திங்கள், 9 ஜனவரி, 2012

இரட்டைக் குழந்தையும் நாய் நடையும்..... வெட்டி அரட்டை

   
காதல் போயின் ... 


"சேகர்... நான் உங்களை உண்மையா காதலிக்கிறேன்.."  
           

"என் காதல் உண்மைக் காதல்... உண்மைக் காதல் என்றும் தோற்றுப் போவதில்லை.."

இவை ஆங்காங்கு கேட்கும் வசனங்கள்...! காதலில் உண்மைக் காதல், பொய்க் காதல், மீடியம் காதல் எல்லாம் உண்டா என்ன?  

ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி... (பாட்டுங்க...)

ஏதோ ஒரு தடையினால் காதல் நிறைவேறா நிலை வந்தால் நிம்மதிக்காக (!) அந்தக் காதலை விட்டுக் கொடுத்தல் நல்லதா? அல்லது எப்படி இருந்தாலும் விடமாட்டேன் என்று பிடிவாதத் திருமணம் செய்வது உண்மைக் காதலா? 

காதல் என்றால் என்ன?

திருமணத்துக்கு முன் வரும் காதலும் தி. பின் வரும் காதலும் ஒன்றுதானா... வித்தியாசம் உண்டா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லாமல் போனால்....

அட, ஒண்ணும் ஆகாது... அடுத்ததைப் படிங்க...!

******************************************
கண்கண்ட பிரபலங்கள்!  

இசைவிழா அலைச்சல்களின்போது சில பிரபலங்கள் கண்ணில் பட்டார்கள்- பாடுபவர்களைத் தவிர! பாஸ்கி, மாது பாலாஜி,  கிரேசி மோகன், ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன். 
   
கடைசியாகச் சொல்லியிருப்பவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் வாரிசு. கல்கியில் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளிப்பவர். சமீபத்தைய அவரின் பதில் ஒன்றை ரசித்ததாக அவரிடம் சொல்லலாமா என்று சற்று நேரம் தாமதித்தேன். ஐம்பது அகவையைக் கடந்த நாரீமணிகள் அவரிடம் இடைவிடாது கூட நடந்து கேட்டுக் கொண்டு இருந்ததில் என் எண்ணத்தைக் கை விட்டேன். உங்களிடம் பகிர்கிறேன்!

கேள்வி : மான் தோலில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஞானம் வருமா?

பதில் : போலீஸ்தான் வரும்!

*****************************************
பெயரைச் சொல்லவா? 

சில பெயர்கள் எதிரில் உள்ளவர்கள் சொல்லும்போது அரைகுறையாகக் காதில் விழுந்து என்ன பெயர் என்று தெரியாமல் போகும். சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் சொன்ன பெயர் 'பானுமதி சித்தப்பா' என்றே காதில் விழுந்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் கழித்து சரியான பெயர் தெரிந்தது பானு முஸ்தபா...!

பள்ளியில் படித்த காலத்தில் வருடத்தின் முதல் நாளில் மாணவர்கள் அவரவர் பெயரை அவரவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் நிகழ்வின் போது மலேஷியாவிலிருந்து வந்ததாக அறியப் பட்ட புதிய அட்மிஷன் மாணவன் ஒருவன் அவன் பெயரைச் சொன்னது என் (டப்பா) காதில் ஓமே டகாயராஜ் என்று விழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் நண்பர்களுடன் அவனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓரளவு சந்த நயத்தை மட்டும் வெளிப் படுத்தி சமாளித்த பின் சரியான பெயர் அவன் நோட்டைப் பார்த்ததும் தெரிந்தது! அது வரை மலேஷியப் பெயர் அபபடி வைப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! சரியான பெயர் கோமேதக வேலு. ஆனாலும் வித்தியாசமான பெயர்தான் இல்லை? 

***********************************************
 சோழன் 
  
பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது நான் கேள்விப் பட்ட, நல்ல தமிழ்ப் பெயர்கள் சிலவற்றைத் தருகிறேன்.

புகழேந்தி, இலக்கியா, எழிலன், இளங்கோ. 

