நல்ல பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.5.14

பாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி!


                                                            
முன்னர்  பாம்பு வந்த அனுபவம் எழுதியபோதே உங்கள் வீட்டுக்கு பாம்பு  வந்ததா, பாம்பு வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா என்று கேட்டார் ஹுசைனம்மா!

     

இந்த வருடம் வெயிலுக்கும் பாம்பார் வெளியில் வந்து அலைய, மறுபடியும் வனத்துறைக்குக் கடிதம் அனுப்பினால், ஒரு அலைபேசி எண் தந்து பேசச் சொன்னார்கள்.  அந்த எண்ணில் பேசியதும் அவர் பாம்பு பிடிக்க ஆள் அனுப்புவதாகச் சொன்னார். 

                                      

                                                                        
நான்கு அல்லது ஐந்து பேர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த இடத்தில் ஒரே ஒருவர் வந்தார். 22 வயது இளைஞர்.
                              

இங்கு வந்தபின்தான் ஒரு குச்சியை உடைத்துக் கையில் எடுத்துக் கொண்டார். புதர்கள், வளைகள், அடைசல்களில் அனாயாசமாக கால் வைத்து நடந்து, குச்சியை வைத்து சோதித்தார். முதல்நாள் மாலையிலும், இன்று காலையும் கண்ணில் பட்ட (வெவ்வேறு) பாம்புகள் இப்போது தட்டுப் படவே இல்லை!

                                                 
கிளம்பும்போது வேறு இரண்டு எண்கள் தந்தார். ஒன்று காசு கொடுத்து ஆள் அமர்த்துவது.  வந்து ஒருநாள் மற்றும் ஒரு நாள் இரவு தங்குவார்களாம். இருக்கும் பாம்புகளைத் தேடிப் பிடித்து விடுவார்களாம். 4,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை கட்டணமாம்.
இன்னொன்று வேளச்சேரி வனத்துறை அலுவலக எண். (044-22200335) அவர்களிடம் சொன்னால் நான்கைந்து பேர்கள் ஒரு 'டீமா'கக் கிளம்பி வந்து நிதானமாகத் தேடி, பாம்பு பிடிப்பார்களாம்.
பாம்புதான் கிடைக்கவில்லை. ராஜேஷிடம் பேசியபோது சில விவரங்கள் கிடைத்தன!

அவரிடம் பேசியபோது கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் :
நம்மூர்களில் பெரும்பாலும் சாரைப் பாம்புகள்தான் இருக்கும். நல்ல (நாகப்) பாம்புகள் அபூர்வம். "ராஜநாகம் பிடித்ததுண்டா?" என்று கேட்டேன். குளிர் பிரதேசங்களில் இருக்கும். நம்மூரில் கிடையாது என்றார்.

   
சாரைப் பாம்புகள் நீளமாக, லேசான தடிமனில் இருக்கும். நல்ல பாம்புகள் கொஞ்சம் குட்டையாக, ஆனால் நல்ல தடிமனாக இருக்கும் என்றார். அதன் மேலுள்ள அடையாளங்கள் பற்றிச் சொன்னார். பாம்பு சென்ற தடம் வைத்தே என்ன வகைப் பாம்பு அது என்று கண்டு பிடித்து விடுவேன் என்றார். கட்டு விரியன் நல்ல கருப்பாக, பளபளப்பாக இருக்கும் என்றார்.

விஷமுள்ள பாம்புகள் என்றால் நம்மூரில் அதிகம் இருப்பது கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை போன்றவைதான் என்றார்.

