- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
=======================================================================
1) மணல்
கொள்ளையரை வேட்டையாடும், சுடலைக்கண்ணு: தூத்துக்குடி மாவட்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள, அனவரதநல்லூர் கிராமம் தான், என் சொந்த ஊர்.
பிளஸ் 2 வரை படித்திருக்கேன். எனக்கு, 50 ஏக்கர் நிலம் இருக்கு.
காலங்காலமாக விவசாயம் செய்திட்டிருக்கோம்.
முத்தாலங்குறிச்சியில், 2005ல் மணல் குவாரி அமைக்க, அரசு அனுமதி கொடுத்தது. அதோடு நிற்கவில்லை; பக்கத்தில் இருக்கிற கிராமம் முழுவதும், 20, 25 அடி
ஆழத்தில் தோண்டி மணல் எடுத்தனர்.இதுகுறித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தும்
பலனில்லை.மதுரை கோர்ட்டில் மனு கொடுத்து, ஆதாரங்களை சேகரிக்க, கேமராவை
வாங்கி, இரவும் பகலும், வயல்களில் பதுங்கி இருந்து, போட்டோ எடுத்தேன்.
ஆதாரங்களை வைத்து, கோர்ட், முத்தாலங்குறிச்சி குவாரியை மூட உத்தரவிட்டது.
இது தான், என் முதல் வெற்றி.
இதைப் போல், மற்ற ஊரையும் காப்பாற்ற
வேண்டும் என்ற ஆதங்கம், எனக்கு இருந்தது.இரண்டு பொக்லைன் மட்டும்
பயன்படுத்த வேண்டும்; 1 மீட்டர் ஆழத்துக்கு மேல் அள்ளக் கூடாது; காலை, 7:00
மணி முதல், மாலை, 5:00 மணி வரை தான் ஓட்டணும்; ஆற்றுக்குள் தடம் போடக்
கூடாது என, கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது, எனக்கு கிடைத்த பெரிய
வெற்றி.
திருச்சியில், 20 கி.மீ., தூரத்திற்கு, ஆற்றுக்குள்
கிராவல் ரோடு போட்டிருந்தனர். ரோட்டை அகற்ற, மனு போட்டு, உத்தரவு
வாங்கினேன்.தாமிரபரணியை விட, காவிரி மணல் கொள்ளை அதிகம். கரூர் முதல்,
நாகப்பட்டினம் வரை, காவிரி கரையிலேயே, 10 நாட்கள் கண்காணித்தேன். ஒவ்வொரு
குவாரியிலும், திருவிழா கூட்டம் போல், 20, 30 பொக்லைன்கள் நின்றன.இதைத்
தடுக்க, அரசு உத்தரவு பெற்ற குவாரிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக, லிஸ்ட்
எடுத்தேன். கையில் தூக்கு சட்டி, அதற்குள் கேமரா வைத்து, போட்டோ
எடுப்பேன்.உள்ளூர் மக்கள் துணையுடன், 43 குவாரிகளுக்கும் ஆதாரத்தை
சேகரித்தேன்.
"காவிரி நீர்வள ஆதார அமைப்பு' உருவாக்கி, அதன் மூலம்
கோர்ட்டுக்கு போனேன். வெற்றி கிடைத்தது. இதையடுத்து, மக்கள் எனக்கு
பாராட்டு விழா நடத்தினர். பணம் தரவும் முன்வந்தனர்.எனக்கு, பணம் முக்கியம்
இல்லை. மணல் என்பது, இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் சொத்து; அதை அழிய
விடக் கூடாது. தினமலர் மற்றும் விகடன். விகடனில் இவரின் விளக்கமான கட்டுரை அவசியம் படிக்கப்பட வேண்டியது.
2) பெற்றோரே தொழுநோய் காரணமாக
வீட்டை விட்டு துரத்திய நிலையில் ரயில் நிலையத்தில், ஓரத்தில் தங்கி, தூக்கி
எறியப்படும் உணவுப் பொருட்களை உண்டு காலம் கழித்து வந்த ரமேஷ் என்பவரை,
தாண்டிச் செல்லும் பொதுமக்கள் யாரும் சீந்தாத, தீண்டாத நிலையில், அவரைத்
தூக்கி மடியில் வைத்து உணவூட்டி, தங்கள் சேவை இல்லம் அழைத்துச் சென்று
குணமாக்கி, மாநகராட்சியில் வேலை பார்க்க வைத்து, திருமணம் செய்வித்தும்
சேவையாற்றுகிறார் சகோதரி மேரி.
பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளியில் அரசின்
வேண்டுகோளுக்கிணங்க ஓரு தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு
நிறுவனத்தால் 77ம் ஆண்டு துவங்கப்பட்டு, தொழு நோயாளிகளும் வந்துவிட, அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட, சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும் இந்த வேண்டுகோள் கடிதம் கிடைக்க, அடுத்த
நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய்
இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார், இல்லையில்லை அர்ப்பணித்துக்
கொண்டார். அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்து
குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்
வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர்களுக்கு சிறு கடைகள்
அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார்,
பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு
செய்து விடுகிறார். இப்போது
75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அவரை பொறுத்தவரை
"அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள்
தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.
3) பள்ளிக்கல்வி
துறை சார்பில், கோவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில்,
ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்களின், "இந்தோ- இலங்கை மின் திட்டம்'
என்ற படைப்பு, முதல் பரிசை தட்டிச் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து, 93
பள்ளிகள் சார்பில், 96 வகையான அறிவியல் சார்ந்த படைப்புகள்,
இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி
மாணவர்கள் பாலமுருகன், பாசில் தயாரித்த, "இந்தோ- இலங்கை மின் திட்டம்'
என்ற படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது.
இதுகுறித்து இவர்கள்
கூறியதாவது: இயற்கை முறையை பயன்படுத்தி, எவ்வாறு மின் உற்பத்தி செய்வது'
என்ற தலைப்பை தேர்வு செய்தோம். இன்றைய சூழலில், வளர்ந்து வரும் நாடுகளில்
இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில், தொழிற்சாலைகளை துவங்க, பல
நாடுகள் முன் வந்துள்ளன.
100 அடிக்கு ஒரு காற்றாலை:
இந்நிலையில், நமக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது மின்சாரம். மின்
உற்பத்திக்கு, இந்தியா பல திட்டங்களை வகுத்து வந்தாலும், பற்றாக்குறை
தொடர்கிறது. இதை சரிசெய்ய உருவாக்கப்பட்டதே,"இந்தோ- இலங்கை மின் திட்டம்'.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் கோடியக்கரை- இலங்கைக்கு
இடையே (18 கடல் மைல்) கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். ஆண்டு முழுவதும்
இந்த பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால், முதல்கட்டமாக பாலத்தின்
பக்கவாட்டில், 100 அடிக்கு ஒரு காற்றாலை வீதம், இருபுறமும் தலா 300
காற்றாலைகள் நிறுவ வேண்டும். ஒரு காற்றாலை மூலம் 100 "மெகாவாட்' வரை,
மின்சாரம் தயாரிக்கலாம். 300 காற்றாலைகள் மூலம், மொத்தம் 60 ஆயிரம்
மெகாவாட் வரை, மின்சாரம் தயாரிக்க முடியும்.
இது "பாலமாக' அமையும் :
இரண்டாம் கட்டமாக, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், சோலார் பேனல்களை
(தகடுகள்) பொருத்தி, அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம்
தயாரிக்கலாம். மூன்றாம்கட்டமாக, பாலத்தின் கான்கிரீட் தூண்களில்
அமைக்கப்படும் "டைடல் வேவ் எனர்ஜி' மூலம் கடல் அலைகளில் இருந்தும்
மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோன்ற திட்டம் உருவாக்க குறைந்தது 1,000 கோடி
ரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மின் தட்டுப்பாடு
என்ற பிரச்னையே இருக்காது. இந்தியா- இலங்கை நட்புறவுக்கு, இது "பாலமாக'
அமையும். இந்த திட்டத்தின் மாதிரி அமைக்க, ஒரு மாதம் ஆனது. பள்ளி தாளாளர்
ராஜமாணிக்கம், முதல்வர் சகாயமேரி, ஆசிரியர் ஜோசப் ஆகியோர் எங்களுக்கு
வழிகாட்டியாக இருந்தனர். மாநில போட்டியில் முதலிடம் பெற்றதால், ஜன., 20 ல்
கர்நாடகாவில் நடைபெறவுள்ள, தென்னிந்திய அளவிலான கண்காட்சியிலும் பங்கேற்க
தயாராகி வருகிறோம், என்றனர்.
4) உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு
ஆகியோர் ரூ. 6 ஆயிரம் செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள்
வீடுகளில் மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி
பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியன் படித்துள்ளார். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை
பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மின் தட்டுப்பாட்டை போக்க
காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு
உதிரி பாகங்கள் கிடைக்காததால் அதையும் தாங்களே உற்பத்தி செய்ய முடிவு
செய்தனர்.
இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர
கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி., பிளாஸ்டிக் பைப்களை கொண்டு
தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினார்கள். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு
பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய
அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே
உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால்
இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ
மின்சாரத்தை தயாரிக்கிறது.

அதிலிருந்து ஒரு மின் கம்பி கொண்டு
வந்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. அதை கொண்டு சுரேஷ் தனது
வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால்
மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தை
கொண்டே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின்கட்டணம்
செலுத்தி வந்த சுரேஷ் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை
அதிக அளவு பயன்படுத்தி வருவதால் இந்த மாதம் ரூ. 200 மட்டுமே மின்கட்டணம்
கட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இன்வெட்டர், ஜெனரேட்டர், சோலார் என
பல்வேறு சாதனங்களை வாங்கினால் அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலையில்
வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை
பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகின்றார்கள். இதை அனைவரின் வீடுகளிலும்
பயன்படுத்தலாம் என கூறுகிறார், ராமு.
மேலும் கடலோர பகுதிகளில்
அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில்
அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை
பயன்படுத்தலாம் என்கிறார். இதற்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காத
நிலையில் இதை அதிக அளவு தயார் செய்ய முடியவில்லை என்றும் இதற்கு தேவையான
பொருட்களை தனியார் நிறுவனங்கள் செய்து கொடுத்தால் அதிக அளவு உற்பத்தியை
கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார்.
சுரேஷ் வீட்டின் மேல்
அமைக்கப்பட்டள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை
மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த
ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர். (முகநூலிலிருந்து)
5) சென்னை SSN பொறியியல் கல்லூரி மின்னியல்,மின்னணுவியல் மாணவி மாஷா
நசீம்.
சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரவிபுதூர்க் கடை. இவரின்
தந்தை நாகர்கோவில் கருவூலத்துறையில் பணிபுரிகிறார். புதிதாக எதாவது
கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு ஆரம்பமுதலே இருந்து வந்திருக்கிறது. கை
நீட்டினால் தண்ணீர் வரும் டெக்னிக்கை வைத்து பர்க்ளர் அலார்ம் கருவி, 2005
இல் அதி நவீன ரயில் கழிப்பறை (தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் முதல்
பரிசு, புது டில்லியில் நடைபெற்ற உலகக் கழிப்பறைச் சுகாதார மாநாட்டில்
அங்கீகாரம், அப்துல் கலாமின் பாராட்டு ஆகியவற்றைப் பெற்ற கண்டுபிடிப்பு), இயந்திரச் சுமை தூக்கி,
புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்க மாடி ஏறும் மாணவர்கள்
கஷ்டத்தை நீக்க சுமை கன்வேயர் பெல்ட், நெருப்பில்லாத முத்திரை வைப்பான்
என்று பலவும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார் என்று இவரைப் பற்றிய
செய்தியை அறியத் தருகிறது தினமணிக் கதிர்.
6) ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உணவகம் வைத்து, காலையே அங்கிருக்கும்
வார்டுகளுக்குச் சென்று, மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களுக்கு
டோக்கன் கொடுத்து விட்டு வந்து விடுகிறார். பிற்பகலில் அந்த டோக்கனைக் கீழே
இவரது கடையில் காட்டி உணவு பெற்றுக் கொள்ளலாம். சாப்பாட்டின் விலை 1
ரூபாய்.

ஒரு நாள் இரவு 10 ரூபாய்க்கு இட்லி கேட்டு வந்து ஏமாந்துபோன ஒரு ஏழைப்
பெண்ணைப் பார்த்து மனக் கஷ்டப்பட்டு இதைத் தொடங்கினாராம் வெங்கட்ராமன். இது
முன்னரேயே கூட நம் 'பாசிட்டிவ் செய்திகளி'ல் சொல்லியிருக்கிறோமோ என்று
சந்தேகம் வந்தாலும், தேட முயலவில்லை. மறுபடி சொன்னால் தப்பில்லை என்றும்
தோன்றியது. இதை முக நூலிலிருந்து பகிர்கிறேன். இந்தக் காலத்தில் 1
ரூபாய்க்கு யாரால் இவ்வளவு தர முடியும் என்று மனம் நெகிழ்ந்து
சொல்கிறார்களாம் இவரால் பயன் பெறுபவர்கள்.