சோழன் என்ற பெயரில் என்னோடு ஒரு மாணவன் படித்தான். ஆச்சர்யம்!  இதை எழுதும்போதுதான் அவன் ஞாபகம் திடீரென வருகிறது. சேரன், பாண்டியன் பெயரெல்லாம் சகஜம்.... தனியாகச் சோழன் என்று நான் கேள்விப்பட்டது அதுவே முதலும் கடைசியும்! என்னுடன் படித்த இன்னொரு வித்தியாசமான பெயர் கொண்ட நண்பன் சுதாமன்! 

****************************************************

ஓடத் தெரிந்த நாயே ... உனக்கு ...

அப்பா கேட்ட சந்தேகம்..."நாய் ஏன் நடப்பதே இல்லை?" ஒன்று மெல்லோட்டம், அல்லது வேக ஓட்டம். நிதான நடை நடக்கும் தெரு நாயைப் பார்ப்பது அரிது. (வாக்கிங் அழைத்துச் செல்லப் படும் நாய்கள் கணக்கில் வாரா!). 'நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை சரி, ஆனால் ஏன்?

  

*********************************************

முது காவல். 


முதியோர் கல்வி போல முதியோர் வேலை வாய்ப்பு இப்போது பிரகாசமாக இருக்கிறது போலும்.  ஊர் முழுக்கக் கட்டிடங்கள் ஆபீஸ்கள், அபார்ட்மெண்ட்டுகள் என்று... எல்லா கட்டிட வாசலிலும் நீலச் சீருடை அணிந்த காவலாளிகள்....! என்ன, சம்பளம்தான் பத்தாயிரத்தை தாண்டாது போலும்.
    
***************************************
இரட்டைக் குழவி 


  
திரைப் படத்தில் இரட்டைக் குழந்தைகள் என்று காட்டினாலே ஒன்று தொலையப் போகிறது என்று அர்த்தம்! எனவே இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் இளவயதில் எதாவது ஒரு பாட்டைக் குடும்பப் பாட்டாக தெரிவு செய்து கொள்ளுதல் நலம். பின்னால் தொலைந்து போனால் உதவியாக இருக்கும்! 

இசை விழாக்களில் இரட்டையர்கள் நிறைய பேர் பாடுகிறார்கள். இதே பயத்திலும் ஐடியாவிலும்தான் அவர்களுடைய பெற்றோர் அந்த இரட்டையர்களுக்கெல்லாம் சங்கீதம் கற்றுக் கொடுத்திருப்பார்களோ....? 

**********************************************
காணாத கோலம் ... 
   
தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த யோசனை.
  
ஒலியை மியூட் செய்ய முடிகிறது. ஆனால் காட்சி வேண்டாம் என்றால் அதை மறைத்து பாட்டு, அல்லது செய்தி மட்டும் கேட்க முடிவதில்லை! நாம் தலையைத் திருப்பிக் கொண்டால்தான் உண்டு! புதிய வசதிகளில் டிவிக்கள் இதை முயற்சி செய்யலாமே....
   
அல்லது ஏற்கெனவே இருந்து என் சிற்றறிவுக்குத் தெரியவில்லையா?

**********************************************************
தோற்று(ம்) தேற்று மனதை ... 
    
ஆஸ்திரேலியத் தொடரில் தோல்விக்கு,  தோனி காரணங்கள் கண்டு பிடித்திருக்கிறார்.

* பேட்ஸ்மேன் யாரும் சரியாக விளையாடவில்லை. 

* முதல் இன்னிங்க்ஸ்ஸில் முன்னூறு முன்னூற்றைம்பது ரன் எடுத்திருக்கலாம். 

* பவுலர்கள் சரியாக பௌல் செய்யவில்லை. ஆஸி அணியினரை ரன் எடுக்க விடாமல் முன்னரே அவுட் செய்திருக்க வேண்டும். 

:-) இந்த மகேந்திர சிங் முன்பு மன் மோகன் சிங் தோற்றார்! 
  
*****************************************************
நாட் குறிப்பு - நம் தப்பு! 
     
புதிய டைரிகள் வேண்டுமா என்று கேட்டவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.    
  
எல்லோரும் படிப்பார்கள் என்றால் உண்மையை எழுதுவோமா என்ன? 

டைரியை நம்மைத் தவிர யாரும் படிக்கக் கூடாது என்றால் ஏன் எழுத வேண்டும்?

