இவரது மூன்று நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான வம்சவிருக்ஷா உட்பட.
 
 
1931 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்.
 
35
 பதிப்புகள் கண்ட புத்தகம்.  வெளியான பத்து மாதங்களுக்குள் 14 பதிப்புகளைக்
 கண்டது இந்தப் புத்தகம். வெளியான ஆண்டு 2007. கன்னடம் தவிர, தமிழ் ஹிந்தி 
மராத்தி, குஜராத்தி ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் 
பட்டுள்ளது.
 
அடுத்து என்ன எழுதப் போகிறார் என்ற ஆவலை 
ஏற்படுத்தும் எழுத்தாளர்.  எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எழுத்தாளர்.  'ஆவரணா'
 என்ற இந்த 'திரை'  எழுதியபின், பைரப்பா 'கவலு' (வெளியான 4 நாட்களுக்குள் 4
 பதிப்புகள் கண்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்து விட்டதாம்) என்ற 
பெண்ணியத்தைத் தாக்கும் கதை ஒன்றையும்,  'யானா' என்கிற விண்வெளிப் பயணம் 
மற்றும் மனித ஒழுக்க நெறிகள் பற்றியும் சொல்லும் கதை ஒன்றையும் எழுதி 
வெளியிட்டிருக்கிறார்.  மகாபாரதம் பற்றி 1979 ல் இவர் 'பருவா'  என்ற பெயரில் நாவல் எழுதியுள்ளார். (எந்தப் பதிப்பகம் என்றுதான் தெரியவில்லை. பாவண்ணன் மொழிபெயர்ப்பு என்று தெரிகிறது)
 
 
ஒரு
 க்ரைம் ஸ்டோரி என்ற அளவிலோ காதல் கதைகள் என்ற அளவிலோ இவர் 
படைப்புகளிருப்பதில்லை.  ஒவ்வொரு படைப்புக்கும்,  அதை எழுது முன் 
சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆராய்வது, குறிப்பெடுப்பது அப்புறம் 
அதைப் பற்றி எழுதுவது என்று கொள்கை வைத்திருக்கிறார் இந்த ஓய்வு பெற்ற 
மனோதத்துவப் பேராசிரியர்.  எனவே இவரது படைப்புகளை ஜஸ்ட் ஒரு 
பொழுதுபோக்குக்காக வாசித்துத் தாண்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.
 
நான்
 'திரை' மட்டுமே படித்திருக்கிறேன். சத்தியத்தை மறைக்கும் வேலைக்கு 
ஆவரணமென்று பெயர்.  (அசத்தியத்தை வெளிக்கொணரும் செயலுக்கு விக்ஷேபம் என்று 
பெயராம்)  சரித்திரம் கலந்து எழுதப் பட்டிருக்கும் சமூக நாவல். அதுவும் 
தமிழில்.  எதுவும் அந்தப் படைப்புகள் எழுதப் பட்ட அசல் மொழியிலேயே படிப்பதே
 சிறந்தது என்ற கருத்தை இவரே இந்தப் புத்தகத்தில் மறைமுகமாகச் சொல்லவும் 
செய்கிறார். (அக்பர் சக்கரவர்த்தியின் சமகாலத்தில் அவரோடு இருந்தவர்களால் 
எழுதப்பட்ட மாஸிர்-இ-ஆலம்கிரி என்ற பார்சி மொழியில் எழுதப்பட்ட படைப்பைப் 
பற்றிச் சொல்லும்போது)
ஏனென்றால் திரு ஜெயா 
வெங்கட்ராமன் மொழிபெயர்த்துள்ள இந்நூலில் நிறைய இடங்களில் கதையை 
விவரித்துக் கொண்டு வரும்போது தன்னிலை, மூன்றாம் நிலை விளக்கக் குழப்பங்கள்
 இருக்கின்றன. 
 
 
உள்ளுக்குள்ளேயே நாயகி 
எழுதும் ஒரு கதையைச் சொல்லி வருவது தனி உத்தியாக நடுவில் திடீர் திடீரென 
வருகிறது. அந்தக் கதை பெரும்பாலும் அந்தப் பெண்ணின் தந்தை படித்துச் 
சேர்த்து வைத்த ஆதாரங்கள், விவரங்கள் என்ன என்பதைச் சொல்லவே பயன்படுத்தப் 
பட்டிருக்கிறது. அது பாதியிலேயே முடிவு தெரியாமல் நின்று விடுவது 
மூலத்திலும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். நோக்கம் முடிந்து 
விடுகிறது அல்லவா...
 
