Independent thoughts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Independent thoughts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.8.10

சுதந்திர தின சிந்தனைகள்.







ஆகஸ்ட் 15 என்றவுடன் நினைவுக்கு வருவது நள்ளிரவில் பெற்றோம் விடுதலை எப்போது விடிவு வருமோ என்ற (மு.மேத்தா?) குறுங்கவிதை, மற்றும் கொடித்துணியைக் கிழித்துக் கோவணமாகத் தந்தேன் என்ற சமத்காரச் சொல்லாட்டமும்தான்.  
     
சுதந்திரம் நம் மக்களுக்கு, ஒரு செண்ட்டிமெண்ட்டல் கிளுகிளுப்பு தவிர வேறு எதையும் தரவில்லை. எதிலிருந்து சுதந்திரம் பெற்றோம்?? ஆங்கிலேயருக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட்டு, வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாக இப்போது நம்மவராலேயே சுரண்டப் பட்டு சோகத்தில் தவிக்கிறோம். இதில் நம் (கம்ப்யூட்டர், கார், வீடு என்று சற்று வசதியாக வாழ்கின்ற) ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுப் புது மாதிரியாக சுரண்டலுக்கும் பிளாக்மெயிலுக்கும், அச்சுறுத்தலுக்கும் மன மயக்கங்களுக்கும் ஆளாகி கௌரவம் மரியாதை இழந்து தாம் தவிப்பதையும் உணராது அவலத்தில் இருக்கிறார்கள்.   
                   
இந்த நிலையில் ஒரு சில நூறு கோடிகளை செலவழித்து சுதந்திர தினம் கொண்டாடுவது ஒரு கேலிக் கூத்து என்பதைத் தவிர வேறு என்ன? தவறான வழியில் சம்பாதித்த செல்வாக்கு என்பதைத் தவிர வேறு தகுதியேதும் அற்ற பலப் பலர் லட்சாதிபதிகள் அல்ல அதற்கும் மேலாக கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பதைக் காண்கிறோம். கேவலமான நடத்தையும் குற்றவாளித்தனமும் கொண்ட அயோக்கியர்கள் தொலைக் காட்சியில் தோன்றி " நான் குற்றம் இழைத்தேன் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது " என்று கேட்கிறார்கள். (நான் குற்றம் செய்ய வில்லை என்று பெரும்பாலும் இவர்கள் சொல்வதில்லை என்பது ஒரு விசித்திரம்). 
                   

யாரும் யாரும் கூடி யாரைக் கவிழ்க்கலாம் என்பது தவிர வேறு லட்சியங்கள் அற்ற அர்சியல்வாதிகளால் சீரழிகிறோம். அரசில் எனக்குப் பங்கு என்று கொள்ளைக்குத் துணைபோன சின்னத் திருடர்கள் பெரிய திருடர்களிடம் உரிமை கொண்டாடும் வெட்கமற்ற காட்சிகள் கண்முன்னே விரிகின்றனஇந்த லட்சணத்தில் யாரோ சில ஆயிரம் குழந்தைகளை விடிகாலையில் எழுப்பி புது சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி யாரோ ஒரு பூஜ்யர் பித்துக் குளித்தனமாக உளறுவதைக் கேட்கவும் கை பிசு பிசுக்க ஓரிரண்டு பப்பரமுட்டுக்களை வாங்கிக் கொள்ளவும் அனுப்பி வைக்கிறோம். " இல்லைன்னா டீச்சர் திட்டுவாங்க! " ( டீச்சரை திட்ட வேறு ஏற்பாடுகள் இருக்கின்றன.)
                       

பெரும்பதவிப் பெருச்சாளிகள் மைக் முன்னே நின்றுகொண்டு லட்சியப் பிரசங்கங்கள் செய்வதைக் கேட்கும் போது சிரிப்பு வரவில்லை, அழுகை வருகிறது.
                      
அண்மையில் பயங்கரவாதிகளை, "தயவு செய்து பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் " என்று கெஞ்சாத குறையாக அழைப்பு விடும் காமெடிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இடையே 600 டன் (கிலோ இல்லை டன்) வெடி மருந்தை சில புத்திசாலிகள் வண்டியில் ஏற்றி அனுப்பி, அவை காணாமல் போய் வெறும் வண்டிகள் மட்டும் தெருவில் அம்போ என்று நிறுத்தப்பட்டிருந்தனவாம். இந்த வெடிமருந்து எத்தனை இந்தியர்களை அல்லது இந்தியச் சொத்துக்களை அழிக்கப் பயன்படப் போகிறதோ யாரறிவார்?

                                        

கைதேர்ந்த குற்றவாளிகளை "அவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அழகே அழகு " என்று பாராட்டி லாபம் பார்க்கிறார்கள். ஒரே குத்தில் எதிரியை (எதிரிகள் ஒவ்வொருவராகத் தான் வர வேண்டும் என்பது எழுதாத விதி!) பம்பரமாக நாற்பது அடி தூரத்துக்கு சுழற்றி அடிப்பதாகக் காட்டி ஹீரோக்கள் சிருஷ்டிக்கப் படுகிறார்கள். அவருக்குப் படத்துக்குப் பதினைந்து கோடி, இவருக்கு பாட்டுக்கு 2 லட்சம், காமெடிக்காரருக்கு ஷாட்டுக்கு 2 லட்சம் என்று சுவாரஸ்யமாகச் செய்திகள் போட்டு மக்கள் வெங்காய பக்கோடாப் பொட்டலம் வாங்கி ரசித்துச் சாப்பிடுவதைப் போல கொறித்துத் தள்ளுகிறார்கள்.
                          
மீட்பர் எப்போது வருவார்? வருவாரா? இல்லை படிப்படியான அழிவுதானா? ஆண்டவனே அறிவான்.