வியாழன், 23 ஏப்ரல், 2015

சில்லறை பொறுக்கினேன்!


சில நாட்களுக்கு முன்னால் இரவு பத்தரை மணிக்கு படி இறங்குகையில் கால் பிசகி, கீழே விழுந்து சில்லறை பொறுக்கியதில் எலும்பு முறிவோ என்று சந்தேகம் வர,   ஹாஸ்பிடல் செல்லலாம் என்று வற்புறுத்திய மனைவி, மகனை மறுத்து விட்டு வலியுடன் படுத்து விட்டேன். 
 
அந்த நேரத்தில் சென்றால் 99.9 சதவிகித ஹாஸ்பிடல்களில் அந்நேரத்துக்கு புதிதாக வேலைக்குச் சேர்ந்து, மேற்படிப்புக்கு இரவு அங்கு உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவ டாக்டர்கள்தான் இருப்பார்கள்.  கை, காலை முன்னே பின்னே திருப்பிப் பார்த்து விட்டு, ஒரு ஊசி, ஒரு மருந்து கொடுத்து அனுப்பி விடுவார்கள் - "நாளை மாலை ஆர்த்தோ வருவார்... வந்து பாருங்கள்" என்ற அறிவுரையோடு. 

 
சில சமயம் அப்போதே ஒரு தண்ட எக்ஸ்ரே கூட எடுக்க வேண்டி இருக்கும்.  எதற்கு தண்ட எக்ஸ்ரே என்கிறேன் என்றால், மறுநாள் ஹாஸ்பிடல் சென்று,  டோக்கன் வாங்கி, தேவுடு காத்து ஆர்த்தோவைப் பார்த்தால். நாம் எடுத்திருக்கும் எக்ஸ்ரேயை செத்த எலியைத் தூக்குவதுபோல் இடது கைக் கட்டைவிரல், ஆள்காட்டி விரலால் தூக்கிப் பார்த்து விட்டு, மண்டையை இடம் வலமாக ஆட்டுவார்.
 
ஒரு பேப்பரை எடுத்துக் கிறுக்கி 'இந்த ஆங்கிளில் எடுக்கச் சொல்லி, எடுத்துட்டு வாங்க' என்று அனுப்புவார்.
 
அங்கு சென்று எடுத்து வந்தாலும் ஆர்த்தோவுக்கு அது திருப்தியைத் தராது.  ஒரு 'எம் ஆர் ஐ எடுத்துடலாமா?' என்பார்! 
 
இந்த அனுபவங்கள் இருந்ததால், இரவு அங்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு, ஒரு வலி நிவாரணியை ரானிட்டிடின் உடன் சேர்த்துப் போட்டுக் கொண்டு படுத்து விட்டேன்.  இரவு முழுக்க இடது முழங்கை, மணிக்கட்டு, உள்ளங்கை, மற்றும் இடந்து கால் பாதத்தை அசைக்க முடியாமல் வலி.
 
ஒரே ஒரு ஆறுதல்.  பயந்த அளவு கையும் காலும் புருபுரு என்று வீங்கவில்லை.  என் பாஸ் உறவுகளுக்கு எல்லாம் தொலைபேசி, நான் ஆஸ்பத்திரி வரமாட்டேன் என்கிறேன் என்பதையும், இரவெல்லாம் எப்படி அவஸ்தைப் பட்டேன் என்பதையும் புகார் சொல்ல,  மறுநாள் காலை 7 மணிக்கே எனக்கு சகல திசைகளிலிருந்தும் ஆஸ்பத்திரி கிளம்ப திட்டுடன் உத்தரவு வந்தது!
 
அந்நேரத்திலும் ஆர்த்தோவைப் பிடிக்க முடியாது என்ற என் முனகலை யாரும் லட்சியம் செய்யவில்லை.
 
வெட்டியாக ஒரு ஆஸ்பத்திரி சென்று ஆர்த்தோ மாலைதான் வருவார் என்று அறிந்து வீடு திரும்பியபோது என் கடுப்பு எல்லை மீறி இருந்தது.
 
ஆனாலும் இன்னொரு அருகாமை ஆஸ்பத்திரியில் ஆர்த்தோ 10.30க்கு வருவார் என்று தகவல் கிடைத்து, மறுபடி கிளம்பி அங்கு சென்றோம்.
 
