Diwali at Nagapattinam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Diwali at Nagapattinam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.10.09

நாகையில் தீபாவளி !

நாகையில் தீபாவளி !
அது என்னமோ எந்த பண்டிகை வந்தாலும் என்னால் அந்த பண்டிகையை நாகையில் கொண்டாடியதை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது எனக்கு மட்டும் ஏற்படும் கிளர்வா அல்லது எல்லோர்க்கும் பொதுவான நிகழ்வா?பொருளாதார ரீதியாக இப்பொழுது வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் ஒப்பிட்டுப் பார்த்தால்அந்த கைதான் தாழ்கிறது.
தீபாவளி அடுதத மாதம் என்பதற்கு முன்னமே மனம் தீபாவளியை ஒட்டிய நிகழ்வுகளில் பதிந்து அதை எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது என்று திட்டம் தீட்டுகிறது. துணி வாங்கவேண்டும், அதை ஷ்யாம் வீடடு எதிரில் திண்ணையில் கடை வைத்துள்ள ராஜா டெயிலரிடம் கொடுத்து எப்படியாவது இந்த வருஷ பண்டிகைக்குள் தைத்து வாங்கவேண்டும். பட்டாஸூகள் வகை வகையாக வீராசாமி கடையில் வாங்கவேண்டும். இதற்கு ஆகும் செலவுக்கு வீட்டில் கெஞ்சி அல்லது அடம் பிடித்து அனுமதி வாங்கவேண்டும்,எவ்வளவு காரியங்கள்.
நாகையில் ரெடிமேட் துணி வாங்க பெரிய கடைகள் இரண்டுதான். நாவல்டி ஸ்டோர் மற்றும் கீதா ஸ்டோர். ரெடிமேட் ஷர்ட் வாங்க என் பாட்டி ஒப்புத்துக்க மாடடார்கள். வளரும் பையன் துணி வாங்கி தைத்தால்தான் ஆண்டுவரும் என்ற ஒத்தை வார்த்தையில் எங்கள் "ரெடிமேட் ஸ்லாக்"ஆசை புஸ்வாணமாகிவிடும்! ராவுஜி வாங்குகிற காசுக்கு வஞ்சனையில்லாமல் தொள்புள என்று நீள்மாக அகலமாக ஷர்ட்டும் அரை ட்ராயரும் தைத்து கொடுப்பார். பத்தாவது படிக்கும்போதுதான் என் ரெடிமேட் ட்ரஸ் ஆசை நிறைவேறியது!
அடுத்து பட்டாஸ். பட்டாஸ் கடைகள் தீபாவளிக்கு பத்து நாள் முன் தான் வரும். வீராசாமி மெடிகல் ஷாப் பட்டாசு கடையாக உருமாறும். அந்திகடைக்கு எதிரில் ஒரு கடை, பெரிய கடைத் தெரு, சக்தி விலாஸ் பஸ் ஆபிஸ் பக்கம் ஒன்று என கடைகள் மெதுவாக சூடு பிடிக்கும். நானும் கிருஷ்ணனும் ஆளுக்கு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி எவ்வளவு விலை என பட்டியல் இடுவோம். தினமும் அதில் வகை வாரியாக மாற்றங்கள் செய்வோம். பாட்டி பங்கு, அப்பா பங்கு எனக் கோரிக்கைகள் , அழுகை, ஆர்பபாட்டம் என்று எல்லாவிதமான் முயறசிகளும் பட்டியலின் மதிப்பை மாற்றும். கடையில் ஷேர் மார்கட் மர்திரி பட்டாஸ் விலை மாறிக்கொண்டே இருக்கும். வாயில் வந்த விலைதான். ஒரு தீபaவளிக்கு முன் தினம் வீராசாமி கடையே ப்ற்றிக்கொண்டு தீபாவளி கொண்டாடியது!
யார் வீட்டில் அதிக வெடி குப்பை சேர்கிறது என்ற போட்டி எல்லா காலத்திலும் உண்டு. அதிக குப்பைகள் வருகிற மாதிரியான வெடிகள் அதிக அளவில் வாங்குவோம். பட்டாஸ் வாங்கி நமர்க்காமல் பாதுகாக்க வெய்யிலில் வைத்து அல்லது அடுப்பின் மேல் ஜாக்கிரதையாக வைத்து சூடு பண்ணி , கோழி அடை காப்பது மாதிரி காபந்து பண்ணுவது ஒரு சுகானுபவம். தீபாவளி சமயம்தான் புயலும் தன் தலையை நீட்டும். ஒரு மாதிரி டென்ஷன்தான்!
நாகை சிறிய ஊர். அங்கு வேலை வாய்ப்புகள் குறைவு. அதனால் வெளி ஊரிலிருந்து வரும் பணம்தான் பெருமளவில் புழங்கும். விவசாய வருமானம் மிக குறைவு. பண்டிகைகள், நாகையிலிருந்து வெளியூரில் வேலைக்காக சென்றவ்ர்கள் அனுப்பும் பணத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்காக ஊருக்கு வரும் மாணவர்கள், இளைஞ்ர்கள், இந்த ஊரில் பெண் எடுத்த ஆடவர் என திரளாக வருபவர்கள் நாகை கடைகளில் வியாபாரம் செய்வர். தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்பே ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் அலை மோதும்.
தீபாவளிக்கு புது சினிமா வரும். முதல் நாள் முதல் ஷோ... பெரிய விஷயம். தீபாவளிக்கு முதல் நாள் இரவு அனேகமாக் எல்லார வீட்டிலும் வெங்காய சாம்ப்பார், உருளைக்கிழங்கு கறி என அமர்க்கள்ப்படும். காலை 2 மணிக்கே ஊர் எழுந்துவிடும். மங்கிய லைட் ஒளியில், விறகடுப்பில் அண்டாவில் வென்னீர் போட்டுக் குளியல். புதிய ட்ரஸ் அணிந்து ஸ்வாமி நம்ஸ்காரம் பண்ணி கையில் மத்தாப்புடன் வாசலில் வாண வேடிக்கை ஆரம்பிப்போம். ரேடியோ கூட தொந்தரவு செய்யாத காலத்தில் ஒரே நோக்கம் வெடி வெடிப்பதுதான். மற்றவர் வீட்டிற்கு செல்வது என்ற கலாசாரம் நகரத்தின் பாதிப்புதான். தீபாவளியை நிறைய சத்தத்துடன், நிறைய புகையுடன் நிறைந்த மனத்துடன் கோலாகலாமாகக் கொண்டாடுவோம்.

with love and affection,

ரங்கன்

எங்கள் Blog ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும், தினமும் படிப்பவர்களுக்கும், அவ்வப்போது கமெண்ட் எழுதி எங்களை ஊக்கமும் உற்சாகமும் அடைய வைப்பவர்களுக்கும், 'எங்கள்' முன்னேற்றத்தில் என்றும் ஈடுபாடு கொள்ளும் உங்கள் எல்லோருக்கும், மேலும் சக பதிவர்கள் அனைவருக்கும் 'எங்கள்' இதயங்கனிந்த, இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு வளமுடன்! - ஆசிரியர் குழு.