எனக்கு நிறைய மாமாக்கள். ஒரு மாமா சொன்னார். அவர் எழுதி வைத்திருக்கும் டைரியில் அவ்வப்போது ஒவ்வொரு பக்கத்தில் சில கமெண்ட்ஸ் இருக்குமாம்! 

 "முட்டாளே! நீ நினைத்துக் கொண்டிருப்பது தவறு"

"அடுத்த முறை இன்னும் சுவாரஸ்யமாய் எழுது" இப்படி....!

அவரின் அண்ணனான இன்னொரு மாமாவின் வேலை!

*****************************************************

                 

29 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. // ஒலியை மியூட் செய்ய முடிகிறது. ஆனால் காட்சி வேண்டாம் என்றால் அதை மறைத்து பாட்டு, அல்லது செய்தி மட்டும் கேட்க முடிவதில்லை! நாம் தலையைத் திருப்பிக் கொண்டால்தான் உண்டு! புதிய வசதிகளில் டிவிக்கள் இதை முயற்சி செய்யலாமே.... //

    Set/Bringdown Brighness, color, contrast all to zero. U can see Blackout but sounding TV.

    பதிலளிநீக்கு
  3. காதல் போயின் ...

    காதலை பற்றி நல்ல ஆராய்ச்சி.
    ..............................

    பெயரைச் சொல்லவா?

    நானும் படிக்கின்ற காலத்தில் சில பெயரை கேட்டு வியந்திருக்கிறேன்.

    ..............................

    இரட்டைக் குழவி

    இரட்டையர்களே சுவராசியம். அவர்கள் தொலைந்து சேருவது, அதை விட சுவராசியம்.

    ..............................

    காணாத கோலம் ...

    ஏற்கனவே இருக்கிறது. எல்லா தொலைகாட்சிகளிலும் உ

    பதிலளிநீக்கு
  4. /ஒலியை மியூட் செய்ய முடிகிறது. ஆனால் காட்சி வேண்டாம் என்றால் அதை மறைத்து பாட்டு, அல்லது செய்தி மட்டும் கேட்க முடிவதில்லை!//

    காத மூடுறத விட கண்ண மூடுறது ஈசி.. அதுவே இதுக்கு காரணமா இருக்கலாம் ..
    (காத மூட கையோ, பஞ்சோ தேவை..)

    பதிலளிநீக்கு
  5. //சரியான பெயர் கோமேதக வேலு. ஆனாலும் வித்தியாசமான பெயர்தான் இல்லை? //

    இந்தப் பெயரில் துப்பறியும் கதைகள் எழுதிய ஒரு எழுத்தாளர் இருந்ததாக நினைவு. அந்தக் கால பிரேமா பிரசுர வெளியீடுகளில் பார்த்த நினைவு. மேதாவி, சிரஞ்சீவி எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    //நல்ல தமிழ்ப் பெயர்கள்?..//

    அது என்ன நல்ல தமிழ்ப் பெயர்கள்?..
    இருந்தாலும் எனக்குப் பிடித்த ஒரு பெயர் ஞாபகம் வருகிறது.

    புதியவன்.

    என் சிறுகதை ஒன்றில் கூட இந்தப் பெயரை உபயோகித்திருக்கிறேன்.

    //திரைப் படத்தில் இரட்டைக் குழந்தைகள் என்று காட்டினாலே ஒன்று தொலையப் போகிறது என்று அர்த்தம்!//

    ஹி.ஹி..ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  6. நாம் தலையைத் திருப்பிக் கொண்டால்தான் உண்டு! புதிய வசதிகளில்
    உண்மைதான் மாறும் அருமை

    பதிலளிநீக்கு
  7. பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  8. நல்ல தொகுப்பு.

    /பானுமதி சித்தப்பா/ பாவம் அந்த மனிதர்:)!

    சோழன் நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    புகழேந்தி எங்கோ கேள்விப்பட்ட மாதிரி உள்ளதே என யோசித்தால் ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரம்?

    இன்னொரு மாமாவின் குறும்பு ரசிக்க வைத்தது:)!

