திங்கள், 15 ஆகஸ்ட், 2016

"திங்க"க்கிழமை 160815 :: வாழைக்காய் பொரிச்ச குழம்பு - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி.



          இதுவும் திருவனந்தபுரம் தொடர்பினால் வந்த குழம்பாகத்தான் இருக்க வேண்டும். இதை மாதத்துக்கு ஒரு தடவையாவது செய்து சாப்பிடுவேன். இதுக்கு காம்பினேஷன், புளி இல்லாத, பருப்பு போன்றவை சேர்க்காத சாதாரணப் பொரியல்தான். 


          இல்லாட்டா, அப்பளாமும் நன்றாகத்தான் இருக்கும். ஹஸ்பண்ட் இங்க இருந்தா, (எங்க? ஹி ஹி) காம்பினேஷன் கறி கேட்கலாம். ‘நான் எப்போதும்போல் வேகமாகச் செய்வதற்குத் தோதான உருளைக்கிழங்கு காரக் கறி செய்தேன். இப்போதெல்லாம், உடல் எடை, ஆரோக்கியம் இதற்கெல்லாம், புதுமையாக, பாரம்பரியத்தைவிட்டுவிட்டு, ஓட்ஸ், ராகி சாப்பிடுங்க, வெள்ளை அரிசி சாப்பிடாதீங்க, பிரௌன் அரிசி சாப்பிடுங்க, சப்பாத்தி சாப்பிடுங்க என்ற குரல்கள் ஒலிப்பதால், நானும் பிரௌன் பாஸ்மதி வாங்கிவைத்துள்ளேன். அதுலதான் சாப்பாடு. இப்போது இந்தக் குழம்பை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

          ஒரு பெரிய வாழைக்காய். இதைத் தோலுரித்து, சிறு சிறு சதுரத்துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் உள்ள சிறிது தண்ணீரில் போட்டு, உப்புப் போட்டு, 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வாழைக்காயை மட்டும் தண்ணீரை வெளியேற்றிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள். 





          சிவப்பு மிளகாய் 2-3, மிளகு 15, உளுத்தம்பருப்பு ½  ஸ்பூன், துவரம்பருப்பு ½ ஸ்பூன் இவற்றை வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு கருகாமல் வறுத்து அப்புறம் ஒரு தட்டில் ஆறவைக்கவும். இதனுடன், 2 ஸ்பூன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். விருப்பமிருந்தால் 2 ஆர்க்கு கருவேப்பிலையும் (இலை மட்டும்) சேர்த்து அரைக்கலாம்.



             



          ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் 150 மி.லி (நீர்க்க இருக்க வேண்டாம்), தண்ணீர் 200 மி.லி. சேர்த்து புளி வாசனை போகக் கொதிக்கவிடவும். அதனுடன், ஏற்கனவே வேகவைத்துத் தனியாக வைத்திருக்கும் வாழைக்காய், அரைத்த பொடி (மிளகாய், தேங்காய் இன்ன பிற), தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சிறிது கொதிக்கவிடவும். அப்புறம் கடுகு, கருவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
 

                 

குறிப்பு: வாழைக்காய்த் துண்டங்களைத் தனியாக தளிகைப் பண்ணாமல், புளிஜலத்துடன் கொதிக்கவைத்தால், வாழைக்காயில் புளிப்பு ஜாஸ்தி ஏறிவிடும்.  பொடி தயாரிக்கும்போது, கருவேப்பிலை அளவுக்கு அதிகமாகச் சேர்த்தால், கருவேப்பிலைக் குழம்பு வாசனை வந்துவிடும். பசங்களுக்கு இந்தக் குழம்பை, சாதத்தோட சாப்பிடுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், மதியம் மோர் சாதத்தைக் கையில் போட்டு, இந்தக் குழம்பையும் கையிலிட்டால், அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு ரொம்ப நல்லா இருக்கும்.

அன்புடன்,

நெல்லைத் தமிழன்

26 கருத்துகள்:

  1. அருமையான குறிப்பு. நன்றி நெல்லைத் தமிழன், எங்கள் பிளாக்!

    செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதை நாங்க கூட்டுக்குழம்புனு சொல்லுவோம். இதை வாழைக்காயில் மட்டுமின்றி, பாகற்காய், கொத்தவரை, சேனைக்கிழங்கு+காராமணிக்காய், வாழைப்பூ, அவரைக்காய் போன்ற நாட்டுக்காய்களிலும் செய்யலாம். :) எனக்கு ரொம்பப் பிடிச்சது. இதோட எங்க வீட்டிலே தே.எ.யில் பொரிச்ச அப்பளம் தான் செய்வோம். அந்த நாளும் வந்திடாதோனு நினைக்கச் சொல்லுது!

