
"சாரி சார். நோ ரூம்ஸ்." என்ற அதே பல்லவியை, இரக்கத்தோடு, இனிமையாகக் கூறினார்.
"கடவுளே" என்று வாய்விட்டு அலுத்துக் கொண்டு, என்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அதுவரையிலும், அங்கே ஒரு ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு, ஓர் இந்தி தினசரியை அசுவாரஸ்யமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டாவது நபரான முதியவர், "சார், நீங்க தமிழா?" என்றார். 'ஆமாம்' என்று சொல்வதற்கு முன்பாக, 'யார் இவர்? ஆளைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டவர் மாதிரி இருக்கின்றார். ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, பிறகு உருக்கமான கதை எதையாவது அவிழ்த்துவிட்டு, அஞ்சு பத்து - கடன் கேட்பாரோ?' என்று தோன்றிய பொழுதும், வாய் கூறாத வார்த்தையான 'ஆமாம்' என்பதை, என் பார்வையும் தலை அசைப்பும் அவருக்கு உணர்த்திவிட்டது போலும்!
"உங்க பேரு என்ன?" என்று கேட்டார்.
"வரதராஜன்"
"இந்தி தெரியுமோ?"
"அரைகுறையாகத் தெரியும்"
"சரி, சித்த நாழி அதோ அந்த சேர்ல உக்காருங்கோ. நான் இவரண்டை கொஞ்சம் பொய்யும் மெய்யும் கலந்து சொல்லிவிட்டு, உங்களை என்னோட இடத்துக்கு அழச்சுண்டு போறேன்." என்றார். வெள்ளை வேட்டி, நீல நிறச் சட்டையணிந்த அந்த முதியவருக்கு அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். அவர் அந்த வெள்ளைச் சட்டை இளைஞரிடம் தாழ்ந்த குரலில், கொஞ்ச நேரம் ஏதோ சொன்னார். வெள்ளைச் சட்டை இளைஞர், ஒன்றுமே பதில் பேசாமல், இவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு, 'சரி' என்று தலையாட்டினார்.
முதியவர் என்னிடம் வந்து, "வாங்க சார், போகலாம்." என்றார். லிப்டில் நுழைந்து எட்டாவது மாடிக்குச் சென்றோம். லிப்டை விட்டு வெளியே வந்தவுடன், வலது பக்கத்தில், அறை எண் 81, 82, 83, 84, 85 எண்கள் கொண்ட அறைகள். காரிடாரின் கடைசியில், நேர் எதிரே 86. இடது புறத்தில், 89, 88, 87 - என்று பெரிய அமைப்பு கொண்ட பகுதிகள் இருந்தன. 88 ஆம் எண் இலக்கமிட்ட கதவுகள் தந்த வேலைப்பாடுகளுடன் மிகவும் சிறப்பாகக் காணப்பட்டது. கதவுக்கு அருகில், இருபுறங்களிலும் பூச்சட்டிகள். அவைகள் வைக்கப் பட்டிருந்த ஸ்டீல் டேபிள்கள் மூன்றும் கொலுப்படிகள் போல அழகாக இருந்தன. முதியவர் எண்பத்திரெண்டாம் அறைக்கு வெளியே நின்று, "காலு சிங்" என்று மெதுவாக அழைத்தார். ஒல்லியான உருவம் கொண்ட - ஆனால் ஆறடி உயரம் இருந்த மொட்டைப் பையன் ஒருவன் அந்த அறையின் கதவைத் திறந்து, 'சாப்' என்றான். முதியவர் என்னைக் காண்பித்து காலு சிங்கிடம் ஏதோ சொன்னார். காலு சிங் என்னைப் பார்த்து ஒரு சலாம் வைத்துவிட்டு, கதவை மூடிக்கொண்டான்.