எல்லோரும் 'எம் ஆர் ஐ எடுங்கள், டிஜிடல் எக்ஸ்ரே எடுங்கள்' என்றெல்லாம் முன்னரே அவரவர்கள் அனுபவங்களை வைத்து எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
 
ஆனால் என்னைப் பார்த்த ஆர்த்தோ டாக்டர் (அங்கு டிஜிடல் எக்ஸ்ரே இல்லாததாலும்) சாதா எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பார்த்து, எலும்பு முறிவு இல்லை என்று வயிற்றில் பால் வார்த்தார்.
 
"ரத்தக் கட்டு... க்ரிப் பாண்டேஜ் போடுங்க... இந்த மாத்திரைகளைச் சாப்பிடுங்க..  ஒரு வாரம் சென்று வந்து பாருங்கள்" என்றார்.
 
என் உறவுகளுக்கு திருப்தியே இல்லை.  "காலில் லிகமென்ட் டார் ஆகியிருக்கும்.  எம் ஆர் ஐ எடுத்தால்தான் தெரியும்..  வேறு டாக்டர் பாருங்கள்" என்றார்கள்.  "டிஜிடல் எக்ஸ்ரே கூட எடுக்கலையா?" என்று அங்கலாய்த்தார் இன்னொரு நண்பர்.
 
என்னைப் பார்த்த அறுபது வயது ஆர்த்தோ டாக்டரின் அனுபவத்தை நான் நம்பினேன்.  எக்ஸ்ரேயை அப்புறம் சென்று வாங்கக் கூட இல்லை.  மறுபடி சென்று பார்க்கவும் இல்லை!  பத்துப் பதினைந்து நாளில் கை சரியானது. கால் கொஞ்சம் லேசாக வலித்தாலும் கவலைப் படவில்லை!
 
சொல்ல வந்தது,  அங்கு காத்திருந்தபோது அங்கு நடந்த ஒரு சுவாரஸ்ய அனுபவம்.

 
நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேரே லிப்ட்.   நாங்கள் இருந்தது இரண்டாம் தளம்.  கீழே செல்ல எண்ணி, உள்ளே நுழைந்த ஒரு நடுத்தர வயதுத் தம்பதி புன்னகையுடன் நின்றிருக்க, கதவு மூடிக் கொண்டது.  சில நொடிகள் கழித்து கதவு திறக்க, வெளியே வந்த அதே தம்பதியர், மறுபடி பார்த்த எங்கள் முகங்களையே மீண்டும் கண்டதும் மறுபடி உள்ளே நுழைந்து கதவு மூடிக் கொண்டனர்.
 
மறுபடி கதவு திறந்தது.  மறுபடியும் அவர்களும், நாங்களும்!   G என்ற பொத்தானை அமுக்குங்கள் என்று என் அருகில் உட்கார்ந்திருந்த சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.  கதவு மூடியது.  திறந்தது.  அவர்கள் வெளியே வந்து லேசாக அசடு வழிய, பாவமாக படிக்கட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
 
எங்கள் அருகில் அமர்ந்திருந்தவர்களில் கூட வந்திருந்த ஒரு சிறுவன் அவர்களை அழைத்து, லிப்டில் நுழைத்து, தரைத் தளத்தில அவர்களை டிராப் செய்து திரும்பினான்.

அவர்களைப்  பார்த்து அன்று புன்னகைத்தவர்களில் மற்றவர்களுக்கு பிற்பகல் விளைந்ததா தெரியவில்லை.  ஒரு மாதத்துக்குப்பின் எனக்கு விளைந்தது!  அதை அப்புறம் சொல்கிறேன்!

30 கருத்துகள்:

  1. என்னங்க இப்படி எங்களை தொங்கல்ல உட்டுட்டீங்க? சஸ்பென்ஸ் தாங்கலீங்க. சீக்கிரம் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  2. நாங்க எல்லாம் எங்க ஊர்ல கீழ விழுந்தா பெருங்காயம்தான் வாங்குவோம். நீங்க எப்படி கீழ விழுந்து சில்லறை பொறுக்கினீங்க, கொஞ்சம் விளக்கோணும்.

    பதிலளிநீக்கு
  3. எம்.ஆர்,ஐ மற்றும் மாவுக் கட்டு இல்லாமல் தப்பினீர்கள்

    பதிலளிநீக்கு
  4. அனுபவங்களை நன்கு அனுபவித்து நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்துப் படித்து மகிழ்ந்தேன்.