    பதிலளிநீக்கு
  3. வாழைக்காய் பொரிச்ச குழம்பு வைத்து ருசிக்கும் முன் ,படங்களை ரசிக்கலாம் என்று பார்த்தால் ஓபன் ஆக மாட்டேங்குதே :)

    பதிலளிநீக்கு
  4. ருசித்தோம்.
    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. கீதா மேடம்.. இப்போல்லாம் தமிழ் நாட்டில், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணையில் பொரிக்கிறார்களா (அப்பளாம், அல்லது பஜ்ஜி, முருக்கு போன்றவை). நீங்க எழுதினதைப் படிக்கையிலேயே தேங்காய் எண்ணெய் வாசனையோடு அப்பளாம் சாப்பிட்ட எண்ணம்.

    பதிலளிநீக்கு
  7. very nice i noted .lastweek i make yr puli pmorekuzhumbu very tasty. next week i try this thankyou sir

    பதிலளிநீக்கு
  8. நெல்லைத் தமிழன், இன்னிக்கு மோர்க்கீரை மசிச்சுட்டு அதுக்குத் தே.எண்ணெயிலே தான் தாளிச்சேன். மோர்க்குழம்பு, பிட்லை, அரிசி உப்புமா, பருப்பு உசிலி, அப்பளம் பொரித்தல், முறுக்கு, தேன்குழல் போன்றவற்றிற்கெல்லாம் நான் சுத்தமான தே.எ. தான் பயன்படுத்துகிறேன். சமையல் முழுக்க நல்லெண்ணெய்! எப்போவானும் பஜ்ஜி, பகோடா, வடை, போண்டோ செய்தால் மட்டும் கடலை எண்ணெய். ரிஃபைன்ட் எண்ணெய் பயன்பாட்டிலேயே இல்லை! :)

    பதிலளிநீக்கு
  9. பருப்பு இல்லாத சாம்பார் போல் இருக்கிறதே இந்தக் குழம்புக்கு வெண்டைக்காய் இன்னும் சேரும் என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  10. ​இதை திருவனந்தபுரத்தில் தீயல் என்று சொல்லுவார்கள். ​

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  11. சிறப்பாக இருக்கிறது.
    சுதந்திரதின வாழ்த்துக்கள்
    த ம 6

    பதிலளிநீக்கு
  12. bவாழைக்கச்சல் கூட்டு என்று செய்வதுண்டு. ஏதானும் காத்தடிச்சு,வாழைத்தோட்டத்தில் குலைகள் விழுந்து விடும்போது இந்த பிஞ்சு வாழைக்காய் கிடைக்கும். ஸாதாரணமாக வாழைக்காயை வேகவைக்கும்போது காய் கறுக்காமலிருக்க லேசாக புளிஜலம் தமிழ் நாட்டில் சேர்ப்பார்கள். இது பொரிச்ச குழம்பானாலும் துளி புளியும் இருக்கிறது. அரைத்து விட்டு ஆஹா சேர்மானம் நன்றாக உள்ளது. பருப்பு இல்லாத பொரிச்ச குழம்பு. செய்து ருசிக்கணும். நெல்லை சமையல் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. வாழைக் கச்சல் மழை காற்றின்போது கிடைக்கும். அதில் கூட்டு செய்வதுண்டு. காய் கருக்காமலிருக்க நம் தமிழ் நாட்டு வழக்கம் புளி ஜலம் சேர்ப்பது. புளி குத்தணும் என்பார்கள். புளிசேர்த்து,பருப்பில்லாமல் அரைத்துவிட்டு பொரிச்ச குழம்பு. நெல்லை சமையல் ஆஹா புதிய குறிப்பாகத் தெரிந்து கொள்வதில் அஸாத்திய மகிழ்ச்சி. செய்தும் ருசிக்கணும். நன்றி அன்புடன். ஒரு கமென்ட் ஓடிப்போய்விட்டது. திரும்ப எழுதினால் அது போல அமைவதில்லை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. வாழைக்காயை கடலைப்பருப்பு சேர்த்து இதுபோல மிளகு அரைத்துவிட்டு செய்வார் என் மாமியார். பொரிச்ச குழம்பு என்றால் பொதுவாக புளி சேர்க்க மாட்டார்கள் இல்லையோ? இது புளி சேர்த்த பொரிச்ச குழம்பு போல! அடுத்த முறை வாழைக்காயை வாங்கும்போது இப்படிச் செய்து பார்க்கிறேன். நன்றி நெல்லைத் தமிழன். நெல்லைத் தமிழன் நளபாகத்தில் வல்லவர் போலிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  15. 'நன்றி வெளியிட்ட ஸ்ரீராமுக்கும், கருத்துரையிட்ட அனைவருக்கும்.

