அறிவு ஜீவியின் தலை தெரிந்ததுமே எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
"மாமா எங்க எல்லோருக்கும் லீவு விட்டாச்சு. .... ஆனா ஒரு கேம் கூட ஓடாம இந்த பிளே ஸ்டேஷன்ல பாருங்க ....இவன்தான் என்னவோ பண்ணிட்டான் .... எல்லா டிஸ்கையும் அம்மா எடுத்துப் பரண்லே வச்சிருந்தா ... " இப்படிப் பல முனையிலிருந்து பல தகவல்கள் வந்து ஜீவியின் மடியில் - சாரி - காதில் விழுந்ததும், சுறு சுறுப்பானார்.
பொதுவாகப் பையன்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் பொருள்களைப் பாது காப்பதில் இல்லை என்பதால் அங்கிதாவை அழைத்து மேல் விவரங்களைக் கேட்டுக் கொண்டார். பின்னர் ஒரு டிஸ்க் கேட்டு வாங்கிக் கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் ஒரு தடவை, போட்டுக் கொண்டு இரண்டு தடவை, லைட் போட்டுக் கொண்டு ஒரு தடவை, ஜன்னலோரம் போய் தகட்டைச் சாய்த்து என்று பார்த்துக் கொண்டிருக்க அவர் பின்னேயே ஹாம்லின் நகரத்து குழலூதுபவர் பின் போன குழந்தைகள் மாதிரி, ஜீவி பின்னாலேயே அலை அலையாக அலைந்து கொண்டிருந்தனர்.
ஜீவி தன் விஷுவல் பரிசோதனை முடிந்ததும், தட்டை முகர்ந்து பார்த்தார், பின் (குழந்தைகள் யாரும் பாராத போது) கொஞ்சம் தொட்டு நாக்கு நுனியிலும் வைத்துப் பார்த்தார். பிறகு ஒரு முறை வீட்டுக்குள் சுற்றி வந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமானது.
"அர்ஜுன் சொன்ன மாதிரி கண்ணாடி துடைக்கும் துணியை வைத்துத் துடைத்தால் போதும் என்றதும், கோரசாகக் குழந்தைகள் அனைவரும் "பின் ஏன் கேம் வரல்லை?" என்றனர்.
"நீங்கள் துடைத்த போது தகட்டைத்தான் துடைத்தீர்கள் ஆனால் உள்ளே இருக்கும் லென்ஸ் மேல் முதலில் படிந்த எண்ணெயைத் துடைக்கவே இல்லை. இப்போ நம்ப அதையும் துடைச்சுப் பார்ப்போம் "என்றார்.
துடைத்ததும் ஒரு கேம் லோடும் ஆனது. அங்கிதா "அப்பவே நான் நெனச்சேன் இந்த ஆனந்த் போட்ட ஆயில் தான் இப்படிப் பண்ணியிருக்கும் என்று " என்று ஆரம்பித்ததும் "இன்னொரு தடவை அப்படி சொன்னேன்னா ... " என்று கிட்டே வந்த ஆனந்தை ஜீவி அப்படியே இழுத்துக் கொண்டார்.
இதுக்கெல்லாம் ஒரு வழியில் கொசு தான் காரணம் என்ற ஜீவி, பிறகு குழந்தைகளுக்கு [ஏன் பெரியவர்களுக்கும் தான் ] விளக்கிச் சொன்னார் :
"நாம்ப பிளக்ல போடற திரவக் கொசு விரட்டியில் இருக்கும் பரஃபின் ஆயில் ஆவியாகி கொசுவை விரட்டுகிறது பின் இரவில் சற்றுக் குளிர்ந்ததும் திரவத் திவலை ஆகி விடுகிறது. அதனால் தான் நாம் ரொம்ப நாள் உபயோகிக்காத சி டி, டி வி டி எல்லாவற்றிலும் இப்படித் திவலைகள் காணப் படுகிறது. துடைத்த பின் உபயோகிப்பது நல்லது. " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராஜம் அத்தை, "அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே ?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
(ராஜம் அத்தை கேட்டதற்கு, 'ஆமாம்' அல்லது 'இல்லை' அல்லது 'தெரியவில்லை' என்று நினைப்பவர்கள் - பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள். குழந்தைகள் பார்க்காதபோது அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.)