    மாமாவின் [Mr.K.G.Jawarlal] மறுமான் என்பதை என்னால் இந்த அனுபவப் பகிர்வினில் ஓரளவு நன்கு உணர முடிந்தது :)

    உதாரணமாக ஓர் இடம்:

    //நாம் எடுத்திருக்கும் எக்ஸ்ரேயை செத்த எலியைத் தூக்குவதுபோல் இடது கைக் கட்டைவிரல், ஆள்காட்டி விரலால் தூக்கிப் பார்த்து விட்டு, மண்டையை இடம் வலமாக ஆட்டுவார்.

    ஒரு பேப்பரை எடுத்துக் கிறுக்கி 'இந்த ஆங்கிளில் எடுக்கச் சொல்லி, எடுத்துட்டு வாங்க' என்று அனுப்புவார்.//

    சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  5. இப்படி இப்படித் தான் நடக்கும் என்று சொல்வதைப் பார்த்தால்.... முன் அனுபவம்...? or Guess...?

    பதிலளிநீக்கு
  6. நல்லவேளை மாவுக்கட்டு போடாமல் தப்பினீர்கள்...

    இங்கே எனக்குத் தெரிந்த ஒருவர் தண்ணீர் கொட்டிய டைல்ஸ் தரையில் விழுந்ததால் மாவுக்கட்டு போட்டு 40 நாட்களுக்கு உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  7. 2009/2010 அல்லது ஆம் வருஷம் நவராத்திரியில் ஒரு நாள் துணி துவைக்கையில் குளியலறையில் நானும் கீழே விழுந்து வலக்கையை ஊனியதில் தோள்பட்டையில் என்னவோ ஆகி விட்டது. க்ரிப் பாண்டேஜ் தான் போட்டு விட்டுக்கையை அசைக்கக் கூடாதுனு கையைத் தூளியில் தொங்க விட்டு விட்டார் ஆர்த்தோ! 21 நாள் அவதி!

    பதிலளிநீக்கு
  8. ஆனால் உங்களை மாதிரித் தான் நானும் மத்தவங்க சொல்றதைக் கேட்க மாட்டேன். எங்க மருத்துவர் சொல்வதை மட்டும் கேட்பேன். அனுபவம் வாய்ந்த அவர் சொல்வதே பெரும்பாலும் சரியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. எந்த ஊர் லிஃப்டிலே போறச்சே பிற்பகல் விளைந்தது? அமெரிக்காவில் விமானநிலையங்களில் நீங்க சொல்லி இருக்கிறாப்போல் சில சமயம் நடந்தது உண்டு. அதனால் நாங்க அங்கே கீழே இருக்கும் விமான நிலைய ஊழியர் ஒருவரை அழைத்துக் கொண்டே போவோம். :) எஸ்கலேட்டரில் போகலாம் தான். ஆனால் எனக்கு அலர்ஜி! :)

    பதிலளிநீக்கு
  10. அட ராமா ஸ்ரீராம்.. இவ்வளவு ஸ்லோவாக சொல்கிறீர்களே. நாங்க எல்லாம் விழுவதில் மன்னிகளாக்கும்.!!! சில்லறை என்ன கோடியே புரட்டி இருக்கலாம்:)
    இப்ப தேவலையா. ஒரு தடவைதான் மாவுக்கட்டு காலுக்கு. அதுவும் மறு நாள் பிள்ளைக்குக் கல்யாணம். பகவானே!!!! வலி தாங்க முடியாமல் இருக்குமே.
    அந்த பிற்பகல் விளைவையும் அடுத்தாப்பில போட்டு விடுங்க ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

  11. வீக்கம் இல்லையென்றால் எலும்பு முறிவு இருக்காது என்று ஓரளவு அனுமானிக்கலாம் சில்லறைப் பொறுக்கியதுதான் விளங்கவில்லைடாக்டர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நாம் டாக்டர்களிடம் போகும் போது ஏதோ பெரிதாகச் சொல்வார் என்றே எதிர்பார்க்கிறோம் இந்த மாதிரி எம் ஆர் ஐ ஸ்கான் எல்லாம் எடுக்கவைத்து நம்மை திருப்தி செய்ய முயற்சிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    இறுதியில்சொல்லிய கருத்தை பல தடவை படித்த போது உணர்ந்து கொண்டேன் விடயத்தை த.ம 1
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. பதிவுலகத்திற்கு எல்லாமே பதிவு தான். சொந்த அனுபவம், கட்டுரை, கதை, கவிதை எல்லாமே அதற்கு ஒன்று தான்! தன் அனுபவத்தை வாசித்ததில் கலக்காமல் எந்த வாசிப்பும் இல்லை!