                                            
'பச்சைப் பாம்பு' குழந்தை மாதிரியாம்! எப்படிப் பிடிப்பீர்கள் என்றேன். முதலில் வாலைப் பிடிப்பாராம். (இதைத்தான் 'ஓடற பாம்பைக் கையில் பிடிக்கற வயசு' என்பார்கள் போல!) பிறகு கையில் இருக்கும் குச்சியால் அதன் தலையை மெல்ல கட்டுப்படுத்தி, தன்னால் அதன் உயிருக்கு ஆபத்தில்லை என்று புரிய வைப்பாராம். சாரைப் பாம்பு என்றால் கொஞ்ச நேரத்தில் அப்படியே குழந்தையைத் தூக்குவது போல இரண்டு கைகளிலும் தூக்கி விடுவார்களாம். நல்ல பாம்பு என்றால் வாலைப் பிடித்துத் தூக்கி, தலையை அருகில் வராதவாறு மென்மையாகக் கையாண்டு, அப்படியே பைக்குள் போட்டு விடுவார்களாம்.
தோளில் ஒரு பேக், கல்லூரி மாணவன் போல மாட்டி இருந்தார். தோளில் அதற்குத்தான் பை மாட்டி இருக்கிறீர்களா என்று கேட்டேன். ஆமாம் என்றார். ஆபத்தில்லையா அது? என்று கேட்டேன். ஒரு ஆபத்தும் இல்லை, அது பாட்டுக்க சுருண்டு படுத்து கிடக்கும் என்றார்! (ஆபத்து என்று கேட்டது உங்களுக்கு மட்டுமல்ல, இதை எடுத்துக் கொண்டு மறுபடி பஸ்ஸில்தானே போவீர்கள், திடீரென வெளிவந்து விட்டால் என்ற பயம்தான் என்று நினைத்துக் கொண்டேன்)

 (நான் முதலில் நான் பார்க்காதபோது நைஸாக  அந்தப் பையிலிருந்து தான் கொண்டு வந்திருக்கக் கூடிய ஒரு பாம்பை எடுத்து "இதோ பிடித்து விட்டேன்" என்று காட்டுவாரோ?' என்ற சந்தேகப் பட்டேன். ஆனால் அவர் பேசியது கேட்டபோது நான் அப்படி நினைத்தது தவறு என்று தெரிந்தது. நடு இரவில் யாராவது உதவி என்று கூப்பிட்டால் கூட பாம்பு பிடிக்கக் கிளம்பிச் சென்று விடுவாராம்)
டிப்ளமா இன் எலெக்டானிக்ஸ் படித்திருந்தாலும் வனத்துறை மேலுள்ள காதலால் இந்த வேலைக்கு வந்தாராம். இன்னும் திருமணமாகவில்லை.

17 வயது முதல் பாம்பு பிடிக்கும் அனுபவமாம். பாம்பு பிடிக்க ஸ்பெஷலாகக் கற்றுக் கொள்வது என்றில்லை, எல்லாம் அனுபவம்தான்.. ஆனால் தேவைப்பட்டால் பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இருலர்களிடம் சென்று கற்றுக் கொள்வேன் என்றார். அவ்வப்போது தொலைபேசியில் ஆலோசனையும் கேட்டுக் கொள்வாராம்.

பாம்பு பிடிப்பது என்பது இங்கு செய்தாலும், குரங்கு பிடித்திருக்கிறாராம். வனத்துக்குள் சென்று ஆராய ரொம்ப விருப்பமாம்.
7,000 ரூபாய் மாதச் சம்பளமாம்.
'சரி, பாம்பு இருக்கிறது என்ற உடன் 'பிடித்து வா' என்று அனுப்புகிறார்களே, கையில் விஷ முறிவு மருந்து ஏதும் எடுத்துக் கொள்வீர்களா என்றால் இல்லை என்றார். காலில் மாட்டிக் கொள்ள பெரிய ஷூ கூட இல்லாமல் சாதாரண ஷூதான்! ரிஸ்க் இல்லையா என்று கேட்டால் "பழகிடுச்சி" என்று சிரிக்கிறார்.
                                                          

                                       
17 வயதில் தான் பிடித்த முதல் பாம்பே நல்ல பாம்புதான் என்றார். அப்போது அவரின் டென்ஷனான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கூட வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டத்துக்கு, அந்தப் பாம்பைப் பிடித்தபிறகுதான் 'இதுதான் தனது முதல் பாம்பு பிடிக்கும் அனுபவம்' என்று சொன்னாராம். ஏன் அந்த ரிஸ்க் என்று கேட்டால், "ஸார்! ஆபீஸ்ல நான் மட்டும் இருக்கேன். ஃபோன் வருது... பேசறவங்க பதட்டமாகவும், பயத்திலையும் இருக்காங்க... நாம் போய் ஹெல்ப் செய்ய வேணாமா ஸார்?" என்றார்.

நாளை 3 பேர்கள் கொண்ட டீம் வருகிறது. பிடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்!