வந்தது! 
             
எங்கே போயிருப்பாள்? 
           
முதலில் சென்று எல்லோரும் சிலாகிக்கும் அந்தக் கோலத்தைப் பார்ப்போம் என்று மங்கா மாமி அந்த அறைக்குச் சென்றால். 
              
ரூமுக்கு வெளியிலிருந்தே ஒரு ரசிகர் கூட்டம், உள்ளே செல்லாமல் கோலத்தை பல கோணங்களிலும் இரசித்துக் கொண்டிருந்தது! 
          
கோலத்தை எட்டிப் பார்த்த மங்கா மாமி மயங்கி விழாத குறை! 
             
அடேடே கோலம் போடுவதற்கே கடவுள் இந்தப் பெண்ணுக்கு நளினமான விரல்களைப் படைத்திருக்கின்றான் போலிருக்கு! திருஷ்டிப் பட்டுவிடும் அளவுக்கு அழகான கோலம்! படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவன் இவள் விரல்கள் மூலம் அழகிய படைப்புகளை  உருவாக்க இவள் கைகளிலேயே நிரந்தர வாசம் செய்ய வந்து விட்டானோ?
                
"நல்லா இருக்கா அம்மா?" பக்கத்தில் வந்து, நின்ற கல்யாணியின் குரல்! 
             
"கல்யாணி!" என்று சொல்லியபடி, மங்கா மாமி கல்யாணியின் கையைப் பிடித்து, அவளுடைய விரல்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். வாயில் மேலும் பேச்சு வரவில்லை! கண்களில் கண்ணீர்! 
             



(குறிப்பு: இவைகள் கல்யாணி போட்ட கோலம் இல்லை. கூகிள் போட்டவை கல்யாணி போட்ட கோலத்தை படம் எடுக்கவிடவில்லை)  

இந்த ஆனந்தம் அப்பொழுது மட்டும் இல்லை - பிறகு பல நாட்கள், பல சந்தர்ப்பங்கள்! கல்யாணி செய்த கை முறுக்கு, கல்யாணி செய்த தேங்குழல், என்று பலப்பல விஷயங்களில் கல்யாணியின் நேர்த்தி மங்கா மாமியை ஆச்சரியமடைய வைத்துவிட்டது.  
              
கல்யாணி ஒருநாள் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து மங்கா மாமியிடம் கொடுத்தாள்.
            
விஸ்வம் எழுதியதுதான்! "உனக்கு ஒரு அம்மா கிடைத்திருப்பதைப் பற்றி உன் தோழியிடமிருந்து தெரிந்துகொண்டேன். உன்னுடைய சந்தோஷத்தை விட எனக்கு ஒரு நல்ல மாமியார் கிடைத்திருக்கிறார் என்று எனக்கு ஆயிரம் மடங்கு அதிக சந்தோஷம்! சிடுமூஞ்சி மாமனார் பற்றி எனக்கு இனி கவலை இல்லை!" 
              
"கல்யாணி! இது என்ன? என்னைப் பற்றியும் சொல்லிவிட்டாயா?"
              
"ஆமாம் அம்மா! என்னுடைய சந்தோஷம் அவருக்கு இன்னமும் சந்தோஷம் கொடுக்கும் என்பதால் உங்களைப் பற்றி என் தோழியிடம் சொல்லி எழுதச் சொல்லியிருந்தேன்!"
                   
பிறகு இரண்டு மாதங்கள் கழித்து வேறு ஒரு கடிதத்தை கல்யாணி மங்கா மாமியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாள்.
              
"என்னுடைய தங்கை நாட்டியம் கற்றுக்கொள்கிறாள் என்று முன்பு எழுதியிருந்தேன் அல்லவா! இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டிய அரங்கேற்றம். அநேகமாக அது குடந்தையில் நடைபெறும். இப்போவே பெண் கேட்டு பலர் சம்பந்தம் பேச வருகிறார்கள். கல்யாண தரகரும் அடிக்கடி வந்து சில வரன்கள் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். தங்கை நடன அரங்கேற்றம் முடிந்தவுடன், கூடிய சீக்கிரம் நிச்சயதார்த்தம் நடத்திவிடலாம் என்று அம்மா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்புறம் என்ன? நம்ம கல்யாணம்தான்!"
            
கல்யாணி முகம் மலர, மங்கா மாமியை, அவள் கடிதத்தைப் படித்து முடிக்கும் வரைப் பார்த்திருந்தாள். பிறகு கடிதத்தை வாங்கி ஆசையாக மீண்டும் ஒருமுறைப் படித்தாள். 
          
மங்கா மாமி, மேற்கொண்டு இது சம்பந்தமாக எதுவும் செய்யுமுன் மூர்த்தியிடமும், விஸ்வத்தின் பெற்றோரிடமும் பேசி விட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்தாள். 
          
விஸ்வத்தின் அம்மாவை, எதிர்ச்சையாக சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று மங்கா மாமிக்கு அப்பொழுது தெரியவில்லை! 
         
எப்படி? எங்கு? 
    
(தொடரும்) 
       
 (அடுத்த வாரம் முடிச்சு வந்துவிடும் போலிருக்கே!)