    கதையைக் கதையாகப் படிப்பதற்கு,
    'நம்புங்கள்; நிஜமாய் இது கதை தான்' என்று ஒரு குறிப்பு தலைப்பு பகுதியில் வேண்டுமோ?..

    பதிலளிநீக்கு
  14. எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. இதெல்லாம் இல்லாமல் இப்போது யாரும் வைத்தியம் பார்ப்பது இல்லை! நல்லவேளை தப்பித்தீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. நல்ல காலம் முதல்ல கட்டிலிருந்து தப்பித்தது. மற்றொன்று மத்தவர்களின் அறிவுரைகளை இந்தக் காதில் வாங்கி மற்ற காது வழியாக வெளியேற்றியது....தப்பித்தது தம்புரான் புண்ணியம்...இது வேற ஒண்ணும் இல்ல இங்க சொல்லற ஒரு வழக்கு அவ்வளவுதான்...

    அதுசரி உங்க பல்பைப் பத்திச் சொல்லாம எங்கள வெயிட் பண்ண வைச்சுட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  16. அப்போது எவ்வளவு கடுகடுப்பு இருந்தாலும் இப்போது எழுதும்போது எவ்வளவு நகைச்சுவை மிளிர்கிறது. ரசித்தேன். லிஃப்ட் அனுபவம் எங்களுக்கும் உண்டு. :)

    பதிலளிநீக்கு

  17. டாக்கடர்களின் செயல்பாட்டை அழகாக சித்தரித்தீர்கள்
    இப்பொழுது கால் வலி சரியாகி விட்டதா ?

    பதிலளிநீக்கு
  18. வாங்க பழனி.கந்தசாமி ஸார். சஸ்பென்ஸ் உடைக்க லேட்தான் ஆகும் போல இருக்கு! வெள்ளி, அசனி, ஞாயிறு, 'திங்க'கிழமை எல்லாம் தொடர் பதிவு தினங்களாச்சே! உங்க ஊர்ல பெருங்"காயம்" என்பீர்களா? நாங்கள் சில்லறை போருக்கியதாய்த்தான் சொல்வோம்! :)))))

    நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    நன்றி வைகோ ஸார்... ஜவர்லாலின் கட்டுரை (திருச்சி பதிப்பில் மட்டும் வெளிவருவது) பற்றி கீதா மேடம் கூட பேஸ்புக்கில் சொல்லியிருந்தார். உங்கள் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    நன்றி DD. எங்கள் வீட்டில் என் இளைய மகன் இரண்டு முறைகளும், அண்ணன் ஒரு முறையும், மாமியார் ஒரு முறையும் எலும்பை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!!!!!

    நன்றி திருமதி வெங்கட்.

    நன்றி கீதா மேடம். நான் சில சமயம் டாக்டர் சொல்றதைக்கூட நம்ப மாட்டேன்! :))))

    ஆஹா... பின்னூட்டப் பெட்டியைத் தேடி துளசி மேடம் வருவதற்கு நான் 'சில்லறை போருக்க' வேண்டியிருக்கிறது! நன்றி மேடம்!

    நன்றி வல்லிம்மா.... விழுந்து ரொம்ப நாள் ஆச்சும்மா. இப்போ கை தேவலாம். கால்தான்....

    நன்றி ஜி எம் பி ஸார். ஆர்த்தோ டாக்டர்கள் எப்பவுமே ரொம்ப காஸ்ட்லி!

    நன்றி ரூபன்.

    வாங்க ஜீவி ஸார். இது கதை அல்ல, நிஜம்! லேபிள் பாருங்க!

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி துளசிதரன்ஜி! 'அந்த' அனுபவம் அடுத்த வாரம்தான். கை குணமாகி விட்டது நண்பரே! :))))

    நன்றி கீதமஞ்சரி.

    நன்றி நண்பர் கில்லர்ஜி. காலில் இன்னும் சற்று வலி பாக்கி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  19. ஆஹா! அதான் ஆளை காணலையா? இப்போது தேவலையா?

    'சில்லறை பொருக்கினேன்' என்னவொரு நையாண்டி !

    உங்கள் டாக்டர் அனுபவம் ரொம்ப சரி ஶ்ரீராம். கத்துகுட்டி டாக்டர்கள் கற்றுக்கொள்வதே நம்மை வைத்து தானே !

    இனியும் சில்லறை என்றும் பொறுக்காமல், சலவை நோட்டாக எடுத்து விடுங்கள். வாங்கிக் கொள்ள நான் ரெடி !

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே.

