In search of Mr K Part 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
In search of Mr K Part 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.7.11

சோணகிரியை லாக்கப்புல போடுங்க! :: K13

                                   
அத்தியாயம் 13: "சோணகிரியை லாக்கப்புல போடுங்க" 

மருந்துக் கடைகாரரிடம், தங்களை அறிமுகப் படுத்திக்கொண்ட கா சோ வும் எ சா வும், தங்கள் விசாரணையைத் தொடர்ந்தனர். 

கா சோ: "அது எப்படி கிழமை, நேரம் எல்லாம் அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?"

ம க கா: "இந்தப் படத்துல இருக்கற மனிதர், அடிக்கடி இந்தக் கடையில் அம்ருதாஞ்சன் வாங்குவார். தலைவலியா என்று கேட்டால் - இல்லை அம்ருதாஞ்சன் வாசனை தனக்குப் பிடிக்கும் என்பார். தவிர, அவர் இந்தக் கடையிலிருந்துதான் அடிக்கடி ஃபோன் பேசுவார்."

எ சா: "என்ன பேசுவார் யாருக்குப் பேசுவார் என்பது ஏதேனும் ஞாபகம் இருக்கின்றதா?"

ம க கா: "ரொம்பச் சின்னக் குரலில் பேசுவார். இவர் அதிகம் பேசமாட்டார். எதிர் முனையில் இருப்பவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பார், சில சமயங்களில், தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருக்கும் சிறிய குறிப்பு நோட்டில் குறிப்பு எழுதிக்கொள்வார்."

கா சோ: "அந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது?"


ம க கா: "அன்று மாலை மணி மூன்றுக்கு மேல் இருக்கும். மூன்றரை கூட ஆகி இருக்கும். அப்போ ஒருவர், இந்தக் கடைக்கு ஃபோன் செய்ய வந்தார். அவரை இந்த ஏரியாவில் இதுவரைப் பார்த்ததில்லை. ரொம்பப் பதற்றத்தில் இருந்தவர் போல காணப்பட்டார்."

எ சா: "அப்புறம்?"

ம க கா: "அவர் யாருக்கோ ஃபோன் செய்ய மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டு இருந்தார். ஆனால் மறுமுனையில் யாரும் ஃபோனை எடுக்கவில்லை என்று அலுத்துக் கொண்டார்."

எ சா: "பிறகு?"

ம க கா: "ஃபோனை மீண்டும் மீண்டும் பயன் படுத்துவதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். என்னுடைய டூட்டி முடிந்து நான் போவதற்குள், அவரைக் கவனித்துக் கொள்ள, வரப் போகின்ற புதிய நபர் ஒருவரிடம் விவரங்கள் கூறிவிட்டு, எனக்கு ஒரு அவசர வேலை இருப்பதால், நான் செல்லவேண்டும். ஆனால் இந்த ஆள் வீட்டிலும் இல்லை, அவரிடம் மொபைலும் இல்லை, இன்னும் ஒரே ஒரு கால் - டாக்டரிடம் பேசிவிட்டு, நான் கிளம்புகிறேன். உங்கள் நேரத்தை வீணாக்கியதற்கு, இந்த நூறு ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நூறு ரூபாய் கொடுத்தார்."

எ சா: "பிறகு டாக்டருக்கு ஃபோன் செய்தாரா?" 

ம க கா: "ஆமாம். டாக்டரிடம் பேசியதும், ஒருவாறாக நிம்மதியடைந்து காணப்பட்டார். பிறகு, என்னிடம். அப்பாடி ஒரு கவலை தீர்ந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் இந்தக் கடைக்கு வருவார். அவர் கிழவர் உடல்நிலை பற்றியும், அடுத்த வேளை மருந்து எப்பொழுது என்றும் கேட்டுக் கொண்டு போய், அதற்குத் தகுந்தாற்போல் செய்துவிடுவார். ஆனால் வருபவர் யார், எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. யாராவது வந்து, 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' என்று கேட்டால், அவருக்கு நான் பதில் சொல்கிறேன்.' என்றார்."