இது போன்ற படைப்புகளில் ஒரு 
படைப்பாளி தான் சொல்லவரும் கருத்தைச் சொல்ல ஒரு பாத்திரத்தைத் தன் 
படைப்பில் உருவாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் இந்த நாவலில் பைரப்பா 
சொல்ல வரும் கருத்தை லக்ஷ்மி என்கிற ரசியா பேகம் என்கிற லக்ஷ்மி 
பேசுகிறாள்.
 
"உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் 
திருத்தி, மாற்றித் தவறான சரித்திரத்தை எழுதி அதை மக்களிடையே வெகுஜன 
ஊடங்களின் வாயிலாக பிரசாரம் செய்து வருகின்றனர்.  உண்மையான சம்பவங்களைத் 
தொகுத்து தகுந்த வராற்று ஆதாரங்களுடன் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சி நூல்களை 
எல்லாம் திட்டமிட்டு ஒதுக்கித் தள்ளி விட்டு,  குறுகிய அரசியல், பதவி 
மற்றும் பொருளாதார ஆதாயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்படுபவைகளே பாடப் 
புத்தகங்களிலும், நூலகங்களிலும் இடம் பிடித்து வருகின்றன" என்கிறது முதல் 
முன்னுரை.
 
"இது முஸ்லிம்களின் மனதைப் 
புண்படுத்துவதற்காக எழுதவில்லை. சரித்திரத்தைத் தப்பும் தவறுமாக 
எழுதுபவர்களைத்தான் சாடியுள்ளார்"  என்கிறது சதாவதானி ஆர். கணேஷின் 
முன்னுரை. 
தனது முன்னுரையில் ஆசிரியர், "சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை" என்கிறார். 
"சரித்திரத்தின் உண்மையில் கலையின் பாவம் கலந்து வந்திருந்தால் அந்த மட்டத்தில் இது ஒரு வெற்றிகரமான இலக்கியம் ஆகிறது"
"இந்த
 நாவலின் ஒவ்வொரு விவரத்தையும் அல்லது அதன் நடைக்கும் இருக்கும் 
ஆதாரங்களில் இலக்கியத்தின் திறனை இந்த நாவலில் அதைத் தாங்கும் வகையில் ஒரு 
பகுதியாக அமைத்திருக்கிறேன்.   நாவலின் கையாளும் உத்தியில் அந்த உண்மையை 
வெளிப்படுத்துவதற்கு இந்த நாவலின் அமைப்புக்குள்ளேயே வடிவமைத்திருக்கிறேன் 
என்கிற உண்மையை எல்லா ஆக்கபூர்வமான எழுத்தாளர்களும், ஆழ்ந்த சிந்தனை உள்ள 
வாசகர்களும் உணர்ந்து கொள்ளலாம்.   எஞ்சியுள்ள ஆதாரங்களை இந்த நாவலின் உள்ளே 
இருக்கும் பாத்திரங்கள் மூலம் தேவையானவைகள் எல்லாம் 
கொடுக்கப்பட்டிருக்கிறது.  இவை எல்லாவற்றிற்கும் ஒரு வடிவம் கொடுத்திருப்பது
 மட்டுமே எனது சொந்த முயற்சி"
"சரித்திரத்தின் உண்மைகளைப் பற்றி ஒரு எழுத்தாளர் எழுதப் புகும்பொழுது அதன் முழுப்பொறுப்பும் அவருடையதாகிறது"
"நமது
 முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த 
சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் 
வளருவதில்லை. சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, 
அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி. இது 
ஒவ்வொரு மதம், ஜாதி, குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்."
இதெல்லாம் ஆசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருப்பவை.
கதை
 என்று எடுத்துக் கொண்டால், கலைத்துறையில் இருக்கும், காதல் மணம், கலப்பு 
மணம் செய்துகொண்ட  தம்பதியர்.  கணவன் முஸ்லிம்.  மனைவி இந்துவாக இருந்து, 
கணவனின் வற்புறுத்தலுக்காக முஸ்லிமாக மாறியவள்.  ஆழ்ந்த இந்து நம்பிக்கைகளை 
உடைய பெண்ணின் தந்தை மகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்.  மகள் கணவன் 
வீட்டாரின் வற்புறுத்தலில் முஸ்லிம் சம்பிரதாயங்களைப் பின்பற்றத் தொடங்கி, 
(முஸ்லீம்களின் பழக்கவழக்கங்கள் ஆங்காங்கே சிறு சிறு விவரங்களாய் 
சொல்லப்படுகின்றன)  காலப்போக்கில் இந்துத் தெய்வங்களை அல்லது நம்பிக்கைகளின்
