செவ்வாய், 11 அக்டோபர், 2011

எட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை.

                             
எலெக்ட்ரானிக் சாமியாரைத் தேடி வந்தவருக்கு, சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும். ஒல்லியும் இல்லை, குண்டாகவும் இல்லை. கருநீல பாண்ட், வெளிர் பச்சை நிற சட்டை. கோதுமை நிறம், முகத்தில் மூக்கும், முழியும், மீசையும் பிரதான்யமாக இருந்தது.

"சார், நீங்கதான் எலெக்ட்ரானிக் சாமியாரா?"
"ஆமாம்."

"நீங்க துப்பறியும் நிபுணரா?"
"இல்லை"

வந்தவர் திகைத்தார். சற்றுத் தயங்கிவிட்டு, பிறகு - திரும்ப செல்ல எத்தனித்தார்.

"இருங்க. நான் துப்பறியும் நிபுணர் இல்லை. ஆனால் துப்பறியும் வேலையில், அடங்கா ஆர்வம் உள்ளவன். நிபுணரா இல்லையா என்று நீங்களும், வாசகர்களும்தான் சொல்லவேண்டும்!"
"அட! என்ன சார் நீங்க! அஞ்சு நிமிஷத்துல குழப்பி விட்டுட்டீங்க!"

"ஹ ஹா - உட்காருங்க. உங்க பேரு என்ன?"
"என் பெயர் கே வரதராஜன். எல்லோரும் என்னை சுருக்கமாக கே வி என்று அழைப்பார்கள்."

"சரி. கே வி. என்ன பிரச்னை?"

வந்தவர் ஏதும் பேசாமல், சற்று நேரம் எ சா முகத்தைப் பார்த்தார். பிறகு சற்றுத் தயங்கி, "நான் ஒரு கொலை செய்துவிட்டேன். இல்லை. ஒரு செயல் செய்தேன், அது ஒருவர் உயிர் இழக்கக் காரணம் ஆகிவிட்டதோ என்று ...  இல்லை இல்லை நான் செய்தது கொலையா இல்லை ஓர் ஆவிக்கு உதவியா - என்று குழப்பமாக உள்ளது."

சாமியார் வந்தவரை நிதானமாகப் பார்த்தார். "நீங்க என்ன சொல்ல வர்றீங்க? நீங்க ஒரு கொலை செய்திருக்கின்றீர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதாக இருந்தால், என் நண்பர், இன்ஸ்பெக்டர் ரங்கனை இங்கே அழைக்கின்றேன். நீங்க வாக்குமூலம் கொடுக்கலாம். ஆனால், கொலை செய்தாச்சு - அதுவும் ஏதோ ஓர் ஆவிக்கு உதவியாக - என்று நீங்கள் சொல்கின்றீர்கள் என்றால், அது என்ன - 'ஆவிக்கு உதவிய கே வி கதை' என்று சொல்லுங்க. அப்படி நீங்க செய்தது கொலை இல்லை - உதவி என்று தெரிந்தால், என் நண்பர் அப்பாதுரை என்று ஒருவர் இருக்கின்றார்; அவருடைய நண்பர் ஒருவரிடம், 'ததாஸ்துக் களிம்பு' என்று ஒரு களிம்பு இருக்கின்றதாம். அதை நெற்றியில் தடவிக் கொண்டு, ஓவர் நைட் ஒரு தூக்கம் போட்டு எழுந்தால், குற்ற உணர்வு எல்லாம் - it is gone! போயே போயிந்தி - என்று நினைவை விட்டு அகலுமாம்! அதை வரவழைத்து உங்களிடம் கொடுத்துவிடுகின்றேன்." என்று சொன்னார் சாமியார். 

"சரி சாமீ - நான் என் கதையைச் சொல்கிறேன். முழுவதுமாகக் கேட்டு முடிவைச் சொல்லுங்கள்."

"டிர்ர்ரிங் --- படம் ஆரம்பிக்கலாம்" என்றார் சாமியார்.

