வாழைக்காய் பொரிச்ச குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழைக்காய் பொரிச்ச குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.8.16

"திங்க"க்கிழமை 160815 :: வாழைக்காய் பொரிச்ச குழம்பு - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி.



          இதுவும் திருவனந்தபுரம் தொடர்பினால் வந்த குழம்பாகத்தான் இருக்க வேண்டும். இதை மாதத்துக்கு ஒரு தடவையாவது செய்து சாப்பிடுவேன். இதுக்கு காம்பினேஷன், புளி இல்லாத, பருப்பு போன்றவை சேர்க்காத சாதாரணப் பொரியல்தான். 


          இல்லாட்டா, அப்பளாமும் நன்றாகத்தான் இருக்கும். ஹஸ்பண்ட் இங்க இருந்தா, (எங்க? ஹி ஹி) காம்பினேஷன் கறி கேட்கலாம். ‘நான் எப்போதும்போல் வேகமாகச் செய்வதற்குத் தோதான உருளைக்கிழங்கு காரக் கறி செய்தேன். இப்போதெல்லாம், உடல் எடை, ஆரோக்கியம் இதற்கெல்லாம், புதுமையாக, பாரம்பரியத்தைவிட்டுவிட்டு, ஓட்ஸ், ராகி சாப்பிடுங்க, வெள்ளை அரிசி சாப்பிடாதீங்க, பிரௌன் அரிசி சாப்பிடுங்க, சப்பாத்தி சாப்பிடுங்க என்ற குரல்கள் ஒலிப்பதால், நானும் பிரௌன் பாஸ்மதி வாங்கிவைத்துள்ளேன். அதுலதான் சாப்பாடு. இப்போது இந்தக் குழம்பை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

          ஒரு பெரிய வாழைக்காய். இதைத் தோலுரித்து, சிறு சிறு சதுரத்துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் உள்ள சிறிது தண்ணீரில் போட்டு, உப்புப் போட்டு, 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வாழைக்காயை மட்டும் தண்ணீரை வெளியேற்றிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள். 





          சிவப்பு மிளகாய் 2-3, மிளகு 15, உளுத்தம்பருப்பு ½  ஸ்பூன், துவரம்பருப்பு ½ ஸ்பூன் இவற்றை வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு கருகாமல் வறுத்து அப்புறம் ஒரு தட்டில் ஆறவைக்கவும். இதனுடன், 2 ஸ்பூன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். விருப்பமிருந்தால் 2 ஆர்க்கு கருவேப்பிலையும் (இலை மட்டும்) சேர்த்து அரைக்கலாம்.



             



          ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் 150 மி.லி (நீர்க்க இருக்க வேண்டாம்), தண்ணீர் 200 மி.லி. சேர்த்து புளி வாசனை போகக் கொதிக்கவிடவும். அதனுடன், ஏற்கனவே வேகவைத்துத் தனியாக வைத்திருக்கும் வாழைக்காய், அரைத்த பொடி (மிளகாய், தேங்காய் இன்ன பிற), தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சிறிது கொதிக்கவிடவும். அப்புறம் கடுகு, கருவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
 

                 

குறிப்பு: வாழைக்காய்த் துண்டங்களைத் தனியாக தளிகைப் பண்ணாமல், புளிஜலத்துடன் கொதிக்கவைத்தால், வாழைக்காயில் புளிப்பு ஜாஸ்தி ஏறிவிடும்.  பொடி தயாரிக்கும்போது, கருவேப்பிலை அளவுக்கு அதிகமாகச் சேர்த்தால், கருவேப்பிலைக் குழம்பு வாசனை வந்துவிடும். பசங்களுக்கு இந்தக் குழம்பை, சாதத்தோட சாப்பிடுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், மதியம் மோர் சாதத்தைக் கையில் போட்டு, இந்தக் குழம்பையும் கையிலிட்டால், அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு ரொம்ப நல்லா இருக்கும்.

அன்புடன்,

நெல்லைத் தமிழன்