    பதிலளிநீக்கு
  9. இரட்டைக் குழந்தைகள் ’பேமிலி ஸாங்’ ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகவே பெற்றோர் சங்கீதம் கற்றுத் தருகிறார்கள்... அவ்வ்வ்வ்வ்! என்ன கொடுமை சரவணன் இது? வித்தியாசமான பெயர் என்றதும் என் சிறுவயது நண்பன் ஒருவனின் பெயர் நினைவு வந்தது. ஸ்தலசயனன்! எப்பூடி?

    பதிலளிநீக்கு
  10. குட்டிக் குட்டியா என்னமா சொல்றீங்க.

    காதல் அது எப்பவுமே உண்மையா இறுக்கமா இருக்கணும் !

    இங்க மரம்,ஆஸ்ரேன்னு எல்லாம் பெயர் இருக்கு !

    பதிலளிநீக்கு
  11. இசை விழாக்களில் இரட்டையர்கள் நிறைய பேர் பாடுகிறார்கள். இதே பயத்திலும் ஐடியாவிலும்தான் அவர்களுடைய பெற்றோர் அந்த இரட்டையர்களுக்கெல்லாம் சங்கீதம் கற்றுக் கொடுத்திருப்பார்களோ....?

    ரசிக்கவைத்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  12. இரட்டைக் குழந்தைங்க பாடுவது, டி.வி யில் ம்யூட் பட்டன் போல் ஒளியைக் குறைக்க பட்டன் - ரொம்ப வித்தியாசமா யோசிக்கிரீங்களே. கண்ணை மூடுவது எளிது என்ற மாதவனின் பதிலும் புத்திசாலித்தனமானது

    பதிலளிநீக்கு
  13. மாதவன், தமிழ் உதயம், ஜீவி சார், சசிகலா, (அடிக்கடி வாங்க) அனானி, ராமலக்ஷ்மி, கணேஷ், ஹேமா, ராஜராஜேஸ்வரி மேடம், கீதா சந்தானம்.....வருகைக்கு நன்றி.
    சசிகலா, அடிக்கடி வாங்க
    மாதவன் ஒவ்வொண்ணா குறைக்காம ஒரு பட்டன், ஒரே பட்டன்ல நடக்கணும்!கண்ணை மூடிக்கறது நல்ல ஐடியாதான் !
    ஜீவி சார்...தமிழ்வாணன் கதைகளில் நல்ல தமிழ் பெயர்கள் கிடைக்கும். (ஒப்பிலான், கூர்விழி) நாம் சந்திக்க நேர்ந்த பெயர்களையுடையவர்களைப் பற்றி நினைவு வந்தது! புதியவன்...கதைகளில் மட்டுமே சந்திக்க முடியக் கூடிய பெயர்?
    அனானி....அந்தச் சிறுகதையில் என்ன? அங்கு போன உடன் பிரவுசர் மூடிக் கொண்டது! எனவே படிக்கவில்லை, மறுபடி போகவும் பயம்!
    ராமலக்ஷ்மி...புகழேந்தி என் பள்ளிக் கால ஜூனியர்! ஒரு நோட்டில் 'பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா' என்று எழுதி தான் எழுதியாதாய்ச் சொன்னதை இன்று வரை நம்புகிறேன்!
    கணேஷ் சார்...நீங்கள் சொல்லியுள்ள பெயரை உச்சரிக்கவே முடியவில்லை. நிச்சயம் வித்தியாசமான பெயர்! தினமும் வருகைப் பதிவு எடுத்திருக்கக் கூடிய ஆசிரியர்கள் பாவம்!
    மான் தோல், டைரி, மற்றும் நாய் நடை பற்றியெல்லாம் யாருமே ஒன்றும் சொல்லவில்லையே...வொய்?! :))

    பதிலளிநீக்கு
  14. டைரி பற்றி சொல்லியிருக்கிறேனே!

    பதிலளிநீக்கு
  15. ராமலக்ஷ்மி said...
    //டைரி பற்றி சொல்லியிருக்கிறேனே!//

    ஆம் உண்மைதான்.....மன்னிக்கவும்! 'யானே கள்வன்'! :))))

    பதிலளிநீக்கு
  16. தொலைக்காட்சி யோசனை எனக்கும் தோன்றியதுண்டு.சுவாரஸ்யமான அரட்டை.