    வலி பிராணன் போகும் போதும், பொருட்படுத்தமல் நாம கஸ்டத்தை விழுங்கி கொணடு டாக்டர்கிட்டே போனாலும்,பரிசோதித்து விட்டு ஒணணுமில்லாததற்கு என்ன ஆர்பாட்டம் பண்ணறீங்க? அப்படின்னு முதல்லே திட்டு அப்பறம் ஆயிரத்தெட்டு டெஸ்டுக்கள், ஏகமாய் மருந்துகள் மருத்துவமனை கொஞ்சம் அலர்ஜி.வேறு வழியில்லை எனறால் போய் மாட்டிக் கொள்ளத்தான் வேண்டும். அடிபட்ட வேதனையைக் ௬ட நகைச்சுவையாய் எழுதி இருக்கிறீர்கள்.உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள். எனக்கும் கீழே விழுந்து முதுகில்.காலில் அடிபட்ட அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது
    நல்லவேளை.! ஆண்டவன் அருளினால் கட்டுக்கள் போடாமல் தப்பித்தீர்கள் தற்போது நலமா? பூரண குணமடைந்து விட்டதா?
    பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. வயிற்றில் பால் வார்த்தார்// அவர்கிட்ட ஒரு இண்டக்க்ஷன் ஸ்டவ் கூட இல்லையா? ஹஹஹா..


    அந்த அனுபவத்தையும் கேட்க ஆர்வத்தோடு வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  22. //வாங்க ஜீவி ஸார். இது கதை அல்ல, நிஜம்! லேபிள் பாருங்க!//

    கதைகளும் அனுபவங்களின் வார்ப்பு தானே?.. இதையே அசோகமித்திரன் எழுதினால் கதை, நீங்கள் எழுதினால் இல்லை என்று ஆகிவிடுமா?..

    பதிலளிநீக்கு
  23. நலமே ஏஞ்சலின் சகோ... பத்து நாட்கள் மட்டுமே வலி!

    ஹா...ஹா...ஹா... நன்றி மோகன்ஜி! ஆளைக் காணோம் என்று நீங்கள் சொல்ல முடியாதே... ஒருநாள் கூட நான் இணையம் சுற்றாமல் இருக்கவில்லை இந்த ஒன்றரை மாதத்தில்!

    நன்றி சகோ கமலா ஹரிஹரன்.

    ஹா...ஹா...ஹாவி! ரசித்தேன். அடுத்த வாரம் சொல்கிறேன்!

    மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார்.. நீங்கள் சொல்வது உண்மை.

    பதிலளிநீக்கு
  24. முற்பகல் சிரித்தால் பிற்பகல் அழணும்...அழுத கதைக்கு காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  25. நல்ல வேளை! கீழே விழுந்து எலும்பு முறிவு ஆகாத வரைக்கும் நல்லது தான். பத்து நாட்களில் வலி குறைந்து விடும். முறிவு என்றால் மாதக்கணக்கில் படு அவஸ்தை! நல்ல வேளை!

    பதிலளிநீக்கு
  26. இப்படி சினிமா தியேட்டர் கல்யாண ஹால் ( எந்த இடத்தில் மாடிப்படி இருந்தாலும் ) சில்லறை பொறுக்குவதிலும் பெருங்காயம் வாங்குவதிலும் நான் உங்களை விட சீனியராக்கும் ஸ்ரீராம். எங்க பாஸ் எங்க படியப் பார்த்தாலும் என்னப் பார்த்து பார்த்து பார்த்து என்பார். :)

    சுமாரா திருமணம் ஆனதில் இருந்து கணுக்கால் பாதம் , இடது வலது என்று பத்துமுறையாவது மாவுக்கட்டுப் போட்டிருப்பேன். ரத்தக்கட்டு என்று மாவுப் பத்து முட்டைப் பத்து, எண்ணெய்ப் பத்து என்று ஒரே பத்து மயம். பழைய எண்ணெய் பாட்டில்களை விலைக்குப் போட்டால் ஒரு டப்பா கால்சியம் சாண்டோஸ் வாங்கலாம்.

    சின்னப் பிள்ளையிலேயே எலும்பும் பல்லும் வீக்கா இருக்குன்னு தினமும் பெரடால் ( மீன் எண்ணெய் அல்லது மாத்திரை ) & கால்சியம் சாண்டோஸுடன் வளர்ந்தவள்.

    காயமே இது பொய்யடா அப்பிடிம்பாங்க. இது மாவுக்கட்டாலயே வளர்ந்த மனுசியாக்கும். ஹிஹிஹி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!