பிறகு, அந்த முதியவர், எண்பத்து மூன்றாம் அறையை, தன்னிடம் இருந்த சாவி கொண்டு திறந்தார். பிறகு சொன்னார். "சார், நான் இந்த ஹோட்டலிலே, இந்த அறையிலே தங்கிக் கொண்டு, எடுபிடி வேலை முதல், பேங்க் வேலைகள் வரை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். அறைக்கு வாடகை கிடையாது. சம்பளம் என்று எதுவும் கிடையாது. எந்த வேளைக்கு என்ன சாப்பிடவேண்டும் என்றாலும் எல்லாம் ஃப்ரீ. எனக்கு எப்பொழுதுமே நைட் டூட்டிதான். இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை கீழே ஆபீஸில் இருப்பேன். காலை எட்டு மணி முதல் இரவு எட்டு வரை வேலை எதுவும் இல்லை என்றால், இந்த ரூமில் படுத்துத் தூங்கி விடுவேன். இன்றைக்குத் தூக்கம் வராமல் போனதால், கீழே வந்து ஆபீசில் உட்கார்ந்திருந்தேன். உங்களைப் பார்த்ததும், எப்படியாவது உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. நான் தமிழ் பேசியே இரண்டு வருடங்களாகிவிட்டன."
என்னை ஒன்றுமே பேசவிடவில்லை அவர்.
"சார், நீங்க எவ்வளவு நாட்கள் இந்தூரில் தங்கவேண்டும்?"
"சரியாகத் தெரியவில்லை. நாளை ஆபீஸ் சென்றால் நிலவரம் புரியும்."
"வரதராஜன், நீங்க இந்த ரூமில் இன்று இரவு முழுவதும் தங்கிக் கொள்ளுங்கள். நான் இன்று இரவு எட்டு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை, கீழே ஆபீசில் இருப்பேன். நாளை ஆகஸ்ட் எட்டாம் தேதி. நான் ஒரு இடத்திற்கு காலையில் போகவேண்டியுள்ளது. எனக்கு ஒரு நூறு ரூபாய் கொடுங்கள். நாளைக் காலை அல்லது மாலை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீங்க காலையில் கிளம்பும் பொழுது நான் வரவில்லை என்றால், ரூமைப் பூட்டி சாவியை, காலு சிங்கிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுங்கள்." என்றார்.
நான் ஒரு நூறு ரூபாயை எடுத்து, அவரிடம் கொடுத்து, "பரவாயில்லை பெரியவரே, நீங்க இதைத் திருப்பித் தரவேண்டாம்" என்றேன்.
அவர் சந்தோஷமாக அதைப் பெற்றுக் கொண்டு கீழே சென்றார்.
*** *** ***
அறையை ஒரு நோட்டம் விட்டேன். ஒரே ஒரு திறந்த அலமாரி. அதில் அந்தப் பெரியவரின் நான்கு செட் உடைகள், மடித்து வைக்கப் பட்டிருந்தது. கீழ்த் தட்டில் ஒரு சிறிய சூட் கேஸ். அட்டாச்சுடு பாத் ரூம். அறையில் கட்டில் உள்ள மூலைக்கு எதிர் மூலையில், ஒரு சிறிய, பழைய மர மேசை. அதில் இரண்டு இழுப்பு அறைகள். மேலே உள்ளதைத் திறக்க முடியவில்லை. கீழே உள்ளதைத் திறந்து பார்த்தேன். அதில் ஒரு நான்காக மடிக்கப்பட்ட காகிதமும், ஒரு பால் பாயிண்ட் பேனாவும் தவிர வேறு எதுவும் இல்லை. மேசையின் மேலே, காலு சிங் ஒரு தண்ணீர் ஜக் கொண்டுவந்து வைத்தான். பக்கத்திலேயே ஒரு கண்ணாடிக் குவளை. குளித்துவிட்டு வந்து, காலு சிங் கொண்டு வந்து கொடுத்த இரவுச் சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டு முடித்தேன். காலு சிங்கிடம் நான் நீட்டிய இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளில் ஒன்றை மட்டும் வாங்கிக் கொண்டு, சலாம் அடித்துச் சென்றுவிட்டான்.
கட்டிலில் எப்பொழுது படுத்தேன், எப்பொழுது தூங்கினேன் என்பதே நினைவில்லை.
*** *** ***
திடீரென்று விழிப்பு வந்தது. மின் விசிறி நின்று போயிருந்தது. அறையில் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு. வாட்சில் டார்ச் அடித்துப் பார்த்தேன். நேரம் 00:08 எங்கிருந்தோ மல்லிகை மணம். அறையில் குளிரும், மல்லிகை மணமும் மெலிதாகப் பரவியது. அப்பொழுது ஒரு பாட்டும் கேட்டது.
(தொடரும்)