    பதிலளிநீக்கு
  17. நல்ல சுவாரசிய அரட்டை ..... காதல் ....பிரபலம் ... போலீஸ் வரும் .... .... வித்தியாச பெயர்கள் . சுறு சுறு நாய் .. காவலுக்கு முதலில் காவல் ..குடும்ப பாட்டு (நாளை நமதே ).... ... ம .சி + ம .மோ .சி .... தொல்லைக்காட்சி ...... ஒருவாரம் தாண்டா டைரி

    பதிலளிநீக்கு
  18. அர‌ட்டை ந‌ல்லாயிருக்கு...க‌ல‌வையான‌ தொகுப்பு..

    பதிலளிநீக்கு
  19. இங்கே பலருடைய பெயர் எனக்கு சொல்லவே வராது. போனில் அவர்கள் பெயரை சொன்னாலும் புரியாது. இரண்டு முறை கேட்டுவிட்டு விட்டு விடுவேன். பையன்களோட parent teacher conference போகும்போது என் பையன்களிடம் அவர்கள் டீச்சர் பெயர்களை சரியாக சொல்ல கற்றுக் கொண்டு மனதிருக்குள் ஒரு பத்துமுறை சொல்லி பார்த்துக் கொண்டுதான் சொல்வேன்.
    'சோழன்' இப்படி ஒருவர் பெயர் வைத்துக் கொண்டிருப்பதாக கேள்விபடுவது இதுவே முதல் முறை. என்னுடன் படித்த என் தோழியின் பெயர் 'குந்தவை' . நாங்க அவளை 'குந்தவி' அப்படின்னுதான் கூப்பிடுவோம். நல்ல பெயர்.
    எங்கம்மாவோட favorite dialogue 'நாய்க்கு நிக்க நேரமில்லை'. :) எங்கம்மா பேசும்போது இது போல நிறைய சொல்லுவார்கள். மிகவும் ரசிப்பேன்.
    இரட்டை குழந்தைகளின் படங்கள் கொள்ளை அழகாய் இருக்கிறது.
    //டைரியை நம்மைத் தவிர யாரும் படிக்கக் கூடாது என்றால் ஏன் எழுத வேண்டும்?// அதானே! :)

    பதிலளிநீக்கு
  20. a beautiful tamil birthday song
    http://vidhyasagar.com/

    பதிலளிநீக்கு
  21. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. வெட்டி அரட்டை சுவாரசியமாக இருக்கு.

    ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஜோக் சூப்பர்.

    டைரி எழுதுவது பற்றிய குறிப்பு நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  23. அருமையான நவரச தகவல் களஞ்சிய பதிவு நண்பரே, அசத்தல்

    பதிலளிநீக்கு
  24. கணேஷ் சொல்வதே சரி. எங்க வீட்டிலும் ஒரு குடும்பப் பாடல் உண்டு. நிறைய சகோதர சகோதரிகள் இருக்கும் வீட்டில் குடும்ப சாங்க் அவசியம். அப்பத்தான் குடும்ப் பாட்டை பாடி ஒண்ணா சேர முடியும்.

    பதிலளிநீக்கு
  25. காணாத கோலம்னு பாத்து ஆசையா படிச்சா இப்படி ஏமாத்திட்டீங்களே... நியாயமா?

    பதிலளிநீக்கு
  26. //ஏதோ ஒரு தடையினால் காதல் நிறைவேறா நிலை வந்தால் நிம்மதிக்காக (!) அந்தக் காதலை விட்டுக் கொடுத்தல் நல்லதா? அல்லது எப்படி இருந்தாலும் விடமாட்டேன் என்று பிடிவாதத் திருமணம் செய்வது உண்மைக் காதலா?//

    அது அந்தக் காதலன்/லியின் பெற்றோர் எவ்வளவு வசதியானவர் என்பதைப் பொறுத்தது!! (ச்சும்மா.. ஜோக்கு....
    ன்னு நினைக்காதீங்க...) :-)))))

    பெயர்கள்.... இதுபற்றி (இன்னும்) ஒரு பதிவே எழுதலாம்... காலேஜில் படிக்கும்போது பஸ்ஸில் சகபயணியிடம் பேசிக்கொண்டுவந்தபோது என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திகொண்டேன். அவரும் வேறொரு கல்லூரியின் (M.Sc.) மாணவி என்பதால் நிறையப் பேசினோம். என்னைப்போலவே, பட்டிக்காடும் இல்லாமல், பட்டணமும் இல்லாமல் டீஸண்டாக இருந்தார். (இத வேற என்ன வார்த்தை பயன்படுத்திச் சொல்லன்னு தெரியல. படம்/ கதையில் கதாநாயகின்னா, குடும்பப்பாங்குன்னு சொல்லலாமோ!!)