 மீது நம்பிக்கை இழக்கும் நிலையில் அவள் தந்தை ஊரில் சில நாட்களுக்கு 
முன்னால் காலமாகி விட்ட செய்தி வருகிறது. 
பற்பல 
வருடங்களுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பும் அவள், தந்தை தன்னை 
மறக்கவில்லை, தன் செயல் காரணமாக வருந்தியவர், பின்னர் முஸ்லீம் மதம், 
மன்னர்கள் பற்றி எல்லாம் ஒரு மிக விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று
 தெரிந்து, அதைப் படிப்பதில் ஆர்வமாகி, படித்து, பிரமித்துப் போகிறாள்.
இப்போது
 அவள்,  முதலில் சில நிர்பந்தங்கள், தந்தை மேலுள்ள பாசம் காரணமாகவும், 
பின்னர் சொந்த விருப்பத்தின் பேரிலும் இந்துவாகவே வாழத் தொடங்குகிறாள்.  
இந்தக் காலங்களில் கணவனை முற்றிலும் மறந்து, அவ்வப்போது சென்று 
பார்த்தாலும், திரும்ப சொந்த ஊர், தந்தை வீடு வந்து அங்கேயே வாசிக்கிறாள்.   
இங்கு தன் ஊரிலேயே இருக்கும் இவளின் கணவன் இவளின் வீடு திரும்பாமையாலும், 
அவனின் தாய் தந்தையர், ஊர்ப் பெரியவர்கள் வற்புறுத்தலாலும் வேறு திருமணம் 
செய்கிறான்.
இவர்களுக்குத் திருமணம் செய்துவைத்த,
 இவர்கள் ஊர்க்காரரான 'சாஸ்த்ரி' என்பவர் ஒரு  அறிவுஜீவியாக அடையாளம் 
காணப்படுபவர்.  ("அவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவருக்குப் பணம் 
எங்கிருந்தோ வருகிறது") அந்தப் போலி கௌரவத்தாலேயே தன்னுடைய சொந்தத் தந்தை 
இறந்ததற்கான சம்பிரதாயங்களை, ஒரு மூத்த மகனாக செய்ய முடியாமல் போகிறது.  
அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவர். அவரின் மனைவி மதம் மாறாமல் 
கிறித்துவ மதத்திலேயே இருப்பவர். மனசாட்சிக்குப் பயந்து யாருக்கும் 
தெரியாமல் தந்தையின் 'காரியங்'களை காசியில் ரகசியமாகச் செய்கிறார். 
அவர்
 கூட்டும் ஒரு சமூக நல்லிணக்க மாநாடு - அதில் போலி மதச் சார்பின்மை பேசும் 
அறிவுஜீவிகள் -  மறுத்து, உண்மையை ஆதாரங்களுடன் பேசும் இந்தப் பெண்ணை 
(கதாநாயகி) அடுத்த கூட்டத்தில் புறக்கணித்து அவர்கள் எழுத நினைத்த சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார்கள்.
வெகுண்ட
 இந்தப் பெண், இத்தனை வருடங்களில் தன் அப்பா சேமித்து வைத்திருந்த 
ஆதாரங்களை (கேசவபெருமாள் கோவிலை நிர்மூலமாக்கி மதுராவை இஸ்லாமாபாத் 
ஆக்கியது, புனித க்ஷேத்திரமான பிரயாகையை இலாஹாபாத் ஆக்கியது, காசி 
விஸ்வநாதர் ஆலயத்தை அழித்து 'ஞானவாபி மசூதி' ஆக்கியது போன்ற நிறைய 
விவரங்கள்) வைத்து ஒரு நூல் வெளியிட....
இப்படிப்
 போகும் நாவலில் ஆசிரியர் தன்னுடைய நூலுக்கான ஆதாரங்களை எந்தெந்த நூல்களைப்
 படித்து எடுத்தார் என்பதை இந்தப் பெண், லக்ஷ்மியாக இருந்து பேகம் ரசியா 
குரைஷியாக மாறி, மறுபடியும்  லக்ஷ்மியாக மாறும் பெண் மூலமே 15 
பக்கங்களுக்கு அடுக்குகிறார். 
புத்தகத்தில் அவரின் சில கருத்துகள் :
மதம் மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிறந்த மதத்தை விட்டாலும் அது போகாது. 
தத்துவத்தின் எந்த மட்டத்தில் இருக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் கடவுளையும் சிருஷ்டிக்கிறோம்.
தனது முன்னோர்கள் என்று கருதுபவர்களை சரி, தப்பு என்று பேதப்படுத்தித் தனது வாழ்க்கையின் பாதையை நிச்சயம் செய்துகொள்ள, சரித்திரத்தின் படிப்பு உதவ வேண்டும்.
திரை 
கன்னட மூலம் : எஸ் எல் பைரப்பா 
தமிழில் : ஜெயா வெங்கட்ராமன் 
விஜயபாரதம் பதிப்பகம் 
300 ரூபாய்.