இந்த கௌதமன் வேற ரெண்டு மூணு வாரம் வலைப்பக்கம் என்னால் சரியா வரமுடியாது, நீ பார்த்துக்கோன்னு சொல்லிட்டாரே...
என்ன எழுதலாம்?
ம்ம்ம்...
"மேடம்.. உங்க வீட்டுல வித்தியாசமா ஏதாவது டிஷ் செய்வீங்களா? அப்படி எதுவும் இருந்தா சொல்லுங்களேன்"
"இல்லீங்க... நாங்க எல்லோரும் செய்வது போலத்தான் செய்வோம்"
"ரெண்டு மூணு ஐட்டம் பேரு சொல்லுங்க.. நான் கேள்விப் படாததா இருந்தா எடுத்துக்கறேன்"
"எதுக்கு? உங்க ப்ளாக்ல போடறத்துக்கா? உங்களுக்குத் தெரியாதுன்னா படிக்கறவங்களுக்குத் தெரியாம இருக்குமா?"
"அட, தெரியாதவங்க ஒண்ணு ரெண்டு பேராவது தேறுவாங்க.. சொல்லுங்க"
"அது எல்லா டிஷுக்குமே பொருந்தும் ஸார். இப்போ நீங்க சொன்ன மோர்க்கூழ் நான் இதுவரை செய்ததே இல்லை. அது போலத்தான்.."
"சபாஷ்... அப்போ சொல்லுங்க"
"ம்ம்ம்...."
"......................"
"............. கௌனி அரிசி தெரியுமா?"
"தெரியும். சிகப்பா கேரள அரிசி போல இருக்குமே.."
"அதான். அதை எடுத்துக் களைஞ்சிகிட்டு தண்ணீர் ஊற்றி 6 மணிநேரம் ஊற வைங்க. அப்புறம் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாவே தண்ணீர் சேர்த்து குக்கர்ல வச்சு, நல்லக் குழைய வச்சு எடுத்துக்கங்க... கீழ இறக்கின பிறகு கொஞ்சம் நெய் விட்டு, சர்க்கரை போட்டுக் கிளறி விட்டு..."
"நெய்யும்
சர்க்கரையும் எவ்வளவு? அரிசிக்குத் தண்ணீர் ஒண்ணுக்கு மூணா? நாலா?'
அவசியம் அடுப்புலேருந்து இறக்கித்தான் செய்யணுமா? அடுப்புலேயே வச்சுச்
செய்யக் கூடாதா?
"குழைய வேக வைக்கணும்.
அவ்வளவுதான். அதை நீங்க பார்த்துக்குங்க. நெய் வாசனைக்குப் போடுங்க
போதும். சர்க்கரை உங்களுக்குத் தேவையான அளவு.. சாதாரண இனிப்பாவோ, நிறைய
இனிப்பாவோ... அது உங்க இஷ்டம்! அடுப்புலேயே வச்சுக் கூடச் செய்யலாம்.
தப்பில்லே. ஆனால் அடுப்பை அணைச்சுடுங்க"
"ஐயே... மேடம்.. என்ன இப்படிச் சொல்றீங்க... அளவெல்லாம் சரியாச்..."
"அதெல்லாம்
அப்படித்தான். சர்க்கரை சேர்த்த பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்துக்
கிளறி மூடி வச்சுடுங்க. அப்புறம் சாப்பிட வேண்டியதுதான்"
"சரிதான். இதைப் போட்டு ஒப்பேத்தறேன். ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கே.."
"சுருக்கச் செய்யறதுதான் ஈஸி! கத்திரி முருங்கை உருளைப் பொரியல் சொல்லவா?"
"அது என்ன? இதற்குத் தொட்டுக் கொள்ளவா?"
"சேச்சே...
அப்படியெல்லாம் கட்டாயமில்லை. சிம்பிளா இருக்குன்னீங்களே.. நான் சிம்பிளா
செய்யற இன்னொன்று நினைவுக்கு வந்தது. அதையும் சேர்த்துச் சொல்லலாம்னு
பார்த்தேன்!"
"சரி சொல்லுங்க"
"ரெண்டு
உருளை, ரெண்டு மூணு கத்தரிக்காய், ரெண்டு முருங்கைக்காய் எடுத்து சின்னச்
சின்னதா நறுக்கிக்கோங்க...கடுகு, உளுந்து தாளிச்சுட்டு இதையெல்லாம்
வதக்குங்க... காரப்பொடி. உப்பு, மசாலாப்பொடி போட்டு இறக்கிடுங்க..
அவ்வளவுதான்! வீட்டில் அசைவம் செய்யற நாளில் இதைச் செஞ்சுடுவேன்..
கொஞ்சம் பொறுமை கூட இருந்தால் தேங்காய் அரைச்சு விடுவேன்"
"அசைவமா... மேடம்.. சைவமாச் சொல்லுங்க"
"ஹல்ல்ல்ல்லோ....
இதுல அசைவம் எங்க வந்தது? வீட்டில் அசைவம் செய்யற நாளில் நான் சாப்பிட
இதை செஞ்சுக்குவேன்னு சொன்னேன். உருளை, கத்தரி, முருங்கை அசைவமா? "
"இல்லைதான்.
ஆனால் இந்தக் காம்பினேஷனில் நாங்க பொரியல் செய்ததே இல்லை! கத்தரியும்
உருளையுமே சேராத காம்பினேஷன். அதுல முருங்கையுமா? எங்க அக்கா
உருளையையும் பீட்ரூட்டையும் சேர்த்துப் போட்டு பயங்கரக் கலர்ல ஒரு கறி
செய்வா.. நல்லாத்தான் இருக்கும்னு வச்சுக்கோங்க! முருங்கை வேகவச்சு, தோலை
எடுத்துட்டு உள்ள இருக்கற சதையையும், விதையையும் மட்டும் எடுப்பீங்களோ?"
"அதெல்லாம் இல்லை. அப்படியே தோலோட நறுக்கிப் போடலாம்"
"ஓ... சரிதான்! நன்றி வருகிறேன்.. மறக்கறத்துக்குள்ள ஓடிப்போய் எழுதணும்! வரேன்"
படங்கள் : இணையம்.