*** *** *** *** 
கே வி சொல்கிறார்: 

அது ஆண்டு, இரண்டாயிரத்து எட்டு. ஆகஸ்ட் மாதம். ஏழாம் தேதி. காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு, மீனம்பாக்கம் ஏர்போர்ட் கிளம்பினேன். முதலில் மும்பை, பிறகு அங்கிருந்து இந்தூர் செல்லவேண்டும். எல்லாம் கம்பெனி வேலை விஷயமாக. நான் வேலை பார்ப்பது ஒரு பேரிங் கம்பெனி. பேரிங்குகளின் மேற்குப் பிராந்திய விற்பனை மற்றும் இருப்பு விவரங்களில் ஏகப்பட்ட குளறுபடி. அவை யாவற்றையும் அலசி ஆராய்ந்து, ஒரு பைசா விடாமல் துல்லியமாக ஒரு ரிப்போர்ட் முதலாளிக்கு அளிக்கவேண்டும் என்பது, இடப்பட்ட வேலை. அந்த ரிப்போர்ட்டை ஆதாரமாக வைத்துக்கொண்டு, பல அதிரடி மாற்றங்கள் செய்ய முதலாளியும், பெர்சனல் பிரிவும் என்னை நம்பி இருந்தார்கள். 
   
இந்தூர் ஏர்போர்ட் சென்றடைய, மாலை நேரம் ஆகிவிட்டது. ஆச்சரியகரமாக, விமான நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள ஹோட்டல்களில் எல்லாம் ரூம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு அரசியல் தலைவர் கூட்டம் நடக்க இருப்பதால், பல ஹோட்டல்களில் ரூம் இல்லை என்றனர். 

அப்பொழுது, என் நண்பர் சுந்தரம் கிளேட்டன் சீனிவாசன் சொல்லும் ஒரு ஃபார்முலா ஞாபகம் வந்தது. 'மிக தரம் உயர்ந்த ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள வசதி குறைவான சாதாரண வகுப்பு ரூம்களும், மிகவும் சாதாரண 'சி' கிரேட் ஹோட்டல்களில்   இருக்கின்ற உயர் வகுப்பு ரூம்களும் பெரும்பாலும் காலியாக இருக்கும்.' என்பதுதான் அது. 
   
உடனே கண்ணில் பட்ட எட்டு மாடி ஹோட்டல் ஒன்றை அணுகினேன். 
     
(தொடரும்) 
                              

18 கருத்துகள்:

  1. //அப்பொழுது, என் நண்பர் சுந்தரம் கிளேட்டன் சீனிவாசன் சொல்லும் ஒரு ஃபார்முலா ஞாபகம் வந்தது. 'மிக தரம் உயர்ந்த ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள வசதி குறைவான சாதாரண வகுப்பு ரூம்களும், மிகவும் சாதாரண 'சி' கிரேட் ஹோட்டல்களில் இருக்கின்ற உயர் வகுப்பு ரூம்களும் பெரும்பாலும் காலியாக இருக்கும்.' என்பதுதான் அது. //

    வாஸ்தவந்தான்.. ஆபத்துக்கு பாவமில்ல.. (நெருக்கடிக்கு வசதி தேவை இல்லை)

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. எ.சா வின் லீலைகள் தொடரட்டும்.. கே.வியின் பிரச்சினை ஆர்வத்தை கிளப்புகிறது.. தாதஸ்து களிம்பு வைத்தியம் நல்ல இடை சொருகல்...

    பதிலளிநீக்கு
  4. எட்டாம் வருசம், எட்டாம் மாதம், ஏழாம் தேதி.. ஓஹோ..அப்படி வரீங்களா?

    பதிலளிநீக்கு
  5. அமர்க்களமான ஆரம்பம்

    ஆவிக்கு உதவிய கேவி.. ஜூப்பரு :-))

    பதிலளிநீக்கு
  6. ஆரம்பமே சுவரசியமாக இருக்கே!அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்ப்பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நல்லா கிளப்பியிருக்கீங்க, suspense தாங்கல தல

    பதிலளிநீக்கு
  8. அடுத்த பதிவிர்கான எதிர்பார்ப்புடன். . .

    பதிலளிநீக்கு
  9. "எட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை."

    8.8.08??

    nice..

    பதிலளிநீக்கு
  10. ஆவிக்கு உதவிய கே.வி கதையா இல்ல ஆவிக்கு உதவி கேவிய கதையா.. நல்ல சுவாரஸ்யமான ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
  11. என்னங்க இப்படி பொசுக்குன்னு நிறுத்திடீங்க! ரொம்ப சுவாரசியமான ஆரம்பம். ததாஸ்த்து களிம்பை பற்றி அழகாக இதில் சேர்த்திருப்பது அருமை. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  12. அப்போ படிச்சது ஞாபகம் இருக்கா?

    எட்டெட்டு

    பதிலளிநீக்கு
  13. //முழுவதுமாகக் கேட்டு முடிவைச் சொல்லுங்கள்." //

    ரைட்.

    பதிலளிநீக்கு
  14. ததாஸ்துக் களிம்பு வேறேயா? சரிதான்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!