
செப்டெம்பர் பதினொன்று. பாரதியார் (நினைவு) தினம்.
பாரதியார் வரகவி. நினைத்த மாத்திரத்தில் நினைத்த பொருள் பற்றி கவி பாடும் வல்லமை பெற்றவர். எதுகை, மோனையுடன் வார்த்தைகள் விழும்போது அவரே ஆச்சர்யப் பட்டுப் போவாராம்.
மவுன விரதம் இருப்பார். சமயங்களில் பதினைந்து நாள் கூட பேசாமல் இருப்பார். ஒரு வினோதம். பேச மாட்டாரே தவிர கவிதை புனைந்தவுடன் வாய் விட்டுப் பாடுவார்.

பாரதியார் நன்கு அறிந்த மொழிகள். தமிழ், ஆங்கிலம், காசிக்குச் சென்ற போது கற்ற சமஸ்கிருதம், ஹிந்தி, புதுவையில் ஃப்ரெஞ்சுப் பாஷை, வஙகாளி, முதல் உலக யுத்தம் தொடஙகியதும் ஜெர்மன் பாஷை, லத்தீன், உருது, சென்னையில் இருந்த போது தெலுங்கு, கடைசி நாட்களில் அரபி, மலையாளம்...! தெலுங்கு பாஷை ரொம்ப்ப் பிடிக்குமாம். சுந்தரத் தெலுங்கு... எனினும் அவர் பாடியது “யாமறிந்த மொழிகளிலே...”
பிடித்த கீர்த்தனைகள்..மாருபல்க, நகுமோமு,சக்கனிராஜ, ஜெயஜெய கோகுலபால...
பெண் விடுதலை பற்றிப் பாடிய பாரதி செல்லம்மாவை அப்படி வைத்திருக்கவில்லை. இவர் சொல் மீறி ஊர் சென்ற செல்லம்மாவின் பட்டுப் புடவைகள் கிழிக்கப் பட்டு தலைப் பாகையாயின! பாத்திரங்கள் கடையில் போடப் பட்டன. செல்லம்மாவை விவாக ரத்து செய்து மறுகல்யாணம் செய்யப் போவதாய் பயமுறுத்தினார்! ஊரிலிருந்து வந்ததுமே செல்லம்மாவின் தந்தை இறந்த செய்தி கேட்டும் முதலில் அவரை விடாமல் பின்னர் ‘பெருந்தன்மையாய்’ மனைவியை ‘மன்னித்து’ஊருக்கு அனுப்பி வைத்தார்.
குள்ளச் சாமியார் போன்ற சிலரால் கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிக்கும் வழக்கம் வந்தது.

பால்ய விவாகத்துக்கு எதிரி. தன் பெண்கள் இருவருக்கும் அப்படிச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். அதனால் வீட்டில் பந்துக்களிடையே மனஸ்தாபமும் தோன்றியது. ஆனால் தன் நண்பர் ஸ்ரீ ஸ்ரீ சாரியாரின் புதல்வி யதுகிரி திருமணம் ஆகிச் செல்லப் போகிறாள் என்ற போது அவர் யதுகிரிக்கு புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று 1915 களிலேயே கொடுத்த அறிவுரைப் பட்டியலைப் பற்றி தனிப் பதிவே போடலாம்...!
கடைசி நாட்களில் மருந்தின் மேல் வெறுப்புற்று சாப்பிட மாட்டேன் என்றவரை அவர் பெண் சகுந்தலா கொடுத்தால் சாப்பிடுவார் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னார்களாம். மிகுந்த ப்ரயாசைக்குப் பின் அவரும் கொடுத்தாராம். முதலில் மறுத்த பாரதி பிறகு வாங்கிப் பருகி விட்டு, “அம்மா, நீ கொடுத்தது மருந்தில்லை...பார்லி தண்ணீர்..பரவாயில்லை” என்று கண்ணை மூடி விட்டாராம்.
மரணத்தை வெல்ல வழி தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். 'ஓம்' என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தயார் செய்ய தேடிக் கொண்டிருந்தாராம்.
மரணத்தை வென்று விட்டார்தான்..