If you have to judge them லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
If you have to judge them லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.2.10

நீங்க நீதிபதி ஆனால்?

கடுமையான கட்டு திட்டம் கொண்ட ஒரு ரஷியக் கம்பெனியில் தினசரி ஒருவன் வண்டியில் வைக்கோல் எடுத்துச் செல்வதைப் பார்த்த காவலாளி "எதற்கு இந்த குப்பையை தினசரி கொண்டு போகிறாய்?" என்று கேட்டதற்கு அவன், "நான் தினம் கொண்டு போவது குப்பையை அல்ல, புதுப் புது வண்டியை " என்றானாம். இப்போது ஆடோமேஷன் அதிகமாகி விட்ட கால கட்டத்தில் இப்படிக்கூட சிரமப் பட வேண்டியது இல்லை. கம்ப்யூட்டர் புரோகிராமில் ஒரு சிறு வரியை சேர்த்தால் போதும். பணம் யாருக்குக் கொடுத்தாலும் இந்த கணக்குக்கு லட்சத்துக்கு ஒரு பைசா செலுத்து என்று ஒரு ஆணை. லட்சத்தில் ஒரு பைசா மிக அற்பத் தொகை எனவே சரிபார்க்கும் இயந்திரங்கள் கண்டுகொள்ளாது. பல துளி சிறு வெள்ளம். பல வெள்ளம் பெரும் பிரவாகம். மனித உற்று நோக்கலை இயந்திரங்கள் செய்ய முற்படும்போது இந்த மாதிரி தகிடு தத்தங்கள் எளிதாகி விடுகின்றன. இன்றைக்கும் பெரிய நிறுவனங்கள் ஹாக்கிங் நிபுணர்களை அமர்த்திக் கொண்டு தம் மென்பொருள்களை சரி பார்க்கிறதாகச் சொல்கிறார்கள்.

ஒரு பிரபல ஐடி கம்பெனியில், தனி நபர் ஒருவர் - கம்பெனிப் பணத்தை, கோடிக்கணக்கில் - தன் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து மூன்றாண்டுகளாககம்பெனியை ஏமாற்றி வந்துள்ளார் என்ற செய்தி மிக்க வியப்பை அளிக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் என்றால் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். கடல் அளவு புழங்கும் பெருந்தொகைகளில் ஒதுக்கப்படும் சிறு தொகைகள் களவு போவது கண்டுபிடிக்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் கோடிக் கணக்கில், ஒரு தனி நபர், தொடர்ந்து செய்கிறார் என்றால் -- இது எப்படி அய்யா சாத்தியம்? இன்டெர்னல் ஆடிட், எக்ஸ்டெர்னல்ஆடிட் - இவர்களெல்லாம் எதற்குத்தான் இருக்கவேண்டும்? அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் -இது தனி நபர் செய்த தகிடுதத்தம் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள்

இதே நேரத்தில், அமெரிக்காவில் வசித்து வந்த ஒருவர், தன்னால் வரிகட்ட இயலவில்லை, பண நெருக்கடி என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டுக்குத் தீ வைத்துவிட்டுப் பின் பிளேனை எடுத்துக்கொண்டு போய் - ஒரு ஏழு மாடிக் கட்டிடத்தின் மீது மோதி - அந்தக் கட்டிடத்தையே எரித்துத் தரைமட்டமாக்கி தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரைவிடுகிறார். மனித இனம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

சுயநலம், ஏமாற்றிப் பணம் சேர்ப்பது, தனக்குப் பணக்கஷ்டம் என்றால் பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது - இதுமாதிரியான விபரீத சிந்தனைகளுக்கு என்ன காரணம்? இதை சட்டம் மட்டும் சரி செய்ய இயலுமா?

இப்போதெல்லாம் எப்படியோ தெரியவில்லை. ஆனால் அந்தக் காலத்தில், ஒரு பிரபலதனியார் கம்பெனியில் மெடிகல் பில்லில், நாற்பத்தொன்று ரூபாய் என்பதை நாற்பத்தொன்பது ரூபாயாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு அற்ப தொகையாக மாற்றம் செய்த ஒருவர் மறுநாளே வீட்டுக்கு அனுப்பப் பட்டார். இந்த வகையில் கடுமையான தண்டனைகள் இருந்தால் தான், தனிநபர் ஒழுக்கம், நியாய உணர்வுகள் எல்லோரிடமும் தலை எடுக்கும்.


மீண்டும் ஒரு கதைக்கு வருவோம். ஒரு அரசன் காட்டில் வேட்டையாடச் செல்லும் போது தாகம் எடுத்தது. மந்திரியுடன் பக்கத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று மோர் வாங்கிக் குடித்து விட்டு அதற்கு ஒரு காசு விலையாகத் தந்தானாம். " மகா ராஜா, உங்களுக்கு ஒரு குவளை மோர் காசு கொடுக்காமல் வாங்கிக் கொள்ள அதிகாரம் இல்லையா " என்று அமைச்சர் கேட்ட போது அரசர், " இன்று நான் காசு கொடுக்காமல் மோர் வாங்கிக் குடித்தால் நாளை என் அதிகாரிகள் இந்த ஊரையே சுருட்டிக் கொண்டு விடுவார்கள் " என்றாராம். இவர் அல்லவோ அரசர்! இது அல்லவோ நல்லாட்சி!!

ஆனால் இன்று நடப்பதென்ன? பெரிய பெரிய தலைகள் கொலை, கொள்ளை எல்லாம் செய்து விட்டு சட்ட ரீதியாக நிரூபிக்க முடியாத ஒரே காரணத்துக்காக வெளியில் உலவுவது மட்டும் அல்லாமல் மேலும் மேலும் கோடிகளை ஒதுக்கிக் கொள்கிறார்கள். அவர்களது அரசியல் ஆதரவு அவசியமாதலால் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டியதாகிறது. இவ்வகையில் குற்றம் இழைப்பவர்களை, படத்துடன் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு உட்பட -எல்லா மீடியாக்களிலும் வெளியிடவேண்டும். அது எப்படி சாத்தியம் ஆகும்? இன்றைய நிலை அதற்கு சாதகமாக இல்லையே!

சட்டங்கள் கடுமையாக்கப் படும்போது சாதாரண இருபது ரூபாய் லஞ்சக் கேஸ்கள் பிடிபடுகின்றன. பிடிப்பவர் வாரம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் முதலையாகக் கூட இருக்கக் கூடும். அதற்கும் மேலே, மேலே, தினசரி ஐந்து கோடி சுருட்டும் பெருந்தலைகள் இருக்கக் கூடும். இந்த அவலத்தை எப்படி எதிர் கொள்ளலாம், குற்றம் புரிவோருக்கு வேறு என்னென்ன தண்டனைகள் அளிக்கலாம்? வாசகர்கள் தீர்ப்பு கொடுங்கள்.