    அவர் இறங்கப் போகும் சமயம், இன்னும் அவர் தன் பெயரைச் சொல்லவில்லையே என்று ஞாபகம் வந்தது. கேட்டேன். அவர் முகம் மாறியது; ”கருப்பாயி” என்று சொல்லிவிட்டு அவசரமாக்த் தலையைத் திருப்பிக்கொண்டார்.

    இன்னொன்று - எங்கள் வகுப்பில் “சமுத்திரக்கனி” என்றொரு பெண் - ஆமாம், பெண் - உண்டு!! அந்தப் பெயர் ஒவ்வொரு ஆசிரியராலும் முதன் முறை வாசிக்கப்படும்போதெல்லாம் ஆசிரியர்களின் வியப்பும், தொடரும் மாணவர்களின் சிரிப்பும் அவளுக்குத் தர்மசங்கடமாயிருந்தன. அவளது பெயர் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கடைசியில் இருந்தது. தினமும் ஐந்து பீரியட்களிலும், ஆசிரியர்கள் அவள் பெயரை வாசிக்குமுன் இவளே எழுந்து “எஸ் சார்” என்று சொல்லிவிடுவாள்!!

    பிறகு, இங்கு அமீரகம் வந்த பின், அலுவலகங்களில் பல நாட்டினரின் பெயரும் வாசித்து முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும்!! ஸ்பெல்லிங் ஒரு மாதிரி, உச்சரிப்பு ஒரு மாதிரின்னு இந்த ஃப்ரெஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ரஷ்யாக் காரங்க பேர்கள்!! (அவங்களுக்கு நம்ம பேர்களைப் பாத்தா இப்படித்தான் இருக்குமோ!!)

    பதிலளிநீக்கு
  27. நன்றி மாதவன். நல்ல ஐடியா.
    காதல் போனால் இன்னோரு காதல் கண்டிப்பா வரும்.:)
    என்னுடைய கால் தெரபிஸ்ட் டாக்டர் பெயர் கூட புகழேநி தான்.

    பள்ளி நாட்களில் ஏழிசை வல்லபி என்று ஒரு தோழி இருந்தாள்.
    அவளை என் கசின் எழுசொறிவல்லபி என்பாள்.கசின் வயசு அப்போது மூன்று!

    பதிலளிநீக்கு
  28. நன்றி சண்முகவேல், பத்மநாபன், அஹமது இர்ஷாத், மீனாக்ஷி, சித்ரா, ராம்வி, ஏ ஆர் ஆர், அப்பாதுரை, ஹுஸைனம்மா, வல்லிசிம்ஹன்.

    மீனாக்ஷி, குந்தவை - அழகான பெயர் இல்லை?
    அப்பாதுரை-காணாத கோலம்னு ஒரு புதிர் உண்டே அதைச் சொல்றீங்களா....! :))
    ஹுஸைனம்மா - கருப்பாயி தன் பெயர் மற்றவர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பை உணர்ந்திருப்பார் போலும். சமுத்திரகனி என்றதும் டைரக்டர் சமுத்திரகனி உங்கள் கிளாஸ்மேட்டோ என்று நினைக்கத் தோன்றியது!
    வல்லிசிம்ஹன் - ஏழிசைவல்லபி - என்ன அழகான பெயர்.. இப்போதெல்லாம் யார் இப்படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  29. வல்லபியோட அக்காவுக்கும்நல்ல பேரு. மறந்து விட்டது. அப்போது விகடனில் ஜகத்சிற்பியன் என்ற சரித்திர எழுத்தாளர்(சரி என்று நினைக்கிறேன்) ஒரு சரித்திர நாவல் எழுதிக் கொண்டிருந்தார் அதில் வரும் இளவரசி ஒருத்தியின் பெயர் இது. இன்னோரு பெயர் பரிவாதினி. வீணையின் பெயரா.பெண்ணின் பெயரா தெரிய வில்லை::)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!