கா சோ: "அப்புறம்" 

ம க கா: "அதற்குச் சற்று நேரம் கழித்து, இந்த ஆள் வந்தார். அவரைப் பார்த்ததும், ஒரு அம்ருதாஞ்சன் பாட்டிலை எடுத்துக் கொண்டே, என்ன வேண்டும்? என்று கேட்டேன். ஆனால், அவர், 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' என்று கேட்டார். நான் உடனே, அந்தப் புதியவரைப் பார்த்தேன். அவர், 'கிழவர் மருந்து குடித்து வருகிறார், அடுத்த வேளை மருந்து, இன்று இரவு ஏழு மணிக்கு' என்றார். உடனே, இவரும் நானும், ஒரே நேரத்தில் வாட்சைப் பார்த்தோம். அப்பொழுது மாலை மணி நான்கு." 

எ சா: "அதற்குப் பிறகு என்ன நடந்தது?"

ம க கா: "இவர் உடனே அவசரம் அவசரமாக வீட்டை நோக்கிச் சென்றார். அதற்குப் பின் இவர், சற்று நேரம் கழித்து, ஒரு ஆட்டோவில் இந்தப் பக்கம் சென்றதைப் பார்த்தேன்."

கா சோ: "டெலிஃபோன் செய்ய வந்தவர்?"

ம க கா: "அவர், தகவல் சொன்னதும், உடனே கிளம்பி சென்றுவிட்டார்." 

எ சா: "சரி என்னுடைய செல்லில் உள்ள சில ஃபோட்டோக்களைக் காட்டுகின்றேன். அவர்களில் யாரையாவது நீங்க இந்தப் பக்கம் அடிக்கடி பார்த்திருக்கின்றீர்களா என்று பார்த்துச் சொல்லுங்கள்." என்று சொல்லி, கார்த்திக் வீட்டுப் பக்கம், மாருதி வொர்க் ஷாப் பக்கம் வந்தவர்களை, சோணகிரி எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினார். 

ம க கா: எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தபின் -- "ஊம் ஹூம் - இவர்களில் யாரையும் நான் இந்தப் பகுதியில் பார்த்ததில்லை... சார் - கொஞ்சம் இருங்க! இது எல்லாம் என்ன ஃபோட்டோ?" என்று கேட்டார், எ சா வேகமாக விரலால் தள்ளிய சில ஃபோட்டோகளைப் பார்த்து. 

எ சா: "இந்த ஃபோட்டோ எல்லாம் நாங்க ஒரு கார் விபத்து நடந்த இடத்தில், நேற்று எடுத்தவை. இதுல இருக்கறவங்க எல்லோரையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்."

ம க கா: "சார் இதோ இந்தக் காருக்குப் பக்கத்தில் நிற்பது யாரு?"

எ சா: "ஏன் கேட்கிறீர்கள்?" 

ம க கா: "சார் அந்த வெள்ளிக் கிழமை, இங்கே வந்திருந்து, கிழவர் உடல் நிலை பற்றிக் கூறி, அடுத்த வேளை மருந்து பற்றிக் கூறி, எனக்கு நூறு ரூபாய் கொடுத்துச் சென்றவர், இவர்தான்" என்றார், சோணகிரியின் படத்தைக் காட்டி. 

கா சோ உடனே, கடைக்கு சற்றுத் தள்ளி, அந்தப் பக்கம் போய் சோணகிரியை ஃபோனில் அழைத்து, அவரிடம் ஐந்து நிமிடங்கள் ஏதோ பேசினார். சோணகிரி அலுவலகத்தில் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டார். 
          
             
அதற்குப் பிறகு, கா சோ, இன்ஸ்பெக்டர் ரங்கனை ஃபோனில் அழைத்து, "ஆபீஸ்ல இருக்கற சோணகிரியை, உடனே பிடித்து லாக் அப்பில் போடுங்க. அவருடைய வீட்டுக்கு காவலாக இரண்டு போலீஸ்காரர்களை மஃபடியில் அனுப்பி, சந்தேகப் படும்படி யாரு அவர் வீட்டருகில் நடமாடினாலும் அவர்களை கைது செய்து போலீஸ் லாக் அப்பில் வையுங்கள். அவருடைய பெண் ஈஸ்வரிக்கு ஃபுல் போலீஸ் ப்ரொடெக்ஷன் கொடுங்க. முழு விவரங்களும் பிறகு ஃபோனில் சொல்கிறேன்" என்றார்.   
                    
(தொடரும்)