    கீதா மேடம்... மோர்க்கீரை..ம்ம்ம் இதுக்கு ரெசிப்பி பார்க்கிறேன். எங்கம்மா புளிக்கீரைன்னு ஒன்று செய்வாங்க. அது நல்லா இருக்கும். நான் பொதுவா மோர்க்குழம்புக்கு, சாதாரண கீரைகூட்டைக்(தேங்காய் அரைத்துவிடாமல்) கலந்து சாப்பிடுவேன்.
    காமாட்சி மேடம்-வாழைக்காய் கச்சல் - என் சிறுவயதை(12 வயது) ஞாபகப்படுத்திவிட்டது. இதில் கறி செய்வார்கள். எனக்கு அவ்வளவு பிடிக்காது (தோல் இருப்பதால்). 'புளி குத்தணும்'-இது என் மனைவி உபயோகப்படுத்தும் சொல். நல்லாக் கலாய்ப்பேன். நன்றி.
    ரஞ்சினி மேடம் - சொல்வது யார்க்கும் எளிய... அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். படத்தைப் பார்த்து நான் சமையலில் நிபுணர் என்று நினைத்துவிடாதீர்கள். பத்து தடவை பண்ணினால் ஒரு தடவை சொதப்பிவிடும். சமயத்தில் நினைத்ததுபோல் வராது. ஏதோ குறைகிறதே என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  16. ரஞ்சனி, பாலக்காட்டுப் பக்கங்களிலே பிட்லைனு தமிழ்நாட்டிலே சொல்வதைப் பொரிச்ச குழம்புனு தான் சொல்வாங்க! அதுக்குப் புளி விடுவாங்க. ஆகவே இதுவும் பருப்பில்லா ஒரு வகைப் பொரிச்ச குழம்புதான்! :)

    நெல்லைத் தமிழன், மோர்க்கீரை ரொம்பவே எளிது. கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொண்டு நன்கு மசித்த பின்னர் கீரைக்குத் தகுந்தாற்போல் பச்சைமிளகாய், தேங்காய் நைசாக அரைத்துச் சேர்த்து, உப்பும் போட்டுக் கொதிக்கவிடவேண்டும். இறக்கும்போது ஒரு கரண்டி கெட்டித் தயிர் சேர்க்கவேண்டும். தயிர் சேர்த்த பின்னர் கொதிக்கக் கூடாது. இதற்குத் தே.எ. தாளிதம் அவியல் போல மணக்கும். புளிக்கீரையும் எங்க அம்மாவீட்டில் இரு வகையாச் செய்வோம். ஒன்று பருப்புப் போட்டது. இதைச் சாதத்திற்குக் குழம்புக்குப் பதிலாக வைத்துக் கொள்வோம். இன்னொன்று தொட்டுக் கொள்ளப் பண்ணுவது, இதற்குப் பருப்பு இருக்காது. இந்தப் புளிக்கீரை பண்ணினால் அன்னிக்கு சாதத்துக்குப் புளியில்லாப் பொரிச்ச குழம்பு தான் இருக்கும். பொரிச்ச குழம்பும், புளிவிட்ட கீரையும் தென் மாவட்டங்களில் பிரபலமான உணவு! (ஒரு காலத்தில்) இப்போ அநேகமா நான் தான் பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  17. கீதா, நானும் நீங்கள் சொல்லும் பருப்புப் போட்டு புளிக்கீரை செய்வேன். அதற்கு வெந்தயக் குழம்பிற்கு செய்வதுபோல போல கடுகு, காய்ந்த மிளகாய், து.பருப்பு, க.பருப்பு, வெந்தயம் தாளிப்பேன். இன்னொருவகை கீரைக் கூட்டு கீரை+பயத்தம்பருப்பு போட்டு வேகவைத்து உ.பருப்பு ஒரு காய்ந்த மிளகாய் தாளிப்பது. வெந்தயக் குழம்பும், இந்தக் கீரை கூட்டும் நல்ல காம்பினேஷன். நீங்களும் செய்து பார்க்கலாம் நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  18. ரஞ்சனி மேடம்.. வெந்தயக் குழம்பும், நீங்கள் சொன்ன கீரைக்கூட்டும் செம காம்பினேஷன். ரொம்ப நல்லா இருக்கும். என் மனைவி செய்வார்கள் (இங்க இருந்தபோது). சரியான காம்பினேஷன் சொல்லணும்னா, சாப்பிடறதுல இன்டெரெஸ்ட் இருக்கணும். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நூவூறச் செய்யும்
    சமையல் வழிகாட்டல்
    அருமை

    பதிலளிநீக்கு
  20. நெல்லைத் தமிழன் இதே ரெசிப்பிதான் ....கறிவேப்பிலை சேர்ப்பது, பின் குறிப்பு உட்பட....

    எங்கள் பாட்டி புளியிட்ட பொரிச்ச குழம்பு/கூட்டு, புளியில்லா பொரிச்ச குழம்பு/கூட்டு என்று செய்வார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. திங்கள் கிழமை நெல்லைத்தமிழன் கிழமையா.
    நாங்களும் மோர் விடு, புளி குத்து, தோசை வார்க்கிறது,
    இப்படித்தான் சொல்வோம்.
    அருமையான் வாழக்காய்ப் பொரிச்ச குழம்பு.
    பொரிச்ச குழம்புக்கு புளி இருக்காது. சிலபேர் சேர்ப்பார்களோ என்னவோ.
    இதையும் செய்துவிடலாம்.மகனே உன் சமர்த்துனு உங்க அம்மா சொல்கிற மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. நன்றாக இருக்கிறது. படங்களுடன் செய்முறை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!